வரும் பொழுதே வெளியே நின்றிருந்த திரவியத்தின் ஜீப்பை கவனித்துவிட்டாள் ஆராத்தியா.
பார்த்ததும் மலர்ந்த முகமும், எதிர்பார்ப்பில் உருண்ட கண்ணின் கருமணிகளும், பின் சோர்ந்த விழிகளுமாய் இவனின் அகத்தை நிறைத்தது மனைவியின் பாவனைகள்.
அவனை காணாமலே சட்டென அவளிடம் மிதமான பதட்டம் பரவ, நொடியில் அவள் கையில் இருந்த பூஜை கூடையை இறுக்கமாய் பிடித்த விரல்களையும் கூர்ந்து கவனித்தான் திரவியம்.
“தியா தீரா அண்ணா வந்திருக்காங்க….” என இந்து காண்பிக்க வீட்டின் முன்னடியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை தான் பார்த்தபடி இருந்தான்.
பார்த்ததுமே தன்னைப்போல அவள் உடல்மொழியில் ஒரு மாற்றம் வர கண்டவன் போனில் தன்னிடம் அவள் சொல்லியதையும் ஞாபகத்தில் கொண்டுவந்தான்.
நிஜமோ நிஜம். வாகனத்தை பார்த்ததும் மலர்ந்தவள் தன்னை பார்த்ததுமே ஒருவிதமாய் மாறும் விதத்தை கண்டுகொண்டான்.
‘வேணும்னு இல்லைத்தான். எனக்கு உங்களை பார்த்ததும் அதுவாவே மாறிடுது’ என சொல்லியவை எத்தனை உண்மை என கவனித்தவன் முகம் மென்மையை பூசியது.
“வாங்கண்ணா…” என இந்துவும் பூமிகாவும் சேர்ந்து வரவேற்க தலையசைத்தவன் ஆராத்தியாவை பார்த்தான்.
“வந்தாச்சா? நான் கூட நேரமாகுமோன்னு நினைச்சேன். வந்துட்டீங்க…” என்ற சீதா மகளிடம்,
“வந்தவர்க்கிட்ட வாங்கன்னு கேட்கமாட்டியா? வாய்ல என்ன வச்சிருக்க?…” என முணங்கிவிட்டு,
“தியா பிரசாதத்தை எல்லாருக்கும் குடு…” என சத்தமாய் சொல்லி கண்ணை இந்துவிடம் காண்பிக்க தன் கையில் இருந்ததை ஆராத்தியாவிடம் கொடுத்தாள் இந்து.
“பூமி, உள்ள போய் பிள்ளையை பாரு. அவன் முழிக்கிற நேரம். நல்லவேளை அவன் எழுந்துக்கறதுக்குள்ள வந்துட்ட…” என சொல்லவும் பூமிகா மகனை தேடி சென்றுவிட்டாள் உள்ளே.
“ரகு, மீனுக்கு போன் பண்ணி கொண்டு வர சொல்லு. அப்படியே அத்தை மாமாவையும் சாப்பிட இங்க வர சொல்லு…” என்றார் பரபரவென்று.
“ஏன் அத்தை? மதியமாச்சு. இன்னுமா சமைக்கலை?…” என திரவியம் கேட்க தன் அண்ணன்களுக்கு பிரசாதத்தை தந்தவள் திரவியத்திடம் வந்து நின்றாள் அமைதியாக.
“உட்கார் தியா…” என்றவன் சீதாவை பார்க்க,
“சமையல் எல்லாம் முடிச்சாச்சுப்பா. நீ வரது இப்ப தானே தெரியும். அதான் உனக்கு புடிச்ச மீன் செய்வோமேன்னு கொண்டு வர சொல்றேன்…” என்றார்.
“அதெல்லாம் வேண்டாம் த்தை. இருக்கறதே போதும்…” என சொல்லி முடிக்க,
“உங்க தங்கச்சி கூப்பிட்டாச்சு. வரேன்த்தான். பேசிட்டிருங்க…” என ரகு நகர்ந்துவிட ஆதவனும் இந்துவுமே முன்பே உள்ளே வந்துவிட்டார்கள்.
“பேசிட்டிருங்க. போய் மீன் வரதுக்குள்ள சமைக்க ரெடி பன்றேன்…” என்ற சீதா அடுக்களைக்குள் சென்றுவிட ஹாலில் வேறு யாருமில்லை.
ஆராத்தியா நீட்டிய பிரசாதத்தை வாங்காமல் திரவியம் அவளை நன்றாக பார்த்தபடி அமர்ந்தான்.
அவள் வாயை திறக்கும் வரைக்கும் எதுவும் பேசவில்லை. ஆராத்தியாவும் தன் பார்வையை கையிலிருக்கும் பிரசாதத்திலேயே வைத்திருக்க எவ்வளவு நேரம் பார்ப்போம் என்பதை போல திரவியமும் இருந்தான்.
“ப்ச்…” என சலித்தவள் சட்டென அதனை டீப்பாயில் வைத்துவிட்டு எழுந்துகொண்டாள்.
“எங்க போற நீ?…” என கையை பிடித்ததும் நிலை தடுமாறி மீண்டும் இருக்கையில் விழுந்தவள் இன்னொரு கையால் புடவையை பிடித்துக்கொண்டாள்.
“மெல்ட்டிங் தியா. பார்த்ததுமே நான் ப்ளாட்…” என தன் இரு கைகளையும் விரித்து காண்பித்து சொல்ல அவள் நிமிரவே இல்லை.
பார்க்கவே கூடாது என்பதை போல ஒரு பிடிவாதமான முகத்துடன் அவள் அமர்ந்திருந்தாள்.
“ஓகே, ஓகே. நான் தப்பு. நிறைய பேசிட்டேன். அந்த நிமிஷம் கோபம். உன்கிட்ட காட்டிட்டேன். ஸாரி கேட்கவா?…” என சொல்லியும் அசரவில்லை அவன் மனைவி.
“என்ன தான்டி செய்யட்டும்? நீயும் அவ்வளோ பேசிட்ட. ஒருவாரமாச்சு தியா. போன்ல கூட என்கிட்ட பேச உனக்கு வேற எதுவுமே இல்லை. அப்படித்தானே?…”
“அம்மா தேடுவாங்க, ஹெல்ப் பண்ண போறேன். விடுங்க…” என்று மனைவியவள் திருவாய்மொழி உதிர்க்க,
“அப்படியா? என் மாமியாரை கூப்பிட்டு கேட்கவா?…” என்றவன் அடுக்களை நோக்கி திரும்ப,
“அச்சோ அத்தான்…” என அவனின் கையை பற்றி தடுக்க மீண்டும் அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.
“ஹ்ம்ம், பிரசாதம் குடுத்தா எடுத்துக்கோங்க அத்தான்னு சொல்லமாட்டியா? வாய்ல என்ன கொழுக்கட்டையா?…” என்றதும் அதனை எடுத்தவள் அவனிடம் நீட்டி,
“வச்சி விட்டிருக்கலாம். நாட் பேட்…” என தானே எடுத்து ஒற்றை துளி போல இட்டுக்கொண்டான்.
“இதுக்கு வைக்காமலே இருந்திருக்கலாம்…” என முணுமுணுத்து எழுந்துகொண்டாள்.
“நான் இங்க இருக்கும் போது எங்கடி போற?…” என்று அவன் பொறுமை இழக்க,
“அதான் பிரசாதம் வச்சாச்சே. நான் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ண போறேன்…” என்றவள் அங்கிருந்து செல்ல தனியே அமர்ந்திருந்தான் திரவியம்.
போனவள் போன வேகத்தில் தட்டில் கொறிப்பதற்கும், குடிக்க பழச்சாறு சகிதம் வந்து நிற்க பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது.
“ஹ்ம்ம், நெக்ஸ்ட்?…” என்றான் கன்னத்தில் ஒருவிரலை கொண்டு தாங்கியபடி அவளை பார்த்து கண்ணடித்து.
“அம்மா குடுத்தாங்க, இதை எல்லாம் சாப்பிடுங்க….”
“நீ?…”
“எனக்கு வேண்டாம். கோவில்ல சர்க்கரை பொங்கல் சாப்பிட்டேன்…”
“ஓஹ்…” என்றவன்,
“எதுவும் வேண்டாம். எடுத்துட்டு போ…”
“ஏன் என்னை அம்மா பேசறதுக்கா? வேண்டாம்ன்னாலும் இங்கயே இருக்கட்டும்…” என சொல்லிவிட்டு தன்னுடைய அறை நோக்கி செல்ல பின்னோடே வந்தான் திரவியம்.
“இன்னும் கோபம் போகலையா தியா?…” என உள்ளே வந்தவன் கேட்கவும் அவன் முகம் பார்க்கவில்லை.
பட்டுப்புடவையை மாற்றுவதற்கு வந்தவள் வேறு உடையை எடுக்க அவளின் கையை பிடித்து தடுத்தான்.
“இன்னும் கொஞ்ச நேரம் இந்த சேரிலையே இரு…”
“ம்ஹூம், அம்மாவுக்கு போய் ஹெல்ப் பண்ணனும். புடவை பாழாகிடும்…”
“ஏன், அதான் உங்க வீட்டுல ரெண்டு மருமக இருக்காங்களே? அவங்க பண்ணட்டும். நீ என்னோட இரு…” என அவளை அமர வைக்க அவனின் கைகளில் இருந்து நழுவுவதிலேயே தான் குறியாக இருந்தாள்.
“தியா…” என அவளின் கன்னம் பற்றி அவன் நெருங்க கையை விலக்கிவிட்டவள் அவனுடன் தனியே இருந்தால் எங்கே மனதை மாற்றிவிடுவானோ என பயந்து எழுந்து வெளியே செல்ல முனைந்தாள்.