மறுநாள் காலை திரவியம் எழுந்து கிளம்பும் வரை ஆராத்தியா கண் விழிக்கவில்லை.
கோபம் இருபுறம் இருந்தாலும் இத்தனை நாட்கள் வராததிற்கு என்ன சொல்வானோ என வாயை கப்பென்று மூடிக்கொண்டாள்.
குளித்து உடைமாற்றி கிளம்பி வந்தவன் அருகாமையை அவளின் நாசி உணர்ந்தது அவன் தெளித்திருந்த வாசனை திரவியத்தினால்.
அவன் நெருங்கி வருவதை உணர்ந்தவள் தன் புருவங்கள் கூட சுருங்கிவிடாமல் சீராக மூச்சுவிட முயன்று முகத்தை இயல்பாக உறங்குவதை போல வைத்துக்கொள்ள பார்த்தவனுக்கு இதழ்களுக்குள் புன்னகை.
அவளின் தலையில் லேசாய் குட்டுவதை போல கை வைக்க தன் கைகளுக்குள் விரல்களை பதுக்கிக்கொண்டவன் அசைந்தாளில்லை.
‘தியா ரொம்ப பன்றடா’ என நினைத்துக்கொண்டவன் சாப்பிட வெளியே வந்துவிட்டான்.
அவன் கிளம்பவும் தான் நிம்மதியானது. கோபத்தை கூட இழுத்து பிடிக்க முடியாமல் பதட்டம், பதட்டம் மட்டுமே.
அன்றைய பேச்சுக்களை இன்று கேட்டால் என்ன சொல்ல என விழித்தே அவள் படுத்திருக்க வெளியே கதவு திறந்து சாற்றப்படும் சத்தம்.
“தியாம்மா…” என சமையலம்மா சரளாவின் குரல் கேட்க,
“சொல்லுங்க ஆன்ட்டி…” என எழுந்தமர்ந்தாள்.
“இன்னும் நீங்க எழுந்து வரலை. அதான் வந்தேன்…”
“முழிச்சிட்டேன் ஆன்ட்டி. எனக்கொரு டீ வேணுமே?…”
“இதோ இப்ப கொண்டுவரேன்…”
“ஆன்ட்டி கூடவே பிஸ்கட்…” என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றாள்.
முதல்நாள் வந்து உடை கூட மாற்றாமல் உணவுண்ணாமல் என்று நேரம் சென்றிருக்க இதோ எழுந்ததும் வயிறு ஒருபக்கம் பசித்தது.
சரளா டீயுடன் வரும் முன் வேகமாக ஒரு குளியலை போட்டுவிட்டு வந்துவிட்டாள்.
பிளாஸ்க்கில் டீயும் கூடவே பிஸ்கட் இருக்க அதனை கப்பில் ஊற்றியவள் திவானில் அமர்ந்துகொண்டு மொபைலை எடுத்து பார்த்தாள்.
தனது அண்ணன்கள் இருவருமே அழைத்திருந்தனர். தாய் இரு முறையும், அபிராமியும் அழைத்திருக்க பார்த்திருந்துவிட்டு ஆதவனுக்கு கூப்பிட்டாள்.
“என்னடா தியா? என்ன பன்ற?…”
“இப்பதான் எழுந்தேன் ண்ணா. நீங்க கால் பண்ணியிருந்தீங்க…” என்றவள் ஸ்பீக்கரில் போட்டு எதிரே வைத்துவிட்டு ஒரு கையில் டீக்கப்பும் இன்னொரு கையில் பிஸ்கட்டுடன் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.
“ஆமாம்மா, அங்க எல்லாம் ஓகே தானே? உன் புருஷன் எங்க?…”
“ஹ்ம்ம், சரிங்கண்ணா…” என்றவள் மேலும் பத்து நிமிடம் அனைவருக்குமே அழைத்து பேசி முடிக்க டீயும் தீர்ந்திருந்தது.
எழுந்து வெளியே சென்று சாப்பிடவும் தோன்றவில்லை. சரளாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இது தங்களுக்குள் நடந்த சண்டை என்று.
ஒருவிதமாய் சங்கடத்துடன் உணர்ந்தவள் அங்கேயே திவானில் சாய்ந்தமர்ந்துகொண்டாள்.
கதவு சாற்றப்படும் சத்தத்தில் திரும்பி பார்க்க திரவியம் தான் நின்றிருந்தான் சட்டையின் பட்டன்களை கழற்றியபடி வந்தவன் அவளுக்கருகே அமர அடுத்த நொடி எழுந்துகொண்டாள் ஆராத்தியா.
“உட்கார், எங்க போகனுமாம்?…” என இழுத்து அமர வைத்தவன்,
“நான் கிளம்பற வரைக்கும் எழுந்துக்காம இருந்தா எல்லாம் சரியாகிருச்சா தியா?…” என கேட்க பதில் பேசவில்லை.
“ம்ஹூம், நீ சரிப்படமாட்ட…” என அவளை தனக்கருகே நெருக்கி அணைத்தபடி அமர வைத்தவன்,
“என்னை அவ்வளோ பேசின தானே? இப்ப என் முன்னாடி பேசு…” என கேட்க அவனின் முகத்தை பார்த்தாள்.
“என்ன?…” திரவியம் புருவம் உயர்த்த,
“இன்னொருதடவை நீங்க சண்டை போட்டு கேட்க என்னால முடியாது த்தான். ப்ளீஸ், அதை பேச வேண்டாம்…” என மறுத்தாள்.
“இப்ப நாம சண்டை எங்க போடறோம்? பேசிடலாம் தியா. நிறைய விஷயங்கள் பேசாம விடறதை விட பேசி கிளியர் பண்ணிக்கறது பெட்டர்…” என்றவன்,
“எஸ் அப்கோர்ஸ் என்னோட பேச்சு, என் வார்த்தை எல்லாமே என்னை மீறி வந்தது தியா. அது என்னவோ நீயும் என்கிட்ட வரனும்னு ஒரு ஆசை. நீ அப்படியே இருக்க இருக்க என்னை சுத்தல்ல விடற மாதிரி ஒரு தோற்றத்தை குடுத்திருச்சு…”
“இல்லைத்தான்…” ஆராத்தியா பேச வர,
“ம்ஹூம், உன் மேல தப்பு சொல்லமாட்டேன். இதோ இப்பவும் பார்த்தேன். என்னை பார்த்ததுமே உன்னோட பாடிலாங்க்வேஜ் என்ன பண்ணுச்சுன்னு, உன்னோட கண்ணு, முகம் எல்லாம் எல்லாமே ஒரு நிமிஷம் ஸ்டன்னாகி அதுக்கப்பறம் நார்மலாச்சு…”
“இன்டிமேட் லைப் மட்டும் தான் நமக்குள்ள உள்ள பொருத்தம்ன்னு சொல்லிட்ட மாதிரி காமிச்சிடுச்சு உங்க பேச்சு. கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம். ஒண்ணுமே இல்லைன்னு சொல்லவும் ஓய்ஞ்சு போய்ட்டேன்…” என்னும் பொழுதே மெல்லிய விசும்பல்.
அவளை ஒரு கையால் அணைத்து பிடித்திருக்க மற்ற கையின் விரல்களை தானாக கோர்த்திருந்தாள் ஆராத்தியா.
அதனை பார்த்தவனுக்கு தன்னை தன் கோபத்தின் மீதே அத்தனை ஆற்றாமை பொங்கியது.
“உனக்கு இப்படி ஒரு எண்ணம் வர என்னோட பேச்சு காரணம்ன்னா ஸாரி. மன்னிப்பு மட்டுமே எல்லாத்தையும் சரி பண்ணாது. ஆனா கொஞ்சம் அமைதிப்படுத்தும்….” என்றவன்,
“சில விஷயங்கள்ல சின்ன சின்ன புரிதல் இருக்கு நமக்குள்ள. இது போதுமே, மூணு மாசம் என்ன? முன்னூறு வருஷம்..”
“மூச்சு முட்டும் த்தான்…” என சொல்லிவிட்டாள் சற்று கிண்டலாக.
“ஹ்ம்ம், முட்டலாம், தப்பில்லை…” என்று தன் மடிக்கு அவளை இடம் மாற்றியவன் ஆராத்தியாவின் கன்னத்தை பற்றினான்.
“வெய்ட் லாஸ் பண்ண ட்ரை பன்றியா என்ன?…” என அவனின் கைகள் அவளை அளக்க,
“அதெல்லாமில்லை. விடுங்க…” என விலக்கினாள்.
“ஓகே, இரு, ஒன்னும் பண்ணலை…” என்றவன் சிறிது நேர அமைதிக்கு பின்,
“என்னவோ கேட்டியே, கதைவிட்டேன்னு. என்ன கதை? எங்க சொல்லேன்…” என புன்னகைக்க என்ன சொன்னோம் என்றே மறந்திருந்தது ஆராத்தியாவிற்கு.
“ஞாபகமில்லை…”
“உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டதும் உன் இஷ்டம்ன்னு சொல்லி கதை விட்டேன் நான்னு நீ தானே சொன்ன?…”
“ஹ்ம்ம் ஆமா…” என வேகமாய் சொல்லியவள் நாக்கை கடிக்க,
“என்ன கதை? எங்க நீ இப்ப சொல்லு கேட்போம்…”
“ம்ஹூம்…” என மறுக்க மறுக்க அவளிடம் பேச்சை வளர்க்க நினைத்தான்.
எல்லாம் சட்டென மாறிவிடவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையும், அதன் கனமும் கொஞ்சமேனும் குறைந்திருந்தது.
பேச்சின் ரணத்தை மனது ஆற்ற முயன்றது. இருவருக்குமே வலியை தரக்கூடிய நாட்கள் தான் அவை.
ஆனாலும் அதையே எண்ணிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை நழுவவிட தயாராக இல்லை.
“ஒரு விஷயம் ஒத்துகிட்டே ஆகனும் தியா. சின்ன சின்ன பிரிவு தான் நம்மோட ஆழ்மனசுல இருக்கறதை வெளிக்கொண்டுவரும். நீ இங்க என்னோட இல்லாத நாள் எப்படி இருந்ததுன்னு உனக்கு வார்த்தையால புரிய வைக்க முடியாது…”