“இழுத்து புடிச்சு எல்லாரும் கட்டி வச்சுட்டாங்கன்னு தான் கொஞ்சம் கொஞ்சமா நீ சைலன்ட் ஆகிட்ட. இல்லைன்னா இப்படியா இருப்ப தியா?…” என கேட்க பதில் சொல்லவேண்டியவள் இறுக்கமானாள்.
“பூமி என்ன பேசற நீ? வாயை மூடு. இப்ப இதை பேசறதுக்கான நேரமா?…” இந்து அதட்ட,
“நிஜம் தானே இந்துக்கா. அந்த பேச்சில இருந்து தானே எல்லாருமே இவகிட்ட இந்த மாற்றம். பேச்சை குறைச்சா சிரிப்பை குறைச்சா. இப்ப இப்படி?…” என்று பூமி இன்னும் சத்தமாய் சொல்ல திகைத்து போய் அமர்ந்திருந்தாள் ஆராத்தியா.
அவளால் யாருக்கும் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் எதையும் சொல்லவும் தோன்றவில்லை.
திரவியம் வரட்டும் என்று தான் அவனுக்காக காத்திருக்க கூறியது அவளின் மனது.
எங்கே பேசினால் நிச்சயம் உளறி விடுவோம் என ஆராத்தியா அமைதியாக அமர்ந்திருக்க ரகுவும், தென்னரசும் மட்டுமே வந்தனர்.
ஆதவனும், தயாளனும் வர நேரமாகும் என்றவர்களிடம் திரவியத்தை கேட்க நினைக்க,
“தீரா எங்க? ஊருக்கு கிளம்பனும்ன்னு சொல்லிட்டு இன்னும் வரலை?…” என்றார் அபிராமி.
“இன்னும் டைமிருக்கே ரகு. அதுக்குள்ளே ஏன்?…” இந்து கேட்க,
“போனதடவை கிளம்பறப்போ தியா பார்க்க முடியலைன்னு ரொம்ப பீல் பண்ணினா இல்லையா? அதான் அனுவை கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு போனாங்க….” என்று சிரிக்க அதன் பின்னரே மற்றவர்களின் முகத்தில் இயல்பான புன்னகை.
இன்னும் பூமிகா ஆராத்தியாவை திரும்பி பார்க்கவில்லை. ஆனால் ஆராத்தியா விழிகள் எல்லாம் பூமிகா மடியில் கை, கால்களை ஆட்டியபடி ‘ங்கா’ என பாட்டு பாடிக்கொண்டிருந்த குழந்தை மீதே இருந்தது.
“இதை கூட கேட்கமாட்டியா நீ? பார்த்துட்டு மட்டும் இருக்க? ஏதோ கோவத்துல பேசிட்டேன்….” என்ற பூமிகா மகனை தூக்கி அவள் மடியில் கிடைத்த சட்டென்ற சிறு நடுக்கம் ஆராத்தியா மனதில் சுகமாய்.
எப்போதும் அண்ணன் மகன் என்னும் பாசத்தில் அவள் கொஞ்சியிருக்க இன்றோ ஆசை அளப்பறியாமல் தான் பெருகியது.
பூமிகாவின் பேச்சுக்களோ, அங்கிருந்தவர்களின் பார்வையோ என்னவென பேசிக்கொண்டிருந்ததோ எதுவும் காதில் விழவில்லை ஆராத்தியாவிற்கு.
குழந்தையை ரசித்து ரசித்து அவள் கை, கால்களை தடவியபடி எதுவும் பேசாமல் இதழ்களில் உறைந்துவிட்ட புன்னகையுடன் பிள்ளையை பார்த்தாள்.
குழந்தையின் ஆசையில் சட்டென்று நெஞ்சோடு ஒரு உயிர் சுரப்பை உணர்ந்தவள் பிள்ளையை அள்ளி அணைத்துக்கொண்டு முத்தமிட,
“அண்ணி இவன் எப்போ பேசுவான்?…” என்றாள் பூமிகாவிடம்.
“எப்போன்னா? ஏன் என்கிட்டே பேசறது தானே? அப்ப இவன்கிட்ட தான் பேச்சா உனக்கு?…” என மறுபடியும் பூமிகா வரிந்துகட்ட சத்தமாய் சிரித்துவிட்டாள் ஆராத்தியா.
“உனக்கு அவ்வளோ ஏத்தமா போச்சு. என் பேச்சுக்கு இவ்வளோ சிரிப்பா?…” என லேசாய் அடிப்பதை போல பாவனை செய்ய குழந்தை பூமிகாவை விளையாட்டாய் உதைத்தது.
“பெத்தவ நான்டா. இப்பவே அத்தைக்கு சப்போர்ட்டா?…” என பேச்சுக்கள் இனிமையாக செல்ல அனைவரின் மனநிலையும் மாறி போனது அந்த நிமிஷம்.
குழந்தையை வைத்துக்கொண்டு கொண்டாட்டமாக பேசிக்கொண்டிருக்க பொன் பேசிய ரகு வேகமாய் எழுந்து சென்று டிவியை போட்டவன் தனது மொபைலில் திரவியத்திற்கு அழைப்பு விடுத்தான்.
தொலைகாட்சியில், ‘முக்கிய செய்திகள், உதகையின் புகழ்பெற்ற பள்ளியான *****பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபரிடமிருந்து தகவல். பள்ளியை காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்திருக்க உதகை மக்களிடையே பதற்றம்’ என்னும் செய்தி வர அந்த பள்ளி அனு படிக்கும் பள்ளி.
“ஐயோ அனு…” என இந்து பதறி எழுந்துகொள்ள அனைவரிடமும் பதற்றம் தொற்றியது.
“ஸ்கூல்ல அனு கிளாஸ் ஸார்கிட்ட பேசிட்டிருந்ததா கொஞ்சம் முன்னாடி தான் அத்தான் சொன்னாங்கப்பா. அத்தானோட ப்ரெண்டாம். இப்ப என்னடான்னா இப்படி ஒரு நியூஸ்?…” ரகு பதறினான்.
“பதட்டப்படாதம்மா, ஒருவேளை இது மிரட்டல் காலா இருக்கும்…” என்றார் தென்னார்சு.
வீடு மொத்தமும் பதட்டத்தில் ஆழ ரகுவும், தென்னரசுவும் பள்ளிக்கு கிளம்பிவிட்டனர் இந்துவுடன்.
ஆதவனுக்கும், தயாளனுக்கும் சொல்லிவிட அவர்களும் அங்கே வர வீட்டில் அனைவருக்குமே பதட்டமும், பயமும் பிடித்துக்கொண்டது.
பள்ளிக்கு சென்ற யாராலும் உள்ளே செல்ல முடியவில்லை. பள்ளியை சுற்றிலும் காவலர்கள் இருக்க பிள்ளையை பெற்றவர்கள் பதற்றத்துடன் வெளியே காத்திருந்தார்கள்.
ஒருவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த பள்ளியோடு மேலும் மூன்று பள்ளிகளுக்கு மிரட்டல் செய்தி வந்திருக்க பிள்ளைகளையும், பள்ளியையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளிக்கு அருகே வெளியே நின்றிருந்த ரகு முதலில் வீட்டிற்கு அழைத்து பேசினான்.
“இங்க உள்ள அலோவ் பண்ணலை த்தை. சிலர் ஃபேக் காலா கூட இருக்கும்ன்னு சொல்றாங்க. பதட்டப்படாம இருங்க…” என்றான்.
மற்ற இரு பள்ளிகளிலும் சோதனையிட்டுவிட்டு அங்கில்லை என்றதும் இங்கே அனு பயிலும் பள்ளியில் சோதனை இன்னும் தீவிரமடைந்தது.
அதுவே மக்களிடையே பதற்றத்தை கூட்ட மொத்த உதகை மக்களும், மீடியாவும் அங்கே தான்.
அவற்றை சரி செய்யவே காவலர்களுக்கு போதும் போதுமென்றாக கூடுதலாக கூச்சல்களும், கேள்விகளும் இன்னும் பெரிதாகியது.
பதற்றமான சூழ்நிலை அதிகரிக்க நிலைமை கட்டுக்குள் வருவதற்குள் பொழுது மாலையாக இருந்தது.
உள்ளிருப்பவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வெளியில் இருப்பவர்களையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
பிள்ளைகளை எல்லாம் சோதனையிட்டு முடித்த பின்னர் பாதுகாப்பாக அவர்களை வெளியே அனுப்பிக்கொண்டிருக்க குடும்பம் மொத்தமும் இங்கே திரவியம், அனுவிற்காக காத்திருந்தனர் கண்ணீருடன்.
“அனுக்குட்டி…” என தூரத்தில் திரவியம் கையிலிருந்த குழந்தையை பார்த்ததுமே தாவி அணைத்துக்கொண்டாள் இந்து.
“தீரா…” ஆதவனும் மற்றவர்களும் சூழ்ந்துகொள்ள,
“ஓகே ஓகே. காம்டவுன். முதல்ல கிளம்புவோம். மத்தவங்களுக்கு இடைஞ்சலாகிடும்…” என்றவன் அவர்களுடன் கிளம்பினான்.
வீடு வரும் வரை அதன் பதற்றம் தணியவில்லை. அனைவருக்குள்ளும் வெளிப்படையான நடுக்கம்.
வீடு வந்து சேர பள்ளியில் வைத்திருந்ததாக சொல்லியிருந்த தகவல் புரளி என காவல்துறை அதிகாரியால் மக்களுக்கு செய்தி வாயிலாக தெரியப்படுத்தப்பட்டது.
“ஃபால்ஸ் காலுக்கு எவ்வளோ பதட்டம்? எப்படியெல்லாம் பதட்டப்பட வைக்கிறாங்க?…” என எரிச்சலானான் ஆதவன்.
“இல்லை ஆதி, பாம் இருந்தது நிஜம். ஸ்குவாட் அதை டிஸ்போஸ் பண்ண எடுக்கவும் தான் மத்தவங்களை வெளியேறவே அலோவ் பண்ணினாங்க…” என்று திரவியம் சொல்ல,
“அப்ப இந்த நியூஸ்…”
“ஸ்கூல் நேம் ஸ்பாயிலாக கூடாது. அதோட பாம் இருந்துச்சுன்னா திரும்ப பிள்ளைங்களை அனுப்ப பேரன்ட்ஸ் யோசிப்பாங்க. போதாததுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கும். பொலிட்டிக்கல் லெவல்ல அஃபேக்ட் பண்ணும். அதான்…”
“கடவுளே?…” என தன் நெஞ்சோடு மகளை அணைத்துக்கொண்டாள் இந்து.
நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஒருவேளை அது வெறும் மிரட்டல் அழைப்பு என்று மட்டுமே இருந்திருக்க கூடாதோ என பயத்துடன் நினைத்தவள் இன்னும் பிள்ளையை இறுக்கிக்கொள்ள,
“இந்து அனு பயப்படறா பார்…” என்று தன்னிடம் வாங்கிக்கொண்டான் ஆதவன்.
அனைவரும் வீடு வந்து சேர ஆராத்தியாவின் விழிகள் திரவியத்தை தான் தேடியது.
இறுதியாகவே அவன் வந்து நிற்க அனுவை தூக்கி தடவி அணைத்து கொஞ்சியவள் பார்வை அவனிடம் நிலைத்தது.
அவ்வளவு நேரம் அழுது அழுது சிவந்து போய் முகமே வீங்கிவிட்டிருந்தது அவளுக்கு.
கூடுதலாக அக்கம்பக்கம், சொந்தத்திலிருந்து அழைப்பு என்று நேரம் கடக்க இரவாகிவிடும் போலிருந்தது.
இன்னும் ஹாலில் தான் அவனிருக்க தனியே எழுந்து வரவில்லை. என்னவோ சொல்ல நினைக்கிறாள் என்று மட்டுமே புரிய என்னவென்றான் தலையசைத்து.
பரிதவிப்புடன் அவனை பார்த்தவள் தனியே பேச அழைக்கும் முன் அபிராமியே ஆரம்பித்துவிட்டார்.
“நீ இன்னைக்கு கிளம்ப வேண்டாம் தீரா. வேலை இருக்குதுன்னா நாளைக்கு கூட போ…” என்று சொல்ல திரவியம் பதில் சொல்லும் முன் ஆராத்தியாவின் அதிர்ந்த முகத்தில் அமைதியானவன்,
“ம்மா, யாரும் இன்னும் சாப்பிடலை. முதல்ல சாப்பிடலாம்…” என அழைத்து செல்ல அனைவருமே அப்போது தான் பசியை உணர்ந்தனர்.
மதியம் சமைத்ததை அப்போதுதான் உண்ண ஆராத்தியாவின் பார்வை அவனிடம் மட்டுமே.
அதிலும் அத்தனைபேரின் முன்னிலையிலும் இத்தனை வெளிப்படையாக அவள் பார்த்து வைக்க உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.
“ஆமா அண்ணி, நீங்க சொல்றது சரி. எனக்கும் அப்படித்தான் படுது. தியாவும் இங்க இருக்கட்டும். என்னவோ படபடன்னே வருது. இப்ப நினைச்சாலும் எம்மா எவ்வளோ நடுக்கம்?…” என சீதா சொல்ல பதட்டமாய் தான் பார்த்தாள் ஆராத்தியா.
“நீ என்ன சொல்ற தீரா? வேலை இருக்காப்பா?…” தயாளன் கேட்க,
அனைவருக்குமே அவரின் பேச்சில் சம்மதமே என இருக்க திரவியம் எழுந்து ஆராத்தியாவிற்கு கண்ணை காட்டிவிட்டு அவளறைக்கு சென்றான்.
பின்னோடே உண்டவரை போதும் என எண்ணியவள் வேகமாய் அவனின் பின்னே வர உள்ளே வந்ததுமே தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தவனை தானுமே அணைத்துக்கொள்ள நம்பமுடியாதவன் உணர்வுகள் கொதித்தெழுந்தது.