அவன் புலம்பல் எல்லாம் காதில் கேட்டால் தானே? காது ஜவ்வை கிழிக்கும் அளவு ஒலித்துகொண்டிருக்கும் பேருந்தின் தொடர் ஹாரன் கூட அவள் செவிப்பறையை தாண்டி மூளைக்கு சென்றிராத போது, ஆட்டோ ஓட்டி பேசுவதெல்லாம் அவள் காதின் அருகே கூட சென்றிருக்கவில்லை.
‘ஊரு இருக்க லட்சணத்துக்கு பாலம் வேற கட்டுறானுங்கலாம்! அப்படி போ, இப்படிபோ’ன்னு ஊரை சுத்த வைக்குரானுங்க! இவனுங்க எப்போ பாலத்தை கட்டி, அதை தொறந்து…” அவனின் பேச்சு போய்க்கொண்டே இருந்தது.
சிலைப்போல வெறித்த பார்வையோடு அவள் அமர்ந்திருக்க, காதுக்குள்,
“என்னோட முதல் திருமண வாழ்க்கை எப்பவோ முடிஞ்சுப்போச்சு!”
“நீ எனக்கு வேண்டாம்”
“விடுதலை பத்திரம் அனுப்பி வைக்குறேன்… கையெழுத்து போட்டு குடு”
“உனக்கு தான் என் சொத்து, வருமானம் எல்லாம் ‘நல்லா’ தெரியுமே!”
“நீயா இங்கிருந்து போய்ட்டன்னா மரியாதை!”
இப்படியாய் பல பேச்சுகள் சுற்றி சுழன்று அவளுக்குள் ரீங்காரமிட்டு இம்சித்தன.
போதாகுறைக்கு, “ஆறு மாசத்துக்கு ஒருக்க ஆளை மாத்த தானே இந்த ப்ளான்?” என அவன் இரக்கமின்றி கேட்டுவிட்டது வேறு அவளை உயிரோடு தின்றுக்கொண்டிருந்தது.
‘நான் அப்படிப்பட்ட பெண்ணா என்ன? என்னை பற்றி அவருக்கு தெரியாதா? இல்லை அப்படி தான் புரிந்து வைத்திருக்கிறாரா?’ என யோசித்தவள்,
‘இல்லை… நான் என்னை அப்படியாக தான் அவருக்கு உணர்த்தியிருக்கிறேன்! என் மீது தான் தவறு!!! நான் தான் சரியில்லை! எவளோ ஒருத்தியின் பிரச்சனைக்கு என் வாழ்கையில் நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது எப்பேர்ப்பட்ட முட்டாள்த்தனம்! காலம் கடந்து, எல்லாம் முடிந்த பின் அறிவு வருகிறது!’
தனக்குள்ளாக பேசி பேசி, விவாதித்து, சண்டையிட்டு என அதீத சிந்தனைக்குள் அவள் மூழ்கிவிட்டிருக்க, ஆட்டோ நின்றதோ, அல்லது பல நிமிடமாய் ஆட்டோ ஓட்டி, தன்னை அழைத்துக்கொண்டிருப்பதோ அவளுக்கு தெரியவே இல்லை.
இறுதியாய் அவன், “அண்ணீ….ஈஈ….” என பலம் கொண்டு கத்த, சுழலில் இருந்து தப்பித்து மேலே வருபவள் போல விலுக்கென்று நிமிர்ந்தாள் அவள்.
“நம்ம வீட்டுக்கு தான் வண்டியை விட்டேன்! அப்புறம் தான் தோனுச்சு! ஒருவேளை நீங்க அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு வந்துருப்பீங்களோன்னு? அதை கேட்க்கலாம்ன்னு தான் நிறுத்துனேன்” என்றான்.
அதற்கும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பேசுவது செவியில் விழுந்தாலும், சிந்தையில் பதியவில்லை.
“எங்க போகணும் அண்ணி?” அவனது இந்த கேள்வி அவளுக்குள் நுழைந்தது.
‘எங்கே போகணும்? எங்க போறது?’
அவனே, “அம்மா வீட்டுக்கு போணுமோ?” என்றான்.
தயக்கமாய் என்றாலும், சம்மதமாய் அசைந்தது அவள் சிரம்.
உடனே கியரை போட்டு வண்டியை இயக்கியவன், “பார்த்தீங்களா? நல்ல வேளை! இல்லனா திருப்பிட்டு வந்துருக்கணும்!” என்றான் நிம்மதியாய்.
அஷ்டாவுக்கு அவள் வாழ்க்கை குறித்த அச்சம் தலைவிரித்தாடியது.
‘ஆம்பளை இல்லாம வாழ முடியாதா?’ என தோன்றினாலும்,
‘வீரா இல்லாமல் வாழ முடியாது’ என்ற எண்ணம் திடமாய் அவளுள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருந்தது.
‘அவன் தான் உன் வாழ்கையா?’ என்ற வீம்பு பேச்சு போய், “அவர் மட்டுமே என் வாழ்கை” என அவள் உணர தொடங்க,
“அண்ணீ…….” என வண்டியை செலுத்திக்கொண்டே பின்னால் திரும்பி கிட்டத்தட்ட கத்தினான் அவன்.
“ரொம்ப நல்ல மனசு அண்ணி அவருக்கு! பணம் இருக்கேன்னு பந்தா’ காட்ட மாட்டாரு! உண்மையா சொல்லனும்ன்னா அவரை பார்க்குற யாரும் அவரு ‘பசை’யுள்ள பார்ட்டின்னு நம்பவே மாட்டாங்க!”
“அவரை எனக்கு பத்து வருஷத்துக்கு மேல தெரியும் அண்ணி! எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கப்போ, அண்ணே பெட்ரோல் பங்க்’ல வேலை கேட்டு வந்து நின்னேன்! சின்ன பையனுக்கு வேலை தர முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாரு! எனக்கு வேற எங்கயும் வேலை ஒத்து வரவே இல்லை. ஒரே மாசத்துல மறுபடியும் போய் நின்னேன்!
நீ ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு வா வேலை தரேன்னாரு! படிக்க காசு இருந்தா நான் ஏன்யா வேலைக்கு வரப்போறேன்? பொங்கி தின்னவே வழி இல்லன்னு சொன்னேன்!
இரக்கப்பட்டு வேலை குடுப்பாருன்னு நினைச்சா, கையோட இழுத்துட்டு போய் பள்ளிக்கூடத்துல சேர்த்துவுட்டாரு! ஐயோ… எனக்கப்போ என்னா காண்டாச்சு தெரியுமா அண்ணி?” என்றான், என்னவோ நேற்று தான் அவனை பள்ளியில் சேர்த்துவிட்டதை போல.
“ஸ்கூல் முடிச்சுட்டு வந்து தினம் கொஞ்ச நேரம் வேலை பார்ப்பேன்! அப்படியே செட்டில் ஆகிடலாம்ன்னு தான் நினைச்சேன்! ஆனா, அண்ணே தான் இதெல்லாம் குடும்பத்துக்கு பத்தாதுன்னு சொல்லி ஆட்டோ ஓட்ட சொல்லிச்சு”
“அண்ணனுக்கு நிறைய தொழில் இருக்கு! நிறைய வருமானம்! ஆனா, எல்லாத்தையும் தானே வச்சுக்காம மத்தவங்களுக்கு செய்யணும்ன்னு நினைக்குற நல்ல மனசு இருக்கு அண்ணி! அதெல்லாம் இந்த காலத்துல எத்தனை பேருக்கு இருக்கு சொல்லுங்க?” என கேட்டான் அவளிடமே!
“எனக்கு தெரிஞ்சு பத்து பதினைஞ்சு புள்ளைங்க படிப்பு செலவ அண்ணே தான் பாக்குது! படிப்புன்னா ஸ்கூல் படிப்பு இல்ல! பெரிய பெரிய காலேஜு படிப்பு! பீஸ் கட்டவே லோன் போடுவோமே! அந்த மாறி படிப்பு!”
அஷ்டாவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அத்தனை பேருக்கு செய்வதென்றால், எவ்வளவு செலவாகும்?
“நான் ஒருத்தன்! உங்களுக்கு தெரியாத மாதிரி புதுசா சொல்லிட்டு இருக்கேன் பாருங்க” என்றான்.
‘புதிது தானே! எல்லாம்’
அவன் சொல்லும்போதோ! சொல்ல வந்தபோதோ! அவன் பேச்சிற்கு செவி சாய்த்ததில்லையே அவள்! குற்றம் கண்டுப்பிடிப்பதிலேயே தானே குறியாய் இருந்தாள். சிந்தனை தறிகெட்டு அவன்புறமே ஓடியது.
ஆட்டோ சட்டென்று ப்ரேக் அடித்து நிற்க, பிடிமானம் இன்றி முன்னே விழுந்தாள்.
“அண்ணி பார்த்து…”
“என்னாச்சு?”
“வீடு வந்துடுச்சு அண்ணி”
அவன் சொன்னதும் தான் வெளியே பார்த்தாள். வீட்டு வாசலில் நின்றிருந்தது ஆட்டோ.
‘ஓ’ என்றதோடு அவள் இறங்கி வெளிக்கதவை திறக்க, அப்போது தான் நியாபகம் வந்தது.
“இது உங்க வண்டி அண்ணி! சொந்த வண்டில வந்ததுக்கு எவனாச்சும் பைசா குடுப்பானா?” என கேட்டுவிட்டு,
“உங்களை பொண்ணு பார்க்க வந்தப்போ நாந்தான் அண்ணனை கூட்டிட்டு வந்தேன்! அதான் உங்க வீட்டுக்கு நீங்க வழி சொல்லாமலே சரியா வந்துட்டேன்” என்றான் கூடுதலாய்.
ஆட்டோவையே புதியதாய் பார்ப்பவள் போல பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்ப்பதை உணர்ந்தவன், “இது மட்டும் இல்ல. நிறைய ஆட்டோ ஓடுது அண்ணனுக்கு! அதோட காரு, வேனு, குட்டியானை இன்னும் ஏகப்பட்டது!” என்றான்.
‘லட்சக்கணக்குல வருமானம் வருதுன்னு சொன்னாங்கள்ள? அட்லீஸ்ட் ஒரு கார் இருக்கா அவங்க வீட்டுல?’
அன்றொரு நாள், தந்தையிடம் இவள் இளக்காரமாய் சொன்னது நியாபகம் வந்தது.
“சரி அண்ணி! நான் கிளம்புறேன்! ஸ்கூல் சவாரி இருக்கு” என்றவன் ஆட்டோவை கிளம்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
சாவி கொடுத்த பொம்மை போல எந்தவித உணர்வும் இன்றி தன் அறைக்குள் புகுந்தவள், கதவை தாழிட்டுவிட்டு அப்படியே கட்டிலில் விழுந்தாள். அவள் வந்ததோ, அறைக்குள் சென்றதோ வீட்டில் இருந்தவர்கள் கண்ணிலும் கருத்திலும் பதியாமல் போய்விட்டிருந்தது.
‘என் வாழ்கை அவ்ளோதானா? முடிஞ்சுதா?’
‘அவருக்கு இவ்ளோ கோபம் வருமா? என்கிட்ட கோபப்படுவாரா? கோபத்துல என்னை விட்டுடுவாரா?’
‘அவர்க்கிட்ட நான் எவ்ளோ மோசமா நடந்துருக்கேன்! என்னை ரொம்ப கேவலமா நினைச்சுருப்பாருள்ள? ச்ச!’
‘என் தலைல நானே மண்ணள்ளி போட்டுக்கிட்டேன்!’
‘இனி எனக்கு என்ன இருக்கு வாழ்க்கைல?’
‘அவர் இல்லாம நான் இங்க இருந்தா, என்னை இப்படியே இருக்க விட மாட்டாங்க! மறுபடியும் கல்யாணம் செஞ்சுக்க தான் சொல்லுவாங்க! அப்படி ஒன்னு நடந்தா?
ஐயோ! அவர் சொன்னது உண்மைன்னு ஆகிடுமே!?
நான் ‘ஆளை மாத்துறவள்’ ஆகிடுவேனே!?’
‘அவரே இப்படி சொன்னா என்னை சுத்தி உள்ளவங்க எல்ல்லாம் என்ன சொல்லுவாங்க?’
‘என்னை எப்படி நினைப்பாங்க?’
‘அதெல்லாம் தாங்கிக்கிட்டு நான் உயிரோட இருக்கனுமா?’
‘உயிரோட இருந்து நான் என்ன செய்யப்போறேன்!?’
‘இனி ஒண்ணுமே இல்லையே!!!’
உத்திரத்தில் சுழன்றுக்கொண்டிருந்த மின்விசிறியில் பதிந்தன அவள் கண்கள். சிறிது நேரம் அதையே வெறித்துக்கொண்டிருந்தாள். தலைக்குள் தாறுமாறாய் எண்ணங்கள் சுழன்றடித்தன. ஏகப்பட்ட கேள்விகள், போராட்டங்கள்…
முடிவுக்கு வந்தாள்…!
அடுத்த சில நிமிடங்களில் அவள் செய்யப்போவது ‘அரைவேக்காட்டு’த்தனத்தின் உச்சகட்டம்!!!