இன்னுமே தான் கேட்டது சரியா என்னும் அதிர்ச்சி தான் அப்பட்டமாய் திரவியம் முகத்தில்.
“ஹேய் தியா என்ன பயந்துட்டியா? அதெல்லாம் ஒண்ணுமில்லை…” என சொல்ல,
“ம்ஹூம் ஊருக்கு போவோம். கூட்டிட்டு போங்க…” இப்போது பிடிவாதமாய் அவளின் குரல்.
“என்னாச்சு உனக்கு? இப்ப ஏன் ஊருக்கு? அதுவும் டைம் என்னன்னு பாரு?…”
“கூட்டிட்டு போவீங்களா மாட்டீங்களா?…” பதட்டம், பயம் எல்லாம் பின்னுக்கு சென்று அதட்டலும், அதிகாரமும் அவளிடத்தில்.
“ஏன் என்ன?…”
“ம்ஹூம், போகனும். அவ்வளோ தான். போகனும் த்தான். கூட்டிட்டு போங்க…” என்றவள் மீண்டும் அணைத்துக்கொள்ள அவள் வாயிலிருந்து வேறு எதுவும் வரவில்லை.
அழைத்துசெல்லும்படி மட்டுமே ஜெபம் போல சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு சந்தோஷமாக இருந்தாலும் தனக்கொன்று என்றதும் தான் அவளாக நெருங்குகிறாள் என்று தோன்றியது.
ஆராத்தியாவின் மனதில் உறுதியாக ஊருக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.
சாதாரணமாக இருந்திருந்தால் திரவியத்திடம் சொல்லிய பின் வீட்டில் சொல்லி அதன் பின் கிளம்பியிருந்திருப்பாள்.
இப்போதோ விஷயம் தெரிந்தால் இதையும் காரணம் சொல்லி தன்னை அனுப்பமாட்டார்கள் என்ற முடிவிற்கே வந்துவிட பிடிவாதம் கூடியது.
இங்கேயே சொல்லிவிடலாம் என்றால் அவனின் அருகாமையை தான் உள்மனது வெகுவாய் நாடியது.
நிச்சயம் தன்னை விட்டுவிட்டு தான் செல்வான். அதிலும் இப்போதிருக்கும் சூழ்நிலையில்.
அதனை கொண்டு திரவியத்திடமும் சொல்லாமல் அவனை அழைத்துக்கொண்டு செல்ல சொல்ல,
“ஓகே, போகலாம். ஆனா வீட்டுல…”
“நீங்க சொல்லி கூட்டிட்டு போங்க…” என அவனின் முகம் பார்த்து அத்தனை கெஞ்சலாக சொல்ல மறுக்கவும் மனதில்லை.
“ஓகே பேசலாம் வா…” என வெளியே அழைத்து வர துப்பட்டாவினால் முகத்தை துடைத்துக்கொண்டு வந்தாள்.
“நீ மார்னிங் கூட கிளம்பேன் தீரா. இப்ப வேண்டாம்ன்னு அப்பா பீல் பன்றாங்க….” அபிராமி தான் மீண்டும் பேச திரவியம் யோசித்து நிற்க அவன் பேசுவானோ மாட்டானோ என நினைத்தவள்,
“இல்லை இல்லை நாங்க கிளம்பறோம் த்தை…” என்றாள் வேகமாய் ஆராத்தியா.
“என்ன நீயும் கிளம்பறியா?…” சீதா கேட்க,
“அதானே? எங்கயும் போக வேண்டாம் தியா. இங்க சூழ்நிலை சரியில்லை. அங்க உன்னை அனுப்பிட்டு எங்களுக்கு இங்க நிம்மதியா இருக்காது…” என அபிராமி சொல்ல இந்துவும், பூமிகாவும் ஆராத்தியாவை என்னவாகிற்று இவளுக்கு என்று பார்த்தனர்.
“அத்தான் சொல்லுங்க. போறோம் தானே?…” என அடுத்த திகைப்பை அவர்களுக்கு தர திரவியத்திற்கு சிரிப்பாக தான் இருந்தது.
“இன்னும் சின்ன குழந்தையாடா நீ?…” என திரவியம் கிண்டலாக கேட்க,
“போறோம் தானே?…” என்றவள் கண்கள் மீண்டும் கலங்கியது.
“தியாம்மா, அதான் இத்தனை பேர் சொல்றோம்ல. திரும்ப என்ன? அதெல்லாம் போக வேண்டாம். நீ இங்க இரு…” என்றார் சீதா.
“அதானே?…” என மற்றவர்களும் சொல்ல ஆதவனும், ரகுவும் தங்கையை பாவமாக பார்த்தனர்.
“எல்லா முடிவும் நீங்களே எடுக்கனும். சின்ன பிள்ளை, புரியாது. நல்லதுக்கு சொல்றோம்ன்னு எத்தனை சொல்றீங்க. அப்ப நாங்க எப்பத்தான் முடிவு பன்றது? அது சரியா தப்பான்னு எப்படி புரிஞ்சுக்கறது? எதையுமே செய்யாம செய்ய விடாம நீங்களே பண்ணினா?…”
“எல்லாத்துக்கும் மேல கல்யாணம். அதுவும் உங்க விருப்பம்…” என்றவள் அனைவரையும் தீர்க்கமாக பார்த்தாள்.
“தியா…” அத்தனைபேரும் திரவியத்தை கருத்தில் கொண்டு அவளை பேசவிடாமல் தடுக்க பார்த்து அழைக்க அவனோ கூலாக அவள் பேசுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான்.
“உன் விருப்பம் கேட்டு தானே செஞ்சோம்ன்னு மட்டும் சொல்லாதீங்க. என் முடிவு என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சே தான் என்கிட்டே கேட்டா மறுக்கமாட்டான்னு தான் கேட்டது கூட. அதுவுமே உங்களோட முடிவு தான்…”
“எல்லாருக்குமே தெரியும் தானே எனக்கு இதுல விருப்பம் இருக்காதுன்னு. தெரிஞ்சும் நீங்க எல்லாரும் அதை செய்யும் போது நான் மறுத்தா மட்டும் என்னாகிடும்ன்னு தான் சரின்னு சொன்னேன். முடிவெடுத்துட்டு என்கிட்டே முடிவை கேட்டா? அதான் சரின்னு போய்ட்டேன்….”
“அப்படி செஞ்சதனால தான் என்னால நார்மலா இருக்க முடியலை. அதுக்கான பலன் இவர் வாழ்க்கையை பாழாக்கிட்டேன்னு, பலியாக்கிட்டேன்னு, மூச்சு முட்டுதுன்னு சொல்லிட்டார்…” என்று சொல்ல திரவியத்திற்கு திக்கென்றானது.
‘இவ கோவத்துக்கு நான் பலியா? சுத்தம்’ என்றவன் மற்றவர்களின் பார்வையை மிக மோசமாக உணர்ந்தான்.
“இப்ப இரு இருன்னு சொல்றீங்களே? போனவாரம் இருக்கேன்னு எவ்வளோ கெஞ்சினேன். யாராச்சும் சட்டை பண்ணினீங்களா? என்னை அனுப்பறதுல தான் குறியா இருந்தீங்க…”
“போக வேண்டாம்ன்னு தோணிச்சு என்னை அனுப்பி வச்சீங்க. இப்ப போகனும்ன்னு என் மனசுக்கு படுது. விடமாட்டேன்னு நிக்கறீங்க? இன்னும் பதட்டமான சூழ்நிலை தான். ஆனா எனக்கு எங்க எப்படி இருக்கனும்னு ஒன்னு இருக்கும்ல…”
அத்தனை பேசினாள். விடாமல் மனதில் இருந்ததை எல்லாம் கொட்டி தீர்க்க அவள் பேசியதற்கு பார்த்தவர்கள் மூச்சடைக்க நின்றிருந்தனர்.
“எனக்கு நல்லது தான் பன்றீங்க. இல்லைன்னு சொல்லலை. ஆனா சில விஷயங்கள் சின்ன சின்ன விஷயங்களையாச்சும் என்கிட்ட விடுங்களேன். ப்ளீஸ்….” என்றாள் இறுதியாக பேசி ஓய்ந்ததில்.
அத்தனைபேரின் முகத்திலும் அவ்வளவு இறுக்கம். யாரும் எதிர்த்தோ, பதிலுக்கோ பேசவில்லை.
அத்தனை பேசி முடித்த பின்பு தான் நிதானமே வர இத்தனை பேசிவிட்டோமே என வேறு பதட்டம் சூழ அவர்கள் முன் நிற்க முடியாமல் வெளியே வந்து ஜீப்பில் ஏறி அமர்ந்துவிட்டாள் ஆராத்தியா.
“ம்மா…” என்றழைத்த திரவியம் அபிராமியின் அதிர்ந்த முகத்தை கண்டு வருந்தி நின்றான்.
“நீ கிளம்பு தீரா. தியாவை பார்…” என்று சொல்ல,
“மாமா…” தென்னரசுவிடம் வர,
“நீ கிளம்புப்பா. நாளைக்கு பேசுவோம்….” என அவனின் தோளில் தட்டிக்கொடுக்க,
“நாங்க எதுவும் நினைக்கலை. இப்பவாச்சும் அவ எல்லாத்தையும் வெளிப்படையா சொன்னாளே? இதையே நினைச்சுட்டு இத்தனை நாள் அவ இருந்திருக்கான்னு நினைக்கும் போது தான் கஷ்டமா இருந்துச்சு. இனியாச்சும் நிம்மதியா இருக்கட்டும்…” என்றார் அபிராமி.
திரவியத்திற்கு அத்தனை கஷ்டமாக இருந்தது. ஒருவருமே ஏன் இப்படி என் பெண்ணை பேசினாய் என கேட்டுவிடவில்லை.
“தீரா நீ எதையும் நினைச்சு கவலைப்படாம போப்பா. நாளைக்கு சரியாகிடும். தியாவே வருத்தப்படுவா. நீ எதுவும் சொல்லிடாத…” தயாளனும் மகனுக்கு சொல்லி அனுப்ப அண்ணன்கள் இருவரும் அமைதியாக நின்றனர்.
“உங்களுக்கு என்னவாம்?…” என்றவன்,
“நாளைக்கு எல்லாரும் ஊர் வந்து சேருங்க. அவ்வளோ தான். புரியுதா?…” என்று மிரட்டலாய் சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வந்தான் திரவியம்.
வாயில் கை வைத்துக்கொண்டு கண்ணை மூடியபடி அமர்ந்திருந்தவள் தோற்றமே திரவியத்தை பாடாய் படுத்தியது.
‘என்னவாகிற்று இவளுக்கு?’ என்ற யோசனையுடன் ஜீப்பை கிளப்பியவன் வீட்டை கடக்கவும் மனைவியை பார்த்தான்.
“தியா…” என்றழைக்க இன்னும் கண்ணில் நீர்.
வாய் மூடியிருந்தவள் விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தது. உடனே ஜீப்பை ஓரங்கட்டியவன்,
“ஹேய் என்னடா தியா?…” என்றான்.
அவன் கேட்டதுமே தளர்ந்து துவண்டு அவனின் தோளில் தன்னைப்போல சாய்ந்துகொண்டாள் ஆராத்தியா.
“ஓகே ஓகே ரிலாக்ஸ்…” என்றபடி ஜீப்பை செலுத்தினான்.
ஊட்டி முழுவதும் அத்தனை கட்டுப்பாடுகள், அவ்வளவு பாதுகாப்பு படை வீரர்கள் என சூழ்ந்திருக்க கோவை நோக்கி கீழே இறங்கிக்கொண்டிருந்தனர் தம்பதிகள்.