கடல் – 28
மின்னொளி தாயான விஷயம் ஊர் மக்கள் அனைவருக்கும் தெரிய வர ஆளுக்கொரு பேச்சும் சில விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருந்தன. சிலர் வந்து பார்த்துவிட்டு கூட சென்றனர். அது உண்மையான அக்கறையா? நம்ப முடியாத ஆச்சர்யமா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால் அதை எதையும் அவள் கண்டுகொண்டால் தானே? குணசாலிக்கு மின்னொளியிடம் வந்து கேட்டு தெரிந்துகொள்ள உள்ளுக்குள் பரபரவென்று வந்தது.
தெரியாவிட்டால் தலையே வெடித்துவிடும் போல இருந்தாலும் வந்து மின்னொளியிடம் கேட்டுவிட்டு செல்லத்தான் அத்தனை பயம். கணேசனுடன் வந்து பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டு சென்றுவிட்டாள்.
அழகுப்பாட்டி வாரம் ஒரு முறை வந்துவிட்டு தான் செல்வார். முருகய்யன் சொல்லவே வேண்டாம். என்ன தான் மகள் அத்தனை பெரிய விஷயத்தை மறைத்திருந்தாலும் இப்பொழுது இந்த நற்செய்தி அந்த விஷயத்தையே கொஞ்சம் மறக்கடித்தது.
நாட்கள் செல்ல செல்ல வயிறு வளர ஆரம்பிக்க மகளின் தாய்மையின் பூரிப்பை தள்ளி நின்றே ரசித்தார் அந்த தந்தை.
அது ஐந்தாம் மாதம். வளைப்பூட்டிற்கு முன் பழம் கொடுத்து மருந்து கொடுக்கும் வைபவம்.
ராஜாத்தி அதனை செய்வதற்கே பெரிதாய் ஏற்பாடு செய்திருப்பதாய் அழகுப்பாட்டி சொல்லியிருக்க அருளின் மூலம் அதை மறுத்துவிட்டாள் மின்னொளி.
“இவள் என்னை எந்த சம்பிரதாயத்தையும் செய்யவிடமாட்டாளா?” என்ற கோபத்துடன் வந்துவிட்டார் ராஜாத்தி. வந்த வேகத்திலேயே,
“என்னதான்டி நீயி நெனைக்கித? எங்கள ஒன்னுத்துக்கு வக்கத்தவியலா காமிக்கனுமின்னு ரோசானையோ?…”என்று ராஜாத்தி வந்து குதி குதியென குதிக்க மின்னொளி அசையவே இல்லை.
“எக்கா அதான் வேணாங்குதுல. விடேன்…” என அருள் மனைவிக்கு பரிந்துகொண்டு வர,
“லே கம்மின்னு போயிரு பாத்துக்கிடு. இத்த நாங்க பேசிக்கிடுவோ. வந்துட்டான்…” என தம்பியிடம் எகிற,
“சோதி போயி கன்னுக்குட்டிய கெட்டி வெய்யி. பாலுக்கு அவுத்துவிட்டது. கறந்துட்டு போயி இம்புட்டு நேரத்துக்கு குடிச்சிக்கிட்டே கெடக்கும். அத்த அவுத்து தனியா கெட்டு. போயி சோலிய பாருவே…” என அனுப்பினார் காசியாத்தா.
தம்பியை அனுப்பி விட்ட தன் தாயை முறைத்த ராஜாத்திக்கு தன் வீட்டில் தன் பேச்சிற்கு வர வர மதிப்பில்லையோ என்ற எண்ணம் வலுப்பெற ஆரம்பித்தது.
“ஆத்தா நீயி வாயில என்னத்த அதக்கிருக்க? வாய தொறந்து ஒம்மருமவள என்னன்னு கேக்கமாட்டியோ?…” என காசியாத்தாவை விஷயத்தில் இழுக்க,
“இந்தாருடி கூறுகெட்டவளே நா சொல்லுதத கொஞ்சமேனுக்கு பைய கேளு…” என்றவர் மின்னொளியை அங்கிருந்து போக சொல்லியவர் பின் மகளிடம் திரும்பி,
“அடியேய், நானே நீயி இதுக்கே இந்த அலப்பறய கூட்டுதியேன்னு கெதுக்கின்னு கெடக்கேன்…” என சொல்ல,
“இப்ப என்னத்துக்கு இதுக்கு போயி ஒனக்கு கெதுக்குது? எல்லாருக்கு செய்யிதது தான?…” என குறையாத கோபத்துடன் ராஜாத்தி சொல்ல,
“செய்யிததுதேன். இப்ப மின்னு முழுவாம இருக்கதுக்கே அவ அவ அதிசயத்த கண்டமேனிக்கி வாய்கொள்ளாமே பேசுதாளுக. இந்த புள்ளைக்கி வேற எதாச்சு ஒன்னு மாத்தி ஒன்னு செய்யுது. அந்த டாக்டரம்மா வேற ஒழுங்கா பாத்துக்கறதுல்லன்னு கத்திவுட்டுடுச்சு போனவாட்டி…” என கவலையாக சொல்ல,
“இந்தாத்தா வளவு, முடுக்கெல்லா போவாம நேரா சொல்லுதியா?…” என ராஜாத்தி எரிச்சலாக,
“அதுக்குத்தேன் இத்த சொல்லி வாரேன். ஒனக்கென்ன சொல்லுமின்ன அவதி?…” என மகளை கடிந்தவர்,
“இதுக்கே எனக்கு பக்கு பக்கு கெடக்குடி. சாமி வரங்குடுத்ததா நெனச்சு நித்தோ நா கும்புட்டுட்டு இருக்கேன். நீயேன்னன்னா கூட்டத்த கூட்டி புள்ளைய நடுக்கால ஒக்காத்தனும்ங்கற. கொல்லிக்கண்ணு அம்புட்டும்…”
“இதுக்கு நாம விசேசத்த வெக்காம இருக்க ஆவுமாத்தா?…”
“நடக்காதுன்னு நெனச்ச ஒன்னு கேக்காமலே நடந்து கெடச்சுருக்கு. அது நல்லதனமா முழுசா நடக்கட்டுமே. வெளங்குதா?…” என காசியாத்தா சொல்ல அது ஓரளவிற்கு சரி என்பதாகத்தான் பட்டது ராஜாத்திக்கு.
“என்ன இருந்தாலு கல்லடி பட்டாலு கண்ணடி படப்பிடாதுன்னு சொல்லுவாக. ஊரேல்லா மின்னு மாசமானதுல பாதிப்பேத்துக்கு மேல ஆவலாதிதேன் பாத்துக்கிடு. அவ புள்ளைய சொவமா பெத்து குடுக்கறங்காட்டி நாமதேன் பதவிசா பாத்துக்கனும். நீயி என்னனா படபடன்னு நிக்கித…”
“அப்ப இத்த செய்ய வேணாங்குதியா?…” என்று மூக்கை உறிஞ்ச அருள் வந்துவிட்டான் அந்நேரம்.
“இன்னு பேசி ஆவலயா?…” என்றவனிடம் காசியாத்தா தான் பேசியவற்றை சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவன் தன் அக்காவிடம் திரும்பி,
“ஏம்த்தா ஊரக்கூட்டி வந்து நீயி மொற செஞ்சாத்தேன் செஞ்சதாங்காட்டியா? நீயி புள்ள, புருசெனோட வா. மவராசியா ஒம்மொறைய செய்யி. ஆரு வேணாங்குதா?…” என இலகுவாய் சொல்லிவிட ராஜாத்திக்கு அதனை முழுமனதாய் ஏற்கவே முடியவில்லை.
“என்னவோ சொல்லுதிய, ஆனா ஒன்னுத்தா இப்பலா இந்த வீட்டுல எஞ்சொல்லு அம்பலத்துல ஏற மாட்டிக்கி. இங்கன நா ஆருன்னு வருது…” என கண்ணை கசக்க,
“ஏன்டி கூறுகெட்டவளே இப்ப என்னத்துக்கு இம்புட்டு பெரிய வார்த்த? இதுக்கு போயி வெசனப்பட்டா ஆவுமாத்தா? நா நடப்பத்தேன் சொல்லுதேன். இத்த மின்னு வேணாங்கவுமே நீயிதேன் எங்கட்ட சொல்லி சடவாவாம பாத்துருந்துக்கனு. நீயி என்னடான்னா?…” என்ற காசியாத்தா பின் மெல்லிய குரலில்,
“புள்ளத்தாச்சி அவளுக்கும் புடிக்கனுமில்ல. என்னவோ மனசுக்குள்ள பெருசா அதுக்கு ரணமாயிருக்குத்தா. நாமதேன் அத்த புரிஞ்சி நடந்துக்கனும். இப்பத்தேன் அது மொவத்துல ஒரு நெரம்பின சந்தோசத்த, சிரிப்ப பாக்குதேன். விடுத்தா. நம்ம புள்ள தான? வெளங்குதா ராசு?…” என கேட்டு மகளை சமாதானம் செய்ய,
“மருமவன்னு வரவு மவ ஒனக்கு தொலவா போயிட்டா…” என கேலி போல ராஜாத்தி சொன்னாலும் அவரின் குரலில் இருந்த சுணக்கத்தை அருள் கண்டு கொண்டான்.
“எத்தா எப்பருந்து நீயி நாத்தனாவா மாறுன?…” என அருள் கிண்டலடிக்க,
“ஏம்லே சொல்லமாட்ட, மொறச்சிக்கிட்டு திரிஞ்சவேன் இன்னிக்கு என்னியவே ஆருன்னுத. நீ இதுவு பேசுவ, இன்னும் பேசுவடே…” என்று அவனுக்கு ஒரு குட்டு வைக்கவும் ராஜாத்தி மறக்கவில்லை.
“சொல்லிக்க, எம்பொஞ்சாதி, அப்பவு ஒரு உரிமலதேன் கோமிச்சென். இப்பவு அவளுக்கு நா ஏந்துக்கிட்டு வரலானா புருசென்னு நா எதுக்காம்?…” என ஒரே போடாக போட,
“செரித்தேன் கஞ்சிகிஞ்சி அம்புடுந்தான?…” என இருவருமாய் கேலி செய்துகொள்ள காசியாத்தாவிற்கு மனது நிம்மதியானது.
இரு பெண்களுமே தனக்கும் தன் மகனுக்கு வாழ்க்கையில் இன்றியமையாதவர்கள். அவர்களுக்குள் என்றும் வேற்றுமை என ஒன்று வந்துவிட்டால் முதலில் நிம்மதியிழப்பது அருள் மட்டுமே.
காசியாத்தாவிற்கு தெரியும் மின்னொளி சற்று முரட்டு பிடிவாதம் கொண்டவளாக இருந்தாலும் உறவு உரிமையை என்றுமே விடுவிடமாட்டாள் என்று.
ஆனால் தன் மகள் ராஜாத்தி கொஞ்சம் அவசரபுத்தி உடையவர். எதையும் எடுத்து சொன்னாலே தவிர சில விஷயங்களில் மனதை போட்டு குழப்பி கொள்பவர்.
இப்பொழுது மகன் திருமணத்தின் பின்னர் சில நாட்களாக அவரறியாமல் சாதாரண விஷயத்தை தன் உரிமையோடு ஒப்பிட்டு பார்க்க ஆரம்பித்தது கவலையை தந்தது.
“யே ராசு, மின்னு கலியாணத்துக்கு அம்புட்டு பேசுன நீயி இன்னிக்கு இப்பிடி புரியாம பேசறதா புள்ள?…” என்ற காசியாத்தாவிடம் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தார் ராஜாத்தி.
மின்னொளி மீது அன்பும், அக்கறையும் அதிகமாய் இருக்கிறது தான். ஆனால் அவளின் திருமணம் என்று வந்த பின்னர் தனது ஆதிக்கத்தை அவரறியாமல் அங்கே செல்லுபடியாகிறதா என பரிசோதித்து பார்ப்பதை போல செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.
அதுவும் இது என் குடும்பம் என்று தன் உரிமையை நிலைநாட்டுவதை போல தான் நடந்து கொண்டிருக்கிறார். இது காசியாத்தாவிற்கு முதலிலேயே புரிந்துவிட்டது.
அரைமனதுடன் அவர்கள் சொல்லியதற்கு சம்மதித்தவர் மறு வாரமே வந்து முறையை நிறைவுடன் செய்தார்.
யாரையும் அழைக்கவில்லை. கணேசன் குணசாலி மட்டுமே வந்திருந்தனர். அவர்களை தள்ளிவைத்து எதுவும் செய்ய முடியாதென்பதால் அவர்களை அழைத்தது.
இல்லை என்றால் மொத்தத்திற்கே இதுவும் வேண்டாமென தவிர்த்துவிடுவாளோ என்று பயந்தே ராஜாத்தி அமைதியாக இருந்துகொண்டார்.
என்னதான் வீட்டினர் மட்டும் வைத்து அந்த செய்முறையை செய்துவிட்டாலும் ராஜாத்தியின் முகம் அத்தனை தெளிவில்லை. முழுமையான மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கவில்லை. மின்னொளி மீது வருத்தம் கூட.
“அட விடுத்தா வளப்பூட்டுக்கு பாத்துக்கிடு. இப்பவே என்னத்துக்கு மூஞ்சிய சுண்டுத?…” என காசியாத்தா சமாதானம் செய்ய,
“அட போத்தா இந்த ஊரே மூக்குல வெரல வெக்கிதமாரி ஒன்னோன்னத்தையும் செஞ்சிப்பிட நெனச்சா இவ என்னன்னா ஒன்னு வேணாங்குதா. அம்புட்டு பேரு என்னவோ இவளுக்கு கலியாணமே ஆவாதுக்கு என்னலா பேசுனாக. அம்புட்டுக்கு நா திருப்பி தர வேணா?…” என ராஜாத்தி மூச்சுவாங்க சொல்ல மின்னொளி அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தாள்.
“இந்த அக்காவுக்கு ஊருக்கு மின்ன ஒன்னிய நிப்பாட்டி பாத்தியாங்கனும் அதுக்குத்தேன் இந்த வரத்து வருது…” என அருள் கிண்டலடிக்க,
“அதுக்கு நாந்தேன் அம்புட்டேனா?…” என மின்னொளி சொல்ல அருளுக்கு எதுவோ புரிவதை போல இருந்தது.
“என்னடி இது? அன்னிக்கு பாத்துக்கிடுவோம். கம்மின்னு இருத்தா…” என அவளை அமைதிப்படுத்தினான். ஆனால் மின்னொளி சொல்லிவிட்டாள் ஊரை கூட்டி எதுவும் வேணாம் என்று.
காசியாத்தாவுக்கு அதில் பிடித்தமில்லை என்றாலும் மின்னொளிக்காக அதனை ஏற்றவர் அப்போதைக்கு தள்ளி போட பார்த்தார்.
ராஜாத்தி எதையாவது சமைத்து கொண்டுவந்து அவளை அப்படி சாப்பிட்டு இதை எடுத்துக்கொள் என அதிகப்படியாக கவனிக்க அதுவே மின்னொளியின் காயங்களை கீறிப்பார்க்க போதுமானதாக இருந்தது.
“இதுவே தான் தாயாகாமல், பெரிய மனுஷியாகாமல் இருந்திருந்தால் இவையெல்லாம் செய்திருப்பார்களா?” என்ற நினைப்பு அவளை அலைப்புற செய்தது.
அவளை இயல்பாக அனைவரையும் போல நடத்தாமல் அவளுக்கு இந்த தாய்மை கிடைத்திருப்பது ஏதோ அவளுக்கெல்லாம் கிடைக்கவே கிடைக்காமல், போனால் போகிறதென கிடைத்திருப்பதை போலவும், அதனை பாதுகாத்து பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை போலவுமே நடத்தினர்.
“நல்லபடியாக புள்ளைய பெத்துக்கனும்த்தா….” என ஆதுரமாய், அக்கறையாய் சொல்ல வேண்டியதை அறிவுறுத்துவதை போலவும், எச்சரிக்கை செய்வதை போலவும் சொல்ல சொல்ல மின்னொளிக்கு வெறி பிடித்ததை போல ஆனது.
“நான் சாதாரண பெண் தானே? ஏன் எனக்கு இத்தனை?” என்று ராஜாத்தியிடம் கத்த முடியாமல் காசியாத்தாவின் முகத்திற்காக அமைதியாக இருந்தாலும் அருளிடம் கத்தி சண்டையிட்டு அவனை கட்டிக்கொண்டு சமாதானம் ஆவாள்.
அவளின் மனநிலையை மிக சரியாக புரிந்துகொண்டான் அவள் கணவன். என்ன ஒன்று அக்காவை இப்படி செய்யாதே என்று சொல்லமுடியாமல் பல்லை கடித்துக்கொண்டு அமைதியானான்.
ஏழாம் மாதம் ஆனதுமே ராஜாத்தி வளைகாப்பு பேச்சை ஆரம்பித்துவிட்டார். காசியாத்தா தான் ஒன்பதாம் மாதம் பார்த்துக்கொள்வோம் என்று சொல்லிவிட முருகய்யன் சரி என்று சொல்லிவிட்டாலும் ராஜாத்தி அழகுப்பாட்டியை அனுப்பிவைத்தார்.
“ஏம்த்தா மின்னு, மனசுக்குள்ள என்னத்தையாச்சு வெச்சிக்கிட்டு சொணக்கமா இருக்கியா? என்னன்னு சொல்லுத்தா. புள்ளத்தாச்சி புள்ள. எதாச்சு ஆச இருந்தா மனத்தாங்கலு இருந்தா சொல்லிப்புடுத்தா. செரி பண்ணிருவம். அதுக்கு ஒன்னு வேணாங்குத மாரி இருக்காத…” என கவலையாய் பேசி செல்ல,
“என்னால இவியல ஒன்னிஞ்சொல்ல சட்டுன்னு முடியல. அதுக்காங்காட்டி அம்புட்டு கோவமா வருது மாமோவ். இப்பிடி வந்து பேச வேணாமின்னு சொல்லுதத கேக்கவே மாட்டிக்காக. முன்னமாரின்னா பேசுப்புடுவேன். ஆனா இப்ப சத்தியங்காட்டி பேச வேணா. இவுக ஆரும் பாக்க வந்தா எதையு பேச வேணா சொல்லு…”
“ஏம்த்தா, அதெல்லா நெனச்சு மருவாத. அவுக ஒரு பாசத்துலதேன் சொல்லுதாக…” என அருள் சமாதானம் செய்ய,
“அது எனக்கு பயந்துல வருது. ஒனக்கு புள்ள ஒழுங்கா பொறக்குமான்னு சொல்லுத மாரியே இருக்கு. அத்த என்னால தாங்க முடியல மாமோவ். நானு மனுசிதேன்…” என கோபத்துடன் அவனிடம் அவள் பேச காசியாத்தாவிற்கு நன்றாக கேட்டது அவளின் குமுறல்.
“எங்கம்மாவ மாரி பாதியில எம்புள்ளைய விட்டுட்டு போவக்கூடாதுன்னு நானே நித்தம் எங்கம்மாவ வேண்டிட்டு கெடக்கேன். இவக பேசுததுல இப்பவே எனக்கு…” என்று பதறியவளின் வாயை பொத்தியவன்,
“யாத்தே என்ன வார்த்தடி சொல்ல பாத்த?…” என்று உடல் அதிர அணைத்துக்கொண்டவன்,
“அப்பிடியெல்லா ஒன்னுமாவதுடி. நாங்களா இல்லயோ? என்னத்துக்கு அத்த இத்த நெனைக்கித? ஒனக்கென்னடி ஆத்தா? மவராசியா இன்னு பத்து புள்ளைய பெத்து பூட்டியாவற வரைக்கி ஒன்னிய என்கூடவே யே உசுருல முடிஞ்சிக்கிடுவேன்டி. இன்னொருவாட்டி இந்தாங்கட்டி பேசுன அறஞ்சு போடுவேன் பாத்துக்கிடு…” என நடுங்கும் குரலில் அவளின் பயத்தை போக்கிக்கொண்டிருந்தான் அருள் ஜோதி.
காசியாத்தாவிற்கு மனதே கலங்கிப்போனது. அவருக்கு ராஜாத்தியின் மேல் தான் கோபமாய் வந்தது அவருக்கு. இப்படி உண்டாகியிருக்கும் பெண்ணுக்கு வரக்கூடாத பயத்த வரவழைத்துவிட்டாரே என்ற ஆற்றாமையும் சேர என்ன ஆனாலும் மின்னொளி சொல்வதுதான்.
அவளின் விருப்பம் போலத்தான் வளைகாப்பு நடப்பதும் நடக்காமல் போவதும் என்ற உறுதியான முடிவிற்கு வந்துவிட்டார்.
அதற்கு முன்பு கூட அவளை சமாதானம் செய்து வளைகாப்பை நடத்திவிடலாம் என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தார். ஆனால் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு இருந்தது மின்னொளியின் பயம்.
எத்தனை தைரியமான பெண். இப்படி கொண்டுவந்து நிறுத்திவிட்டார்களே என்று கோபம் தான் வந்தது.