அவர் எதிரே அமர்ந்து, அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க அஞ்சியவராய் அவரது கால் விரல்களில் கண்பதித்திருந்தார் நீலா.
‘உனக்கு பிடிக்காம தான் அஷ்டா பொறந்தாளா?’ என சண்முகம் கேட்டதும் அதிர்ந்து போய் பதிலற்று நீலா நின்றிருந்த இரு நிமிடங்களில் தன் பொறுமை அத்தனையும் வடிய, விறுவிறுவென மாடியில் வந்து அமர்ந்தவர் தான்!!! பொழுதிறங்கியும் அவர் இறங்கி வரவில்லை.
“ஏங்க! இப்படி ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம இருந்தா உங்க ப்ரஷர் தான் அதிகமாகும்! உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்! தயவுசெஞ்சு சாப்பிட வாங்க” என இறைஞ்சிக்கொண்டிருந்தார் நீலா.
சண்முகம் வாயே திறக்கவில்லை.
தான் கேட்டதற்க்கான பதில் வராமல், எதற்கும் இசைந்துக்கொடுக்க போவதில்லை என கங்கணம் கட்டியவர் போல இருந்தார்.
இத்தனை நேரம் இருந்த இடைவெளி குறைய, அவரை நெருங்கி அமர்ந்தார் நீலா.
“ப்ளீசுங்க!”
‘ம்ஹும்! அசைவில்லை அவரிடம்’
மெல்ல அவரது கரம் தொட்டவர், “எவ்வளவு நேரமா கெஞ்சுறேன்? எனக்கு மயக்கமே வரும் போல இருக்கு! நீங்க கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்னவாம்?” என்றார்.
அதே வெறித்த பார்வை தான்!
சோர்ந்துவிட்டார் நீலா.
இத்தனை வருடத்தில் இது போன்ற கெஞ்சல், இறைஞ்சல் எல்லாம் இருந்ததே இல்லையே! முதன்முதலாய் நடக்கும்போது எப்படி பேச வேண்டும் என்று கூட விளங்கவில்லை அவருக்கு.
“எதுக்குதாங்க இப்படி உட்காந்துருக்கீங்க? அத்தை வந்தா என்னைத்தான் திட்டுவாங்க! என்னவோ உங்களுக்கு நான் தான் சோறு போடாம பட்டினி போட்டு வச்சுருக்கமாதிரி!”
அன்று கோவிலில் விவேஷம் என்பதால் ஆறுகால பூஜையையும் பார்த்துவிட்டு வருவதாய் காலையிலேயே சொல்லி சென்றிருந்தார் மங்களம்.
பிடிவாதமாய் அவர் மௌனம் சாதிக்க, “என்னங்க! இதுக்குமேல என்னால முடியல! எதுவா இருந்தாலும் வாயை திறந்து பேசுங்களேன்! கெஞ்சி கேட்குறேன்” என்ற நீலாவின் கண்களில் அநியாயத்திற்கு சோர்வு மண்டிக்கிடந்தது. கூடவே பசியும்!
அவர் பசி முகம் கண்டு சற்றே இறங்கி வந்த சண்முகம், “அப்போ சொல்லு! உனக்கு இஷ்டம் இல்லாம தான் அஷ்டா பொறந்தாளா?” என்றார் கூர்மையாய்.
சங்கடமான அமைதி நிலவியது. பதில் சொன்னாலன்றி அவர் விடபோவதில்லை என்பது புரியவே துணிச்சலாய் பதில் பேச ஆரம்பித்தார் நீலா.
“அஷ்டாவை நான் விரும்பி தான் பெத்துக்கிட்டேன்”
அவர் பதிலில் சண்முகம் எதிர்ப்பார்த்தது கிட்டவில்லை.
“உனக்கு இன்னும் தெளிவா கேட்டுருக்கனுமோ?” என்றவர், “உனக்கு என்னோட தனிப்பட்ட முறையில ‘ஒண்ணா’ இருக்க விருப்பம் இருந்தது இல்லையான்னு கேட்குறேன்! இதுவும் புரியலையா? இல்ல?” என்று அவரை கேட்க,
“புரியுது!” என்றுவிட்டார் நீலா.
“அப்ப சொல்லு!”
“சொல்லு சொல்லுன்னா என்ன சொல்ல சொல்றீங்க? என் பெத்தவங்களை மதிக்காதப்போ, என்னை அத்தை திட்டும்போதெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாம நீங்க சும்மா இருக்கப்போ, நான் பேசுறதை துளிக்கூட காதுல வாங்காதப்போ, இந்த வீட்டுக்கு வேலைக்காரியா மட்டும் தான் நான் இருக்கேன்னு அடிக்கடி எனக்கு உணர்த்திக்கிட்டே இருக்கப்போ, மத்தவங்க முன்னாடி என்னை விட்டுக்குடுக்குறப்போ… இப்படி பல நேரம், பல சூழல்ல உங்கமேல என்னையறியாம மனகசப்பு உண்டாகும்!
ஆனா, அது எதையும் யோசிக்காம, கண்டுக்காம நீங்க என்னை நெருங்கும்போது, ‘எனக்கு வேண்டாம்’ன்னு உங்களை தள்ளவும் தைரியம் இருக்காது! எல்லாத்தையும் மறந்துட்டு இணக்கமா இருக்கவும் மனசு வராது!
ஒருநாளாவது என் முகம் பார்த்து, என் உணர்ச்சிகளை புரிஞ்சுக்க முயற்சி பண்ணிருப்பீங்களா? இவளுக்கு பிடிக்குதா? பிடிக்கலையா? அதைப்பத்தின கவலையாவது இருந்துருக்கா?
இவ சந்தோஷமா இருக்காளா? இல்லையா? இவளுக்கு ஏதாவது வேணுமா? தேவைப்படுமா? ஏதாவது கேட்க தோனிருக்கா?
எனக்கு மூணு வேளை சோறு போடுறதும், ரெண்டு புடவை எடுத்து தரதும் மட்டுமே என்னை திருப்திப்படுத்திடாது!
நீங்க என்னை இத்தனை வருஷம் நடத்துன விதத்துல, ஒரு நாள், ஒரு பொழுது உங்க பொண்ணை அவ புருஷன் நடத்தினா, அதை பார்க்குற நீங்க தாங்குவீங்களான்னு மட்டும் யோசிச்சு பாருங்க! வேற ஒன்னும் வேண்டாம்!!!”
மூச்சு வாங்க பேசிவிட்டு நிறுத்தினார் நீலா. இத்தனை வருட தாங்கல் அவரை ஆவேசப்படுத்தியது.
“அப்போ என்னை பிடிக்காம தான் என்னோட இருந்துருக்க அப்டிதானே?” உள்ளே போன குரலில் வினவினார் சண்முகம்.
பிசுறு தட்டும் அவர் குரலை கேட்டதுமே, மனம் இளகிவிட்டது நீலாவுக்கு.
“பிடிக்காம தான் கூட இருக்காங்களா?” அவரிடமே மறுகேள்வி கேட்டார் நீலா.
சண்முகம் எங்கோ பார்வை நிலைக்க, யோசனையாய் அமர்ந்திருப்பதை பார்த்ததும் மொத்தமும் மறந்தது நீலாவுக்கு.
“எதுக்கு இப்படி முகத்தை வச்சுக்கிட்டு இருக்கீங்க? பாக்கவே சகிக்கலை” என்றார். இத்தனை வருடத்தில் அவரை சீண்டும்படியாக இப்படி இணக்கத்துடன் பேசுவது இதுவே முதல்முறை என்று சொன்னால் மிகையல்ல!
நீலாவுக்கோ ‘இதென்னடா காலம் போன கடைசில வம்பா போச்சு!’ என்று தான் தோன்றியது.
அதே எண்ணத்துடன், “என்னங்க? நமக்கு கல்யாணம் ஆன பொண்ணு ஒருத்தி இருக்கா! தேடி குடுத்த வாழ்க்கையை அலட்சியமா தூக்கி போட்டுட்டு வந்து உட்காந்துருக்கு அந்த பைத்தியம்! நாலு நல்ல புத்தி சொல்லி அவளை புருஷன் வீட்டுக்கு அனுப்புற வேலையை விட்டுட்டு, எல்லாம் முடிஞ்ச நம்ம விஷயம் இப்போ ரொம்ப முக்கியமா உங்களுக்கு?” என்றார்.
“நம்ம வாழ்க்கைல எல்லாம் பார்த்தாச்சு! பேரன், பேத்தியை பார்க்குறதை தவிர, இனிமே பெருசா ஒன்னும் இல்ல! முடிஞ்சதையே நினைச்சு வருந்தாம இனி வர நாளை நல்லதா அமைச்சுக்கலாம்! அவ்ளோதான் நான் சொல்லுவேன்” மிக மெலிதான குரலில் தன்மையாய் சொன்னார் நீலா.
பொறுமையாய் கேட்ட சண்முகம், “உன்கிட்ட நான் எப்பவோ இப்படி பேசிருக்கணும் நீலா! ரொம்ப காலத்தை தவற விட்டுட்டேன்” என்றவர்,
மனைவியின் கேலியை உணர்ந்தவர் அருகே தெரிந்த அவர் காது மடலை வலிக்காமல் திருகி, “கிண்டலா பண்ற நீ!” என்றார் மிரட்டல் போல!!!
அதற்கு போலியாய் வலியில் துவண்ட நீலா, “நான் ஒன்னு சொல்லவா?” என்றார் அவர் முகம் பார்த்து.
லேசாகி இருந்த மனதுடன், “சொல்லுமா!” என்றார் அவர்.
“நான் என் விருப்பத்தை, மனக்கஷ்டத்தை உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனும்ன்னு நீங்க சொல்றீங்க இல்ல? அப்படி நான் சொல்லிருந்தாலும் நீங்க அதை பெருசா காது குடுத்து கேட்டுருக்க மாட்டீங்க” என்றார் நீலா வெகு திடமாய்.
“ஏன் அப்படி சொல்ற?”
பெருமூச்சுடன், “உங்க பொண்ணு புருஷன் கூட வாழ மாட்டேன்னு வந்தப்போ அதுக்கு அவ சொன்ன காரணம்! அதெல்லாம் கேட்டதும் உங்க மனசுல ஏதோ ஒரு மூலைல சின்னதா ஒரு எண்ணம், என்னையும் உங்க பொண்ணையும் ஒப்பிட்டு தோணிருக்கும்!
அந்த நேரம் பார்த்து நான் பேசுனதை நீங்க கேட்டுருக்கீங்க!!!
அதோட வெளிப்பாடு தான் இது!!!” என்றார்.
உண்மையில் அதானே! என்று நினைத்தார் சண்முகம்! இத்தனை வருடமாய் எந்தவித போராட்டமும் இன்றி நீலா அமைதியாய் குடும்பம் நடத்த, பத்து காசு பெறாத விஷயத்தை எல்லாம் பிரச்சனையாக்கி வீட்டை விட்டு வந்துவிட்டாலே என மகள் மீது பெரும் வருத்தம் இருக்கிறது அவருக்கு.
தாம் வளர்த்தது சரி இல்லையோ? என்று முதல் முறையாய் எண்ணியபடி அவர் வீட்டில் உலாத்தியபோது தன்னிச்சையாய் அவர் செவியில் வந்து சேர்ந்தது தான் அன்றைய நீலாவின் பேச்சு!
“உங்க மனசு பலவீனமா இருந்ததால என் பேச்சு உங்களை அசைச்சுருக்கு! இல்லனா உங்ககிட்ட நான் இப்படி சகஜமா பேசுறதெல்லாம் வாய்ப்பே இல்ல! என்னங்க? நான் சொல்றது சரிதானே?” சிரித்த முகமாய் கேட்டார் நீலா.
அவரால் என்ன சொல்ல முடியும்? ஏதோ சொல்ல அவர் வாயெடுக்கும்போதே, “என்னங்க? இதோட இதை விட்டுடலாம்! என்னவோ நேத்து தான் கல்யாண முடிச்ச சின்னஞ்சிறுசுங்க மாறி மாத்தி மாத்தி சமாதானம் சொல்லிக்கிட்டு… நல்லாவே இல்லை!” என்றவர் எழுந்து விட்டார்.
“உங்களால இன்னைக்கு ஒரு வேலை நடக்கல வீட்டுல! ரெண்டு வேளை சாப்பாடு தின்னாம போனது தான் மிச்சம்!” என அவர் அங்கலாய்க்க, அவர் கரம் பிடித்து எழுந்து நின்ற சண்முகம்,
“பரவால்ல… இப்போ வா நான் ஊட்டி விடுறேன்” என்றார்.
காலில் ஆணியடித்ததை போல அடுத்த அடி எடுத்து வைக்காது அப்படியே உறைந்து நின்றார் நீலா.
“என்னடி?”
“இப்படியெல்லாம் பேசுனா எனக்கு அதிர்ச்சில நெஞ்சு வலியே வந்துடுங்க!” என்றார். கண்கள் குறும்பில் சிரித்தன.
“வலிச்சா சொல்லு! மருந்து போட்டு நீவி விடுறேன்!”
சண்முகம் சொல்ல, இருகையாலும் வாய் பொத்தி அதிர்ந்துப்போய் நீலா நிற்க, பற்றாக்குறைக்கு கண்ணை வேறு சிமிட்டி வைத்தார் அவர்.
பரபரவென சுற்றும் முற்றும் பார்த்த நீலா, “இருவது வயசுல பேச வேண்டியதை எல்லாம் அறுபது வயசுல பேசிக்கிட்டு இருக்கீங்க! எவன் காதுலயாவது விழுந்து மானம் போகப்போகுது! வாங்க முதல்ல!!!” என்றவர் விறுவிறுவென படியிறங்க, வாய்விட்டு நகைத்தபடி பின்தொடர்ந்த சண்முகம்,
“மெல்ல போடி! இது பழைய வீடு” என சொல்லிக்கொண்டே வந்தார்.
வீராவுக்கு என்ன தோன்றியதோ?! கதவை திறந்து அவள் நிலையை சோதிக்க சொன்னான் நீலாவிடம்.
அவன் பதட்டம் இவருக்கு தேவையற்றதாய் இருக்க, முதலில் இயல்பாய் இருந்தவர், நேரம் செல்ல செல்ல, அஷ்டாவிடம் இருந்து எவ்வித பதிலும் வராததில் பதட்டம் ஏற, சண்முகத்தை துணைக்கழைத்தார்.
சண்முகத்திற்கு கை கால்கள் எல்லாம் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. வியர்வை ஆறாய் பெருக நடுங்கும் விரல்களால் கதவை தட்டி, மகளை அழைத்துக்கொண்டிருந்தார்.
அலைபேசி வழியே இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வீராவுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது.
சற்றும் யோசிக்காமல் கிளம்பிவிட்டான் அவளை காண!
பத்து நிமிட தூரம் தான்! அதை ஐந்து நிமிடத்திற்கு முன்னதாக கடக்க முடிந்தாலும், இதயம் தாளம் தப்பி துடிக்க, மனமோ அத்தனை தெய்வங்களுக்கும் வேண்டுதல் வைத்துக்கொண்டிருந்தது.
அவள் வீட்டு வாசலில் பைக்கை ஸ்டேன்ட் போட கூட முடியாது அப்படியே போட்டுவிட்டு ஓடினான் உள்ளே!
இன்னமும் நீலாவும் சண்முகமும் அறைக்கதவை தட்டிக்கொண்டு தான் இருந்தனர். இருவர் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது.
வினாடி நேரத்தில் அவ்விடம் அடைந்தவன் படபடவென கதவை தட்டி, “அஷ்டா! கதவை திறடா” என கத்த, அவனை கண்டதும் இருவர் அழுகையும் இன்னமும் தான் பெருகியது.
கதவை தட்டி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நினைத்தவனாய், “மாமா, ஸ்க்ரூவ் டிரைவர் இருந்தா எடுங்க சீக்கிரம்!” என்றான்.
‘டூல் பாக்சை’ அப்படியே கொண்டு வந்து கொடுத்தார் சண்முகம்.
வேண்டியதை எடுத்துக்கொண்டு அவன் வேலையில் இறங்க, சண்முகமும் உதவினார்.