அவன் விரும்பி செய்துகொண்ட திருமணமாக இருந்துமே ஒரு நொடி கோபத்தில் எப்படி தூக்கி எரிந்து பேசினான்.
மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலை வருமாயின் என்னவாகுமோ என எண்ணங்கள் அவளறியாமல் அவளை ஆட்டிப்படைக்க ஆரம்பிக்க விளைவு இன்னுமே அதிகமாக திரவியத்தை பார்வையிட்டாள்.
அவளின் விழிகள் அவனை தொடர உண்மைக்கும் மகிழ்ந்திருக்கவேண்டும் மகிழ்திரவியம்.
ஆனால் அவளின் ஆராய்ச்சி பார்வையில் உள்ளுக்குள் சுணங்கத்தான் செய்தான் அவன்.
ஒரே அறை, ஒரே படுக்கை, கையை பிடித்துக்கொண்டு உறக்கம். ஆனாலும் இடைவெளிகள் உயிர்த்திருந்தது.
மனதளவில் அவளை நெருங்கியவன் தற்போது அவள் இன்னும் தெளிந்து வரட்டும் என விலகி இருந்தான்.
புதிதாய் முளைத்திருக்கும் இந்த பார்வைக்கான அர்த்தம் என்னவென பேசினால் இன்னும் துன்பப்படுவாளோ என்றே அவன் அவற்றை தவிர்க்க அதனை எல்லாம் நினைக்கவும் தோன்றவில்லை ஆராத்தியாவிற்கு.
மறுநாள் அனுவின் பிறந்தநாள். கிளம்புவதற்கு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தான் ஸ்டோருக்கே வந்திருந்தாள் ஆராத்தியா.
மாலை கிளம்புவதாக இருக்க வெளியே சென்றிருந்த திரவியம் இன்னும் ஸ்டோருக்கு வந்து சேர்ந்திருக்கவில்லை.
சென்று இவ்வளவு நேரமாகிற்றே என கையில் மொபைலை வைத்து யோசித்துக்கொண்டிருக்க,
“தியா, கிளம்புவோமா?…” என வந்திருந்தான் திரவியம்.
“ஹ்ம்ம், போலாம் த்தான்…” என்று தன்னுடைய பேக்கை எடுத்துக்கொண்டாள்.
அங்கிருந்தே ஊட்டிக்கு கிளம்பிவிட சில நிமிடங்கள் தான் மௌனம் அங்கே சூழ்ந்திருந்தது.
எந்த வருடத்திலும் இல்லாதளவிற்கு குளிர் அந்த வருடம் அதிகமாக இருக்க அங்கேயே இருந்தவர்களையும் வாட்டியது.
“நிஜமாவே…” என்றவள் அவனின் முறைப்பில் சட்டென பின்னால் இருந்து ஜெர்க்கினை எடுத்து போட்டுக்கொண்டாள்.
“ஒன்னொண்ணுக்கும் நான் உனக்கு சொல்லனும். உனக்கா தெரியாதா?…”
“அதான் போட்டுட்டேன்ல…” என முனுமுனுக்க மூக்கின் நுனி மிளகாயாய் பனியில் சிவந்திருந்தது.
சட்டென இழுத்து அணைத்து கடித்துவிட்டால் என்னவேணும் வேகம் பிறக்க ஜீப் அவன் கைகளில் பறந்தது.
இத்தனை வேகத்தில் அவன் இப்படி மலையில் சென்றதே இல்லை என அறிந்திருந்த ஆராத்தியா மிரண்டு பார்த்தாள்.
“அத்தான் என்னாச்சு? எதிர்க்க ஃபுல்லா மிஸ்ட். இதுல ஸ்பீடா வேற போறீங்க?…” என பயந்து அவனின் கையை பற்றி நெருங்கி அமர,
“தியா…” என்றவன் குரலே வித்தியாசமாய்.
அவனின் தோளில் தலையை பதித்திருந்தவள் நிமிர்ந்து பார்க்க தன் கன்னத்தை அவளின் உச்சந்தலையில் லேசாய் தேய்த்தான்.
அவள் நெருங்கி அமரவும் உண்டான அமைதியில் மெல்ல அவனின் கைகளில் ஜீப் சீரான வேகத்தில் சென்றது.
“ஷேவ் பண்ணலை த்தான் நீங்க…” மெல்லிய ரீங்காரமாய் அவள் குரல்.
“மார்னிங் பண்ணிடலாம்…” என்றவன்,
“எங்க போகட்டும் தியா?…”
“எங்கன்னா? புரியலை த்தான். ஊருக்கு தான் போறோம்…” என சொல்ல தோளை குலுக்கிக்கொண்டான்.
நேராக தன் வீட்டிற்கே ஜீப்பை கொண்டு நிறுத்த இறங்கிக்கொண்டவள் உள்ளே சென்றாள்.
அபிராமியும், தயாளனும் அப்போது தான் உண்டு முடித்து ஹாலில் தான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
இருவரும் வரவும் முகம் கொள்ளா புன்னகையுடன் வரவேற்க நேரம் நல்லவிதமாகவே கழிந்தது.
வந்ததும் இரவு உணவு நேரம் கடந்து என்பதால் போன் செய்து வந்துவிட்டதாய் சொல்ல தென்னரசு குடும்பத்தினர் இங்கேயே வந்துவிட்டனர்.
அவ்வளவு நேரம் இருந்துவிட்டு நேரம் கழித்தே செல்ல சீதாவும் தென்னரசும் ஆதவன், ரகுவுடன் பேசிக்கொண்டிருந்தான் திரவியம்.
பூமியும், இந்துவும் மறுநாள் காலை அனுவிற்காக கோவிலுக்கு செல்ல என்ன புடவை என்று பேச ஆராத்தியாவும் தான் எடுத்து வந்ததை காண்பித்தாள்.
“வாவ் தியா. பேஸ்டல் க்ரீன் கலர்….” என்று பூமிகாவின் கண்கள் ஜொலித்தது.
“ஹ்ம்ம், அழகா இருக்கு தியா…” என இந்துவும் சொல்ல,
“அத்தான் தான் எடுத்து குடுத்தாங்க. அவங்க செலெக்ஷன்…” என்றாள் ஆராத்தியாவும்.
“குட் செலெக்ஷன்…” என இருவருமே திரவியத்தையும் ஒரு பார்வை பார்த்தார்கள்.
“சும்மாவே உனக்கு அப்படி எடுப்பாங்க. இப்ப கேட்கவா வேணும்? ஆமா அங்க போய் உனக்கு புடிச்சதுன்னு நீ கேட்கலையா?…” என்றும் கிண்டலடிக்க,
“கேட்டேன், நான் ஒன்னு எடுத்தேன். அத்தான் அவங்களுக்கு புடிச்சது எடுத்தாங்க…” என்றவளுக்கு அன்றைய நாளின் நினைவு தான்.
புடவை கடைக்கு அழைத்து சென்றிருந்தவன் ஆராத்தியாவை பார்க்க சொல்லிவிட்டு தானும் பார்க்க இருவருமே வேறு வேறை தேர்வு செய்திருந்தனர்.
“ஒரு கன்ப்யூஷனும் வேண்டாம். ரெண்டையும் எடுத்துப்போம். அது உன்னோட ஆசைக்கு. இது என்னோட ஆசைக்கு…” என எடுத்திருக்க இப்போது இந்து கேலி பேசவும் அத்தனை வெட்கம் ஆராத்தியாவிற்கு.
“இந்த பொண்ணு தான் இத்தனை வருஷம் பேசாம, பார்க்காம இருந்தாங்களாம். இதுக்கே என் அண்ணன் இவ்வளோ பன்றாங்கன்னா?…” என கேட்டு கேட்டு பூமியோடு சேர்ந்து இந்து சிரிக்க,
“அண்ணி ரொம்ப ஓட்டாதீங்க…” என்றாள் தியாவும்.
மடியில் புடவையும் அதன் ப்ளவுஸ் சகிதம் அமர்ந்திருக்க தயாளனுக்கு மாத்திரை கொடுக்க சென்ற அபிராமியும் வந்துவிட்டார்.
இந்துவும், பூமிகாவும் பிள்ளைகளுடன் சொல்லிக்கொண்டு கிளம்ப காலை வந்து அழைப்பதாக ஆதவனும் ரகுவும் கூட கிளம்பிவிட்டனர்.
திரவியமும் அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர அதன் பின்னரே அபிராமி ஆராத்தியாவின் புடவையை கவனித்தார்.