கடல் – 27
விடியற்காலை கண்விழித்து பார்த்த அருள் அருகில் மின்னொளி இல்லாமல் இருக்க சோம்பலுடன் எழுந்தமர்ந்தான்.
என்ன செய்ய? என்ன செய்ய? அவளை சந்தோஷப்படுத்த என்ன செய்ய? என மனது கூப்பாடு போட்டது.
முதல் நாள் அவள் சிதறவிட்ட வார்த்தைகளின் கனம் தாளாமல் அவன் மனது இன்னமும் சமநிலைக்கு வர முடியாமல் உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டே தான் இருந்தது.
இருந்தும் அதனை காட்டிக்கொண்டால் மின்னொளியும் அதிலிருந்து வெளிவரமாட்டாள் என்று முயன்று தன்னை இலகுவாக்கிக்கொண்டான்.
அவள் இழந்தவற்றை எல்லாம் திருப்பித்தர முடியாதே. ஆனாலும் இனி அவள் இழக்க எதுவும் இருக்க கூடாதென்ற உறுதியில் எழுந்து வெளியே வந்தவன் பின்பக்கம் குளியலறையில் தண்ணீர் விழும் சத்தத்தில் அங்கே சென்றான்.
“இவளுக்கு மட்டு என்னன்னுதேன் இந்நேரத்துக்கே விடியுதோ? எப்ப ஒறங்கினான்னே தெரியல. அதுக்குமின்ன நா அடஞ்சிட்டேன்…” என்ற முணங்கலுடன் அவனும் பின்னால் வர மின்னொளி குளியலறை விட்டு வெளியே வந்தாள். கையில் முதல் நாள் உடுத்தியிருந்த உடைகள் துவைத்து வாளியில் இருந்தது.
இவன் நிற்பதை கவனிக்காமல் கிணற்றடியில் வைத்து துணிகளை அலசி பிழிந்து கொண்டிருக்க,
“யே ராக்கோழி…” என்றவனின் குரலில் பதறி திடுக்கிட்டு திரும்பினாள் மின்னொளி.
“ஒனக்கு கோட்டியே தான்யா. இப்பிடியா அய்யனாராட்டம் வந்து நிப்ப. மூச்சே நின்னுக்குச்சு…” என அவனை திட்டியவள் தன்னை சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவனை பார்க்க,
“வெட்டவெளியில புருசென ஏசுதியே இத்த அக்கம்பக்கத்துல கேட்டானுவனா என்னிய மதிப்பானுங்களா?…” என கேட்டவனின் குரலில் சற்று காரம் ஏறுவதை போல கேட்க,
“அவிய மதிச்சு ஒனக்கு தட்டுல சோறு நெறையுது போ…” என அதற்கும் அவள் பதிலளிக்க அருளின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை.
“ஒங்கிட்ட ஆவுமாத்தா…” என்றவன் அவள் பிழிந்து வைத்து புடவையை எடுத்து கொடியில் போட்டுக்கொண்டே,
“ஒனக்கு எந்நேரம்டி விடியுது? அலுக்காம சலுக்காம கோழி கூவமின்ன எந்திக்கித?…” என கேட்டு அடுத்ததை எடுக்க,
“இத்த கேக்கத்தேன் இந்நேரத்துக்கு நீயி எந்திச்சியாக்கும்? மொவத்த கழுவிட்டு வா காப்பி வெக்கிதேன்…” என மற்ற உடுப்புகளை அவனிடமிருந்து பறிக்க,
“சீலய காயப்போட்டவேன் இத்த போடமாட்டேனா? குடுடி…” என மற்ற துணிகளையும் பிடித்து இழுக்க,
“ஆத்தே, கிறுக்குத்தேன் புடிச்சு ஆட்டுது. போயிரும் அம்புட்டுதேன் சொல்லுவேன்…” என மின்னொளி ஒரே இழுவையில் அந்த உடைகளை பிடுங்கிக்கொண்டு,
“அத்த பேச வாராது, இத்த பேச தெரியாதுன்னு அப்புராணியாட்டம் இருந்துட்டு இதெல்லா பண்ண தெரியுது ஒனக்கு…” என்று வேறு சீண்ட அருளின் புன்னகை இப்பொழுது சிரிப்பாய் மாற அந்த காரிருளில் அவனின் சிரிப்பு சத்தம் அதிகமாய் கேட்க அவனின் வாயை பொத்தியவள்,
“என்னவோ என்னிய சொன்ன நீயி, இப்ப ஊர எழுப்புத மாரி நீயிதேன் எரயுத. மனுசென் சிரிக்கிறதாட்டம் சிரி. போதும்…” என்றவளின் அலட்டலில் இன்னும் சிரித்தவன் அவளின் கையை எடுத்துவிட்டு கிணற்றுக்கு அருகில் இருந்த துணி துவைக்கும் கல்லில் அமர்ந்தான்.
“இங்கன என்னிய பாக்குததுக்கு போயி மாட்டுக்கு தீவனத்த வெக்கலாமில்ல. என்னமோ இன்னிக்குத்தான் பாக்குத மாரி. எந்திச்சு போயேன்…” என விரட்டியவள் துணிகளை போட்டுவிட்டு வாளியை அலசி கவிழ்த்திவிட்டு வீட்டிற்குள் நுழைய போக,
“அதுக்குத்தேன் ஆளுக வெச்சிருக்கேனில்ல. நீயி செத்த இருடி, ரயில புடிக்கிதவ கணக்காத்தேன் பறப்ப…” என்று தன்னருகே அமர்த்திக்கொண்டவன்,
“இப்ப நோவுதா புள்ள?…” என ஆதுரமாய் கேட்க இல்லை என்று தலையசைப்பை அவளிடமிருந்து வாங்கியவன் அடுத்த கேள்வியை கேட்க வாயில் ஒரு போடு போட்டாள் மின்னொளி.
“சொல்லிட்டு அடிடி….” என்று வாயை தடவிக்கொண்டவன்,
“பின்ன ஒனக்கு என்னத்துக்கு அதெல்லா? சும்மா சும்மா கோக்குமாக்கா கேட்டுக்கிட்டு. கம்மின்னு இருக்கமாட்டியா?…” என வெட்கம் அடங்கிய குரலில் அதட்டலும் குழைவுமாய் அவள் சொல்ல,
“செரி அத்த கேக்கல. இன்னிக்கு எத்தனாவது நா? அத்த சொல்லு…” என கேட்க,
“எதுக்கம்?…” என சலுகையாய் அவனின் மேல் சாய்ந்துகொண்டு அவள் கேட்க,
“உள்ள போவோமா புள்ள?…” என சொல்லவும் அவனை பார்த்த மின்னொளி,
“யே இங்கன என்னவாம்? நீயி தான ஒக்கார சொன்ன?…”
“இல்ல ஒனக்கு எடம் பத்தல. அதேன்…” என்றவனின் கைகள் அவளின் இடையில் ஜாலங்களை காட்ட,
“யோவ் சும்மா இருய்யா…” என அதட்ட,
“மொத நா கேட்டதுக்கு சொல்லுடி…” என்றான் விடாப்பிடியாய்.
“இன்னிக்கு மூணானாத்து. இப்ப சொல்லு. என்ன வெசயம்?…” என,
“என்னன்னுடி இத்த மறச்ச? அதுவும் இத்தினி வருஷம்?…” என்றான் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில்.
“அத்த தெரிஞ்சி நீயி என்ன பண்ண போறியாம்? நீயு மறைக்க போறியா?…” என கேலி பேசி வாய் பொத்தி அவள் சிரிக்க அவளை முறைத்தவன்,
“ஒங்கிட்ட மனுசென் பேசுவானா?…”
“பொறவு இத்த தெரிய அப்பிடி ஒனக்கு ஆஞ்சுக்கிட்டு வருதாக்கும்?…”
“நா ஒ புருசென்டி. எனக்கு தெரிஞ்சா என்ன? இல்ல தெரியக்கூடாதாக்கும்?…” என்று முறுக்கிக்கொள்ள அவனின் உரிமையில் புன்னகைத்தவள்,
“செரி இந்த வீட்டுக்குள்ளதேன் நீயு இருந்த. நேத்திக்கு நானா சொல்லாங்காட்டி ஒனக்கு தெரிஞ்சிது. இல்லனா அதுவு இல்ல. ரெண்டு நாளா ஒங்கம்மாவுக்கு தெரிஞ்சிச்சா? அவுக இங்கதேன இருந்தாக? சொல்லு…” என கேட்க,
“ஆமாடி. அது எப்பிடி…” என கதை கேட்பவன் போல நச்சரிக்க,
“அத்த தெரிஞ்சி ஒனக்கு சோலி ஆவப்போறதில்ல. அதுக்காங்கான்டி இத்த இப்பிடியே விடு…” என்ற மின்னொளி,
“இங்காரு மாமோவ், இத்த ஒ மனசுக்குள்ளவே வெச்சிக்கிடு. ஆருக்கிட்டையாச்சு சொன்ன, பொறவு தெரியு சேதி…” என மிரட்டி அவனின் மீசையை பிடித்து இழுத்தவள்,
“போயி குளிக்கறதுன்னா தண்ணிய ஊத்திட்டு வா, நா குடிக்க காப்பி வெக்குதேன். வாசல வேற கூட்டி குமிக்கனு…” என்றவள் அடுத்து இருக்கும் வேலைகளை அடுக்கிகொண்டே வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
அந்த காலை வேலை ரம்யமானதாய் மனதை இதமாக உதட்டில் நிறைந்திருந்த புன்னகையுடன் குளிக்க சென்றான் அருள்.
அவன் வருவதற்குள் அவனுக்கு காபியை போட்டு வைத்தவள் அதற்குள் வாசலையும் கூட்டி முடித்திருந்தாள் மின்னொளி.
“இந்தா இத்த குடிச்சுட்டு நீ கோலத்த வர…” என்று அவளுக்கு சேர்த்து அவன் ஊற்றிக்கொண்டு வர,
“நாந்தேன் வருவேனில்ல. அதுக்குமின்ன என்ன அவதி ஒனக்கு?…” என சொல்லியபடி தூக்கி சொருகி இருந்த புடவையை எடுத்துவிட்டுக்கொண்டு அவனருகே அமர இருவரும் பேசிக்கொண்டே காபியை குடித்து முடித்தனர்.
அதற்குள் சுப்பு வந்துவிட்டான் ஆட்டோவை எடுத்துக்கொண்டு. முதல்நாளே கணேசன் சொல்லியிருந்தான் உரமூட்டை ஏற்றும் பொழுது தனக்கும் சேர்த்து வாங்கவேண்டும் என்று.
அவர்களை அழைத்துச்செல்ல வந்தவனுக்கு காபியை கொண்டு வந்து கொடுத்தாள் மின்னொளி.
“என்னம்மா தங்கச்சி, அண்ணே வருவேன்னு இவேன் சொன்னானா?…” என கேட்டுக்கொண்டே காபியை குடிக்க,
“அவுக சொல்லல, விடியவு மாமா வாரேன்னு சொன்னாக. அதேன். நெறையத்தேன் இருக்கு…” என்றவள் கோலத்தை போட போக சுப்பு அமர்ந்துகொண்டான்.
இருவரும் பேசிக்கொண்டு கணேசனுக்காக காத்திருந்தனர். அவன் வரவும் மூவருமாக கிளம்பி சென்றார்கள்.
“இந்தா ஒளி, சாங்காலந்தேன் வருவே. பாத்துக்கிடு. ஆத்தா எந்திக்கவு சொல்லிடு…” என்று அவளிடம் சொல்லிவிட்டே சென்றான் அருள்.
அவர்களின் நாட்களும் பொழுதுகளும் குறையாத அன்புடன் செல்ல அருள் ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொரு செயலிலும் மின்னொளிக்கு தான் இருக்கிறேன் என காட்டிக்கொண்டே இருந்தான்.
அவளின் உரிமையை இயல்பாக உணர்த்தினாலும் அதை அழுத்தமாய் உணரவைத்தான். அவனின் முயற்சி புரிந்தாலும் ஏனோ அவன் தனக்கு தரும் அந்த முக்கியத்துவத்தை ஒருவகையில் மனது விரும்பவே செய்தது.
ஒவ்வொரு செயலிலும் மின்னொளி அருளால் கவரப்பட்டாள். காசியாத்தாவிற்கு இருவரின் ஒற்றுமையான இந்த வாழ்க்கையும் அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகையும் நிறைவை தந்தது.
ஏழு மாதங்கள் கடந்துவிட்டது அருள், மின்னொளி திருமணம் முடிந்து. ஒவ்வொரு நாளையும் அன்றுதான் புதிதாய் ஆரம்பிப்பதை போல அனுபவித்து வாழ்ந்தனர்.
வீட்டிலேயே அடைந்து கிடக்க முடியாதென அருளுடன் மின்னொளி வழக்கம் போல தங்களின் தோட்டத்திற்கும், தந்தையின் தோப்பு, காடு என்றும் வர ஆரம்பித்தாள். உண்மையில் அதனால் முருகய்யனின் வேலைப்பளு குறையத்தான் செய்தது.
ராஜாத்தி தான் ஒவ்வொரு மாதமும் மின்னொளி ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனார். அவர் இன்னமும் மின்னொளியை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.
அவளாகத்தான் சொல்லவேண்டும் அதுவும் ஏதாவது நல்ல விஷயத்தோடு என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று பார்க்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.
எப்படியும் தன் தம்பிக்கு எதுவும் தெரியாமல் இருக்காது என நினைத்தவர் இதனை மின்னொளியிடம் எப்படி பேச என்று யோசித்து பேச முடிவும் செய்துவிட்டார்.
எட்டு மாதங்கள் சென்றுவிட்டது. அன்று வீட்டிற்கு இளவரசனுடன் வந்தவர் அருளிடம் மகனை வெளியே அழைத்துச்செல்ல சொல்லிவிட்டு மின்னொளியை தனியாய் அறைக்குள் அழைத்துச்சென்றார்.
“எதாச்சு பேசனுமின்னா அங்கனையே பேசறது. என்னத்துக்கு இங்கன?…” என்று கேட்டவளிடம் எப்படி பேசுவதென தயங்கி பின்,
“இந்தா புள்ள ஓ நல்லதுக்குதேன் கேக்குதேன்….”
“அதுதேன், என்னன்னே சொல்லாம கேக்குதேன்னு சொல்லுதீய. மொத சொல்லுங்க…” என மின்னொளி சொல்ல,
“இல்ல கலியாணமாகி எட்டு மாசமே ஓடிருச்சு. இன்னு ஒன்னு விசேசமாவல. அதேன் ஆசுப்பத்திரிக்கி போவமான்னு…” என தயங்கி தயங்கி சொல்ல மின்னொளிக்கு கண்மண் தெரியாத கோபம் வந்துவிட்டது.
“என்ன நினைக்கிதீய நீங்க? இப்ப நா பெரியமனுசி ஆயிட்டேன்னு ஒடனே புள்ள பெக்குதற பேசுதீய. இல்ல என்னிய என்னன்னு நெனைக்கிதீய?…”
“மின்னு ஒ நல்லதுக்குத்தேன்…” என ராஜாத்தி கலங்கிவிட்டார்.
“எல்லா நேரத்துலையு இந்த அக்கற சக்கரத்தண்ணியா இனிக்காது. குத்தவெக்கிற வரைக்கி வயசுக்கு வரல வரலன்னு பேசுதது. வயசுக்கு வந்தது புள்ள பெக்கலன்னு பேசறதுதேன். எப்பவு எதாச்சு சொல்லிட்டே இருக்கனுமோ?…” என்று சொல்லிவிட விக்கித்து நின்றுவிட்டார் ராஜாத்தி.
“போது நா பெக்குதே, பெக்கல. இப்ப என்னவா? இல்ல நா வயசுக்கு வராமையே இருந்த என்ன பண்ணுறதா இருந்தீக?…” என்று படபடவென பொரிந்துதள்ள பேசியவளின் கண்களிலும் நீர், கேட்டவரின் கண்களிலும் நீர்.
சில நொடிகள் மௌனமாய் நின்றிருந்தனர் இருவரும். ராஜாத்தியின் அழுகையில் தன்னிலை பெற்றவள் சற்று மனம் இளகி,
“இங்காருங்க சின்னம்மா, என்னிய இப்பிடி சொல்லாம இருந்தாவே போது. மறுக்கா மறுக்கா இத்த நாம பேச வேணா. அம்புட்டுத்தேன். மத்தவக வேணுமின்னு பேசுதத நீங்க நல்லதுக்குன்னு சொல்லி பேசறீய. இதேன் வித்தியாசம்…” என்று தன்மையாக சொல்ல கண்களை துடைத்துவிட்டு வெளியேறிவிட்டார் ராஜாத்தி.
“என்னடி வந்த விசுக்குல வாசலுக்கு வந்து ஒக்காந்துட்ட? திண்ண வரைக்கி வெயிலு ஒரைக்கிது. வேக்காட்டுல அவியாம உள்ள வாத்தா…” என மகளை அழைத்தார் காசியாத்தா.
“நாந்தேன் தொழுவத்த பாத்துட்டு வாரேன்னு சொன்னேமில்ல. அதுக்காங்காட்டி என்னத்துக்கு வெளில வந்து ஒக்காந்துருக்க. மின்னு என்ன செய்யதா? எதாச்சு அவகிட்ட பேசிக்கிட்டு இருக்கத்தான? பாரு மூஞ்சியெல்லா வேர்த்துருக்கு…” என்று சொல்லி உள்ளே அழைக்க ராஜாத்திக்கு செல்ல விருப்பமே இல்லை.
“என்னக்கா இங்கன ஒக்காந்திருக்க?…” என இளவரசனை தூக்கிக்கொண்டு வந்த தம்பியை பார்த்ததும் முகத்தை மாற்றிக்கொண்டவர் லேசாய் புன்னகைத்து,
“சும்மாதேன்…” என்றவர் மகனை வாங்க,
“ம்ஹூ மாட்டே. ஆத்தா…” என சொல்லி அருளிடமிருந்து இறங்கி வீட்டினுள் ஓடிவிட்டான்.
“ஆத்தா இருந்தா பெத்தவ வேணா ஒம்மவனுக்கு…” என்ற தம்பியை பார்த்த ராஜாத்தி,
“ஆமாமா என்னிய ஆருக்குத்தேன் வேணுங்குது?…” என விட்டேற்றியாக பேச,
“ஆருக்கு வேணாங்குது ஒன்னிய? என்னத்துக்கு கொரலு வெசனத்த தூக்குது?…” என்றவனை பார்த்தவர் உள்ளே சென்றுவிட யோசனையுடன் அவரை பார்த்துக்கொண்டே அருள் பின்னே சென்றான்.
“ராஜாத்தியின் முகமே சரியில்லை என்பது அவனுக்கு நன்றாக புரிந்த போதும் என்னவென தெரியாமல் அமைதியாக இருந்தான்.
ராஜாத்திக்கு சாப்பிட அனைத்தையும் எடுத்து வைத்த காசியாத்தா மின்னொளியை தேட,
“இருத்தா நா போயி கூட்டியாறேன். நீ தட்டுல எடுத்து வெய்யி…” என்ற அருள் தங்களின் அறைக்குள் நுழைய அங்கே இளவரசன் மின்னொளியை கொஞ்சிக்கொண்டிருந்தான் அவளின் கண்களை துடைத்துவிட்டவாறு.
“ஒளி…” என உள்ளே நுழைந்தவன் கண்ட காட்சி இதுவே.