போனில் மட்டும் பேசுபவள் மீண்டும் முதலில் போலவே தொடங்கியிருக்க தன் மீதே அத்தனை ஆதங்கம் திரவியத்திற்கு.
எங்கே இதுவே தொடருமோ என வந்துவிட்டவன் மனது மனைவியின் அருகாமைக்கு ஏங்க அவள் அதற்கு வாய்ப்பளிக்காமல் விலகியதில் இன்னுமே மனதளவில் கோபம் கொண்டான்.
மெல்ல கதவு திறக்கும் சத்தம். ஆராத்தியா தான் கதவை ஒட்டி நின்றுகொண்டிருக்க நிமிர்ந்து பார்த்தவன் புருவங்கள் உயர்ந்தது அவள் உள்ளே வராததில்.
“அம்மா ட்ரெஸ் மாத்திட்டு வர சொன்னாங்க த்தான்…” என்றாள் பாவம் போல.
“சோ?…”
“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்….” என சொல்லவும் அதுவரை முகவாட்டத்துடன் அமர்ந்திருந்தவன் கட்டிலில் பின்னால் சரிந்து இரு கைகளையும் தலைக்கு முட்டுக்கொடுத்து படுத்துக்கொண்டான்.
கால்களை ஒன்றன் மேல் ஒன்றாக நீட்டியவன் பார்வை அவளிடமே நிலைத்திருக்க ஆராத்தியாவுக்கு அவனை எப்படி கிளப்புவது என தெரியவில்லை.
“தாராளமா மாத்திக்கோ. என்னால ரூம் விட்டு போக முடியாது. நான் டயர்ட்…” என சொல்ல கோபம் ஒருபுறம் பொங்கினாலும் அவனின் இந்த பிடிவாதம் அழுகையை தந்தது.
‘எத்தனை பேசினான், வாழ்கையை பாழாகிவிட்டதாக, பலியாக்கி விட்டதாக’ நினைக்கும் பொழுதே முணுக்கென்று நீர் நிறைய அதனை துடைத்தவள் இன்னும் அங்கேயே நின்றாள்.
“ஏன் நான் இருந்தா உனக்கென்ன கஷ்டம்? என்னமோ இதுவரைக்கும்…” என சொல்லியவன் மேலும் பேசும் முன் பதறி உள்ளே வந்துவிட்டவள் ஒரு தலையணையை தூக்கி அவன்மீது எறிந்துவிட்டாள் வேகமாய்.
“ஹேய் தியா…” என அட்டகாசமாய் சிரித்தபடி அதனை கேட்ச் பிடித்தவன்,
“முழுசா பேச முன்ன கோவப்பட்டா எப்படி பட்டர் பிஸ்கட்?…” என்றான் விஷமமாய்.
“நீங்க பேசின வரைக்கும் போதும். நீங்க எங்கயும் போக வேண்டாம். நான் பாத்ரூம்ல மாத்திப்பேன்…” என கண்ணீரை துடைத்துவிட்டு தன் உடையை எடுத்துக்கொண்டு குளியலறையை திறக்க எழுந்துவந்து அவளின் கை பிடித்து நிறுத்தியிருந்தான்.
“மாட்டேன். என்னால அங்க வர முடியாது…” முரண்டு பிடித்து அவள் நிற்க அது சிறுவயது ஆராத்தியாவை ஞாபகப்படுத்தியது.
‘தீராக்கிட்ட பேசு தியா’ என்று யார் சொன்னாலும் ஒன்று அழுகை, இல்லையேல் பின்னால் சென்று எங்காவது போய் ஒளிந்துகொள்வது என பிடிவாதம் செய்பவள் அடுத்த இரண்டுநாளைக்கு யாரிடமும் பேசாமலும் சாப்பிடாமலும் இருந்திருக்கிறாள்.
இப்போதும் அதே முரண்டு, முகத்தில் அச்சத்துடன் கூடிய கோபம், பிடிவாதம் என நின்றவளை பார்த்தவன்,
“அடம் பண்ணாத தியா. நீ வர, நாம கிளம்பறோம். புரியுதா?…” என்றதுமே ஆராத்தியா மூக்கு விடைக்க அவனை பார்த்தாள்.
“உன் சண்டை கோபம் எல்லாம் அங்க வந்து வச்சுக்கடி. இப்பவும் என்கிட்ட முரண்டு பண்ண பார்க்காத. அவ்வளோ தான்…” என சொல்லிவிட்டே அவன் செல்ல உடையை மாற்றிவிட்டு வெளியே செல்லவே யோசித்து அறையிலேயே அமர்ந்திருந்தாள்.
எப்படியும் தாயிடம் சொல்லியே தான் வந்திருந்தாள் ஆராத்தியா. இன்னும் ஒருவாரத்தில் அனுவின் ஆறாவது பிறந்தநாள் வர இருக்க தானும் அதுவரை அங்கே இருப்பதாக.
சீதாவும் சரி என்றும் தான் சொல்லிக்கொள்கிறேன் என்றும் நம்பிக்கை தந்திருக்க இவன் என்ன செய்வானோ என்றிருந்தது.
செல்லவும் மனதில்லை. மனதில்லை என்பதை விட அவன் பேசியவை எதையும் மறக்க முடியவில்லை.
எத்தனை கோபமிருந்தாலும் மனதிற்குள் வைத்து புழுங்கியவை தானே இப்படி வெளியே வரும்.
அவன் உடைத்துவிட்டிருந்ததை மீண்டும் ஒட்டவைக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்.
வெளியே பலமாய் சிரிப்பு சத்தம் கேட்க தயாளனும் வந்துவிட்டது புரிந்தது ஆராத்தியாவிற்கு.
அதற்கு பின்னாலும் செல்லாமல் இருக்க முடியாதே என்று முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தாள்.
அபிராமி, தயாளனிடம் பேசியவள் திரவியத்தை பார்க்க அவன் தென்னரசுவிடம் பேசிக்கொண்டிருந்தான் லாரி விபத்தை பற்றி இன்னும் விலாவரியாக.
நிம்மதி பெருமூச்சுடன் அவள் அடுக்களைக்குள் செல்லும் முன் சீதாவே வந்துவிட்டார்.
“குடுங்கம்மா நான் எடுத்து வைக்கறேன்…” என அவரின் கையிலிருந்த பாத்திரத்தை ஆராத்தியா வாங்க,
“நாங்க வச்சாச்சு. நீ அண்ணனை கூப்பிட்டு சாப்பிட வந்து உட்கார்…” என்றாள் பூமிகா.