“என்னடி இது? மூஞ்சியே செரியில்ல. அக்காவு வாடி கெடக்குது? என்னத்தையாச்சு சொல்லுச்சா?…” என கேட்க அவனின் கேள்வியில் புன்னகைத்தாள் மின்னொளி.
“இப்ப எதுக்குடி சிரிக்கித?…” என இளவரசனை தூக்கிக்கொண்டு கேட்க,
“இப்ப இத்த கேக்கத்தேன் வந்தியலோ?…” என பதிலுக்கு கேட்க,
“இப்பலா நா கேக்குததுக்கு பதிலா சொல்லாம திரும்ப கேக்க ஆரம்பிச்சுட்ட புள்ள…” என்றவனின் வாயை அடைத்தான் இளவரசன்.
“லே மருமவனே ஆத்தாவ திட்டலவே. ஒடனே மொறப்பியே?…” என மருமகனை ஒரு சுழற்று சுழற்றி மேலே தூக்கிப்போட்டு பிடித்தவன்,
“சாப்புட வா. அக்கா ஒக்காந்துருக்கா…” …”என்று சொல்லி அவன் முன்னால் நடக்க மின்னொளியும் அவனுடன் வெளியே வந்தாள்.
கூடத்தில் ராஜாத்தி அடுத்த வாரம் வரவிருக்கும் இளவரசனின் பிறந்தநாள் பற்றி சொல்லிக்கொண்டிருக்க காசியாத்தா பேசிக்கொண்டிருந்தார்.
“வழக்கம் போலத்தேனே கோயிலுக்கு போயி பொங்க வெச்சிட்டு சாமிய கும்புட்டு வரனு. அதெல்லா விடியக்கருக்க கெளம்பி வரமாட்டமா? மொதநாத்தே (முதல்நாளே) அங்கன வந்து ரா தங்கனுமா? என்னடி நீயி…” என காசியாத்தா சொல்லிக்கொண்டிருக்க,
“யத்தா பொறந்தநாளுக்கு நாங்க வரத்தேன் போறோம். அதுக்குன்னு மொதவே வரமின்னா….” என அருளும் இழுக்க அவ்வளவு தான் ராஜாத்திக்கு மின்னொளி பேசியதும், இப்பொழுது தான் பேசியதும், தன்னை சேர்ந்தோர் மறுத்ததும் சேர்ந்துகொள்ள கண்ணீர் இறங்கிவிட்டது கண்களில் இருந்து.
“இந்தா ராசு, என்னடி இது கோட்டி புடிச்சவளாட்டம். கண்ண தொட…” என காசியாத்தா சொல்ல இளவரசன் சற்று மிரண்டு மின்னொளியின் முகத்தையும், ராஜாத்தியையும் மாறி மாறி பார்க்க அவள் ஒன்றுமில்லை என்பதை போல மெலிதாய் புன்னகைத்து அவனின் பயத்தை போக்கினாள்.
“அந்த வீட்டுல நாங்கதேன் இருக்கோம். எதாச்சு நல்லதுக்கு எல்லாரு ஒன்னு சேரலாமின்னா அதுக்கு கூட மாட்டேன்னா…” என விசும்பியவர்,
“செரி ஒங்க தோதுப்படி வாங்க. நா ஒன்னிமே சொல்லல…”என்றவர் கையை கழுவிவிட்டு பின்னால் சென்று அமர்ந்துகொள்ள,
“கூப்புடுறவகட்ட இப்பிடித்தேன் பேசுவாகளா ஆத்தா? இப்ப செரின்னு சொல்லிட்டு பொறவு முடிஞ்சா மொத நாளு போறது. இல்லனா தோதுப்படாதுன்னு அன்னிக்கு சொல்லிக்கறது. வந்தவகள இப்பிடித்தேன் கண்ணா கசக்க வெப்பீயலோ?…” என மின்னொளி சொல்லவும்,
“இந்தா இரு புள்ள நா போயி பேசி கூட்டியாறேன்…” என்று அருள் தான் எழுந்து சென்றான்.
“அக்கா அழுதாங்காட்டி தம்பிக்கு தாங்காம கண்ணுல தண்ணி கெட்டிரும்…” என காசியாத்தாவிடம் மின்னொளி ரகசியம் பேச இருவரும் சிரிப்பதை பார்த்து இளவரசனும் அவர்களை போல ரகசியமாய் சத்தமில்லாமல் வாயை பொத்தி சிரித்தான்.
ஒருவழியாக ராஜாத்தியை சமாளித்து முதல்நாளே வருகிறோம் என்று சொல்லி அவரை சிரித்த முகத்துடன் வழியனுப்பி வைத்த பின்னர் தான் நிம்மதியாக இருந்தது வீட்டினருக்கு.
இதில் அருள் வேறு தனியாய் ஒரு திட்டம் தீட்டியிருந்தான் மின்னொளிக்கு தெரியாமல்.
சொன்னதை போல இளவரசனுக்காகவே முதல்நாளே சென்றுவிட்டனர் அனைவரும்.
சுப்புவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு இரவு முருகய்யன் வீட்டில் அனைவரும் தங்கிவிட ராஜாத்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அதிலும் முருகய்யன் மகளை பார்த்து பார்த்து பூரிப்பதில் இன்னமும் மகிழ்ச்சி.
அதிகாலையே எழுந்து அனைவரும் குளித்து கோவிலுக்கு போய் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வந்துவிட்டனர்.
ராஜாத்தி அக்கம்பக்கத்தினருக்கு பொங்கலை கொடுத்துவிட்டு வர இளவரசன் நல்ல உறக்கத்தில் இருக்க முருகய்யன் அழகுப்பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அவர்களிடம் அவசர வேலை என சொல்லிவிட்டு மின்னொளியை கூட்டிக்கொண்டு தங்களின் மாந்தோப்பிற்கு அவளை அழைத்துக்கொண்டு வர,
“இப்ப இந்த நேரத்துல ஆரு இங்கன கூட்டியார சொன்னா? வெயில மண்டைய பொளக்குது…” என அவனுடன் அவனின் புல்லட்டில் செல்லும் பொழுதே சொல்லிக்கொண்டே வந்தாள்.
அந்த புல்லட்டை மின்னொளியை திருமணம் செய்த பின்னர் தான் எடுத்து ஓட்டவே ஆரம்பித்தான். அதிலும் அவளிடம் ஜல்லிக்கட்டில் வாங்கியது என ஒவ்வொரு முறையும் பெருமை பீற்றாவிட்டால் அன்றைய உறக்கம் அவனை அண்டாது. தோப்பில் வந்து வண்டியை நிறுத்தியவன்,
“செத்த நில்லு புள்ள வாரேன்…” என்று அங்கே இருந்த சிறு குடிசைக்குள் நுழைய,
“கூட்டியாந்து ஒத்தையில நில்லுன்னா, இதுக்கா கூட்டுவந்த?…” என வம்படியாக அவனின் பின்னே வந்தவள் அங்கிருந்தவற்றை பார்த்து கேள்வியாக புருவத்தை உயர்த்த,
“இல்ல இன்னிக்குத்தேன நீயி வயசுக்கு வந்த?…”
“அதுக்கு?…” என கேட்கவும்,
“அதேன் அன்னிக்கி நீயி சொன்னதுல இருந்தே உறுத்திக்கிட்டே இருந்துச்சுடி. ஒனக்கு ஒரு சீல எடுத்து வெச்சேன். போயி கெட்டிக்கிட்டு வா…” என உணர்ச்சி மிகுந்த குரலில் அவன் சொல்ல,
“யோவ், மாமோவ், என்ன இது?…” என அவனின் கையை பிடிக்க,
“அட போத்தா போங்கேன்ல…” என அவளை மட்டும் குடிசையில் விட்டுவிட்டு அவன் வெளியே வர மின்னொளிக்கு அந்த நிமிடத்தை எப்படி எதிர்கொள்வதென தெரியவில்லை.
கையில் இருந்த புடவையை பார்த்தபடியே அவள் நின்றாள். பட்டுப்புடவை அத்தனை அழகாய் இருந்தது. அதற்கு ஏற்ற சட்டையும் தைக்கப்பட்டு அனைத்தும் புதிதாய். கண்கள் கலங்க புன்னகையுடன் அதனை உடுத்தினாள்.
வெளியே கயிற்று கட்டிலில் கைகளில் முகத்தை மூடியபடி அருள் அமர்ந்திருக்க அவளின் கொலுசொலியில் நிமிர்ந்து பார்த்தான்.
அவன் எடுத்துவந்த புடவையில் நின்ற மனைவியை பார்க்க பார்க்க அவனின் குற்ற உணர்வு இன்னும் அதிகமாகியது.
“எங்கள பாவம் பண்ண விட்டு நீயி சாமியா ஒசந்துட்டடி. அன்னிக்கே ஒத்த வார்த்த நீயி சொல்லிருந்தா ஒன்னிய குச்சுல ஒக்கார வெச்சு மாமேன் நானு சீர வரிசயா வண்டியா கொண்டாந்து எறக்கிருப்பேன்…” என சொல்ல,
“நீயிதேன் எம்மேல கோமிச்சிக்கிட்டு கெடந்தியே. எறக்கிருப்ப எறக்கிருப்ப…” என்றாள். அது ஒரு சாதாரண கிண்டல் பேச்சு தான். ஆனாலும் தாங்க முடியவில்லை அவனால்.
“ஒன்னிய விட எனக்கு வேற என்னடி முக்கியம்? அன்னிக்கு ஒம்மொவத்த பாத்து ஒத்தையில நிக்குதத பாத்துத்தேன் பக்கத்துல வந்தேன். இல்லனா கோவமா இருந்தா நா யே வர போறேன்? சொல்லுடி?…” என தீவிரமான முகபாவனையுடன் சொல்ல மின்னொளியால் பதில் சொல்ல முடியவில்லை.
“இந்த ஒத்த சீல எல்லாத்தியு மாத்தாத்தாதுதேன். இருந்தாலு யே ஆத்தமாட்டாமக்கிதேன் குடுக்குதேன்…” என்றதும்,
“அய்ய, யோவ் வெளாட்டுக்கு சொன்னே நானு. கம்மின்னு அழுவாம கண்ண தொட…” என கலகலத்து சிரித்தவள் தன் புடவை முந்தானையில் அவனின் முகத்தை துடைக்க,
“அழுதேனா?…” என தன் கண்களை துடைத்து பார்க்க அதற்கும் மின்னொளி சிரித்தாள்.
“யே புள்ள பொய்யா சொல்லுத?…” என அவளை இழுத்து அணைத்தவன்,
“இங்காருத்தா தப்பு பண்ணிப்பிட்டோம். அத்த மாத்த முடியாதுதேன். அதுக்குன்னு அப்பிடியே விடமாட்டேன். இந்த சீலய நீயி அன்னிக்கி கெட்டலனாலு இனி பாக்குதப்ப மாமேன் இதுக்கு எடுத்து தந்ததுன்னு நெனப்பு இருக்கும் பாரு. அத்து போதும்டி…”
“யோவ் மாமோவ், இப்ப நீயி இம்புட்டு எதுக்கு சொல்லுத? ஒனக்கு எடுத்தாந்தேன். கெட்டுன்னா கெட்ட போறேன்…”
“நெஞ்ச அறுக்குது புள்ள…” என்றவன் அவளை இறுக்கமாய் அணைத்துக்கொள்ள மின்னொளிக்கு வெட்கமாய் போனது. வெட்ட வெளியில் பகலில் இப்படி அணைத்துக்கொண்டு அவன் நிற்க விலக முடியாமல் தத்தளித்தவள் பின்,
“நம்மள ஆரோ பாக்குதாக…” என கிசுகிசுப்பாய் அவனிடம் சொல்ல பட்டென அவளை விலகியவன் கட்டிலில் அமர்ந்து சுற்றிலும் பார்க்க யாருமில்லாமல் போக அசடு வழிய மின்னொளியை பார்த்தான்.
“ஆனாலு ரொம்ப மோசம் புள்ள நீயி. போடி…” என முறைக்க அவனின் செயலில் வாய்விட்டு சிரித்தவள்,
“கெளம்புவோமா இல்ல தலைக்கி தண்ணி ஊத்தி கொல போடுதியா? மால போடல? குச்சு எங்க?…” என்று வேறு கேட்க அருள் வாயே திறக்கவில்லை. வீடு வரும் வரை அவனை கிண்டல் பேசி ஒரு வழி ஆக்கிவிட்டாள் மின்னொளி.
“அம்புட்டும் வாயி, இருடி ராத்திரி சிக்குவல்ல. பாத்துக்கிடுதேன்…” என்றவனின் பார்வையில் நாணம் மேலேற வாடாத புன்னகையுடன் உள்ளே செல்ல அருள் வண்டியை நிறுத்தினான்.
அங்கே இருவரின் இயல்பும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு இடம் பெயர்ந்திருந்தது. அவர்களின் நேசம் போலவே.
முதலாம் திருமண நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அதற்கு புது உடைகள் எடுத்து வந்து அவர்களுக்கு கொடுக்க வந்திருந்தார் முருகய்யன். உடன் ராஜாத்தியும், இளவரசனும்.
அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு பேசிக்கொண்டிருக்க அவர்களுக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்த மின்னொளி தடுமாற மகளின் மீதே பார்வையை வைத்திருந்த முருகய்யன் சரியாக பிடித்துக்கொள்ள அப்படியே சரிந்து அமர்ந்தார்.
“ஆத்தா, எஞ்சாமி என்னாச்சு எம்புள்ளைக்கு?…” என பதறிப்போனார் முருகய்யன்.
ஒரு நாளும் இப்படி அவள் மயங்கி விழுந்தோ உடம்பு முடியாமலோ இருந்ததே இல்லை என்பதால் அவரின் பதட்டம் அதிகமாகியது.
அருளுக்கு அவளின் மயக்கம் எதனால் என்று புரிந்ததனால் அமைதியாக நின்றான். ராஜாத்தி அப்படியும் இருக்குமோ என நினைத்த ராஜாத்தி,
“ஆத்தா கைய புடிச்சு பாரு…” என படபடக்க மின்னொளி முகத்தில் தண்ணீரை தெளிக்க வந்த காசியாத்தா,
“என்னத்துக்குடி? கொஞ்ச நாளா இங்கைக்கும் அங்கைக்குமா அலைஞ்சா. அதேன் மேலுக்கு நோவா இருக்கும். இதுக்கெதுக்கு கைய புடிச்சு பாக்க சொல்லுத?…” என காசியாத்தா சொல்ல,
“அட பாருங்கேன்ல…” என்ற ராஜாத்தி அருளை பார்க்க அவன் இவற்றை கவனித்தபடி அமைதியாக நின்றான்.
“என்னாலே கம்மின்னு நிக்குத?…” என அவனையும் கேட்டுவிட்டு காசியாத்தாவை பார்க்க சொல்ல அவரும் கையை பிடித்தார்.
அருளுக்கு தெரியும். மின்னொளி இரண்டு நாட்களுக்கு முன்பே சொல்லிவிட்டாள் நாள் தள்ளியிருப்பதை போல தெரிகிறது என்று. உறுதிப்படுத்திவிட்டு முதல் நாள் தான் வந்திருந்தனர்.
வீட்டில் எப்படி சொல்வதென்று யோசனையுடன் நாள் சென்றிருக்க இன்று இவர்கள் திடீரென வந்து நின்றதும் இப்படி தாங்கள் சொல்வதற்கும் முன் விஷயம் தெரியப்போகிறதே என பார்த்தபடி நின்றான்.
யார் என்ன பேசினாலும் மின்னொளியை ஒருவரும் பேச விடக்கூடாது என்றபடி அவன் நின்றான்.
மின்னொளியின் கையை பிடித்ததுமே காசியாத்தாவிற்கு புரிந்துபோனது. ஒரு நொடி அவரால் நம்பவே முடியவில்லை. சந்தோஷமும், எப்படி என்கிற எண்ணமும் சேர்ந்தே எழ,
“ஆத்தா என்னனு சொல்லு…” என அவசரப்படுத்தினார் ராஜாத்தி.
“ராசு நாடி சொல்லுத சேதி. ரெட்ட நாடி துடிக்கிதுடி…” என சொல்ல ராஜாத்தியின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
“நா வேண்டுன சாமி என்னிய கை விடல. இது போதும்த்தா…” என்றவர் இளவரசனிடம்,
“நம்ம வீட்டுக்கு புதுசா பாப்பா வரபோகுது சாமி…” என சொல்லி குதூகலிக்க அவர்கள் யாரும் முருகய்யன் என்னும் மனிதனை கவனிக்கவே இல்லை.
மயக்கம் தெளிந்து எழுந்தமர்ந்த மின்னொளி முதலில் பார்த்தது தன் தகப்பனை தான். அவளை பிடித்தபடி அமர்ந்த இடத்தில் அப்படியே தான் அமர்ந்திருந்தார்.
காசியாத்தாவும், ராஜாத்தியும் அவளின் முகத்தை வலித்து திருஷ்டி கழிக்க இளவரசன் என்ன நடக்கிறது என புரியாமல் இவர்களை பார்த்தபடி இருந்தான்.
மின்னொளி அருளை பார்க்க அவன் சற்று தள்ளி நின்றிருந்தான். நாடி பிடித்து பார்த்ததை சைகையில் சொல்ல எழுந்து அவனருகே வந்தவள்,
“என்னன்னு நீயி சொல்லவேண்டியதுதான?…” என்றாள்.
“நீயிதேன் என்னிய ஒன்னும் பண்ண கூடாதுன்னு சொன்னியே…” என சொல்ல,
“ஆமா நீயி ஒன்னும் பண்ணாமத்தேன் நானு இப்பிடி ஆனேனாக்கும்? நீயிதேன் காரணம்…” என்றவளின் வாயை பட்டென பொத்தியவன்,
“எல்லாரும் பாக்குதாகடி…” என பதற அவனின் கையை எடுத்துவிட்டவள்,
“நா ஒனக்கு மாத்தரம் கேக்குதா மாரித்தேன் பேசுனேன். நீயிதேன் என் வாய பொத்தி காமிச்சு குடுக்க. பாரு ஒன்னியத்தேன் எல்லாரும் பாக்குதாக…” என்று சொல்லி சிரித்தாள் மின்னொளி.
அவளுக்கு அவர்களை எதிர்கொள்ள எந்த பயமும் இல்லை. விளக்கங்கள் சொல்லவும் அவசியமில்லை.
“ஏம்த்தா சொல்லல நீயி. ஆருமில்லன்னு நெனச்சியோ?…” என காசியாத்தா கேட்க,
“இப்ப அத்த பேச வேணாம் ஆத்தா. இப்ப எல்லாருக்கு சந்தோசமின்னா இப்பிடியே விடுங்க. மத்தத பேச வேணா…” என்று சொல்லிவிட முருகய்யன் எதுவும் பேசவில்லை.
ஆனால் காசியாத்தாவும் ராஜாத்தியும் மீண்டும் கேட்க அருள் இதை பற்றி இனி எந்த கேள்வியும் மின்னொளியிடம் கேட்க கூடாதென அழுத்தமாய் சொல்லிவிட்டான்.
ஆனால் மனதளவில் நொறுங்கியிருந்தார். அதையும் தாண்டி தன் மகள் தாயான சந்தோஷம். அது போதும் என மனதை தேற்றிக்கொண்டார்.
இவர்கள் சென்று விவரத்தை சொல்லவும் கிளம்பி வந்த அழகுப்பாட்டி தான் ஒரு மூச்சு அழுது தீர்த்து பேத்தியை கொண்டாடி அங்கே ஒரு வாரம் போல இருந்து சென்றார்.
“நீ எதாச்சு வெரசா பேசுவியோன்னு நெனச்சென்டி…” என அருள் சொல்ல,
“அவுகள பேசுனாப்புல எல்லாஞ்செரியா போயிருமாக்கும்? சொல்லு? எதுக்கு? நா பட்ட சங்கட்டமே போதும். அவுகளையு சங்கட்டப்படுத்த வேணாமின்னுதேன்…” என்றாள் மின்னொளி.
ஆனால் அவளையும் பொறுமையிழந்து பேச வைத்தனர் அவளின் குடும்பத்தினர். மின்னொளி என்பவள் யார் என்றும் புரிந்தனர்.