“இந்த மனுசென ஒன்னுஞ்சொல்லுததுக்கு இல்ல. பொம்பளைங்க சேந்து இவர கைய கால கட்டி போட்டாகதேன். ஆனா அதுக்கப்புறங்காட்டியும் கூட மவள தூர நின்னு பாக்குதேன்னு இன்னு தொலவுக்கு தள்ளி நிறுத்திப்போட்டாரு…” என முருகய்யனிடம் சொல்லியவன்,
“அந்த வீட்டுல அவ பேசுதது ஒங்கிட்ட மட்டுந்தேன் கெழவி. நீயிந்தேன் அவள விட்டுட்ட. யே நா கூடத்தேன். நமக்கெல்லா அந்த சாமி மன்னிப்பே தராது கெழவி….” என்று அழகுப்பாட்டியிடம் அவன் சொல்ல,
“சாமி சோதி…” என அழகுப்பாட்டி அவனின் தோளில் சாய்ந்து அழ,
“அவ இன்னிக்கு பேசினதெல்லா ஒண்ணுமில்ல கெழவி. ஒண்ணுமே இல்ல. அவ நெறைய பட்டுட்டா. நாமளா சேந்து அவள ஆளில்லாத குழில தள்ளி பொசுக்கிட்டோம். அம்புட்டுத்தேன் சொல்லமுடியும்…” என்றவனின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் இருக்க வாசலில் இளவரசன் ஆத்தா ஆத்தா என்று அழுகையுடன் நிற்க அனைவரும் வெளியே வந்தனர்.
“ஆத்தா எங்க? ஆத்தா காணோம்…” என்று அழ அப்பொழுதுதான் சுருக்கென உரைத்தது அருளுக்கு.
வீட்டின் பின்னால் தொழுவத்தில் இருப்பாள், இல்லை திண்ணையில் அமர்ந்திருப்பாள் என்று நினைத்திருக்க அவள் அங்கே இல்லவே இல்லை.
ஒரு நிமிடம் என்ன செய்வதென தெரியாமல் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க ராஜாத்தி தன்னால் தானோ என்று அதற்கும் அழ ஆரம்பிக்க,
“இந்தா அழுவறத மொத நிப்பாட்டு. சும்மா பேசறதையும் பேசிட்டு ஒக்காந்து அழுதா ஆவுமா?…” என அதட்டிய குணசாலி,
“இந்தா என்னத்த மரமாட்டம் நிக்கிதீய. புள்ளத்தாச்சி. நெறமாசம் வேற. இப்பவோ அப்பவோன்னுதேன் மூச்சு வாங்கிட்டு நின்னா. போயி மொத தேடுங்க. போங்க…” என கணேசனை முடுக்கிவிட,
“அருளு என்னவே நிக்கித? வண்டிய எடுலே. இங்கன பக்கத்துலதேன் எங்கனவாச்சும் போயிருப்பா…” என அவனும் கிளம்ப ஆளுகொரு திசையாக மின்னொளியை தேட கிளம்பினார்கள்.
இளவரசனுடன் முருகய்யன் ஒரு பக்கம் கிளம்ப வீட்டில் பெண்கள் மட்டுமே இருந்தனர்.
அழகுப்பாட்டியை திண்ணையில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த குணசாலி,
“இந்தா கெழவி செத்த கம்மின்னு கெட. நீ அழுவறதுல ஒம்பேத்தி வார வரைக்கி தாங்கமாட்ட போல. அவ புள்ளைய தூக்கி வளக்க வேணா?. இந்த தண்ணிய குடிச்சுட்டு உசுர புடிச்சு வெய்யி…” என கிடைத்த நேரத்தில் அழகுப்பாட்டியை வாரினாள் குணசாலி.
அருள் அங்கே அக்கம்பக்கத்தில் மின்னொளியை காணாமல் தேடியவனுக்கு பதட்டம் அப்பிகொண்டது மனதில். சட்டை பையில் இருந்த போன் அடிக்கும் சத்தத்தில் வண்டியை நிறுத்தியவன் சுப்புவின் எண்ணை பார்த்துவிட்டு எடுக்க,
“நாந்தேன் பேசுதேன். தோப்புக்கு போறேன். நீயி தேடாம அங்க வா மாமா…” என்றாள் மின்னொளி.
“ஏன்டி ஏன்டி உசுர வாங்குத? செத்துட்டேன்…” என்றவனின் குரலில் மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது அவள் புறத்திலிருந்து.
“சிரிக்கவா செய்யுதா?…”
“வா மாமோவ், வாங்கேன்ல…” என குரலில் சோர்வு தட்ட அவள் சொல்ல,
“செரி, வரப்புல நடக்காம மேட்டுல ஒக்காரு வாரேன்…” என்றவன் கணேசனுக்கு அழைத்து சொல்லிவிட்டு தானே அழைத்து வருகிறேன், யாரும் வரவேண்டாம் என்றும் சொல்லிவிட கணேசன் வீட்டிற்கு தகவல் சொல்ல திரும்பிவிட்டான்.
பத்து நிமிடத்திற்குள் வந்தவன் மின்னொளியை தேட அவளோ மெதுவாய் பாதி தோப்பை தாண்டியிருந்தாள்.
“சொல்லுதத கேக்குததே இல்ல. என்னிய மனுசென்னு நெனைக்கிதாளா?…” என கோபத்துடன் வண்டியை கொண்டுவந்து வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன் வேகமாய் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கி நடக்க ஆரம்பித்தான் அருள்.
தங்கள் தோப்பை தாண்டியும் மின்னொளியை காணாது தேட மனதிற்குள் பயம் பிடித்துக்கொண்டது. வானம் வேறு இருட்டிக்கொண்டு இருக்க இடி இடித்து லேசாய் தூறல் வேறு விழ ஆரம்பிக்க பயம் பிடித்துக்கொண்டது.
“ஒளி…” என்று கத்தினான் அருள்.
“மாமா…” என்ற அவளின் சத்தம் எங்கிருந்தோ கேட்க அந்த திசைக்கு சென்றவன் அங்கே ஒரு கிணற்றடியில் வயிற்றை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்ததும் தான் அருளுக்கு உயிரே வந்தது. நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டவன் ஆசுவாசமான பார்வையுடன் அவளை நெருங்கினான்.
“ஒனக்கிருக்க அகராதி இருக்கு பாரு. மனுசென சாவடிக்கிற நீயி…” என மிக நெருங்கி பார்க்கவும் தான் அவளின் நிலை பிடிபட ஆரம்பித்தது.
மின்னொளி முகத்தில் ரத்தம் பாய்ந்திருக்க கண்கள் கலங்கி உதட்டை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
“ஒளி, என்னடி செய்யிது, வலிக்குதா?…” என கேட்கவும் சடசடவென மழை பெருமழை பிடிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்க அவளை தன் மார்போடு அணைத்தவன் அங்கிருந்து ரோட்டிற்கு செல்லவே நேரம் எடுக்கும் அதுவும் இந்த மழையில் என யோசித்தவன் அவளை கையில் ஏந்திக்கொண்டான்.
“ஒன்ன ஆருடி இங்கன வர சொன்னது. பாரு இப்ப நாம இங்கன இருந்து என்னனு போவ?…” என அவளை அதட்டிக்கொண்டே தூக்கி சுமக்க மழையில் தரை ஈரத்தில் வழுக்க ஆரம்பிக்க பயந்துபோனான்.
“இங்கன வந்து ஒக்கார வரைக்கி வலிக்கிறதே தெரியல மாமோவ். இப்ப ரொம்ப வலிக்குது…” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கி மழை நீருடன் கலக்க தனக்கு எதிரே குடையை பிடித்தபடி அப்பொழுதுதான் தோப்பிற்குள் இறங்கிக்கொண்டிருந்தனர் அன்னமும், தர்மராஜும்.
அருள் அவர்களை பார்க்கவில்லை என்றாலும் அவர்கள் கண்டுகொண்டார். தேடி ஓடி வந்துவிட்டார் அன்னம்.
“ஏலே என்னத்துக்குலே இந்த மழையில இவள தூக்கிட்டு ஊர்வலம் போற? கோட்டியாலே?…” என அவராக ஓடிவந்து பேசியவர் தனது குடையை மின்னொளிக்கு பிடிக்க அப்பொழுதுதான் அவளின் முகத்தை பார்த்தார்.
அருள் தர்மராஜையும், அன்னத்தையும் மாறி மாறி பார்த்தவன் என்ன செய்வதென தெரியாமல்,
“ஆத்தா செத்த இந்த கொடய புடிச்சுக்கிட்டே வந்தனா ரோட்டுக்கு போயிருவேன். அங்கன வண்டிய நிப்பாட்டிருக்கேன்…” என கேட்க மின்னொளியின் அடுத்த வலி அதிகமாய் வர அருளின் கையில் எதையோ உணர்ந்தவன் அதிர்ச்சியுடன் கீழே பார்க்க,
“அம்மா…” என்ற அலறல் அன்னத்தை திசை திருப்பியது.
“ஆத்தா…” என்று மின்னொளியின் கால் பக்கம் காண்பித்தவன் அன்னத்தை பார்க்க,
“சோதி பனிக்கொடம் ஓடஞ்சிருச்சுய்யா…” என்று பதற,
“ஐயோ…” என அலற ஆரம்பித்தான் அருள்ஜோதி.
“இந்தா என்னத்துக்குலே அழுவற? அவள வேற பயப்படுத்திக்கிட்டு. வா எங்கூட…” என்ற அன்னம் பத்தடி தூரத்தில் இருந்த தன் தோப்பின் குடிசைக்குள் கதவை திறந்து நுழைய அவனுக்கு முன்னே ஓடிய தர்மராஜ் ஒரு பாயை எடுத்து கீழே விரித்துவிட்டான்.
“ராசு, போயி மின்னு வீட்டுல சேதி சொல்லிட்டு ஆசுப்பத்திரில வெசயத்த சொல்லி நர்சம்மா இருந்தா கூட்டியா. கைய்யோட கூட்டியாறனும். வெளங்குதா?…” என சொல்ல,
“தருமா எவ்வண்டி முன்னுக்கத்தேன் நிக்கிதுலே. அதுல போ…” என்று சாவியை நீட்ட,
“இல்லண்ணே எங்கிட்ட இருக்கு. வண்டிலதேன் வந்தம்…” என சொல்லிவிட்டு அவன் வேகமாய் செல்ல அவனின் மாற்றத்தில் உண்மையில் நிம்மதியானான். பின் தனது போனை எடுத்து பார்க்க அது முழுவதும் நனைந்துபோய் உயிரை விட்டிருந்தது.
“ஆத்தா எனக்கு பயந்து வருது…” என சிறுபிள்ளை போல சொல்லியவனை பார்த்த அன்னம்,
“ஊருக்கு சண்டியரு. பயப்படுதானாம். போடா…” என்றவர்,
“புள்ள தல தெரிய ஆரம்பிக்குதுலே. நல்லவேளைக்கி இங்கன கொண்டாந்தோம். இல்ல ரெண்டு உசுருக்கும்…” என்றவர் அருளில் பயந்து பார்வையையும் மின்னொளியின் முகத்தையும் பார்த்துவிட்டு வாயை மூடிக்கொண்டார்.
“லே அந்த சீமன்ன அடுப்ப பத்தவெக்க தெரியுந்தான? போயி அந்த சருவச்சட்டியில தண்ணிய ஊத்தி வெய்யி…” என்றவர் மின்னொளியின் தலைக்கு ஒரு துணியை சுருட்டி வைத்தவர் மின்னொளியின் கால் பக்கமாய் வந்து அமர்ந்துகொண்டார்.
“நல்லா முக்குடி. வாயி மட்டு ஊருப்பட்டது பேசுவ. புள்ளய வெரசா பாக்கவேணாமா?…” என்ற அதட்டலுடன் அவரே பிரசவம் பார்க்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் குழந்தை வெளியே வந்துவிட அரைமயக்கத்திற்கு சென்றாள் மின்னொளி.
முதன் முதலாக ஒரு பிரசவத்தை அதிலும் மனைவியினதை பார்த்தவனின் உடல் மொத்தமாய் நடுங்கி இருக்க உதடுகள் துடிக்க,
“ஒளி…” என மெதுவாய் அழைக்க,
“லே சோதி, அப்பிடியே ஒன்னிய கொண்டு பொறந்துருக்கான் ஒம்மவேன். பாரேன் ஒந்திமிரு அப்பிக்கெடக்கு…” என அன்னம் சொல்லி குழந்தையை தர அவரின் காலில் விழுந்துவிட்டான் அருள்.
“ஆத்தா…” என்றவனுக்கு அதற்கு மேல் வார்த்த்தை வராமல் தடுமாற,
“மொத புள்ளைய புடி. வெளில மழ வெறிச்சிடுச்சான்னு பாத்துட்டு வாரேன்…” என பிஞ்சு குழந்தையை அவனின் கையில் தர குழந்தை முகத்தையும், மின்னொளி முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே இருந்தான் அருள்.
எப்பொழுது குடும்பத்தினர் வந்தனர் எப்படி மருத்துவமனைக்கு சென்றனர் எதுவும் தெரியவில்லை. அவனின் கண்களுக்கு தெரிந்ததெல்லாம் மனைவியும், மகனும் மட்டுமே.
முருகய்யன் அன்னத்திடம் வந்து கை கூப்பி நன்றி தெரிவிக்க அன்னம் அதனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. அன்று மட்டும் தான் அன்னமும், தர்மராஜும் அங்கே இருந்தனர். அதன் பின்னர் வழக்கமாக என்றைக்கும் போல் இருந்து கொண்டனர்.
“ஒதுங்கி இருக்கது அப்படியே இருந்துக்கிட்டு போறோம். திரும்ப இந்த உறவு வேணா. எம்புள்ள எனக்கு திரும்ப கெடச்சதே போதும்…” என்று சொல்லிவிட்டார் அன்னம்.
ஒரு மாதம் ஆகிற்று குழந்தை பிறந்து. இளவேந்தன் என்று பெயர் சூட்டியிருந்தனர். ராஜாத்தி வெகுவாய் தனது ஆதிக்கத்தை தெரியாமல் கூட காட்டிவிடாதபடி நடந்துகொள்ள ஆரம்பித்தார்.
முருகய்யன் இப்பொழுது மகள் பேசவில்லை என்றாலும் அவளிடமே நேரடியாக ஒரு வார்த்தையாவது பேச ஆரம்பித்திருந்தார். அழகுப்பாட்டி முக்கால்வாசி நாள் இங்கே தான். மின்னொளியுடன்.
இளவேந்தன் பிறந்து ஒரு வருடம் ஆகவிருக்கிறது. அருளுடனான அவள் வாழ்க்கையில் அருள் நித்தம் நித்தம் ஒரு அற்புதமான வாழ்க்கையை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தான். சந்தோஷம் என்பது வாழும் வாழ்க்கையில் மட்டுமல்ல, வாழும் வாழ்க்கை துணையிலும் உள்ளது என்பதை வாழ்ந்து காண்பித்தனர் இருவரும்.
அன்று இரவு உணவு முடிந்து யோசனையுடனே இருந்தான் அருள். குழந்தையை தொட்டிலில் உறங்க வைத்திருந்தவள் அவனின் முகபாவனைகளை பார்த்தபடி இருந்தாள் அவனாக பேச வேண்டும் என்று.
ஆனால் அவன் வாயை திறந்தால் தானே? காது குத்தி மொட்டை போடுவதற்கு மின்னொளியிடம் எப்படி பேச என யோசித்துக்கொண்டிருந்தவனை அந்த கவலையே உனக்கு தேவை இல்லை என்பதை போல பேசினாள் மின்னொளி.
“எனக்குத்தேன் எதுவு வேணாங்குதேன். புள்ளைக்கி எதுவும் இல்லன்னு இல்லாம கெடைக்கனு. அம்புட்டுத்தேன். இத்துக்கு இப்பிடி மூஞ்சிய தூக்கி வெச்சு ஒக்காருவியோ?…” என்று அவளே ஆரம்பித்துவிட ஒரு பெரும் மூச்சை இழுத்துவிட்டவன் அப்படியே அவளின் மடி சாய்ந்தான் அருள்.
“சத்தியங்காட்டி ஒங்கிட்ட என்னன்னு பேசன்னு இருந்தேன்டி. இப்பத்தேன் அக்கடான்னு இருக்குது…” என்றவனின் விரல்கள் அவளின் இடையில் குறுகுறுப்பை மூட்ட,
“கைய்ய வெச்சிக்கிட்டு செத்த கம்மின்னு கெட. அப்பாருட்ட பேசு. அவுகதேன் என்ன செய்யனுமின்னு பாக்கனு. ஒரு கொற வரப்பிடாது சொல்லிப்பிட்டேன்…” என்று எச்சரிக்க,
“சமுத்திரம் மாரிடி நீயி. ஒன்னிய புரிஞ்சுக்க இன்னொரு சென்மத்த எடுத்துதேன் வரனுடி….” என்று தன் முகத்தை நோக்கி அவளை கவிழ்த்து முத்தமிட்டவனின் முத்தத்தில் மொத்தமாய் மூழ்கியவள் அவனை விலக்கி எழுந்து அமர்ந்து,
“இங்காரு மாமோவ், ஒனக்காங்காட்டி இன்னொரு சென்மலா எடுக்க என்னால ஆவாது. இப்பயே வாழ்ந்து இங்கையே முடிச்சுக்கனு. எனக்கு இந்த சென்மோ போதும்யா…” என அவனின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் போட்டு தனக்குள் இழுத்துக்கொண்டாள் மின்னொளி.
சூரியனவனின் உதயமும் அவளிடத்திலே. அஸ்தமனமும் அவளிடத்திலே. அவளுள் அடங்கி அவளில் இருந்தே ஆர்ப்பரிப்புடன் எழுகிறான்.
மின்னொளி என்பவளின் ஆழ்கடலை போன்ற மௌனத்தை தனக்குள் உள்வாங்கிய அருள்ஜோதி என்னும் சூரியனவன் அவளுடன் கை கோர்த்து வாழ்க்கை பயணத்தில் நித்தம் முத்தெடுக்கிறான்.
சுபம்