“நானில்லாதப்ப தான் என்னை தேடுவியா நீ?…” என்றவன் மெல்லிய சிரிப்பு அவளின் காதை அடைய சட்டென மௌனம்.
“ஹ்ம்ம், உடனே பேசமாட்டியே நீ. ஓகே நான் வர நேரமாகும். நீ சாப்பிட்டு தூங்கு. இல்லைன்னா டிவி பாரு…” என சொல்லவும் சரி என்று போனை வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
வீட்டிலிருந்து வீடியோ கால் வர அவர்களிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தமர்ந்தவள் மேலும் ஒருமணி நேரம் அவர்களுடன் அரட்டையில் இருந்தாள்.
தன் வீட்டினரும் அழைப்பை துண்டிக்க உறக்கம் வராமல் டிவியை போட்டுவிட்டு சோபாவில் சரிந்து படுத்தபடி டிவி பார்க்க திரவியம் வரும்பொழுதே பதினொன்றை காட்டியது கடிகாரம்.
ஜீப் சத்தம் கேட்கவுமே சட்டென எழுந்துகொண்டவள் கால்கள் மரத்திருக்க அதனை உதறியபடி எழுந்து சென்ற கதவை திறந்தவள் நாசியில் குப்பென்று ஒப்புக்கொள்ளமுடியாத ஒரு வாசனை.
அந்த நாற்றத்தில் சட்டென உமட்டிக்கொண்டு வர முகத்தில் அசூயையான உணர்வையும் காட்டிவிட்டாள்.
“உன்னை தூங்க தானே சொன்னேன்? இன்னும் தூங்கலையா நீ?…” என கேட்டவன் விழிகள் ரத்தமாய் சிவந்துபோயிருந்தது.
தன் சட்டையை கழற்றியபடி அவர்கள் அறைக்குள் திரவியம் செல்ல தன்னை நிதானப்படுத்தவே அங்கேயே நின்றுவிட்டாள் ஆராத்தியா.
அறைக்குள் செல்லும் பொழுதே தன்னை பார்த்தபடி நின்ற மனைவியை திரும்பி பார்த்துவிட்டு தான் சென்றான் திரவியம்.
அவனின் முகபாவனையை கூட கவனிக்க முடியாமல் லேசாய் தலையே சுற்றிவிட ஒருகையால் தலையை பிடித்தபடி நின்றாள் ஆராத்தியா.
அடுக்களைக்குள் சென்றவள் அங்கேயே முகத்தை அலம்பிவிட்டு தண்ணீரை குடித்துவிட்டு மெதுவாகவே அறைக்குள் வந்தாள்.
இன்னும் திரவியம் குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை. அவன் உள்ளே நுழைந்ததில் அவன் மேலிருந்த மதுவின் வாடை அறையில் சுற்ற அறைக்கு வாசனை மெழுகுவர்த்தியை பொருத்தி வைத்தவள் சென்று படுத்துவிட்டாள்.
அவன் வந்துவிட்டதில் நிம்மதியானவள் மெல்ல கண்ணயர்ந்து உறக்கத்தை தழுவும் முன் அவளை தழுவியிருந்தான் திரவியம்.
ஆராத்தியாவை தன் பக்கம் சட்டென திருப்பியவன் அணுகுமுறையில் வேகத்தை உணர்ந்தவள்,
“அத்தான்…” என்றாள் திணறலுடன்.
அவளின் ஒவ்வொரு அழைப்பிற்கும் அவனின் கைகளில் மென்மையும், அழுத்தமும் மாறிக்கொண்டே இருந்தது.
மௌனமாய் ஒரு கூடல். எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவனிடத்தில் இந்த மாற்றம் அவள் எதிர்பாராதது.
மனமெல்லாம் காரணமேயின்றி என்னவோ என பயப்பந்தை இரும்பு குண்டென கட்டிக்கொண்டு சுமக்க தானாகே அவனிடம் பேசினாள்.
“அத்தான்…” என்ற அழைப்பில் தன் நெஞ்சோடு அழுத்திக்கொண்டவன்,
“மார்னிங் பேசுவோம். டயர்டா இருப்ப. தூங்கு…” என்று சொல்லிவிட அதன் பின் மெல்ல கண்ணயர்ந்தாள் ஆராத்தியா.
ஜீப் சத்தத்தில் உள்ளிருந்து ஜன்னல் வழியாக பார்த்தவளுக்கு அதன் பின் உறக்கம் என்பதில்லாமல் போனது.
முதல்நாளும் அவன் சரியில்லையோ என உணர்ந்திருந்தவள் இப்போது அடுத்ததா என யோசிக்க வைத்தது.
எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கவேண்டும் என சாமியை வேண்டிக்கொண்டவளுக்கு அது போதவில்லை.
அந்த நேரமே குளித்துவிட்டு வந்து பூஜையறையில் விளக்கேற்றி சாமியை கும்பிட்டாள்.
எப்போதும் சீதா செய்வது தான். மனது சரியில்லை என்றாலோ, வீட்டில் எதுவும் பிரச்சனை என்றாலோ இதை தான் செய்வார்.
அதனை அப்படியே ஆராத்தியாவும் செய்ய மனது சமன்படுவதை போலிருந்தாலும் கொஞ்சம் உள்ளுக்குள் உதறல் தான்.
அந்த நேரத்தில் யாருக்கும் அழைக்கவும் முடியாது. ஹாலுக்கு வந்தமர்ந்தவள் நேரத்தை நெட்டி தள்ள காலை பத்துமணிக்கு மேல் தான் திரவியம் களைத்து போய் வீடு திரும்பியிருந்தான்.
வந்ததுமே அவனுக்கு தண்ணீரை கொண்டுவந்து தந்தவள் அவன் முகத்தின் கோபத்தில் எட்டியே நின்றாள்.
அதுவும் வந்ததிலிருந்து மாற்றி மாற்றி அழைப்புகள் வந்துகொண்டிருக்க சிலரிடம் தன்மையாகவும், சிலரிடம் கோபமாகவும், சிலரிடம் ஆலோசனையுடனும் பேசிக்கொண்டிருந்தான் திரவியம்.
அதிலிருந்து அவள் புரிந்துகொண்டது, அவர்கள் சரக்கு லாரியில் வழிப்போக்கனாய் ஒருவன் கோவையில் இறங்கிக்கொள்வதாய் அனுமதி கேட்டு ஏறியிருக்க அவன் தேடப்படும் குற்றவாளி என லாரி ட்ரைவருக்கு தெரியாமல் போனது.
கோவையை நெருங்கியிருந்த நேரம் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட லாரி ட்ரைவர், உதவியாளன், அந்த குற்றவாளி உட்பட அனைவருக்கும் படுகாயம்.
கூடுதல் அதிர்ச்சியாக வந்தவனோ போதைமருந்தை கையில் வைத்திருக்க பிரச்சனையின் தீவிரம் வேறு திசையில் சென்றிருந்தது.
இப்போது அதனை பற்றி பேசிக்கொண்டிருந்தான் திரவியம் கோவையின் புகழ்பெற்ற லாயரிடம்.
பேசி முடித்தவன் ஆராத்தியாவை தேட அவனை பார்த்துக்கொண்டே டைனிங் டேபிள் அருகே சேரை பிடித்தபடி நின்றிருந்தாள்.
ஒன்றும் பேசவில்லை. அவன் திரும்பி பார்த்த வேகத்திலேயே அரண்டுபோய் அவனை பார்க்க திரவியம் முகத்தில் மிதமிஞ்சிய ஆத்திரம்.
அவன் பார்த்ததுமே மெதுவாய் அடுக்களைப்பக்கம் நகர போனவள் மீது ஆத்திரம் வலுத்தது.
“நான் வீட்டுக்குள்ள வந்து அரைமணி நேரமாச்சு. வந்ததுல இருந்து பேசிட்டே மட்டுமா இருந்தேன்? என்னன்னு கூட தெரிஞ்சுக்க மாட்டியா?…” என்றதும் எச்சிலை கூட்டி விழுங்கியவள்,
“நீங்க பேசறதை வச்சே விஷயம் புரிஞ்சதுத்தான்…” என சொல்லியவள் மேலும் பேசும் முன்,
“சோ என்கிட்ட எதுவும் கேட்கமாட்ட. எதையும் ஷேர் பண்ணிக்க மாட்ட, யார் மூலமாச்சும் தெரிஞ்சா மேட்டர் ஓவர். அவ்வளோ தான் இல்லையா? அப்ப என்கிட்ட இருந்து எதுவும் வேண்டாமா உனக்கு? அப்ப யார் உனக்கு?…” என டேபிளை தட்டி கத்தவும் வெலவெலத்து போனாள்.
திரவியத்திற்கு கோபம், கோபம், அத்தனை கோபம். யாரின் மீதும் காண்பிக்கமுடியாத கோபம்.
அதுவும் எதுவும் பேசாமல் கேட்காமல் மனைவியானவள் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தது இன்னும் கோபம்.
இத்தனை நாள் அவன் சேர்த்து வைத்திருந்த பொறுமை எல்லாம் இப்போது கட்டுப்பாடிழந்திருக்க கட்டுக்குள் அவனில்லை.
முதல்நாள் இரவே அவளின் மீது அத்தனை ஆதங்கம் கொண்டிருந்தவன் மனது இப்போது கோபமாக உருவெடுக்க ஆராத்தியா தான் தடுமாறி போனாள்.
“நேத்து நான் எப்படி வந்தேன்? பார்த்த தானே?…”
“ஹ்ம்ம்…”
“ஏன் எதுவும் கேட்கலை?…” என்றதற்கு வாயை திறந்தும் பேச முடியவில்லை அவளால்.
அதிர்ச்சியில், அவனின் அதிர்வான சத்தத்தில், குரலை உயர்த்தியிருந்த விதத்தில் என உடல் தூக்கி போட பின்னே நகர்ந்தாள்.
“நில்லுடி, பின்னாடி போன பார்த்துக்கோ…” என அவளின் தோளை பிடித்தவன்,
“எதுவும் கேட்கமாட்ட. வான்னா வருவா. இருன்னா இருப்ப. சொன்னதை மட்டும் காதில வாங்கிப்ப. நீ என்ன நான் விலைகுடுத்து வாங்கின பொம்மையா?…”
“கை வலிக்குதுத்தான்…” என்றவள் கண்ணீரில் கையை விட்டவன் இன்னும் நிதானத்திற்கே வரவில்லை.