கடல் – 26
“ஏன்டி இப்ப நா தொட்டா என்னவா? என்னவோ இன்னிக்கித்தான் ஒன்னிய கெட்டிக்கிட்டு வந்த மாரி சிலுத்துக்குற?…” என அருள் சீற அவனை பலம் கொண்ட மட்டும் விலக்கியவள் கீழே விரிப்பை போட அவளின் கையில் இருந்த போர்வையை பிடுங்கினான்.
“ப்ச், இன்னிக்கு வேண்டாங்கறேன்ல…” என அவனை விலகி சென்ற அவள் வெறும் தரையில் படுக்க அவனோ அவளை கீழே படுக்க விடாமல் கட்டிலில் தூக்கி போட்டவன்,
“எல்லாமே ஒ இஷ்டமாடி. அதெல்லாம் முடியாது…” என அவளின் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவன் தன் பக்கமாய் அவளை புரட்டினான்.
“யோவ் விடுங்கறேன்ல. எனக்கு நோவுது…” என்றாள் அவனின் கண்ணை பார்க்காமல்.
“என்ன? என்ன செய்யுது? சொல்லு அத்த…” வேண்டுமென்றே சொல்கிறாளோ என நம்பாமல் பார்க்க மின்னொளிக்கு அவஸ்தையாக போனது.
“நெசமாத்தேன்ய்யா…” என்றாள் அவனை தள்ளியபடி.
அவளை விலகி செல்லவிடாமல் அவனின் பிடியை மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே செல்ல மின்னொளிக்கு அது வலியை கொடுக்க ஆரம்பித்தது.
“சொன்னாத்தேன் விடுவேன். உன் மூஞ்சிய பாத்தா நோவு மாதிரி இல்ல…” என்றான் அவளின் முகத்தை ஆராய்ந்தவண்ணம்.
பின்னே உடம்பிற்கு முடியவில்லை என்பதற்கான எந்த அறிகுறியும் அவளின் முகத்தில் இல்லையே. அதிலும் அவனின் அணைப்பில் உருகியிருந்தவளின் முகமும் கண்களும் சொன்ன செய்தி அவனுக்கு வேறெதையோ உணர்த்தியது.
“ஐயோ இப்ப என்னனு தெரியனும் அம்புட்டுத்தான?…” என்றாள் அவனின் முகம் பார்த்து.
“ஆமா, ஆனா நெசத்த சொல்லனும். பொய்யி சொன்ன வாயிலயே போடுவேன்…” என அவன் மிரட்ட,
“ஹ்ம்ம், போடுவ, போடுவ. நான் சமஞ்சிட்டேன். போதுமா?…” என்று பட்டென்று சொல்ல தன் காதில் விழுந்தது உண்மையா என தெரியாமல் அவன் மலங்க மலங்க விழிக்க,
“இத்த கூட நம்பமாட்டியா?…” என்றாள் அவன் முழித்த முழியில் அடக்கப்பட்ட புன்னகையுடன்.
“யாத்தே ஏத்தா நெசமாத்தேன் சொல்லுதியா?…” என இன்னமும் நம்பமுடியாத பிரமிப்போடு கேட்டு எழுந்துகொள்ள,
“யோவ், குச்சுக்கிச்சு கட்ட கெளம்பிடாத. செத்த நில்லு…” என அவனை பிடித்து இழுக்க அவளின் மேலேயே பொத்தென்று விழுந்தான் அருள்.
“அம்மோவ்…” என்ற அலறலுடன் தன் மேல் விழுந்த அருளை விழுந்த வேகத்தில் அவள் கீழே தள்ளிவிட,
“ராங்கி, ராங்கி. மொரட்டு கோழி. கோட்டியாடி ஒனக்கு. புடிச்சு கீழே உருட்டுத?…”என்று கையை அழுத்தி பிடித்துவிட்டபடி எழுந்து நின்றவன் அவளையும் வேகமாய் எழுப்பி நிறுத்தினான்.
“உள்ளத சொல்லுடி என்னிக்கு இந்த சமாச்சாரம்?…” என்றான் அருள்.
அவள் சொல்லியதிலேயே தெரிந்தது அவனுக்கு இது இன்றைக்கு நேற்றைக்கு ஆனதல்ல என்று. அதுவே அவனின் கோபத்தை கிளற அவளை உறுத்து விழித்தான்.
“சொல்லுடி கேக்குதேன்ல…” என்றவனின் குரல் உயர,
“சாமி பொறந்தன்னிக்கி…” என்றாள் சலனமின்றி அவனை பார்த்தபடி.
அவனுக்கு இந்த நிகழ்வு சந்தோஷத்தை தருவதை விட இத்தனை நாள் மறைத்து தங்களை எல்லாம் முட்டாளாக்கி விட்டாளே என்ற கோபம் மிக கை முஷ்டிகள் இருக்க அவளை பார்த்தான்.
“இத்தன நாளு எங்கள சப்பயாக்கிட்ட இல்ல…”
“சும்மா இந்த சவடாலு பேசாத. இப்ப என்னத்துக்கி இந்த கத்து கத்துத? பைய பேசமாட்டியோ?…” என அவனின் சத்தத்தை குறைக்க பார்க்க அவளின் அசராத பேச்சு அருளுக்கு தாங்கொண்ணா வலியை தந்தது.
இத்தனை பெரிய விஷயத்தை மறைத்திருக்கிறாள் என்றால் இவளுக்கு தாங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லையா? இப்படி ஒதுக்கி வைத்துவிட்டாளே? என்ற ஆதங்கம் வேறு அவனை புரட்டியது.
அப்படி அல்ல என்னும் விதமான அவளின் பேச்சு தன்னை புயல் வேகத்தில் தாக்கவிருப்பதை உணரும் பொழுது அவனின் மனநிலை முற்றிலும் மாறுபடும் என்பதை அவன் உணராமல் மின்னொளியை பார்த்தான்.
அவளை அறைந்து தள்ளவேண்டும் என்ற ஆவேசம் எழுந்தாலும் இப்படி கோபப்பட்டு செய்த முட்டாள்த்தனங்கள் போதும் என நினைத்தவன் அங்குமிங்கும் நடந்துவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தான்.
மின்னொளி அவனை சமாதானம் செய்ய முயலவே இல்லை. அவனை பார்த்தபடி அப்படியே நிற்க காலும், இடுப்பும் வலிக்க ஆரம்பித்தது. அவனருகே சென்று அமராமல் கீழே அமர,
“பக்கத்துல வந்து இங்கன ஒக்காந்தா கடிச்சா வெக்க போறேன்? ஏன்டி இம்ச பண்ணுத? வாடி இங்கன…” என்று அதற்கும் கத்த காசியாத்தா எழுந்து வந்துவிடுவாரோ என்ற கவலை பிறந்தது மின்னொளிக்கு.
“மெல்லமா கூப்புட்டா ஆவாதக்கும் ஒனக்கு?…” என அவனை திட்டிக்கொண்டே வந்து அவனை விட்டு சற்று தள்ளி அமர அது அடங்கப்பார்த்த கோபத்தை மீண்டும் விசிறிவிட ஒரே இழுப்பில் இழுத்து தன் அருகே நெருக்கிக்கொண்டு அமர வைத்தவன் அவளை நகரவிடாது பிடித்து,
“ஒன்னிய கோமிக்குதேன். கொஞ்சங்காட்டியும் அஞ்சுததே இல்லல ஒனக்கு. வாயாடுத இன்னும்…” என,
“ஒங்கிட்ட நா என்னத்துக்குய்யா அஞ்சனு? நா என்ன தப்பா பண்ணிப்பிட்டேன்?…” என மின்னொளி பதிலுக்கு பதில் பேச,
“மறச்சது தப்பில்லாம என்ன? எங்கட்ட எல்லா ஏன்டி இத்தின நாலு மறச்ச?…”
“நா ஒன்னு மறைக்கல. ஒருத்தரு என்னிய கெவனிக்கல அம்புட்டுத்தேன்…” என்றவளின் விட்டேற்றியான பேச்சை உள்வங்கியவனுக்கு அப்படித்தானோ என்ற எண்ணம் மெலிதாய் வேரூன்றி வலுப்பெற ஆரம்பித்தது. ஆனாலும் அதை உணராதவன் போல பேச ஆரம்பித்தான்.
அவனுக்கு இப்பொழுது மின்னொளி சொல்லியது ஒரு விஷயமே இல்லை. யாரிடமும் சொல்லாமல் விட்டது பெரிய விஷயமாக பட்டது.
“கவனிக்கலானா? ஏன்டி ஒனக்காகத்தேன் எங்கக்கா ஒங்கப்பார ஒத்த காலுல நின்னு கலியாணத்த முடிச்சுட்டு வந்தா நீயி அவிகட்ட கூட சொல்லாம இருந்துருக்க? ஒன்னிய பாத்துக்கத்தேன்…” என்றதும் வெகுண்டுவிட்டாள்.
“இந்தா சும்மா இத்தையே சொல்லாத. என்னைய ஆரும் பாக்கல. என்னிய நாந்தேன் பாத்துக்கிட்டேன். அதே மாரி நா ஒன்னு ஒ அக்காவ ஒத்தகாலுல நில்லுன்னு சொல்லல. எங்கப்பார கட்டுன்னு சொல்லல. சும்மா இத்தையே சொல்லி எந்தலையில அம்புட்டையு ஏத்தாத. நா சொமந்த வரைக்கி போதும்…”
“ஏதே ஒ அக்காவா? அப்ப எனக்கு அக்கானா ஒனக்கு ஆருடி?…” என்று அவன் எகிற,
“என்னவோ நா தொடங்குன மாரித்தேன் அம்புட்டையு பேசுத. இப்பத்தான சொன்னே எந்தலையில ஏத்தாதன்னு. நீயி வார்த்தக்கி வார்த்த எங்கக்கா எங்கக்கான்னு தூக்கி சுத்துவ. அப்ப நா அதத்தேன் சொல்லுவே. எனக்கு சின்னம்மாத்தேன். அதுக்குன்னு வார்த்தைக்கி கூட ஒருத்தரு அத எனக்கு காமிச்சுக்குடுக்கல. ஒங்கக்காவுந்தேன் இதுல சேத்தி…” என்றுவிட்டாள் வெளிப்படையாக.
“ஒளி…” என்றான் அவளின் பேச்சில் வாயடைத்து.
“இம்புட்டு எகிறுதியே, அக்கான்னதும் சுறுசுறுன்னு எம்புட்டு வருது ஒனக்கு. அப்ப கூட பொறந்தாதேன் அவுகளுக்குன்னு பாப்ப நீயி, இல்ல?…”
“யேய் என்னடி?…” என்றான் அருள் கலங்கிய மனதுடன்.
அருளுக்கு பொங்கிய கோபம் மறைந்து இப்பொழுது அவள் அவனின் தவறை சுட்டிக்காட்ட ஆரம்பிக்கவும் அதன் உருவம் விஸ்வரூபமாய் உருவெடுத்து பயமுறுத்தியது அவனை.
“ஆராச்சும் வந்து ஒங்கக்காவ எங்கப்பாருக்கு கெட்டி வைய்யின்னு கழுத்துல கத்திய வெச்சொமா? எங்கம்மா அத்தனவாட்டி அருளு வந்தானா வந்தானான்னு சாவற வரைக்கி கேட்டுச்சு தெரியுமா? நீயி வரவே இல்ல. அப்ப எங்கம்மா ஒனக்கு ஒண்ணுமில்ல தான?…” என்று கசியும் விழிகளை துடைத்துக்கொண்டே அவள் விறைப்பாய் பார்த்து அவனை கேட்க அருள் சமைந்து போனான்.
சந்தோஷம் மட்டுமல்ல சங்கடங்களும் வேதனைகளும் கூட வாயடைத்து பேச்சற்று போக செய்துவிடும். மின்னொளி சொல்ல சொல்ல அருளுக்கு அத்தனை வலி. அந்த வலியில் அவன் வாயை திறக்கவே இல்லை.
தான் செய்யும் பொழுது தோன்றாத ஒன்று இப்பொழுது அவனை கை நீட்டி சுட்டிக்காட்ட அதனை தன்னாலே ஜீரணிக்க முடியவில்லை. இவள் எங்கனம் அதனை தாங்கினாள் என்று அவளை பார்த்தான்.
“ரத்த ஒறவுக்கு மத்த ஒறவுக்கு என்ன வித்தியாசமின்னு நீ காட்டிட்ட. ஆனா அத்த ஏத்துக்க முடியாம அம்மாதேன் ரொம்ப தவிச்சி போச்சு…”
“போதும்டி பெரிய தப்பு பண்ணிட்டேன்த்தா, ரொம்ப பெருசா பண்ணிட்டே. மன்னிச்சிக்கிடு. என்னிய என்ன செய்ய சொல்லுத?…”
“ஒன்னிய நானு இப்பவு ஒன்னுஞ்சொல்லல மாமோவ். ஆனா நா என்ன பண்ணே சொல்லு?…” என்றவளுக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் திணற,
யாரிடம் கோபத்தை காட்டவென்று தெரியாமல் அவளிடம் காட்டியிருக்கிறான். அதுவும் அளவுக்கு மீறியே. தவறுதான்.
“கலியாண நேரத்துல ஒங்கப்பாருட்ட வேணாமின்னு கால புடிச்சு கெஞ்சினேன். அவரு கைய்ய விரிச்சாச்சு, அக்காவு இடும்பு புடியாட்டம் ஒன்னிய பிடிச்சுக்கிட்டு ஒங்கப்பார கெட்டுவேன்னு நிக்குது. ஆத்தா கூட நிக்குது அவளங்காட்டியே. நா ஆருக்குன்னு பாக்க? என்னால எதுவு பண்ண முடியல. ஆரு எம்பேச்ச கேக்கல. அத ஒங்கிட்ட கோமிச்சுட்டே…” என்றவன்,
“உன்னிய பேச நீ பதிலுக்கு பேச இன்னு கோவமாகிடுச்சு எனக்கு. மாமோவ்ன்னு எங்கால சுத்தி வந்துட்டு என்னிய எளக்காரமா பேசுதாளேன்னு. அப்ப ஒனக்கு கூட நா அம்புட்டுத்தேனா அப்பிடின்னு கோவம்….”
“கோவம் வந்தா கோமிப்பியோ? இதுவே எங்கம்மா ஒ கூட பொறந்தவளா இருந்தா என்னிய அந்த மாரிலாம் நீ பேசிருப்பியா? சொல்லு?…”
“ஒளி…”
“நெசமாத்தேன் சொல்லுதேன். பேசிருக்கமாட்ட. நா ஆரோ பெத்த புள்ள தான. அதேன் செனைக்கி போடுதத ரோசன கெட்டு என்னட்ட பேசுன பாரு. அம்புட்டுக்கா நா போயிட்டேன்? அப்ப நா ஆருக்கிட்ட இத்த சொல்ல?…”
“ஒனக்காச்சும் அக்கா, ஆத்தான்னு இருக்காக. எங்கப்பாரு கூடத்தேன். ஆனா எனக்கு? நெசமா ஒருத்தரு இல்ல மாமோவ். சத்தியங்காட்டி இதுதேன் எனக்கு தோணுது…” என்றவளை மார்போடு அணைத்துக்கொண்டவனின் கண்களில் கண்ணீரின் தடம்.
“மன்னிச்சிக்கிடு புள்ள. மன்னிச்சிக்கிடு ஒளி…” என மாற்றி மாற்றி அவனின் உதடுகள் விடாமல் சொல்ல அவளின் பேச்சை நிறுத்தவே முடியவில்லை. எத்தனை பெரிய பாவத்தை அவளுக்கு செய்திருக்கிறான். இதற்கே அவனுக்கு முடியவில்லை. ஆனால் இதை விட இன்னும் அவள் சொல்ல போவதை அறிந்தால்?
“அம்மாதேன் சொல்லுச்சு என்னிக்கினாலு அப்பாரு ஒங்கப்பாருதேன். ஆனா வாழனுமின்னு ஒருத்தி வந்துட்டா. அவளுக்கான எடத்த விடுத்தான்னு. எங்கிட்டு நா ஒத்த வார்த்த பேசுனா கூட எங்கப்பாரு என்னிய பாத்துட்டு ஒங்கக்காவ விட்டுருவாரோன்னு பயந்து பயந்து பாசத்த மறச்சுட்டு எம்புட்டு நாளிக்கு இருந்தே ஒனக்கு தெரியுமா? இன்னிவரைக்கி அப்பிடித்தேன் இருக்கேன். இது ஒனக்கு கொறையா போச்சோ?…”
அவள் பேசாமல் இருப்பது தான் தெரியும். அது திருமணத்தினால் என்று நினைத்திருக்க இவள் சொல்வதை கேட்டவனுக்கு நெஞ்சை பிளப்பதை போல வேதனை தெறித்தது. சிறு வயதில் அவளுக்கிருந்த பக்குவம் வளர்ந்த தனக்கில்லாமல் போனதை எண்ணி அவமானமாய் உணர்ந்தவன்,
“இல்ல புள்ள, கோட்டிப்பயடி நானு. மன்னிச்சிக்கிடு…” என்று அவன் அரற்ற,
“ஒரு நா அம்மோவ் செத்துப்போச்சு. அணைச்சு அழ கூட ஒருத்தரு பக்கத்துல வரல. ஆரயாச்சு கட்டிக்கிட்டு ஓன்னு அழ வருது. ஆனா முடியல. அங்கன கெழவிய, அப்பார, ஒங்கக்காவ தவற ஆர தெரியு? ஆருக்கிட்ட போயி நிப்பே? சொல்லு?. நீயி பாத்த. பக்கத்துல வருவன்னு நெனச்சே. ஆனா நீயி கூட மொவத்த திருப்பிக்கிட்டல. அம்புட்டுக்கு நா ஒனக்கு ஆவாதவளா?…”
“ஐயோ போதும்டி. இதுக்கு மேல ஒத்த வார்த்த பேசாத. பேசாத…” என அவளின் வாயை அடைக்க பார்த்தான் அருள். முடியவே இல்லை. அவனின் கையை தட்டிவிட்டவள்,
“சொல்லுதியே சமஞ்சத சொல்ல கூட முடியாதான்னு? எதுக்கு சொல்லனு? எதுக்கு சொல்லனு சொல்லு? அன்னிக்கு வீட்டுல அத்தன மனுசக இருக்காக. என்னிய ராசியில்லாதவ, சோலிக்கு ஆவாதவன்னு அம்புட்டு ஏசுதாக…”
“புள்ளைய பாக்க வந்தா பாத்துட்டு போ. எம்வீட்டு புள்ளய பேசாதன்னு சொல்ல ஒருத்தவுகளு இல்ல. கெழவி கூட என்னியத்தேன் உள்ளார போன்னுச்சு. இதுக்காங்காட்டி எங்கம்மா இருந்தா ஒருத்திக்காச்சு நாக்குமேல பல்ல போட்டு பேச தெகிரியமிருக்கா? இல்ல நடு கூடத்துல நின்னு பேசிருவாளுவளா?…”
“அப்ப நானு அந்த வீட்டு மனுசி இல்லியா? இல்ல மனுசியே இல்லையா? வாய்க்கி வந்தபடி பேசுதாளுக போயி ஒளிஞ்சிக்கன்னா, நா ஒளிஞ்சா பேசுதத நிறுத்துவாகளா? அப்ப எவளோ ஒருத்திக்கி அஞ்சிக்கிட்டு எவ்வீட்டுலையே நா ஒதுங்கி நிக்கனு. அதேன் ஒதுங்கிட்டே மொத்தமாங்காட்டி…”
“இதுக்குத்தேன் இப்பிடி ஆவுமின்னுதேன் அம்மோவ் என்னிய எதுக்கானாலு ஒருத்தரு கைய பாத்துக்கிட்டு நிக்காதன்னு சொல்லி சொல்லி வளத்துச்சோ என்னவோ? அது எம்புட்டு நல்லதா போச்சு…”
“அன்னிக்கி சாமி பொறந்தன்னிக்குத்தேன் எனக்கு தெரிஞ்சிச்சு நா ஆளானது. அத்த சொல்ல வந்தா கேக்க கூட நாதியில்லாம நின்னே. பசில படுத்தவள பாக்க கூட ஆளு இல்ல. என்னிய வேற எப்பிடி இருக்க சொல்லுத? ஒங்கக்காவ விடு, கெழவி கூட கண்டுக்கல தெரியுமா? அம்மான்னா என்னன்னு எனக்கு அன்னிக்குத்தேன் வெளங்குச்சு. பெத்தவ இல்லனா புள்ளைக தெருவுலதேன்னு சொல்லுவாக. என்னிய தெருவுல நிறுத்தல, அம்புட்டுத்தேன்…”
“அம்மா இருக்கற வர அப்பாவ பாக்காத, போயி நிக்காத, ராசு பாக்கட்டுமின்னு சொல்லி என்னிய தள்ளி வெச்சிச்சி. சாவுத நெலமையில நா அத்த பாப்பேனா இல்ல ஒங்கக்காவ கொஞ்சிக்கிட்டு நிப்பேனா? சொல்லு. ஒனக்கே எங்கப்பார ஒங்கக்க கெட்டிக்கிடுதது எம்புட்டு ஒரப்பா இருந்துச்சு…”
“அப்ப எனக்கு? சொல்லுய்யா நா என்னன்னு அத பாப்பேன்?. கலியாணமின்னா என்னன்னு தெரியாத புள்ளயா நானு? எங்கூட சோக்காளியாட்ட வெளாடிட்டு ஒனக்கு சின்னம்மான்னு நின்னா என்ன நெனக்க? பேசலதேன். எனக்கு அது புடிக்கல பேசல. ஆனா நா ஏத்துக்கிட்டே தான?…”