மின்னல் வேகத்தில் கண்கள் அவ்வறையை அலச, கட்டிலின் ஓரம் தன்னை ‘N’போல சுருட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்து அழுதுக்கொண்டிருந்த அஷ்டாவை கண்டதும் தான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்துவிட்டனர் மூவரும்.
அவளை முழுதாய் பார்க்கும் வரை உயிரோடு செத்துக்கொண்டிருந்த வீரா, அவளை கண்ட மாத்திரத்தில் அந்த கட்டிலேயே அயர்ந்துப்போய் அமர்ந்துவிட்டான்.
சண்முகம் அத்தனை தெய்வங்களுக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இன்னமும் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு நிற்க, அத்தனை நேர பரிதவிப்பு ஓய்ந்து, தங்களை பதறவிட்டு ஓரமாய் அமர்ந்துள்ள மகளை கண்டதும் ஆத்திரம் பெருக, நொடிக்குள் அவளை நெருங்கி கண்டபடி அடிக்க ஆரம்பித்தார்.
சண்முகமும் வீராவும் அவரை பாய்ந்து தடுப்பதற்கு முன்னரே ஏகப்பட்ட அடிகள் விழுந்திருந்தது அவளுக்கு.
அத்தனை அடியும் வாங்கிக்கொண்டு அழுதாளே தவிர, ஒரு துளி சத்தம் வரவில்லை அவளிடம் இருந்து.
ஆவேசத்தில் அவளை அடிக்க பாயும் நீலாவை அடக்குவதே பெரும்பாடாய் இருந்தது.
“விடுங்க என்னை! சித்த நேரத்துல என் ஈரக்குலை நடுங்கிப்போச்சு! நம்மளை உயிரோட கொன்னுட்டு இவ குத்துக்கல்லாட்டம் உட்காந்துருக்குறதை பாருங்க!” கத்திக்கொண்டே அடிக்கப்பாய்ந்தார் நீலா.
‘இது சரி பாடாது!’ என்றெண்ணிய வீரா, “மாமா! நீங்க அத்தையை கூட்டிட்டு போங்க! இங்க நான் பார்த்துக்குறேன்” என்றான். இருவரும் வெகு சிரமப்பட்டு நீலாவை வெளியேற்றினர்.
சண்முகமும் நீலாவும் வெளியே சென்றதும் கதவை தாழிட்டு விட்டு வந்த வீரா, கண்களை மூடி முகத்தை இருகைகளாலும் தாங்கியபடி அமைதியாய் அமர்ந்துவிட்டான்.
அவனிடம் எந்தவித அசைவுமில்லை. அப்படியே சமைந்திருந்தான். அவனது வெகு நேர பதட்டம் மட்டுப்பட நேரம் பிடித்தது. அவளுக்கு ஒன்றுமில்லை என கண்கள் பார்த்து மூளையிடம் சொல்லியிருந்தாலும் மனம் அமைதிப்பட்ட பாடில்லை.
அதுவரை மூலையில் அமர்ந்து அழுதுக்கொண்டிருந்த அஷ்டா மெதுவாய் நெருங்கி அவனிடம் வந்தாள்.
அவன் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவள், அழுகையில் குளறும் குரலோடு, “என் மேல கோவமா இருப்பீங்கன்னு தெர்….தெரியும்! உங்களுக்கு இப்போ என்னை அடிக்கணும் போல இருக்கும்! அ…அதுவும் தெரியும்! நான் யாருக்குமே பிரயோஜனம் இல்லாம இருக்குறதுக்கு பேசாம செத்துடலாம்ன்னு தான் முயற்சி பண்ணேன்! நீ….நீங்க இப்படி வந்து நிப்பீங்கன்னு எனக்கு தெரியாது!!!” சொல்ல, முகத்தை மூடியிருந்த கைகளை எடுத்துவிட்டு கண்களை மட்டும் மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் வீரா.
“நீங்க ஒன்னும் பயப்படாதீங்க! நான் செத்துட்டா உங்களுக்கு எந்த தொல்லையும் வராது! எல்லாம் தெளிவா லெட்டர் எழுதி வச்சுட்டு தான் இப்படி பண்ணேன்!” கேவலுடன் சொன்னாள்.
மெதுவாய் கண்களை திறந்தான் வீரா. அழுது அழுது கன்னம் வீங்கி, முகம் சிவந்து, தலை கலைந்து காட்சி தந்தாள் அவள். இன்னமும் நிற்காத அழுகை. கூடவே மேதாவி போன்ற பேச்சு.
“நீங்க இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு தோனுச்சு! நீங்க என்னை விட்டுட்டு இன்னொருத்தருக்கு புருஷனாகுறத என்னால பார்க்க முடியாது! என் அப்பாக்கு கூட என்னை பிடிக்காம போச்சு போல! அதான் யாருக்கும் வேண்டாம்ன்னு நான் போய்ட….”
அவள் பேச்சில் அந்தரத்தில் தொங்க, அவளை விருட்டென இழுத்து அணைத்திருந்தான் வீரா.
அணைப்பென்றால், இரு உடலும் உரசிக்கொள்ளுமளவுக்கல்ல! இருவரின் எலும்பு மண்டலமே உராய்ந்துக்கொள்ளுமளவு!!!! அத்தனை இறுக்கம்!!!
அவனது இந்த அதிரடி அணைப்பில், நெருக்கத்தில் ஆடிப்போனாள் அஷ்டா. அவனை தானும் அணைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூட தோணவில்லை அவளுக்கு. அப்படியொரு அதிர்ச்சி!
இறுக்கத்தை சற்றும் தளர்த்தாமல், “லூசு! லூசு! லூசு! லூசு! அரைவேக்காடு! அரைவேக்காடு! லூசு” என மாற்றி மாற்றி கத்த ஆரம்பித்தான் வீரா.
“லூசுடி நீ! சரியான லூசு! எங்கிருந்து இப்படி அறிவில்லாம பொறந்த? பைத்தியம்! இம்சை!” அவன் வாயில் வந்ததெல்லாம் சொல்ல,
“நான் ஒன்னும் லூசு இல்ல” என என்று அவன் அணைப்பை விட்டு திமிறினாள் அஷ்டா.
அதில் தன் இறுக்கத்தை குறைத்தவன், “நீ லூசு இல்ல… வடிக்கட்டின லூசு! முத்திப்போன லூசு” என மீண்டும் அவன் சொல்ல, அழுகை போய் சிலிர்த்துக்கொண்டு நின்றாள் சண்டைக்கு.
“எதுக்கு என்னை லூசுன்னு சொல்றீங்க? என்னை பார்த்தா லூசு மாறி தெரியுதா?” அவன் அணைப்பை விட்டு விலகி நின்று முறைத்தாள்.
“பார்த்தா தெரியாது டி! பத்து நிமிஷம் பேசுனா போதும்! அவங்களே உன்னை கையோட மனநல மருத்துவமனைக்கு அள்ளிக்கிட்டு போய்டுவாங்க” என்றவனுக்கும் முன்னிருந்த மன இறுக்கம் தணிந்திருந்தது.
“நான் லூசா இருக்கனால தான் என்னை வேண்டான்னு வேற ஒருத்தியை கட்டிக்க போறீங்களோ?”
தள்ளி நின்றவளை “இங்க வா!” என்றழைத்தான்.
அவள் வர மறுக்க, இவன் கட்டிலில் அமர்ந்துக்கொண்டே அவளை இழுத்த இழுப்பில் இருவருமே ‘பொத்’தென விழுந்தனர் மெத்தையில்.
அது அவனுக்கு வசதியாய் போக, அவளை கையணைப்பில் இட்டு வந்தவன், “நான் ஒரு தடவை சொன்னதே உன்னால தாங்கிக்க முடியலையா?” என்றான்.
“ம்ம்ம்”
“அப்போ நீ மட்டும் ஆறு மாசத்துல என்னை விவாகரத்து பண்ணுவேன்னு சொன்னியே! அப்போ எனக்கு எப்படி இருந்துருக்கும்?”
“நான் பழி போடலடி! நீ சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்குன்னு உனக்கு புரிய வச்சேன்!” என்றதும், ‘நல்லா புரிய வச்சீங்க!’ என முனகலுடன் முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
“மூஞ்ச திருப்புன அப்படியே கடிச்சு வச்சுடுவேன்!!!” அவள் தாடையை இறுகப்பற்றி அவன் சொல்ல, அதில் உண்டான வலியில் ‘உஸ்….’ என முனகியவள், “நீங்க என்னை ‘போ, வா’ன்னு கூட பேச மாட்டீங்க! இப்போ வார்த்தைக்கு வார்த்தை ‘டி’ போடுறீங்க” என்றாள்.
“இதெல்லாம் நான் எப்பவோ செஞ்சுருக்கணும்! கூடவே இன்னும் ‘வேற வேற’ கூட செஞ்சுருக்கணும்! அதெல்லாம் செய்யாம விட்டதால தானே உனக்கு என்மேல ‘அந்த’மாதிரி சந்தேகம் வந்துடுச்சு!” என்றான்.
அவன் அப்படி சொன்னதுமே முகம் வாடிப்போனது அவளுக்கு.
“நீங்க என்னை அப்போ ரொம்ப கேவலமா நினைச்சுருப்பீங்கள்ள? அப்படி எல்லாம் செய்யும் போது தப்பா தோணாதது, இப்போ நினைச்சு பார்க்கும்போது அசிங்கமா ஃபீல் ஆகுது”
“அட லூசு! நீ உன் புருஷன் கிட்ட தானே உன்னை ‘ஷோ ஆஃப்’ பண்ணுன! இதுல அசிங்கமா ஃபீல் பண்ண என்ன இருக்கு? நமக்குள்ள நடக்க வேண்டியது எல்லாம் காலா காலத்துல நடந்திருந்தா நீ அப்படி பண்ணும்போது நான் சும்மாவா இருந்துருப்பேன்? ஒரே ‘மஜா’வா இருந்துருக்கும்!” கண்முன்னே நினைத்துப்பார்த்து அவன் சிலாகிக்க, அவனை விநோதமாய் பார்த்தவள்,
“நீங்க இப்படி கூட பேசுவீங்களா?” என்றாள் ஆச்சர்யமாய்.
“நீ கேட்குறதை பார்த்தா என்னை ‘சாம்பார்’ன்னு முடிவே செஞ்சுருப்ப போலயே!” அவன் கிண்டலாய் கேட்க, அசடாய் சிரித்தாள் அஷ்டா.
கிண்டலை விட்டவன், “அஷ்டா! இப்போ சொல்றதை எப்போவும் நியாபகத்துல வச்சுக்கோ! இனி எதுக்காகவும், எப்பவும், எந்த சூழ்நிலைலயும் ‘தற்கொலை’ங்குற முடிவுக்கு மட்டும் போய்டவே கூடாது! அது எதுக்குமே சொல்யூஷன் இல்லை! என்னை பொறுத்தவரை சூசைட் ஒரு ‘எஸ்கேபிசம்’. ஒரு அழுத்தத்துல இருந்து வெளிவரதுக்கு அதை எதிர்த்து போராடாம, கோழைத்தனமா தப்பிச்சுப்போக நினைக்கிறது!!!
நீ செத்துட்டா இங்க எதுவுமே மாறாது! போன உன்னை நினைச்சு இங்க இருக்க மத்தவங்க தான் குற்றவுணர்ச்சிளையும், வருத்ததுலையும் அல்லாடனும்!!!” என்றான்.
நல்லபிள்ளையாய் அவன் சொன்னதை உள்வாங்கியவள், “ம்ம்ம்” என தலையாட்ட,
“ஒரு பத்து நிமிஷம் நாங்க லேட்டா வந்துருந்தா என்ன ஆகிருக்கும்?” என்றான் கடந்து போன பகீர் நிமிடங்களை நினைத்து.
அவளோ, “ஒன்னும் ஆகிருக்காது! அழுதழுது அப்படியே தூங்கிப்போய்ருப்பேன்!” என்றதும், திகைத்தவன், இன்னமும் மேலே தொங்கிக்கொண்டிருந்த சேலையை பார்த்து, “அப்போ இது?” என்றான்.
“அதுவா? சூசைட் பண்ணிக்கலாம்ன்னு தான் நினைச்சேன்! ஆனா……..?”
“என்ன ஆனா?”
“முடிச்சு! எப்படி முடிச்சு போட்டு அதுக்குள்ள தலையை விழாம மாட்டுறதுன்னு தெரில!” என அவள் சொன்ன வினாடி பெருங்குரலில் வாய்விட்டு நகைத்தான் வீரா. அவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு வந்தது.
சிரிப்பினூடே ‘அரைவேக்காடு, அரைவேக்காடு’ என்று வேறு அவன் சொல்ல,
“அதான்! தற்கொலை செஞ்சுக்க கூட வக்கு இல்லையேன்னு என்னை நானே கேவலமா திட்டி அழுதுட்டு இருந்தப்போ தான் நீங்க வந்துட்டீங்க!” என்றவள்,
“ஆமா, நீங்க எப்படி கரெக்ட்டா லாஸ்ட் டைம்ல வந்து நின்னீங்க” என்றாள் சந்தேகமாய்.
‘சந்தேகம்’!
“ஆரம்பிச்சுட்டியா?” என போலியாய் முறைத்தவன், “நீ என்னை பார்த்துட்டு போனப்போவே உன் முகம் சரியில்லை! அத்தைக்கு கூப்பிட்டேன், நீ கதவு திறக்கலைன்னு சொன்னதும் பயமா போச்சு! அதான் வேகமா வந்தேன்” என்றான்.
“அன்னைக்கு ஒருநாள் இருந்தச்சு! அடுத்த நாளே குறைஞ்சு, தேஞ்சு, காணாம போச்சு!” என கண்ணடிக்க,
“அப்புறம் ஏன் என்கிட்ட இன்னைக்கு இப்படியெல்லாம் பேசுனீங்க?” என்றாள்.
“நம்ம லைஃப்ல இன்னும் நிறைய பாக்கணும்! எல்லாத்துலையும் அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் குடுத்து நம்ம வாழ்க்கையை கெடுத்துக்கக்கூடாது! நீ செஞ்சது எவ்ளோ பெரிய தப்புன்னு உனக்கு புரியனும்ன்னு தான் சும்மா அப்டி கோவமா பேசுனேன்!” என்றான்.
“அப்போ கோவம் போயிடுச்சா நிஜமா?”
“நிஜமா போய்டுச்சு!!!”
இப்போது அவள் நமட்டு சிரிப்புடன், “நீங்க ரொம்….ப நல்லவங்க பாஸ்” என்றிட,
“எங்கம்மா முன்னாடி ஒரு சாமி கதை சொன்னாங்க! அதுல ஒரு நண்டு சிவனுக்கு பூஜை பண்றதை பார்த்து ‘எனக்கு முன்னாடி அது எப்படி செய்யலாம்?’ன்னு கோவப்பட்டு இந்திரன் அதை கொல்லப்போவாரு! நண்டு சிவனுக்குள்ள போய் ஒளிஞ்சுக்கும்! இந்திரன் தெரியாம சிவனையே வெட்டிடுவாரு! ஆனா, சிவன் அதுக்கு கோபப்படாம, ‘ஆணவத்தால எப்பவும் எதுலையும் சாதிக்க முடியாது! பணிவு தான் முக்கியம்’ன்னு புத்தி சொல்லி அனுப்பிடுவாரு” என்றான்.
“சரி! அதுக்கென்ன இப்போ?”
“நான் ரொம்ப எதார்த்தமான ஆளு! எனக்கு ஆணவமே கிடையாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன் இவ்ளோநாள்! ஆனா, அன்னைக்கு உன்னை ‘வீட்டை விட்டு வெளில போ’ன்னு சொன்னது எவ்ளோ பெரிய தப்பு!
என்னை கல்யாணம் செஞ்ச பிறகு என்னோட எல்லாத்துலையும் உனக்கும் பங்கு இருக்கு தானே? அதுபோல தானே எனக்கும்! அப்படி இருக்கப்போ சண்டைன்னு ஒன்னு வந்ததும், உன்னை நான் வெளில போக சொல்றேன்னா…? எனக்குள்ள ஏதோ ஒரு மூலைல அந்த வீடு என்னோடது! இவளுக்கு அதுல உரிமை இல்லன்குற எண்ணம் இருக்குன்னு தானே அர்த்தம்?
இதெல்லாம் அன்னைக்கு முழுக்க உட்காந்து பலமாறி யோசிச்சு பார்த்தேன்! அப்பறம் தான் ஒரு தெளிவு வந்தது” என்றவனை உலக அதிசயமென அவள் பார்த்து வைக்க,
கலகலவென சிரித்தவள், “உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே?” என்றாள் சந்தேகமாய்.
“யப்பா!!! சந்தேகம் சந்தேகம் சந்தேகம்!!! எப்பப்பாரு சந்தேகம்” அலுத்தவனாய் அவன் சொல்ல, “ம்ஹும்… ம்ஹும்! சொல்லுங்க” என அவன் நெஞ்சில் குத்தினாள்.
“உன்னை பிடிச்சதால தானே கல்யாணம் செஞ்சு இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்”
“எப்பவும் பிடிக்குமா?”
“பிடிக்கும்டி!”
“நான் லூசுத்தனமா எதாவது செஞ்சா?”
“ஏதாவது என்ன? நீ செய்யுறது பூராவுமே லூசுத்தனமா தான் இருக்கும்”
“ம்ச்!!!” அவள் பலமாய் முறைக்க, “நீ என்ன செஞ்சாலும் பிடிக்கும்டி” என்றான் வீரா.
“என்ன விட்டுட மாட்டீங்க தானே? வேற கல்யாணம் எல்லாம் பண்ண மாட்டீங்க தானே?”
“அட லூசே! இன்னுமா இந்த சந்தேகம் உனக்கு?”
“ப்ச்! சொல்லுங்க!!”
“என் வாழ்க்கைல ஒரு கல்யாணம் தான்! அது உன்னோட முடிஞ்சுடுச்சு! தேவையில்லாம இன்னொரு முறை ரிஸ்க் எடுத்து, அடுத்து வரது முழு பைத்தியமா இருந்துச்சுன்னு வையு! தேவையா? தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பிசாசே மேல்!” என அவன் சொல்லி முடிக்கும் முன்னே அவன் மீது பாய்ந்து சரமாரியாய் அடிக்க ஆரம்பித்திருந்தாள் அவள்.
“நான் பிசாசா? நான் பிசாசா உங்களுக்கு?” அவள் அடிக்க அடிக்க, அத்தனையும் சுகமாய் தான் இருந்தது அவனுக்கு. சளைக்காமல் வாங்கிக்கொண்டு அவள் அடிக்க வசதியாய் வேறு படுத்துக்கொண்டான்.
நேரம் கடகடவென ஓட, அவன் மீதேறி அடித்துகொண்டிருந்தவள், எப்போதும் அவனுக்கு கீழே வந்தாள், அவன் எப்போது அவளை தனதாக்கிக்கொள்ள ஆரம்பித்தான் என்பதை உணரவே நேரம் பிடித்தது. உணர்ந்த பின்னோ, அவளுக்கு உலகமே மறக்க ஆரம்பித்தது.
வெளியே, “என்னங்க ஆடி மாசம் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கக்கூடாது! மாப்பிள்ளையை வெளில கூப்பிடுங்க” என புலம்பினார் நீலா.
“அவங்க சேர்ந்ததே போதும்! ஆடி’யாவது ஆவணி’யாவது! சும்மா இருடி” என அவரை அமட்டி அவர்கள் அறைக்கு கடத்தி சென்றுவிட்டார் சண்முகம்.