தூக்கமின்மையில் கண்கள் எரிய, மணியை பார்த்தால் விடியற்காலை ஐந்தை தாண்டிவிட்டிருந்தது.
‘இவ்வளவு நேரமாவா முழிச்சுருக்கேன்?’ என வியந்தவள், ‘இன்னேரம் அவர் எழுந்துரிச்சுருப்பாரே!’ என்று எண்ணினாள்.
நீலா பேசியதில் வீராவின் பக்கம் உள்ள அவளது சம்சயம் எல்லாம் விலகியிருக்க, ‘நம்ம பண்ணதும் தப்புதானே?’ என உணரும் அளவு, அறிய ஜென் நிலையை அடைந்திருந்தாள்.
அதன் விளைவாய், தன் மொபைலை எடுத்தவள் காலையிலேயே அவனுக்கு அழைப்பு விடுக்க, மறுப்பக்கம் ரிங்’ போய்க்கொண்டிருந்தது.
முழு ரிங்கும் போய் கட்’டாக, மறுமுறை முயன்றாள். அதே நிலை தான்…
மறுமுறை…
மறுமுறை…
மறுமுறை…
இறுதியாய் அவள் முயன்றபோது, ‘சுவிட்ச் ஆஃப்’ என்ற தகவல் தர, ‘என்ன சுவிட்ச் ஆஃப் செஞ்சுட்டாரு?’ என திகைத்துப்போனாள் அவள்.
அவனுக்கு கோபமே வராது! ஏதோ அதிசயமாய் வந்ததும் இந்நேரம் இருந்த இடம் தெரியாது ஓடியிருக்கும் என நினைத்திருந்தாள். அப்படி இல்லை என தோன்றியது இப்போது!
“ரொம்ப கோவமா இருக்காரு போலயே? அதான் என்னை கூட்டிட்டு போக வரலையோ?”
“கோவம் எப்போ போகும்?”
“ஒருவேளை கோபம் போகவே இல்லன்னா….???”
‘என்னை இப்படியே விட்டுடுவாரா?’
வாழ்க்கையை நினைத்து முதல் முறையாய் பயபந்து உருண்டது அவளுள்.
கலக்கத்துடனே எழுந்து குளிக்க சென்றாள்.
நீலா எப்போதும் போல அடுக்களையில் அல்லாடிக்கொண்டிருந்தார்.
பால் குக்கர் சத்தமெழுப்ப, அதை நிறுத்தியவர், டிகாஷன் போட ஆரம்பித்தார்.
“இன்னைக்கு வீடு துடைக்கனுமே! அத்தை வேற நேத்தே செய்ய சொன்னாங்க!!! இனிமே நான் வீடு துடைச்சு அமாவாசை சாப்பாடு செஞ்சு விரதம் விட்டு… ஷப்பா!!!” புலம்பலுடன் டீ போட்டுக்கொண்டிருந்தார்.
அடுக்களையில் அரவம் தெரிய, ‘இவ்ளோ சீக்கிரம் என் மவ எழுந்திரிக்க மாட்டாளே! ஒருவேளை நான் நேத்து பேசுன பேச்சுல திருந்திட்டாளோ?’ என நினைத்துக்கொண்டு,
“என்ன காத்து இந்த பக்கம் வீசுது?” என திரும்பியவர், அங்கே சண்முகத்தை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.
“எ…என்னங்க?”
நீலாவின் முகத்தையே பார்த்து நின்ற சண்முகம், இடவலமாய் தலையசைத்தார்.
“டீ குடிக்குறீங்களா?” ஒருவேளை அதற்காக வந்திருப்பாரோ என்றெண்ணி கேட்க, ‘சரி’ என்பதாய் ஒரு தலையசைவு அவரிடம்.
சூடான டீயை நுரை ததும்ம அவர் கரத்தில் கொடுத்துவிட்டு திரும்பிய நீலா, அவர் அங்கேயே நின்று அதை அருந்துவார் என துளிக்கூட கற்பனை செய்திருக்கவில்லை.
‘என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு?’ என குழப்பத்துடனே, தயங்கியபடி, “இன்னைக்கு காலைலேயே எதுவும் லோட் எடுக்க போகனுமா?” என்றார்.
குடிப்பதை நிறுத்தி ஒரு நொடி நிமிர்ந்து நீலாவை சண்முகம் பார்க்க, ‘உனக்கெதுக்கு இதெல்லாம்?’ என கடித்து துப்பப்போகிறாரோ? காலைலேயே வாங்கிக்கட்டனுமா?’ என பயந்தவர்,
“வாய்ல எதுவும் சுளுக்கு புடிச்சுருக்கோ?” சன்னமாய் முனகிக்கொண்டு அடுத்த வேலைக்கு தாவினார் நீலா.
நிதானமாய் டீயை அருந்தியவர், சிங்க்’கில் கோப்பையை போட்டுவிட்டு, “டீ நல்லா இருந்துச்சு” என்றுவிட்டு நிற்காமல் வெளியே சென்றுவிட, ‘ஆ’வென வாயை பிளந்து நின்றுவிட்டார் நீலா.
‘நான் காண்பதென்ன கனவா? இல்லை நினைவா?’ என்ற நிலை அவருக்கு.
இந்த முப்பத்தி ஐந்து வருட திருமண வாழ்கையில் அவர் சமையலுக்கு இவ்வீட்டில் கிடைக்கும் முதல் பாராட்டு! அதென்ன சமையலுக்கு என்று தனித்து சொல்வது? அவருக்கு பாராட்டு கிடைப்பதே இதானே முதல்முறை!!!
அதுவும் கணவரிடம் இருந்து!
மலைத்து போய் திறந்த வாய் மூடாது நின்றுவிட்டிருந்த நீலா… எத்தனை நேரம் அப்படியே நின்றாரோ!? குக்கர் விசில் அடித்து, ‘என்னை கொஞ்சம் கவனி’ என்று முறைத்த பின்பே வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
ஆனாலும், கணவர் பாராட்டி சென்ற பிரம்மிப்பு அவரை விட்டு நீங்கவில்லை.
குளித்துவிட்டு வந்த அஷ்டா மீண்டும் ஒருமுறை முயற்சிப்போம் என வீராவுக்கு அழைக்க அப்போதும், ‘சுவிட்ச் ஆஃப்’ என்றே வந்தது.
‘ச்ச! என்ன இவரு இப்படி இருக்காரு?’ அலுப்புடன் மொபைலை மெத்தையில் எறிந்தவள், சோர்வாய் அமர, மொபைல் ஓசை எழுப்பியது.
‘வீரா அழைக்கிறான்!’ என்ற எண்ணத்தில் மின்னலென மொபைலை தாவி எடுத்தவள் அதில் ‘ஜோதி’ என்ற பெயரை பார்த்ததும், ‘புஸ்’சென்றாகி,
“சொல்லு ஜோதி” என்றாள் சுரத்தே இல்லாமல்.
எப்போதும் சலிப்பாய் பேசும் ஜோதி இன்றோ உற்சாகமாய், “எப்படி இருக்க அஷ்டா?” என்று கேட்க,
“ப்ச்! அவர் கூட வந்துருக்கேன்டி!” கொஞ்சியது அவள் குரல்.
“என்னடி சொல்ற? டைவர்ஸ் வாங்க போறேன்னு சொன்னியே?” திகைப்பாய் கேட்டாள்.
“அது கோவத்துல எடுத்த முடிவு! இப்போ நாங்க சேர்ந்துட்டோம்! எனக்காக இவர் தனிக்குடித்தனம் வர ஒத்துக்கிட்டாரு! வீடெல்லாம் கூட பார்த்து வச்சுட்டோம்! இந்த ட்ரிப் முடிஞ்சதும் போய் பால் காய்ச்சனும்!” என்றாள்.
“எவ்ளோ குறை சொன்ன நீ அவரை?” அஷ்டாவுக்கு திகைப்பு அடங்கவில்லை.
“ஹே இதுல என்னடி இருக்கு? என்கிட்ட கூட தான் நிறைய மைனஸ் இருக்கு! சும்மா குறையை மட்டுமே பிடிச்சுக்கிட்டு இருந்தா வாழ முடியுமா?”
“ஏன்டி இப்படி மாத்தி மாத்தி பேசுற?”
“மாத்தி பேசல அஷ்டா! எனக்கு அவர் மேல நிறைய வருத்தம் இருந்துச்சு! அவர் செய்யுற எல்லாமே தப்பா தோனுச்சு! அவரசப்பட்டு ஒரு கோபத்துல பிரியனும்ன்னு முடிவு செஞ்சேன்!
ஆனா, இப்போ அவர் எனக்காக, என் சந்தோசத்துக்காக அவர் குடும்பத்தை விட்டு தனிக்குடித்தனம் வர ஒத்துக்கிட்டாரு! எனக்கு அவர் குடும்பம் தான் ஒத்துவரலையே தவிர அவர் மேல எந்த கோபமும் பெருசா இல்லை!
அதான் அவர் வந்து பேசுனதும் நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன்! இப்போ பாரு ஜாலியா சிம்லா வந்துருக்கோம்!” என்றவள்,
“என்ன தான் நம்ம பெத்தவங்க நம்மளை தாங்கினாலும், கல்யாணத்துக்கு பிறகு அது நம்ம வீடு இல்லடி! நம்ம புருஷன், குழந்தைன்னு இருக்குறது தான் ‘நம்ம வீடு’. அதை தான் நம்ம பேரெண்ட்ஸும் விரும்புவாங்க!” என்றாள்.
“நீயும் சீக்கிரமா ஒரு ‘ஹனிமூன்’ ட்ரிப் ப்ளான் பண்ணு! ஒரு பத்து நாள் வெளில போயிட்டு வந்தா ஜாலியா இருக்கும்! அதை சொல்ல தான் உனக்கு கூப்பிட்டேன்! சரிடி! அவர் கூப்பிடுறாரு! நான் வச்சிடவா?” என்றவள், பதிலை கூட எதிர்ப்பார்க்காது வைத்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டாள் அஷ்டா.
மங்களம் திருவரங்க பெருமாளை சேவிக்க காலையில் நேரத்திலேயே கிளம்பி சென்றிருந்தார்.
நீலா வாழையிலை அறுக்க வெளியே வந்தவர், ஹாலில் அமர்ந்து தீவிரமான யோசனையில் இருந்த சண்முகத்தை எட்டாவது அதிசயமாய் பார்த்தார்.
‘இன்னைக்கு என்ன எல்லாம் வழக்கத்துக்கு மாறா இருக்கு? இந்நேரம் இவரு காலு வீட்டுல தங்காதே?’ என எண்ணியபடி,
“ஏங்க?” என்றழைத்தார் மெதுவாய்.
‘என்ன?’ என்ற கேள்வியை புருவத்தில் தாங்கியபடி அலட்சியமாய் ஒரு பார்வையை சண்முகத்திடம் இருந்து எதிர்ப்பார்த்திருந்த நீலா,
“சொல்லுமா” என்ற கனிவான அவர் குரலை கேட்டதும் நின்ற இடத்தில் ஆணியடித்ததை போல சமைந்துவிட்டார்.
அவரை அழைத்துவிட்டு பேசவேண்டும் என்பது கூட மறக்க, அவர் அப்படியே நிற்பதைக்கண்டு, “ஏதோ பேச வந்தியே! சொல்லு” என நூலெடுத்து கொடுத்தார் சண்முகம்.
அதிர்ச்சியில் வறண்ட தொண்டையை எச்சில் விழுங்கி சீர் செய்தவர், “ஏதோ யோசனையா உட்காந்துருக்காப்ள இருந்துச்சு! அதான்……” என இழுக்க,
பெருமூச்சு விட்ட சண்முகம், “ஒன்னும் இல்ல” என்றார்.
எப்போதும் போல எரிந்து விழுந்திருந்தால் அடுத்த நொடி அங்கே நின்றிருக்க கூட மாட்டார் நீலா.
ஆனால், சண்முகம் தான் சாந்த சொரூபியாய், கனிவுடன் பேசுகிறாரே!? அது போதாதா மனைவிக்கு! அதிலும் நீலாவுக்கு? சொல்ல வேண்டும் என நினைத்ததை இது தான் நல்ல சமயம் என்றெண்ணி ஆரம்பித்தார்.
“நீங்க அஷ்டா வாழ்க்கையை நினைச்சு எதுவும் மனசு சங்கடப்படாதீங்க! வீரா அப்படி ஒன்னும் நம்ம பொண்ணை விட்டுட மாட்டாரு!” என்றார்.
“தெரியும்!” என்றுவிட்டார் சண்முகம்.
‘தெரியுமா? அப்போ வேறென்ன கவலையா இருக்கும்?’ என யோசித்து,
“அந்த கழுதையை நீங்க அப்போவே அடிச்சு வளர்த்துருந்தா இப்படி அடுத்த வீட்டுக்கு அனுப்புன பிறகு கை நீட்டுற நிலைமை வருமா? எதுக்கெடுத்தாலும் செல்லம் குடுத்து இப்போ பாருங்க யாருக்கு கஷ்டம்’ன்னு!” என்றதோடு,
“திட்டக்கூட செய்யாத நீங்க கை நீட்டிட்டீங்கன்னு கோபத்துல பேசாம இருக்கா! மாப்பிள்ளை கூட சேர்ந்ததும் அவளே மறுபடி ‘அப்பே’ன்னு வந்து தோள்ல தொங்குவா பாருங்க!” என்றதும்,
“தெரியும்!” என்றுவிட்டார் சண்முகம்.
‘என்னடா இது? இதுவும் தெரியுமா?’ என வியந்த நீலா,
“ஏங்க? ஒருவேளை அத்தையை நினைச்சு வருத்தப்படுறீங்களோ? அவங்களுக்கு ஒன்னும் இல்ல! பேத்தியை திட்ட முடியாம அந்த கடவுளை திட்ட கோவில் கோவிலா சுத்திட்டு இருக்காங்க!” சிரிப்பு போல சொல்ல,
“ஏன்னா என்ன கேள்வி? என்கூட ஒரு மாசம் குடும்பம் நடத்தி, நான் ஆம்பள தானான்னு ‘டெஸ்ட்’ எல்லாம் செஞ்சு….” அவள் குறுக்கே வர, கைநீட்டி தடுத்தவன்,
“இப்போவே கொஞ்சம் புடிக்கலன்னு சொல்ற! இன்னும் கொஞ்ச நாள் போனா முழுசா கூட பிடிக்காம போகலாம்… அப்போ விவாகரத்து வேணும்ன்னு கேட்டு கோர்ட்டுக்கு அலையுறதுக்கு இப்போவே பிரிஞ்சுட்டோம்ன்னு வை…
எனக்கு அடுத்த கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க வசதியா இருக்கும்! இப்போவே ரொம்ப வயசாச்சு எனக்கு” என்றான்.
அவன் பேச்சைக்கேட்டு பேயறைந்தார் போல நின்றாள் அஷ்டா.
“என்ன பார்க்குற? சரி தானே?” என்றான்.
“முடிவே பண்ணிட்டிங்களா?” என்றாள் சிறுத்த குரலில்.
“இதுல முடிவு செய்ய ஒண்ணுமே இல்ல! என்கூட ஆறுமாசம் வாழ்ந்து என்னை பிடிக்கலன்னா விட்டு பிரியனும்ன்னு சொன்னது நீதானே? உன் ஐடியாவை தான் இப்போ நான் இம்ப்ளீமென்ட் பண்றேன்!
ஆனா நான் உன்னை மாறி இல்லை! ஆறுமாசம் ஒருத்தன்! அவன் பிடிக்கலன்னா கழட்டிவிட்டுட்டு அடுத்த ஆறு மாசத்துக்கு ஒருத்தன்னு ஆளை மாத்திக்கிட்டே போக?!” என்று சொல்ல, அவன் வார்த்தைகள் அவள் நெஞ்சில் சுருகென்று தைத்து வலிகொள்ள வைத்தது.
‘நானா? நானா இப்படி!?’ என்ற எண்ணமும் ஆவேசமும் எழ, அவனை நெருங்கி,
“ஆறு மாசத்துக்கு ஒருத்தன்னு ஆளை மாத்துறேன்னு யாரு சொன்னா உனக்கு? என்னை இவ்ளோ மோசமா சொல்ல உனக்கென்ன அதிகாரம் இருக்கு?” என்றாள் மரியாதையை காற்றில் விட்டு.
“என்னோட ஆறு மாசம் வாழ்த்து ஒருவேளை என்னை பிடிக்காம போனா விவாகரத்து வாங்கிப்பேன்! அதுவரைக்கும் குழந்தை உருவாகிட கூடாதுன்னு விவரமா இருக்க நீ, என்னை விட்டு போன பின்னாடி ‘துறவறம்’மா போக போற? இல்லைதானே?” என்றான்.
“இல்ல, நீ இன்னொரு கல்யாணம் செஞ்சுக்காம இப்டியே இருந்துட தான் உன் வீட்டுல விடுவாங்களா? இன்னொரு இளிச்சவாயனை தேடி கண்டுப்பிடிப்பாங்க தானே? அப்படி ஒருத்தன் சிக்கிட்டா!? அடுத்து அவனோட ஆறு மாசம்! இதே கண்டிஷன்!
ஒருவேளை அவனையும் உனக்கு பிடிக்காம போய்ட்டா? திரும்ப விவாகரத்து!! அதுக்கு பிறகு? அப்பறம் என்ன?” என்றான்.
பதில் சொல்ல முடியாமல் திணறி நின்றாள் அவள்.
“நீ சொன்னதுக்கு இது தானே அர்த்தம்? இல்ல வேற இருக்கோ?” என்று வேறு கேட்க, என்ன சொல்ல முடியும் அவளால்?! இதற்கு இப்படி ஒரு அர்த்தம் அமையும் என்று கூட இப்போது தானே புரிகிறது அவளுக்கு!
‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’ன்னு உங்களை வாழ சொல்லலம்மா! நல்ல புருஷன், குடும்பம் அமைஞ்சா சந்தேகப்பட்டு உங்க வாழ்க்கையை கெடுத்துக்கிட்டு, உங்களை நம்பி கல்யாணம் செஞ்சவன் வாழ்க்கையையும், அவன் குடும்பத்தோட நிம்மதியையும் கெடுத்திடாதீங்கன்னு தான் சொல்றேன்” என்றான்.
“தப்புதாங்க! அறிவில்லாம செஞ்சுட்டேன்! சாரி” கண்ணீர் கண்ணை விட்டு விழ பேசினாள்.
“உங்கப்பா வந்தப்போக்கூட ‘இங்கிருந்து போலாம்! எனக்கு இந்த வாழ்க்கை தேவையில்ல’ன்னு வசனம் பேசிட்டு கிளம்புன! இப்போ என்ன? திடீர் திருப்பமா சாரி? எப்படி அறிவு வந்துச்சு இப்போ மட்டும்?” கோபமும் நக்கலும் அவன் குரலில் போட்டிப்போட, சாதுவான வீராவுக்கு, இப்படிக்கூட பேசத்தெரியும் என அன்று தான் தெரிந்துக்கொண்டாள் அவள்.
“அது….அது!? என் பிரன்ட் ஒருத்தி பேசி தாங்க என்னை குழப்பி விட்டுட்டா! அவ கஷ்டத்தை சொன்னதை கேட்டதும், எங்க எனக்கும் அப்டி எதுவும் நடந்துடுமோன்னு பயந்து தான் நான் அந்த மாதிரி பைத்தியக்காரத்தனமா ரூல்ஸ் போட்டேன்!” என்றாள்.
அவள் சொன்னதை கிரகித்தவன், “ஓ………” என ஆமோதிப்புடன், “அப்போ இதெல்லாம் நீயா செய்யல! இன்னொருத்தர் போதனையில செஞ்சுருக்க?” என முறைத்தவன்,
“இப்போ எப்படி அதெல்லாம் தப்புன்னு தோனுச்சு?” என்றுக்கேட்டு அவளை ஆழம் பார்த்தான்.
“அவ புருஷனை பத்தி அவ்ளோ குறை பேசுவாங்க அவ! டைவர்ஸ் பண்ணப்போறேன் அது இதுன்னு பினாத்துனவ, இப்போ ‘சிம்லா’க்கு செகன்ட் ஹனிமூன் போயிருக்கா! அவ பேச்சை கேட்டு தப்பா முடிவெடுத்த நான், அம்மா வீட்டுல உட்காந்துருக்கேன்!
யோசிச்சு பார்த்தேன்!!! அவளுக்கு பிரச்சனை வந்தா, அது அவளோட!!! அவ வியாதிக்கு நான் மருந்து திங்க முடியாதே! அவளை வச்சு என் வாழ்க்கைல முடிவு செஞ்சது என் தப்பு! அதான் நான் உடனே வந்துட்டேன்” என்றாள்.
தள்ளி நின்றிருந்தவளை நெருங்கி சென்றவன், “சோ, இப்போக்கூட இந்த நல்லபுத்தி தானா வரலை? உன் பிரன்ட் அவ புருஷனோட சேர்ந்ததால தான் வந்துருக்கு! ஒருவேளை அந்த பொண்ணு புருஷனோட சேராம போயிருந்தா நீயும் இன்னும் அம்மா வீட்டுல தான் காலத்துக்கும் இருக்குற முடிவுல இருந்துருப்ப… சரியா?” என்றவன், அவள் பேசக்கூட இடைவெளி விடாது,
“என் பொண்ணு ‘அரைவேக்காடு’ன்னு உங்க அம்மா சொன்னப்போ அதோட அர்த்தம் எனக்கு அப்போ புரியல! ஆனா, இப்போ நான் அந்த வார்த்தையோட முழு அர்த்தத்தை முழுசா என் கண்ணு முன்ன பார்த்துட்டு இருக்கேன்!!!” என்றான் முகத்தை சுருக்கி!
இடையே அவள், ‘இல்ல..’ என ஏதோ பேச வர, அவளை பேசவே இவன் அனுமதிக்கவில்லை.
“இங்கப்பார்! என்னை பொருத்தவரைக்கும் என் முதல் கல்யாணம் முடிஞ்சுப்போச்சு! என் பொறுமையோட எல்லையை நான் எப்போவோ கடந்துட்டேன்! நான் வீட்டுக்கு அனுப்பிவைக்குற விடுதலை பத்திரத்துல ஒழுங்கா கையெழுத்தை போட்டுட்டனா நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது! நானும் என் வாழ்க்கையை பார்த்துப்பேன்! நீயும் உனக்கு ஏத்த வேற இளிச்சவாயனை பார்த்து மொளகா அறைச்சுக்கலாம்” என்றவன்,
“இப்போ நீயா இங்கிருந்து கிளம்பிட்டா மரியாதை! நானா அனுப்புனா நல்லா இருக்காது! உனக்கு எது வசதியோ பார்த்துக்கோ” என்றுவிட, கல்லாய் தான் போனாள் அஷ்டா.
வீராவின் இந்த பரிமாணம் அவனிடம் அவள் கற்பனை கூட செய்திராதது.
இவள் சென்று ‘மன்னிப்பு’ கேட்டால், உடனே ‘சரி’ என்று தன்னை ஏத்துக்கொள்வான் என இறுமாந்திருந்த அவள் நினைப்பிற்கு விழுந்த பெரும் அடி இது! தாள முடியாத அடி!
“எதுக்கு இன்னமும் இங்கேயே நிக்குற? எந்த பிரச்சனையும் பண்ணாம நீ கையெழுத்து போட்டுக்குடுத்தா நீ எதிர்ப்பார்க்குறதுக்கு மேலேயே நான் செட்டில் பண்றேன்! புரியல? ஜீவனாம்சம் தரேன்னு சொல்றேன்! அதைவிட்டுட்டு தேவையில்லாத இஷ்ஷு கிளப்புனா ஒத்த பைசா மிஞ்சாது!” என்றவன்,
“உனக்கு தான் என் வருமானம் என்ன? சொத்து என்ன? எல்லாம் தெரியுமே!” என அவன் சொல்கையில், அவன் சொன்ன தொனியில் அப்பட்டமாய் தெரிந்த இளக்காரத்தில் தளர்ந்துப்போனாள் அவள்.
அவள் அப்படியே பார்த்துக்கொண்டு நிற்க, அவ்வறை கதவை திறந்துக்கொண்டு வந்தான் ஒருவன்.
அவனிடம், “முருகன், எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் கிளம்புறேன். நீங்க மேடம்’க்கு ஒரு ஆட்டோ பிடிச்சு குடுத்துடுங்க” என்றவன் கிளம்பிவிட்டான்.
உணர்ச்சிகளற்ற அவள் முகத்தை கண்டாலே, எதிரில் உள்ளோர் இலகிவிடக்கூடும்!
அப்படி இருக்கையில், கட்டியவன் தன்னை இந்நிலையில் இப்படியே விட்டு செல்வதென்றால்…? எப்படி முடியும்? எப்படி முடிந்தது?
அப்படியென்றால்…?
உண்மையாய் தான் அவனுக்கு வேண்டாத பொருளாகி போனோமா?
தன்னை உண்மையிலேயே உதறிவிட்டானா?
இனி அவ்வளவு தானா?!
ஏகப்பட்ட மனப்போராட்டங்களுக்கு நடுவே, அவள் எப்படி வெளியே வந்து, வேலையாள் காட்டிய ஆட்டோவில் ஏறி அமர்ந்தால் என்று கேட்டால்…..? சர்வநிச்சயமாய் அவளுக்கு தெரியாது!!!