“ஒரு வருசத்துக்கு மேல பேசாம இருந்து திடீருன்னு பேசுன்னு வந்து நின்னா? அதுவு எங்கம்மா செத்தன்னைக்கி என்னிய தொட்டு பாத்துருந்தா கூட காலுல பலியா விழுந்து கெடந்திருப்பே. அப்ப ஆரும் என்னிய பாக்கல. இதுதேன் நெரந்தரமின்னு நானு மனச தேத்திக்கிட்டே. போதுமா? போதுமாங்கறே…”
“மன்னிச்சிக்கிடு ஒளி…” மீண்டும் அவனின் மன்னிப்பு மின்னொளிக்கு வேதனையான சிரிப்பை தான் வரவழைத்தது. இன்னும் அவனின் அணைப்பிற்குள் தான் இருந்தாள்.
உணர்வற்ற வெகு சாதாரண குரலில் அவள் சொல்லிக்கொண்டே வந்தாலும் அவளின் உடல்மொழி அந்த நேரங்களில் அவள் அனுபவித்த வேதனைகளின் சாயல்களை அப்பட்டமாய் பிரதிபலித்தது.
அவளை அணைத்திருந்த அந்த தொடுகையில் அவன் உணர்ந்தவை ஏராளம். இதில் தனக்கு தான் ஏராளமான பங்கு என்பதில் உள்ளுக்குள் சில்லு சில்லாய் சிதறி கொண்டிருந்தான்.
“நீயி என்ன என்னிய செத்த முன்னதேன் கீழ தள்ளிவிட்டு இப்ப தூக்கி நிப்பாட்டி மன்னிச்சிகிடுன்னு சொல்லுதியா? இல்லயில்ல. பல வருசமா அனுபவிச்சிட்டே. இந்த மன்னிப்பெல்லா தாண்டி வந்துட்டே. இதேன் நானு. என்னியால சட்டு சட்டுன்னு மாற முடியாது. அம்புட்டுத்தேன்…”
“பொறவு என்னன்னுடி என்னிய கெட்ட சம்மதிச்ச? இன்னுமே வெளங்கல. அப்பிடி மல்லுக்கு நிப்பியே. இப்ப மன்னிக்க மாட்டேன்னுட்ட. பொறவு…”
இத்தனைக்கு பிறகும் இவள் எப்படி தன்னை திருமணம் செய்ய முன்வந்தாள் என்று தோன்றியது அவனுக்கு.
“ஒன்னிய முன்னாடியே புடிக்கும்தேன். நீதேன் ஒங்கக்காவ எங்கப்பாவுக்கு கெட்டினதுல இருந்து தப்பு தப்பு ஒங்கக்கா எங்காப்பாவ கெட்டினதுல இருந்து மொறச்சிக்கிட்டு நின்ன. என்னியவும் ஏசுன. அதேன் எனக்கு கோவம். பாக்கற எடத்துல எல்லா நீ வம்ப கெட்டிக்கிட்டுதேன் என்னிய பாப்ப. பொறவு நா மட்டும் ஒன்னிய சும்மா விட்டு வரனுமோ?…” என்றவள்,
“அப்பிடி என்னத்த நா பண்ணிட்டேம்ன்னு எம்மேல ஒனக்கு அம்புட்டு காண்டு. அதேன் நானு வேணுமின்னு வம்புக்கு நின்னே…”
“இனியும் நீ அப்படி பேசினால் நானும் பதிலுக்கு பேசுவேன்” என்ற த்வனியில் இருந்தது அவளின் குற்றம் சாட்டல்.
அத்தனை குற்றவுணர்வு அவனை ஆட்டிப்படைத்தாலும் இனி அதனை நினைத்துக்கொண்டே இருந்தால் சரிவராது. அவளை இதிலிருந்து வெளிக்கொணர வேண்டும். இனி இதனை எப்படி கையாள்வது என்று யோசித்தவன்,
“இப்பனாச்சு சொல்லிடு புள்ள…” என்றான் கெஞ்சலுடன் “என் பேச்சை கேளேன்” என்பதாய். மறுப்பாய் தலையசைத்தவள் அமைதியாய் இருக்க,
“எத்தா என்ன புடிக்குமா?. நெசத்த சொல்லு…”
“எத்தனவாட்டி இத்தயே கேப்ப?…” என்றாள் சற்று சலிப்பான குரலில்.
இத்தனை நேரம் அவள் பேசி விஷயங்களும், பேசிய விதமும், அதன் சாராம்சமும் என்ன? அவளின் உணர்ச்சிகளின் அதன் பாதிப்பில் இருந்து தன்னாலேயே சட்டென்று வெளி வரமுடியவில்லை. இவளானால் சொடக்கு போடும் நிமிடத்தில் இயல்பாகிவிட்டாளே என ஆச்சர்ய பாவனையுடன் அவளை பார்க்க,
“என்னய்யா? யே மூஞ்சில எழுதி ஒட்டிருக்கா புடிக்குதா இல்லியான்னு?…” என்று கேட்க,
“அட சொல்லுங்குதேன்ல…” என்றான் பிடிவாதமாய்.
“புடிச்சாலு, புடிக்காட்டியு நா இத்த ஆருக்கிட்டையு சொல்ல மாட்டே. நீயு சொல்லப்படாது. வெளங்குதா?…” என அவள் மிரட்ட ஆயாசத்துடன் பார்த்தான் அவன்.
“செரி நீயி கேட்டதுக்கான்டி சொல்லுதேன். புடிக்கல அப்பிடின்னு சொல்லமுடியாது. ஆனா கட்டிக்கனும்னு ஒரு யோசனை வாரப்போ ஒன்ன தாண்டி அந்த நெனப்பு வேற எங்கையு போவல. அம்புட்டுதேன்….” என்று முடிக்க,
“ஊருல அம்புட்டு பேசுனாகள, அவுக மூக்கறுத்தகணக்கா இத்த சொல்லி வாயடக்க…”
“நா யே மூக்கறுக்கனு? எனக்கென்ன வேற சோலி கழுத இல்லையாங்காட்டி இருக்கா? போயா அங்கிட்டு. உள்ள பஞ்சாயத்துக்கே பக்கவாத்தியமாம். இதுல வேலயத்தவளுக பஞ்சாயத்து பாட்டுக்கு கெட்டிமேளமாக்கு?…” என்றாள் நக்கலாக.
“அடியே ஏன்டி புரியாம, இத்த சொல்லாம இருக்க ஆவாதுடி. தெரிஞ்சிரும்டி ஒளி…” என்றான் அவளிடம். இதை எப்படி பட்டவர்த்தனமாக பேச என யோசிக்க அவளோ அவன் சொல்ல வருவதை புரிந்துகொண்டவள்,
“கெட்டிக்காம இருக்கப்ப ஆள பாக்காம பேசறது. இப்ப கெட்டிக்கிட்டவட்ட பேச ரோசன. நீயி நல்லவனாட்ட பம்மாத. ஒன்னிய எனக்கு தெரியுமய்யா…” என்று சிறு கிண்டலுடன் அவள் சொல்ல ஒரு கையால் முகத்தை மூடிக்கொண்டான் அருள்.
“என்னய்யா இதெல்லா?….” என்று அவனின் செயலில் அவள் சிரிக்க,
“அட கம்மின்னு இரேன்டி நீ வேற…” என்றவனை சுவாரசியம் பொங்க பார்த்தாள் மின்னொளி.
சிறிது நேரம் சிரிப்புடனும், கேலிகளுடனும் செல்ல சற்று நிமிடங்கள் மௌனமே பிரதானமாய் இருந்தது இருவருக்கிடையே.
இருவரும் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க, இப்படியே விட்டால் இவளும் சொல்ல மாட்டாள், தன்னையும் சொல்லவிடமாட்டாள் என்று நினைத்தவன் மீண்டும் மெதுவாய் வாயை திறந்தான்.
“ரொம்ப நோவுதா புள்ள?…” என்றதற்கு இல்லை என்று தலையசைத்தவள் படுக்க போக,
“செத்த இருடி…” என அமர்த்தினான்.
“யோவ் நேரமாவலயா? ஒறக்கம் கண்ண சுத்துதுய்யா…” என்று தலையை வாட்டமாய் அசைக்க,
“செரி, பேச்ச மாத்தாத. என்னதேன் நீயி முடியாதுன்னு சொன்னாலு இத்த நீயி சொல்லிருக்கனும் புள்ள…” என்றான் மீண்டும் முதலில் இருந்து. அதில் ஏகத்திற்கும் கடுப்பாகிவிட்டாள் இப்பொழுது.
“ஆருக்கிட்ட சொல்லனு? என்னத்துக்கு சொல்லனு? என்னத்துக்கு சொல்லன்னும்ங்கேன்? ஒவ்வொருத்தவகட்டையும் போய் ஏன் சொல்லனு சொல்லு? என்னவோ வயசுக்கு வரலன்னா ஒடம்புக்கு வந்த பெரிய நோயி மாதிரில பாக்குதாக. அவுகட்ட போயி எனக்கு நோயி சரியாயிருச்சு. முன்னமேனிக்கி என்னிய வசாம பேசுகன்னு கேட்டு மருவாதி வாங்கனுமோ?…”
அவளுக்கு அருள் திரும்ப திரும்ப இதை பேசுகிறானே என்ற எரிச்சலில் நெற்றிக்கண்ணை திறந்துவிட ஐயோ என்றானது அவனுக்கு. இவளை எப்படி மலையிறக்குவது என்று யோசித்தான்.
“ஆருக்கிட்டனா, வீட்டுலதேன் சொல்ல சொன்னே. வேற ஆருக்கிட்ட? செரி கெழவிட்டயாச்சும் சொல்லிருக்கறது? சொல்லிருந்தாங்காட்டி வீட்டுலவாச்சும் நிம்மதியாருப்பாக இல்ல?. ஒன்னிய நெனச்சு கவலப்படாம…”
“அதுதேன் சொல்ல தோணல. நிசமா…” என்றவள்,
“செரி அன்னிக்கி ஒனக்கு மாத்தரம் நா உடுப்பு வேற போட்டுருக்கேன்னு எப்பிடி தெரிஞ்சதாம்?…” என கேட்க என்றைக்கு என்று யோசித்தவன் அவளை குழப்பமாய் பார்க்க,
“அதேன்யா சாமி பொறந்தன்னிக்கி. நானு தாவணி உடுத்திருக்கேன்னு ஒனக்கு எப்பிடி தெரிஞ்சதாம்?…”
“இதெல்லா ஒரு வெசயமா? நா பாக்க வளந்தவ நீ என்னத்த கெட்டுத, கெட்டலன்னு பாத்தா தெரியாதா புள்ள. இதெல்லா ஒரு வெசயமாத்தா?…” என்றான் அது பெரிய விஷயமே இல்லை என்னும் விதமாய்.
“ஆனா அந்த வீட்டுலயே கெடக்குதவ நானு அங்க இருக்கறவக ஒருத்தவகளுக்கு கூட அது கண்ண உறுத்தல. நாலு நா கழிச்சி கெழவி கேக்குது ஊருக்காரவளுவ பேசுவாளுகன்னு நானா உடுப்ப மாத்திகிட்டேனாம். எவளுக்காவவோ நா மாத்திக்கனுமோ? அப்பிடி மாத்திக்கறவளா நானு? என்னனு கேக்க கூட அவுகளுக்கு நேரமில்ல…” என படபடவென பேசியவள்,
“ப்ச், இந்தாரு ஆரயுமே கொறச்சு பேச எனக்கு ஆவல. இத்தோட இத்த விடு. சொல்ல புடிக்கல. சொல்லல. தான தெரியங்காட்டி நானா சொல்லமாட்டே…” என்றாள் அத்தனை பிடிவாதமாய்.
“சொல்லிருந்தா ஒங்கலியாணத்த சீரா பண்ணிருப்பாரு ஒங்கப்பா. நமக்கு இப்புடி நடந்துருக்காது…” என வேண்டுமென்றே அருள் அவளை வம்பிழுக்க அவனை முறைத்தாள் மின்னொளி.
“நெசமாத்தேன். இப்ப இந்த பிரச்சனை ஆவலைனா இப்டி ஒனக்கு என்னிய கெட்டிவெச்சிருக்க மாட்டாக. கலியாணமே ஆயிருக்காது. வாழ்க்க முச்சுடும் ஒத்தையா இருந்துருப்பியா?…” என கேட்க,
“நீயி அப்பிடி விட்டுருக்கமாட்டன்னுதேன் தெகிரியம்…” என அவள் கண்ணடிக்க அவளை வியப்பாய் பார்த்தான். அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது இந்த பேச்சை வளர்க்க அவள் விரும்பவில்லை என்று.
“என்னடி சொல்லுத?…” என அவன் விடுவதாய் இல்லை.
“ஆமா இப்ப கூட நா சமையாதவன்னு தெரிஞ்சு தான கட்டிக்கிட்ட. என்ன ஒன்னு செத்த நாளு செண்டுருக்கும் நீயி என்னிய கெட்ட…” என அசராது அவள் பதில் சொல்லி புன்னகைக்க மொத்தமாய் மயங்கித்தான் போனான்.
“ஆனாலு நீயி இருக்கியே…” என்று அவன் அவளின் காதை பிடித்து திருக,
“இத்தோட இனி இத்த கேக்காத. கடசியா சொல்லுதேன்…”என்று எச்சரித்தவள்,
“சொல்லாததுக்கு மொத வீட்டுல உள்ளவுக காரணம்மின்னா ரெண்டாவது ஊர்க்காரவுகதேன். என்னதேன் உறவுக்காரவுக நல்லவக இருந்தாலு வெசந்தேன் முக்காவாசிபேரு. இல்லன்னா என்னிய மனசு நோவுறதாட்டம் பேசுவாகளா எங்கிட்டயு, வீட்டுல உள்ளவகட்டையு, பின்னாடியு?…”
“இத்த நா சொல்லிருந்தா என்ன யே முகத்துக்கு நேர ஏசுனவங்கள கூப்பிட்டு கறி விருந்தே போட்டுடுவாரு எங்கப்பாரு. வந்து சாப்புடறவங்களுக்கு எப்படியோ எனக்கு அது அசிங்கமாதேன் இருக்கும்…”
“உண்மைய சொல்லனுமின்னா எனக்கு மொதல்ல சொல்ல பிடிக்காம இருந்து ஒரு நேரத்துல இவுகளுக்கு எல்லா தெரியனுமின்னு என்னன்னு அகம்பாவமாவே ஆகிடுச்சு. ஏன் சொல்லனும்னு திமிர் தான். ஒத்துகிடுதேன்…” என்றவள் கடைசியில் குரல் கம்மிவிட,
“அதது கிடைக்கு போது கிடைச்சாத்தேன் அதுக்கெல்லா மதிப்பு, மருவாதி. எனக்கு நா நெனச்சப்ப கெடக்கல. நீ சொல்லலன்னு கேக்காத. சொல்றதுக்கு வாய்ப்பில்ல. அத்த தர ஒருத்தரு எனக்கு அப்ப இல்ல. எப்பிடி சொல்ல? தேடி போயி சொல்ல நெனச்சப்ப கேக்குததுக்கு அவுகளுக்கு நேரமில்ல. அப்பறம் சொல்ல எனக்கு மனசில்ல…” என தழுதழுத்து அவள் சொல்ல அவளின் காலை எடுத்து தன் மடியில் போட்டுக்கொண்டான் அருள்.
“என்னத்துக்காம் இது?…” என கலங்கிய விழிகளை துடைத்துவிட்டு கேட்க,
“நோவுதுன்ன அதேன். புடிக்குதேன்…” என்றான் கரிசனமாய். அவனின் முகம் கசங்கி கலங்கி இருக்க அதனை மாற்றும் விதமாய் மின்னொளி பேச ஆரம்பித்தாள்.
“காலு மட்டுமில்ல. மனசும்தேன் ரொம்ப நோவுது…” என்று குறும்பாய் சொல்ல அருளுக்குத்தான் பதிலுக்கு அவளை போல பேச வரவில்லை.
“சவடாலா பேச எனக்கு செரி நாந்தேன். ஆனா இது மாரி பேச தெரியலடி…” என்றான் அருள் பரிதாபமாய்.
அவனின் முக பாவனையில் அடக்கமுடியாது வாய்விட்டு சிரித்தவள் வயிற்றை பிடித்து குறுக,
“என்னடி வயித்த குன்னுத?…” என்றான் அருள்.
“செத்த நேரத்துல செரியா போயிரும். படுக்கட்டா…”
“நா ஒருத்தேன் கோட்டிப்பய…” என்று தான் எழுந்து கொண்டு அவளை படுக்க வைத்தவன் தானும் அவளருகே படுத்தவன் மென்மையாய் அவளின் வயிற்றை தடவி விட மின்னொளி கண்களை மூடினாள்.
ஏதோ ஒருவிதத்தில் அவளின் மனது தன் கணவனை எண்ணி நிறைவாய் உணர்ந்தது.
அவனுக்கு தான் தன்னுடைய உடல்நிலை இது ஒரு பொருட்டே இல்லை. தன் பருவமெய்தி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவனுக்கு அது ஒரு விஷயமே இல்லை.
மின்னொளி என்பவளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன் உறவை, உரிமையை விட்டுகொடுக்காமல் கட்டிக்கொண்டவன். அவளுக்கு அதுதானே வேண்டும். அது மட்டும் போதும்.
இப்பொழுது தான் சொல்லியதில் அவன் சந்தோஷப்பட்டு நிம்மதியாகியிருந்தால் நிச்சயம் உடைந்துதான் போயிருப்பாள் இவனும் இவ்வளவு தானா என்று.
ஆனால் அவன் அவ்வாறு நினைக்கவில்லையே. ஏன் சொல்லவில்லை என்ற கோபம் தானே பிரதானமாய் இருந்தது அவனிடத்தில்.
இனி தான் சொல்லாமல் அவனும் இதனை சொல்ல போவதில்லை. தெரியும் நேரம் வீட்டில் என்ன நினைப்பார்கள் என்கிற கவலையும் இல்லை.
அருளின் வருடல் மெதுவாய் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து நின்றுவிட அவன் உறங்கிவிட்டது புரிந்துகொண்டாள். அவனின் கையை இழுத்து இறுக்கமாய் பிடித்து கொண்டு தானும் உறங்க ஆரம்பத்தாள்.
உடலின் அசதியுடன் மனதில் இத்தனை நாள் பூட்டிவைத்திருந்தவற்றை வெளி கொணர்ந்ததும் சேர்ந்து ஒரு அலைபுருதல்கள் இல்லாத உறக்கத்தில் சுகமாய் அமிழ்த்தியது.