“விடலாம், போலாம், தூங்கலாம். வேற?…” கண்களில் மின்னல் தெறிக்க அவளின் முகவடிவை விரலால் கோலமிட்டபடி அவன் கேட்க கேட்க தவித்தவள் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
“சொல்லமாட்டேன் த்தான்….” என சொல்ல திரவியம் கேட்க என பொழுதுகள் நகர அத்தனையும் உயிர் சுவைத்த நொடிகள்.
பதிலளிக்க முடியாத அழகியலை அதரங்கள் இனிக்க திருடிக்கொண்டவனுக்கு இணங்கி நின்றாள் பெண்.
வார்த்தைகளால் பகிராத பிரியங்கள் வாயாடாமலே வாதமின்றி பசி தீர்த்துக்கொண்டது.
எதையும் மனம்விட்டு சொல்லிக்கொள்ளவில்லை. செயல்களால் உணர்த்திக்கொண்டனர்.
நீ எனக்கு முதன்மை என அந்த ஷணம் அவள் உணர்த்தியிருக்க உறவின் மேன்மையை உருக்கம் கொண்டு உள்வாங்கினான்.
மெல்ல அவளின் முகம் நிமிர்த்தியவன் சோர்ந்திருந்த விழிகளுக்கும் முத்தமிட்டு விலகி நின்றான்.
தள்ளி நின்று ரசித்தவன் விழிகளின் பாஷை பெண்ணை கிறங்க செய்ய அவனிடம் செல்லாமல் ஓடி சென்று போர்வையை மூடி முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“உனக்கு ஒரு பாப்பாவா? உன்னையே இங்க வளர்த்து முடியலை…” என்றான் சிரிப்புடன் கொஞ்சம் கேலி இழையோட.
“அப்படி வளர்த்ததால தான் வளர்ந்துச்சாம்…” மெல்ல அவனின் காதுக்கு எட்டிவிடாமல் மூடிய போர்வைக்குள் அவள் மெதுவாய் சொல்ல,
“கேட்டிடுச்சு…” என்றவன் குரலில் போர்வையை விலக்கி பார்க்க அவள் முகத்தருகே திரவியம் முகம்.
“சேட்டைடி உனக்கு. இந்த வாய் எல்லாம் எங்க வச்சிருந்தியாம்?…” என கேட்டு மூக்கை பிடித்து ஆட்டியவன்,
“அப்போ நெக்ஸ்ட் இயரும் காலேஜ்க்கு போகலை. அப்படித்தானே?…” என்ற கேள்வியில் அவள் திருட்டு முழி முழிக்க,
“என்ன பார்வை?…” என்றான் கொஞ்சம் முறைப்புடன்.
“இதுக்கு நான் என்ன செய்ய?…”
“சொல்லிடவா?…” என்றவன் நமுட்டு சிரிப்பில் மீண்டும் போர்வையை மூடிக்கொள்ள விளையாட்டு போல கடந்த சில நொடிகளில் ஆராத்தியா உறங்கியும் போனாள்.
அவள் தூங்கவும் தான் தனது மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் திரவியம்.
அர்த்த ராத்திரியில் மகனின் அழைப்பு. அபிராமி அடித்துபிடித்து எழுந்துகொண்டார்.
“என்ன தீரா? என்னாச்சு? தியா ஓகே தானே?…” என்றவர் குரலே சரியில்லை.
“அம்மா பதறாதீங்க. எல்லாம் ஓகே தான். தியா தூங்கறா…”
“இந்த நேரம் நீ கூப்பிட மாட்டியா. அதான்…” என்றவர்,
“என்னப்பா?…” என கேட்க,
“ம்மா, நாளைக்கு கண்டிப்பா வருவீங்க தானே?….” என்றான் மகன்.
“இல்லை, வேண்டாமே தீரா. ஒரு ரெண்டுமூணு நாள் போகட்டும். அப்பறமா வரோம். மனசு சரியில்லை. தப்பா நினைக்காத…”
“அதெல்லாம் சரியாகிடும். அதுவும் பேரப்பிள்ளை வருதுன்னா பாட்டி நீங்க வரவேண்டாமா?…” என்றவன் பேச்சில் ஒருநொடி ஸ்தம்பித்தவர்,
“தீரா…”
“ஆமாம்மா, இப்ப சொல்லுங்க, வருவீங்களா?….” என்றான்.
“கண்டிப்பா வருவேன். இனி இங்க என்ன வேலை…” என அத்தனை சந்தோஷமாக அவர் சொல்ல,
“ஓகே, வாங்க. ஆனா நாங்க வச்சு பார்த்துக்கறோம்ன்னு தியாவை கூட்டிட்டு போக கூடாது. வேணும்னா நீங்க இருந்து பாருங்க. அவ என்னோட தான் இருப்பா…” என்றவன்,
“என்கிட்டே முதல்ல சொல்லனும்னு நினைச்சிருக்கா. இன்னைக்கு அங்க அனு ஸ்கூல்ல நடந்த இன்சிடென்ட், எல்லாரும் இருக்க சொன்னது, நானும் அவ நினைக்கிறது புரியாம இருந்ததுன்னு அவ ரொம்ப ஸ்ட்ரெஸாகிட்டா…” என்றான் மனைவி பேச்சின் பக்கத்தை எடுத்து சொல்லி.
“புரியுதுப்பா. எங்களுக்கு இதுதான் வேணும். வேற என்ன எதிர்பார்க்கிறோம்? நீங்க சந்தோஷமா இருந்தாலே போதும். வலுக்காட்டாயமா கல்யாணம் பண்ணி அவ வாழ்கையை பாழாக்கிட்டோமோன்னு நினைச்சோம்…”
“ம்மா…”
“சரி நான் தூங்கறேன். அப்ப தான் காலையில எழுந்து கிளம்ப முடியும்…” என சொல்லிவிட்டு போனை வைக்க சிரித்தபடி அழைப்பை துண்டித்தான்.
தென்னரசுவிற்கு அழைப்போமா என்றால் இப்போது நிச்சயம் வீட்டில் யாரும் உறங்கி இருக்க போவதில்லை. அதிலும் ஆதவனை நினைத்து சிரித்தவன் அவனுக்கு போனை போட்டான்.
“தீரா என்ன இந்நேரம்?…” என கேட்க,
“தூங்கிட்டியா நீ?…” என்றான் திரவியம்.
“நைட்ல தூங்காம என்னடா பண்ண சொல்ற?…”
“ஓஹ், நான் கூட கண்ணீரும் கம்பலையுமா ஊட்டி வளர்த்த என் அன்பு தங்கச்சின்னு இருப்பியோன்னு நினைச்சேன்…”
“நான் கண்ணீர் விட்டு கதறனும். அதானே? நாளைக்கு வந்து அழறேன். வை…”
“அப்ப சந்தோஷப்படுத்த எதுவும் சொல்லவேண்டாமா?…” என்றவனின் சிரிப்பில் ஆதவன் யோசிக்க,
“இனிமே சும்மா உன் தங்கச்சியை மட்டுமே பேம்பர் பண்ணாம தங்கச்சி பிள்ளைக்கு பேம்பர்ஸ் எப்படி மாட்டன்னு ட்ரெயினிங் எடுத்துக்கோ ரகுகிட்ட. இத்தனை வருஷத்துல மறந்திருப்ப…” என்றான் திரவியம்.
“பேம்பர்ஸ் மாத்தறது பெரிய மலை. எனக்கு தெரியாதுன்னுவியா நீ?…” என எகிறிய ஆதவனுக்கு அப்போது தான் பல்ப் எரிந்தது.
“டேய் தீரா…” என்ற ஆதவனின் சந்தோஷ கூச்சலில் திரவியம் காதே வெடித்துவிட்டது.
“மெல்ல ஆதி…”
“எப்ப தீரா, சொல்லவே இல்லை?…” ஆதவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
திரவியம் சுருக்கமாக சொல்ல கேட்டுக்கொண்டவன் அதற்குள் வீட்டில் அனைவருக்கும் சொல்லிவிட்டான்.
வீட்டில் அனைவருமே திரவியத்திற்கு வாழ்த்து தெரிவிக்க பேசி முடித்து வந்தவன் உறங்கிக்கொண்டிருந்த ஆரத்தியாவை அணைத்தபடி படுத்துக்கொண்டான்.
சந்தோஷத்தில் உறக்கம் என்பது அவனை எட்டவே இல்லை. திரும்பி திரும்பி படுத்தவன் எங்கே அவளின் உறக்கம் கலைந்துவிடுமோ என எழுந்துகொண்டான்.
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டவன் திவானில் வந்தமர நேரம் செல்வதே தெரியவில்லை.
அதிகாலை போல வந்து படுத்துக்கொண்டவன் அவளுடன் உறங்க உறங்கும் முன்பே பத்து மணிக்கு மேல் வருமாறு ஆதவனுக்கு ஒரு மெசேஜ் போட்டுவிட்டே வந்தான்.
அதே போல பத்துமணி அளவில் குடும்பங்கள் இரண்டும் வந்திறங்கி இருக்க அப்போது தான் ஆராத்தியா எழுந்து குளிக்க சென்றிருந்தாள்.
மகளை காண சீதா துடித்துக்கொண்டிருக்க அனைவரும் மீண்டும் திரவியத்திற்கு வாழ்த்தை கூற என நிமிடங்கள் கரைந்தது.
தலையில் கட்டிய ஈர துண்டுடன் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தவள் பார்வையில் முதலில் பட்டது அனு தான்.
“அனுக்குட்டி…” என ஓடி சென்று தூக்கிக்கொண்டவள் அடுத்தடுத்து இருந்தவர்களை பார்க்கும் பொழுதே தான் பேசியவை எல்லாம் ஞாபகம் வர அனுவை கீழே இறக்கினாள்.
“தியாம்மா…” என வந்து அணைத்துக்கொண்ட தாயை கட்டிக்கொண்டு கேவி அழ ஆரம்பித்தவள்,
“ஸாரிம்மா. ஸாரி…” என்று அத்தனை மன்னிப்பு ஒவ்வொருவரிடமும் கேட்டு கேட்டு அழ,
“சரிடாம்மா, ஒன்னும் நினைக்கலை நாங்க. இப்ப என்ன?…” என்று அவளை அபிராமி, தயாளன், தென்னரசு என தேற்ற,
“இந்த மாதிரி நேரத்துல அழ கூடாது…” என அதட்டினார் சீதா.
அண்ணன்கள் இருவரும் சந்தோஷத்தில் நெகிழ்ந்து போயிருக்க இந்துவும், பூமியும் கண்ணடித்துக்கொண்டனர்.
“அப்பறம் தியா, கிளம்புவோமா?…” என இந்து கேட்க,
“எங்க அண்ணி?…” என்றாள் ஆராத்தியா கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“அதான் உன்னை கம்பல் பண்ணி எங்கண்ணனுக்கு கட்டி வச்சிட்டோம்ன்னு மூச்சு விடாம தம் கட்டி பேசின தானே? உங்கண்ணன் ரெண்டுபேரும் தான் என் தங்கச்சிக்கு பிடிக்காம அங்க இருக்க வேண்டாம். போய் கூட்டிட்டு வருவோம்ன்னு சொன்னாங்க…”
பூமிகா அவள் பங்குக்கு ஆராத்தியாவை வம்பிழுக்க அவள் தன் அண்ணன்களை அப்படியா என்று பார்த்தாள்.
“என்ன அங்க பார்வை? நீ பிடிக்காம இங்க இருக்க வேண்டாம். கிளம்பு கிளம்பு…” இந்து சொல்ல,
“நான் போய் உன் ட்ரெஸ் எல்லாம் பேக் பன்றேன்…” என்றாள் பூமி.
“அண்ணி நீங்களுமா?…” என்றவள் திரவியத்தை பாவமாய் பார்க்க,
“பேசின தானே? பதில் சொல்லு…” என்றவன் விழிகளும் சிரித்தது.
இந்த கலாட்டாக்களை மற்றவர்களும் ரசித்தபடி இருக்க அண்ணிகள் இருவரும் விடுவதாய் இல்லை.
“ஓகே அண்ணி வரேன். ஆனா உங்கண்ணன் என்னை கிளம்ப சொல்லட்டும். வரேன்…” என சொல்ல,
“அடிப்பாவி…” என்றான் திரவியம் வாயசைத்து.
ஆராத்தியா பதிலில் புரிந்துபோக அனைவருக்குமே அவர்கள் மனதும் விளங்கியது.
மனதில் வருத்தத்தின் சுவடுகள் மறைந்து குடும்பத்தின் புதுவரவினை வரவேற்க கொண்டாட்டமாய் காத்திருந்தனர் இரு குடும்பங்களும்.