கடல் – 25
திடீரென உள்ளே வந்ததும் தன்னருகே அமர்ந்தவன் கேலியாய் பேச மின்னொளி சற்று ஆதரவாய் உணர்ந்தாள் மனதினுள்.
“சிரிக்கிதத பாரு. கேட்டா சொல்லமாட்டியோ? என்னிய மட்டு போட்டு ஆட்டு…” என அவளை கடிந்தவன்,
“ஏன்டி இங்கன ஒத்தையில ஒக்காந்துருக்க?…” என கேட்க அவனை அழுத்தமாய் பார்த்தவள்,
“எப்பவும் போலத்தேன்…” என்றதும் அவளை முறைத்தவன்,
“என்ன புள்ள அழுதுருக்க? இந்தா இதுவு எப்பவு போலத்தேனா?…” என கேட்டு தன் பக்கமாய் அவளை திருப்பி அமர்த்தியவன் அவளின் கண்ணீரை துடைக்க அவளும் வாகாய் முகத்தை கொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
முகத்தை நன்றாக அழுந்த துடைத்தவன் சிலுப்பிக்கொண்டிருந்த தலைமுடிகளை ஒன்றாய் இழுத்து காதோரம் சொருக அவனின் செயல் சிறுவயதை நியாபகப்படுத்தியது.
எத்தனை முறை அவளுக்கு உணவு ஊட்டியிருப்பான், வாய் கழுவி துடைத்துவிட்டிருப்பான். அவளை தூக்கிக்கொண்டு சுற்றியிருப்பான். நினைக்க நினைக்க மனதோரம் சுகமான தென்றல் வீசியது.
அதே நேரம் அதற்கடுத்த அவளின் தனிமைகள் தடமாறாமல் ஞாபக பாதையில் வலம் வர வலுக்கட்டாயமாய் அதனை மேலெழும்ப விடாது தனக்குள் மீண்டும் புதைத்துக்கொண்டிருந்தாள்.
அவளின் முகத்தை வைத்தே அவளின் உணர்வு போராட்டத்தை கண்டு கொண்டானோ என்னவோ, அவனை நினைத்து அவனுக்கே அத்தனை வெறுப்பாய் இருந்தது.
இன்று தான் இருக்கிறேன் பார்த்தேன். இல்லை இவளாய் தானே அமர்ந்து தானே அழுது, தன்னை தானே தேற்றி மீண்டு வந்து எத்தனை எத்தனை நினைக்கவே வேதனையாக இருந்தது. அதே வருத்தத்துடன் மனைவியை பார்த்தவன்,
“ஏன்டி இன்னு ஒனக்குள்ள ஒளிஞ்சிக்கற? ஏங்கிட்ட சொல்லமாட்டியாடி?…” என அவளின் கன்னத்தை அழுத்தமாய் பற்றி கேட்க,
“செரி, சொல்லுதேன் கேட்டுக்க. எங்கிட்டு ஒளிய? எங்கியாச்சு ஒரேதா ஒழியன்னு கூட சில நேரோ நினச்சிருக்கே மாமோவ். ஆனா ஆரையு விட்டுட்டு போவத்தேன் தெம்பில்ல. இத்த விட்டா எனக்கு என்ன தெரியுமாட்டு சொல்லு?…” என தாயின் புகைப்படத்தை பார்த்தபடி உணர்வற்ற குரலில் பட்டென சொல்ல,
அடியேய்…” என பதறியவன் அவள் கோபமாய் சொல்கிறாளோ என்று அதிர்ந்து அவன் பார்க்க அவனை பார்த்த நிமிடம் முகத்தில் பூசிக்கொண்ட புன்னகை அப்படியே தான் இருந்தது.
“இப்பிடி பேசாதடி, பயமா இருக்கு. என்னவோ உள்ளார வச்சு மருவுத. ஆனா சொல்லல. என்னன்னு வாய தொறவேன்டி…” என படபடத்து சொன்னவனை பார்த்தவள் இன்னும் புன்னகைக்க அவளின் கைக்குள் அடைபட்டிருந்ததை பார்த்தான்.
“இது அக்காவோட சீல தான? அத்த ரொம்ப தேடுதியா புள்ள ?…” என்றவன் தன் மடிமீது அவளை சாய்க்க மறுப்பாய் அவனை தட்டிவிட்டவள்,
“ப்ச், என்ன நீயி? நா என்ன பச்சப்புள்ளயா? தாலாட்டு பாடுத? போயா…” என எழுந்துகொண்டாள்.
“ஒளி…” என நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு கையை கொடுத்தவள் அதனை பிடித்து அவனும் எழுந்து நிற்க,
“சிலது ஆருக்கும் தெரியாம இருக்கதுதேன் எல்லாருக்கு செரி. இல்லனா…” என பேச்சை நிறுத்தி ஒரு பெருமூச்சுடன்,
“வா ஒறங்குவோ…” என்று அவனை வெளியே தள்ளியவள் கதவை சாற்றிவிட்டு தானும் வந்து படுத்துக்கொண்டாள்.
இளவரசன் இன்னும் நல்ல உறக்கத்தில் இருக்க அருள் படுக்காமல் அடுக்களைக்குள் சென்றான். எதற்கு என புரியாமல் மீண்டும் எழுந்து அவனின் பின்னால் செல்ல,
“இந்தா தன்ணி தான்டி குடிக்க வந்தே. இதுக்கு எதுக்கு பின்னால வார?…” என மண்பானையில் இருந்த நீரை எடுத்து குடித்தவன் மீண்டும் சென்று படுத்துக்கொள்ள மின்னொளிக்கு உறக்கமே அண்டவில்லை.
சில விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் இருக்கிறவரை சரி. ஆனால் அந்த வரையறைக்குள் இனி அருள் வரமுடியாதே? அவனிடம் எப்படி சொல்வதென்ற யோசனை பிறக்க தலைக்குள் வண்டு குடைவதை போல இருந்தது.
“எப்படியும் அவனுக்கு இன்னும் சில நாளில் தெரியத்தான் போகிறது. அப்பொழுது பார்த்துக்கொள்வோம், இப்போதைக்கு எதுவும் நினைத்து குழம்ப வேண்டாம்” என்று நினைத்து விட்டுவிட்டாள்.
சுவரோரமாய் இளவரசன் உறங்கிக்கொண்டிருக்க மின்னொளி திரும்பி படுத்து கூடத்தில் படுத்திருந்தவர்களை பார்த்தாள்.
கீழே உறங்கிக்கொண்டிருந்த அழகுப்பாட்டி, முருகய்யன், ராஜாத்தி என ஒவ்வொருவரிடமும் தன் பார்வையை சில நொடிகள் நிலைக்கவிட்டவள் மெதுவாய் சற்று தள்ளி படுத்திருந்த அருளிடம் கடைசியாய் நின்றாள்.
ஒரு புறமாய் ஒருகளித்து படுத்து நன்றான உறக்கத்தில் லேசான குறட்டையுடன் உறங்கிக்கொண்டிருந்தவனை பார்த்தபடி இருந்தவள் எந்த நிமிடம் உறங்க ஆரம்பித்தாளோ வழக்கமான நேரம் அவள் கண்விழித்தாள்.
வழக்கம் போல குளித்துவிட்டு தன் தாயின் அறைக்குள் வந்தவள் ஒரு புடவையை எடுத்து உடுத்திக்கொண்டு முத்துநகைக்கு விளக்கேற்றியவள் சில நொடிகள் அவரை பார்த்திருந்துவிட்டு வெளியே சென்றாள்.
என்றைக்கும் போல தனது வேலைகளை பார்க்க அவள் எழுந்த அரவத்தில் ராஜாத்தியும் கண்விழிக்க மின்னொளி வாசலை கூட்டி முடித்திருந்தாள்.
மாடுகளும், கன்றுகளும் இவளை பார்த்ததும் உற்சாகத்தில் சத்தம் எழுப்ப அவைகளுக்கு தீவனத்தை அள்ளிப்போட்டுவிட்டு வாசல் தெளிக்க தண்ணீரை எடுத்துக்கொண்டு சென்றாள்.
இவளை தேடிக்கொண்டு முதலில் வெளியே பார்த்து அங்கு காணாமல் பின் வழியாக தொழுவத்திற்கு வர அவள் செல்வதை பார்த்தார். வேகமாய் ஓடிச்சென்று,
“இந்தா இரு மின்னு, போயி இன்னு செத்த நேரந்தூங்கு…” என வாசல் தெளிப்பதற்கு வைத்திருந்த வாளியை வாங்க வர,
“இது நா எப்பவு பாக்குத வேல தான? நா பாத்துகிடுதேன்…” என்று சொல்ல ராஜாத்தி அவள் இன்னும் தன் மீது கோபத்தில் இருக்கிறாள் என நினைத்தவர் மேலும் பேசி அவளின் கோபத்தை கிளறவேண்டாம் என நினைத்து விட்டுவிட மின்னொளி அவரை கண்டுகொள்ளவில்லை.
அவள் கோலமிட்டு நிமிர பால்காரர் வந்துவிட்டார் பால் கறப்பதற்கு. மின்னொளியை பார்த்ததும் முகம் மலர்ந்தவர்,
“அட நம்ம மின்னு, நல்லாருக்கியாத்தா?…” என கேட்க அவரிடம் பேசிக்கொண்டே தொழுவத்திற்கு வந்தவள் அங்கிருந்த தொட்டியில் கை கால்களை கழுவிவிட்டு பால் அளந்து ஊற்ற தேவையானதை எடுத்து வைத்து வந்து அமர்ந்து கொள்ள வாங்குபவர்கள் வந்துவிட்டார்கள்.
“என்ன மின்னு திடுதிப்புன்னு மறுவீட்டுக்கு வந்துட்ட? ஓஞ்சின்னாத்தா நீ வாரன்னு ஒத்த வார்த்த சொல்லல?.புது புது மொறையா செய்யுதீக ஒம்ம வீட்டுல..” என்று வம்பாய் ஒருத்தி வேண்டுமென்றே சீண்டலாய் கேட்க,
“சொன்னா மட்டு? வரிசத்தட்ட அடுக்கிட்டு வந்துருவீயலாக்கும் யே அயித்த? அதேன் ஆவாதுன்னுதேன் ஒருத்தருட்டையு சொல்லாம வந்துட்டே. இப்ப என்னங்காட்டி? இன்னொருக்கா எம்புருசென் வீட்டுக்கு போயிட்டு ஒங்கட்ட சொல்லிட்டு வரவா?…” என மின்னொளி பதில் கொடுத்துவிட்டு,
“ஒங்க கணக்க முடிச்சாச்சா? இன்னு எம்புட்டு நாளக்கி காச குடுக்காம இழுத்தடிப்பீய? போன வாரமே தாரேன்னு சொன்னீக?…” என்று நோட்டை எடுத்து வைத்து கறாராய் கணக்கையும் கேட்க,
“நா என்ன ஓடியா போவ போறே? இங்கன நாலு வீடு தள்ளினா எவ்வீடு, ஒனக்கு தெரியாதத்தா?…”
“தெரியாமயா காச கேக்குதேன். வாங்குன பாலுக்கு காச குடுத்துப்போட்டு மத்த வேக்கியான பேச்ச பேசனு. இல்லாங்காட்டி கம்மின்னு இருக்கனு…” என்றவளிடம் பதில் பேச முடியவில்லை அந்த பெண்மணியால்.
“செரித்தா, ரெண்டு நாளுல ராசுக்கிட்ட தாரே…”
“இங்கனதேன் இருப்பே. எங்கிட்டயே தரலா…” என்று சொல்ல ஐயோ என்று நினைத்த பெண்மணி வேறு வழியில்லாது தலையசைத்து சென்றாள்.
“ஒனக்கு தேவையாடி? அவளே செரியான முசுடு. அவக்கிட்ட போயி வாய குடுக்குத?…”
“யே கெரகோ, நல்லதா வெசாரிக்கனுன்னு நெனச்சாகூட நாக்குல சனி ஒக்காந்து அவக்கிட்ட வம்புக்குத்தேன் பேசுது. பழகிருச்சுல…” என நொந்துகொண்டு பேசி சென்றனர்.
அடுத்தடுத்து ஆட்கள் வர ஆரம்பிக்க அருள் எழுந்து வந்துவிட்டான் வாசலுக்கு. அவளுக்கும் தனக்குமான காபியை எடுத்துக்கொண்டு.
“பாருரி ஆத்தா புருசென் கையிக்கே காப்பிய தாரத. பைய்ய(தாமதமாக) வந்தாலு வாழ்க்க அம்சந்தேன்…” என பார்த்தவர்களில் சிலர் தங்களுக்குள் சொல்லிக்கொள்ள காதில் விழுந்தாலும் அருளை முறைத்துக்கொண்டு காபியை வாங்கி கீழே வைத்துவிட்டு அவர்களுக்கு பாலை ஊற்றி அனுப்பினாள்.
கூட்டம் குறைந்து எஞ்சியிருந்த பாலை பால்காரரும் வாங்கி செல்ல இளவரசன் எழுந்து வந்துவிட்டான் மின்னொளியை தேடிக்கொண்டு.
“எக்கா புள்ளக்கி பால ஆத்திட்டு வா…” என ராஜாத்திக்கு குரல் கொடுத்தவன் அவனை தூக்கிச்சென்று முகம் கழுவி தன் தோளில் இருந்த துண்டில் முகத்தை துடைத்துவிட்டவன் தனது மடியில் அமர்த்த அவன் மின்னொளி வேலை எப்பொழுது முடியும் என்பதை போல பார்த்துக்கொண்டிருந்தான்.
அனைத்தையும் கழுவி கவிழ்த்துவிட்டு கையை துடைத்துவிட்டு வர அருளிடமிருந்து எழுந்து மின்னொளியிடம் தாவினான்.
“ஆத்தா ஆத்தா…” என கட்டிக்கொள்ள ராஜாத்தி வந்துவிட்டார் பாலை ஆற்றியபடி.
“மாமன காணோமே? அதுக்காங்காட்டி மனுசென் காட்டுக்கு போயிட்டாரா?…” என்று அதனை வாங்கி தான் ஆற்ற மின்னொளி இதை கேட்காதது போல் இளவரசனுக்கு ஏதேதோ கதை பேசிக்கொண்டிருந்தாள்.
ராஜாத்தி அருளின் கேள்வியில் கவனம் வைக்காமல் மகனையும், மகளையுமே பார்த்துக்கொண்டிருக்க,
“இந்தா, என்ன அங்கன வெறிக்க வெறிக்க பாக்குத? இன்னிக்குத்தேன் பாக்குதியா நீயி?…” என்று அருள் கேட்டதும் திடுக்கிட்டு திரும்பியவர்,
“என்னாலே கேட்ட?…” என்றார் புரியாமல்.
“செரித்தேன், அங்கன என்ன பார்வன்னு கேக்குதேன். நீயிதேன் வேற பிரதேசத்துக்கு போயிட்ட…” என கிண்டலாய் கேட்க,
“ஏம்லே சொல்ல மாட்ட? ஒம்பொஞ்சாதியா பாக்குதத விட்டுட்டு நீயி ஏம்லே என்னிய சவடாலு பேசுத?…” என்று ராஜாத்தியும் பேச,
“ஒன்னியோட ரோதனையா போச்சு. கலியாணம் பேசுத வரைக்கு பாத்துருவேனோன்னு பயந்து பாக்காதன்னு சொல்லுதது. இப்ப பாக்காம இருந்தா ஏம்லே பாக்கலங்குதது. ஒரு மனுசென் என்னதேன் செய்யுவியான்?…” என்று சொல்லிவிட,
“ஆத்தே, குடிய கெடுத்தியான்…” என்று அவனின் தலையில் ஒரு கொட்டை வைத்துவிட்டு ஓடியே போனார் ராஜாத்தி.
உள்ளே சென்றவருக்கு எங்கே இதை மின்னொளி கவனித்திருப்பாளோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கேட்டிருந்தால் என்ன நினைப்பாள் என்ற அச்சத்துடன் வேலையில் மனம் செல்லாது தடுமாறினார்.
“கோட்டிப்பய எங்க என்னத்த கொட்டுததுன்னு வெளங்காம வெவரங்கெட்டு பேசிக்கிட்டு கெடக்குதான். இத்த மாமேன் கேட்டுருந்தா? ஆத்தே…” என புலம்பிக்கொண்டு நிற்க அருளின் சிரிப்பு சத்தம் கேட்டது அவரின் பின்னால்.
“போலே, ஒன்னியால…”
“பயந்துக்கிட்டியாக்கும்? இத்த பேசுததுக்கு முன்னுக்க ரோசன பண்ணனு. அவுகளுக்கு தெரிஞ்சாங்காட்டியு ஆமா, நெனச்சேன்னு சொல்லுததுக்கு தெகிரியம் இருக்கனு. இத்துக்கு போயி அஞ்சுவியாக்கும்?…”
“அப்ப வேணுமின்னேதேன் சொன்னியாடே?…” என முறைக்க,
“இந்தா ராசு, இடுப்புச்செட்டிய நல்லா வெலக்கிட்டே. உப்புக்கறியை இதுலதேன் பெரட்டனுமாக்கும்?…” என அழகுப்பாட்டி உள்ளே வர அவரை பார்த்ததும் ஒரு சிரிப்புடன் வெளியேறினான் அருள்.
“ஆமாத்தே அவுக சொல்லிட்டித்தேன் போனாவுக…”
“சருவத்துல தண்ணிய ஊத்திருக்க, மூடாம விட்டுருக்க, பூச்சிபொட்டு விழுவுமில்ல. என்னத்த கவனத்துல இருக்க?…” என்று சொல்லி அதற்கொரு மூடியையும் போட்டு மூடிவிட்டு அழகுப்பாட்டி சென்றுவிட யோசனைகளை தள்ளி வைத்து வேலையில் கவனத்தை செலுத்தினார் ராஜாத்தி.
முருகய்யன் வந்துவிட அன்றே விருந்து வீட்டிலிருப்பவர்களுக்கு தடபுடலாக இருந்தது. மதிய உணவு நேரத்திற்கு முன்பே கணேசன் குணசாலி, செவ்வந்தியுடன் வந்துவிட்டான் இளவரசனை பார்க்க.
காசியாத்தா தான் வரமுடியாமல் போனது வீட்டில் ஆள் இருக்கவேண்டுமே என்று. அதற்கும் சுப்புவை நிறுத்திவிட்டு அருள் அவரை அழைத்து வந்தான்.
அருளும், மின்னொளியும் வந்து இரண்டு நாட்கள் கடந்தும் கூடத்திலேயே தூங்குவதை பார்த்த ராஜாத்தி தான் அழகுப்பாட்டியிடம் சொல்லி அவர்களை முத்துநகை அறையில் உறங்க சொல்லி சொல்ல அன்று இரவு உணவு முடிந்ததும் இளவரசன் உறங்கவும் அவனின் தூக்கம் கலையாமல் ராஜாத்தி அவனை உள்ளே தங்கள் அறைக்குள் தூக்கி செல்ல அழகுப்பாட்டி மெதுவாய் ஆரம்பித்தார்.
“இந்தா மின்னு, இம்புட்டு நா செரித்தேன் அவேனுக்கு மேலுக்கு நோவு. நீயு இங்கனவே மொடக்குன. இப்பத்தேன் அவென் சொவமாயிட்டானுல. போயி அந்த ரூமுல ஒறங்குதது?…” என மெதுவாய் கிசுகிசுப்பாய் சொல்ல மின்னொளி முறைத்த முறைப்பில் வாயை மூடிக்கொண்டார் அழகுப்பாட்டி.
“இப்ப இங்கன ஒறங்குதது ஒனக்கு உறுத்துதா? யே கெழவி பேச்சு தினுசா வருது? ஒனக்கு எதாச்சு…”
“இந்தா புள்ள நாந்தேன் சொல்லிவுட்டேன். இப்ப என்னத்துக்கு அவுகட்ட எகிறுத?…” என்று ராஜாத்தியே வந்துவிட ஏதாவது வாயை விட்டுவிடுவோமோ என மின்னொளி அமைதியாக இருக்க,
“எத்தா இங்கன மொடக்குதத உள்ள போயி ஒறங்குததுக்கு என்னன்னுதேன் கேக்குதா? இப்பத்தேன் கலியாணம் ஆயிருக்கு…”
“கெழவி நா சொல்லுதது ஒனக்கு புரியுதா இல்லியா?…” என்றவள் அருள் உள்ளே வரவும் அவனின் முகத்தை பார்த்தவள்,
“உள்ளார ஒறங்கனுமா, சொல்லுதாக. அதத்தேன் பேசிக்கிட்டு…”
“யே இங்கன ஒறங்குனா என்ன?…” என்றவனிடம் பதில் சொல்லமுடியாது ராஜாத்தி மின்னொளியை பார்க்க விட்டால் இன்னும் பேசி தன் அப்பாவும் வந்துவிடுவார் என்று நினைத்தவள்,
“இங்காருங்க அது யே அம்மா இருந்த ரூமு. அத்த நா சாமி மாரி பாத்துக்கிட்டு இருக்கே. அங்கன போயி கும்பிடத்தேன் செய்ய தோணும். குடித்தனமெல்லா பண்ண ஆவாது. இத்த ஒடச்சி சொல்லனுமாக்கு?…” என்று சத்தமாய் சொல்லியேவிட,
“இந்தா இப்ப எதுக்கு கத்தற? சத்தத்த கொற. வேணாமின்னா போவாத. அத்த சொல்லவிட்டு எரயுத?…” என்று அருள் முறைக்க,
“அதேன் சொல்லுதேன்ல. வேணாமின்னா தெரிய வேணாவா?…” என்றவளின் கண்கள் தாயின் அறையை பார்க்க அருள் அவளைத்தான் பார்த்தான்.
“இவளை சரியாக பார்க்காமல் விட்டுவிட்டோமோ? தப்பு பண்ணிட்டேன்.” என்ற எண்ணமே அவனின் மனதில் பிரதானமாய் இருந்தது.
“செரி, போயி படு. நீயி என்ன இங்கன வாய பாத்துக்கிட்டு?…” என்ற தம்பியின் அதட்டலில் உள்ளே தூக்கி சென்ற இளவரசனை மீண்டும் கூடத்திற்கு கொண்டுவந்து போட்டுவிட்டு ராஜாத்தி படுத்துக்கொள்ள அவர் கோபமாய் இருப்பது புரிந்தது.
ஐந்து நாட்கள் தங்கியிருந்தவர்கள் மீண்டும் தங்கள் ஊருக்கு செல்ல உடன் இளவரசனும் வருவேன் என்றதால் மின்னொளிக்கு அஞ்சியே அவனை அனுப்பிவைத்தார் ராஜாத்தி.
மேலும் சில நாட்கள் வரை அங்கும் இங்குமாய் தான் இருந்தான் இளவரசன். ஒருவாறு அவனுக்கு புரிந்துபோனது இனி மின்னொளி தன்னுடனே இருக்க மாட்டாள் என்று.
அதன் பின்னர் அவன் வந்து இருக்கும் நாட்களும் குறைந்து இதோ நேற்று வந்து இன்று கிளம்புகிறான்.
இன்னும் இரண்டு நாளில் வருவதாய் சொல்லி மின்னொளி அன்று தான் அவனை அனுப்பியிருந்தாள் ராஜாத்தியுடன்.
அடிக்கடி வந்து போய் இருந்தாலும் மின்னொளிக்கும் ராஜாத்திக்குமான பேச்சுவார்த்தை என்பது பழையபடி தான் இருந்தது.
ஒரே ஒரு மாற்றம். முன்பு யாரையாவது முன்னிறுத்தி பதில் சொல்வாள். இப்பொழுது நேரடியாக ஒற்றை வார்த்தையில் பதில் சொல்வாள். அவ்வளவே.
மின்னொளி தன்னை சின்னம்மா என்று பல வருடங்களுக்கு பின் அழைத்ததும் அதன் பின்னர் தன்னிடம் இனியாவது சகஜமாய் பேசுவாள் என்று எதிர்பார்த்த ராஜாத்திக்கு அது ஏமாற்றமாகத்தான் போனது. மின்னொளிக்கு அப்படி பேச வரவில்லை என்பதே உண்மை.
முருகய்யனுக்கு தன் மகள் பேசவில்லை என்பதை விட அவள் வாழ்க்கை, அவள் எதிர்காலம் சிறப்பாக அமைந்துவிட்டது என்று தான் நினைத்திருந்தார்.
ராஜாத்தி கிளம்பியதும் காசியாத்தாவுடன் செவந்தியையும் சேர்த்துக்கொண்டு வாசலில் இருந்த கலை இடத்தை கொத்திவிட்டு தண்ணீரை தெளித்து விட்டுக்கொண்டிருந்தாள் மின்னொளி.
“செத்த நேரங்கூட கம்மின்னு ஒக்காருததே கெடையாது. அதேன் இருட்டிருச்சுல. இன்னு என்ன அங்க சோலி…” என்று காலை அலம்பிவிட்டு வீட்டுக்குள் நுழைய,
“நீ போத்தா போயி அவேனுக்கு சாப்புட எடுத்து வெய்யி. நா பாத்துகிடுதேன்…” என காசியாத்தா சொல்லி அனுப்ப மின்னொளியும் உள்ளே வந்தாள்.
மனதிற்குள் ஒருவித படபடப்பு. இன்று அவனின் அணுகுமுறை நிச்சயம் தவிர்க்க முடியாது என்பதில் சற்று பயந்துதான் போயிருந்தாள்.
அவனிடம் இனி மறைப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அதனை அவன் எப்படி எடுத்துக்கொள்வானோ? இதுதான் அவளின் படபடப்பிற்கு காரணம்.
முதல்நாள் தங்களுடன் இளவரசன் இருந்ததனால் அருள் அருகில் வரவில்லை. ஆனால் இன்று?
“என்ன புள்ள வெறிக்க வெறிக்க நிக்கித? சாப்பாட்ட வெய்யி…” என்று சொல்லியவனின் நறுமணம் நாசியை நிறைக்கும் நெருக்கத்தில் இருக்க முத்துமுத்தாய் வியர்க்க ஆரம்பித்தது மெலிதாய்.
அதற்குள் காசியாத்தாவுடன் செவ்வந்தியும் உள்ளே வர அவர்களுக்கும் உணவை எடுத்து வைத்தவள் சேர்ந்து சாப்பிட்டாள்.
“ஆத்தா அக்கா எந்நேரோ போச்சு? இன்னிக்கு இங்கன இருக்க சொல்லிருக்கத்தான? நா வாரதுக்குள்ள போவாட்டி என்ன?…”
“அவ எங்க நிக்கிதா? வந்த செத்த நேரத்துலயே கெளம்பிட்டா. ராத்திரிக்கி இங்கனவே ஆக்கி தாரே, அத்த புடிச்சுக்கிட்டு போன்னா கேக்குதாளா? இந்தாருக்க ஊரு. ஒத்த சத்தங்குடுத்தா அந்த மனுசென் வந்து கூட்டிக்கிட போறாரு…”
“அதுக்கின்னு வெறுங்கையோடவா அனுப்புன?…”
“ஆக்கப்பொறுத்தவேன் ஆறப்பொறுக்காத கதயா வாய மூடுதியாடா? இன்னுஞ்சொல்லியே முடிக்கல. அதெல்லா கொழம்பு வெச்சி ஊத்தி குடுத்துவுட்டுட்டேன்…”
“நீட்டி மொழக்காம மொத சொல்லுததுக்கென்ன கெழவி?…”என்று தாயும் மகனும் வாயாடிக்கொண்டிருக்க மின்னொளியின் கண்கள் யோசனையில் மூழ்கி இருந்தது.
சாப்பிட்டு முடிக்கவும் அனைத்தையும் எடுத்து வைத்தவள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்க அவளை பின்னிருந்து அணைத்தவன்,
“இத்தெல்லா விடியவு பாக்குததுக்கென்னடி. வெரசா வா…” என்று அவளை கடிந்தவன் கன்னத்தில் முத்தமிட்டு காசியாத்தா வந்துவிடுவாரோ என்று சென்றுவிட்டான்.
தொண்டைக்குழிக்குள் எதுவோ வந்து அடைக்க பதிலின்றி நின்றவள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு பின் வாசலை அடைத்துவிட்டு வர கணேசன் வந்தான்.
“மின்னு அருளு ஒறங்கிட்டானா?…” என கேட்க,
“இந்தா வர சொல்லுதேன்…” என்றவள் அருளை அழைக்கும் முன் அவனே வந்துவிட்டான்.
“என்னண்ணே?…” என்றதும் அவனை வெளியே அழைத்து சென்று பேசிவிட்டு அனுப்ப அருள் மீண்டும் உள்ளே வந்து விளக்குகளை அணைத்துவிட்டு வந்து பார்க்க மின்னொளி வந்து படுத்திருந்தாள்.
“அதுக்குள்ளார ஒறங்கிட்டியா புள்ள?…” என்றபடி விளக்கை அணைத்துவிட்டு வந்து அவளையும் அணைக்க நொடிகள் கரைய கரைய அதற்கு மேல் பொறுமையின்றி அவனை விட்டு வேகமாய் விலகி எழுந்தாள் மின்னொளி.
இருட்டுக்குள் அவளை வரிவடிவம் பார்த்தவன் எழுந்து சென்று லைட்டை போட்டுவிட்டு,
“என்னடி?…” என அவளை ஆராயும் பார்வை பார்க்க தவிப்புடன் நின்றாள் மின்னொளி.
“ஒளி எதாச்சு நோவா?…” என ஆதுரமாய் அவன் கேட்ட விதம் அவளை மீண்டும் அந்த நாளில் சென்று நிறுத்த அவன் தனக்கு இளநீர் நீட்டிய பொழுது தான் உணர்ந்தது இப்பொழுதும் சிலிர்ப்பாய் இருக்க,
“நா கேட்டுக்கிட்டே நிக்கிதேன். என்னடி இப்பிடி பாக்குத?…” என்றவன் அவள் விளையாடுகிறாளோ என எண்ணி சற்று இலகுவாகி மீண்டும் அவளை அணைத்தான் அருள்.