“நான் குடுத்துக்கறேன் த்தை. நீங்க போய் படுங்க…” என சொல்ல மகளின் முகத்தை பார்த்தவர்,
“நைட்ல வலி எதுவும்ன்னா உடனே கூப்பிடு…” என்றார் சீதா.
“அதெல்லாம் வராது. நான் பார்த்துக்கறேன். முதல்ல இப்படி நினைக்கறதை விடுங்க த்தை. நீங்களும் பயந்து அவளும் பயந்தா திரும்ப தியாவுக்கு மயக்கம் தான் வரும்…” என்றவன் டாக்டர் சொல்லியதை சொல்ல,
“இனிமே பார்த்துக்கறேன்…” என்றார் சீதா.
மற்றவர்கள் செல்லவும் அறைக்குள் வந்தவன் ஆராத்தியாவிடம் பாலை நீட்டிவிட்டு உடை மாற்றி விளக்கை அணைத்துவிட்டு வந்து திவானின் சாய்ந்துகொண்டான் புத்தகத்துடன்.
தன்னை ஏதாவது கேட்பான் என அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றமாகி போக படுத்துவிட்டாள்.
ஆனால் உறக்கமில்லை. மருத்துவமனையிலேயே அத்தனை உறங்கி இருக்க இப்போது சுத்தமாக வரவில்லை.
திரும்பிக்கொண்டே இருந்தாள். அதனை விழி உயர்த்தி பார்த்தாலும் ஒன்றும் கேட்கவில்லை திரவியம்.
பொறுத்து பார்த்தவள் மெதுவாய் எழுந்து வயிற்றை பிடித்தபடி நடந்து திவானருகே வந்து நின்றவள்,
“காலை எடுங்கத்தான்…” என்றாள்.
“தூங்காம இங்க ஏன் வந்த? போய் படு…” என சொல்லியவன் நீட்டியிருந்த காலை எடுக்க தவறவில்லை. உடனே அதில் அமர்ந்துவிட்டாள்.
“தூக்கம் வரலை…” என முணங்க,
“ஓகே, புக்ஸ் படி. என்ன வேணும்னு சொல்லு எடுத்து தரேன்…”
“ம்ஹூம் வேண்டாம்…”
“ஓகே…” என சொல்லிவிட்டு தன் கையிலிருந்த புத்தகத்தில் ஆழ்ந்துபோக சில நொடிகள் தான்.
“அத்தான்…” என அந்த புத்தகத்தை பிடித்து இறக்கி அவன் முகம் பார்த்தாள்.
“என்ன தியா? ஏதாவது வேணுமா?…”
“ஹ்ம்ம்…”
“சொல்லு…” என்றவன் தன் நெஞ்சில் அந்த புத்தகத்தை வைத்துக்கொள்ள அவளின் பார்வை அதனில் பதிந்தது.
அவளாக கேட்கமாட்டாள் என புரிந்தவனின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு. ஒரு பெருமூச்சுடன் அந்த புத்தகத்தை எடுத்து மூடி டீப்பாயில் வைத்தவன்,
“வா…” என்றான் தன் கைகளை விரித்து.
சட்டென மலர்ந்துவிட்ட முகத்துடன் அவனை நெருங்கி நெஞ்சில் சாய்ந்துகொண்டாள் ஆராத்தியா.
“உங்க மேல சாய்ஞ்சுக்கனும்னு எப்போ கேட்ப தியா?…” என அவளின் உச்சந்தலையில் இதழ் பதித்து அவன் கேட்க,
“தெரியலை. ஆனா நான் என்ன நினைக்கறேன்னு உங்களுக்கு நல்லா புரியுது…” என்றவளுமே புன்னகையுடன் பதில் கூறினாள்.
“அப்படியா? ஓகே….” என திரவியம் சொல்ல மீண்டும் லேசாய் உடலை அசைப்பதும், அவனை நிமிர்ந்து பார்ப்பதுமாக இருந்தாள்.
தூண்டுகோலாய் அவனின் வார்த்திகளின்றி இன்றளவும் சில விஷயங்களை பேச முயல்வதில்லை அவள்.
அவள் முகம் பார்த்தே அவன் கேட்க, அவனின் முகம் பார்த்து தான் சொல்ல நினைக்க நாளுக்கு நாள் அவர்களின் புரிதலின் தன்மையும், எல்லையும் தான் விரிவடைந்து கொண்டே இருந்தது.
அதை மட்டும் மாற்ற முடியாமல் சில வேளைகளில் அவள் தவித்திருக்க தானிருக்க தவிப்பென்ன என்பதை போலிருக்கும் திரவியத்தின் அணுகுமுறைகள்.
இப்போதும் அவன் தெரிந்தும் கேட்கவில்லை என அவள், கேட்காமல் சொல்கிறாளா என அவன். இருவருமாக ஆடிய கண்ணாம்பூச்சி விளையாட்டில் இருவருமே வெற்றிகரமாக தோல்வியை தழுவினர்.
“இன்னைக்கு தாத்தா பேசினது என்னை ரொம்ப டென்ஷனாக்கிருச்சு த்தான். அதான் அப்படி நடந்திருச்சு…”
“ஓஹ், அதனால எல்லாரையும் நீ டென்ஷன் பண்ணிருக்க?…”
“எனக்கு அந்த பேச்சு பிடிக்கலை. இது எங்க நம்ம பிள்ளைங்களையும் தொடருமோன்னு பயந்துட்டேன். அந்த நேரம் சட்டுன்னு எந்திச்சு நல்லா கேட்கனும்னு நினைச்சேன். ஆனா முடியலையா, என்னையே நான் கண்ட்ரோல் பண்ண நினைச்சு…”
“எங்க அப்படி நடந்திருமோன்னு நினைச்சு பயந்து மயங்கி விழுந்துட்ட. சரியா?…” திரவியம் சொல்ல அவனின் கையை பற்றிக்கொண்டவள்,
“அதெல்லாம் நடக்காது த்தான்…” என்றாள் அவனின் முகம் பார்த்து.
“ஆஹாங், எப்படியாம்?…” என அவனும் கேட்க,
“கோச்சுக்காம கேட்கனும். இது நம்மைன்னு சொல்லலை…”
“நீ முதல்ல சொல்லு…” என்றதும் அவனின் முகம் பார்த்தபடியே அவள் இருக்க,
“சரி, கோவிக்கலை. சொல்லு…” என்றதும் தான் தலையசைத்து புன்னகைத்தாள்.
“அது வந்து அப்படியெல்லாம் நடக்க விடமாட்டீங்க தானே?…” என திணறலுடன் கேட்க,
“எப்படியாம்?…” என்றான் திரவியம்.
இன்னும் அவனின் விரல்கள் நிறுத்தாத வருடலில் ஆராத்தியாவும் நிம்மதியானவள்,
“அதான் நமக்கு நடந்த மாதிரி…”
“ப்ராங்கா சொல்லு தியா…” என்றவன் குரலில் சற்று அழுத்தம்.
“கல்யாணம். நமக்கு செஞ்சு வச்சாங்க தானே? அப்படி கல்யாணம். அது வேண்டாம் த்தான்…” படபடவென சொல்லி முடிக்க,
“ஓஹ்…” என்றான்.
“பிள்ளைங்க அவங்க விருப்பத்தோட வளரனும். அதுவும் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான இடம், பெரும்பாலான வாழ்க்கையை வாழ போறது கல்யாணத்துக்கு அப்பறம் தான். அது திணிக்கப்பட்டதா வேண்டாம். பேச்சளவுல கூட இது சங்கடம் தானே?…”
“நெக்ஸ்ட்…” திரவியம் எதையும் வெளிப்படுத்தவில்லை.
“புரிஞ்சுக்கோங்க த்தான். நம்மளோட லைஃப் இது வேற. ஆனா எல்லாருக்குமே எல்லாம் சரியா அமையும்ன்னு கிடையாதே? ஒருவேளை உங்களுக்கு என்னையோ, எனக்கு உங்களையோ சுத்தமாவே பிடிக்காமலே போயிருந்தா ரெண்டுபேரோட வாழ்கையும் பாழ் தானே?…”
“ஹ்ம்ம்…”
“அதான் த்தான் நான் சொல்றேன். நீங்களும் சொன்னது தான். நான் அமைதியாவே இருந்ததே உங்களுக்கு பிடிக்காம போய் வாழ்க்கையே போச்சுன்னு சொன்னீங்க தானே? அது இன்னும் பெருசாகியிருந்தா?…”
“இப்ப என்ன தியா? சொல்லு. நமக்கு மேரேஜ் பண்ணி வச்சது தப்பு, அதானே?…”
“நான் அப்படி சொல்ல வரலைத்தான். ப்ளீஸ்….” என்று நிமிர்ந்து அமர்ந்தாள்.
“வேற எப்படி? கூடவே வளர்ந்து பார்த்து நல்லா தெரிஞ்சவங்களோட நடக்கற கல்யாணம் சரியில்லைன்னு சொல்ற நீ?…” திரவியம் கேட்க,
“நீங்க அப்படி நினைக்கறீங்க. ஆனா எனக்கு அப்படி தோணலை. கூடவே வளர்ந்து பார்த்து புரிஞ்சிருந்தாலும் இவங்களுக்கு கல்யாணம்ன்னு பேசிக்கிட்டதும் அந்த பார்வை மாற்றம், அணுகுமுறை மாற்றம்ன்னு அதெல்லாம் மனசுல விருப்பம் இருக்கிற பட்சம் சரி…” என்றவள்,
“என்னை மாதிரி இருந்தா? அந்த வாழ்க்கையை ஏதுக்க பிடிக்க, வைக்கனு மனசளவுல நிறையவே போராடனும். அந்த வாழ்க்கைக்குள்ள நுழைய எவ்வளோ கஷ்டப்படனும்னு யாருக்கும் புரியலை. அத்தை மகனா உங்களை பார்த்துட்டு புருஷனா பார்க்க சொல்ற அந்த நிமிஷம். அதுவும் துளியும் எதிர்பாராம இருக்கும் போது…”
“தியா இப்ப ஏன் இதெல்லாம்?…” திரவியம் மீண்டும் அவளுக்கு எதுவுமாகிவிடுமோ என பயந்தான்.
“சொல்லனும் த்தான், கேளுங்க. வெளில வரன் பார்க்கும் போது இவர் தான் உனக்கு வாழ்க்கை துணையா நாங்க தேர்ந்தெடுக்கறோம்ன்னு சொல்ற நபரை ஆரம்பத்துல இருந்த அப்படி தான் பார்ப்போம்….”
“ஆனா பிறந்ததுல இருந்தே அண்ணன்களோட உங்களையும் தான் பார்த்திருப்போம். மனசுல எங்கையாவது ஒரு இடத்துல காதல், விருப்பம், ஆசை இப்படி இல்லாத பட்சத்துல நடத்தி வைக்கிறது என்னை பொறுத்தவரை கட்டாயம்…”
ஆராத்தியா அவளுக்கு தெரிந்ததை அவள் நினைத்திருந்ததை ஓரளவு திரவியம் புரிந்துகொள்ளும் விதமாக சொல்ல,
“ஓகே, இப்ப ஏன் மூச்சு வாங்க இவ்வளோ பேசற? நம்ம பிள்ளைங்க கல்யாணம் எங்கையோ இருக்கு. இன்னும் பிள்ளையே பிறக்கலை. அதுக்குள்ளே என்னவெல்லாம் நினைச்சு எங்களையும் பாடா படுத்தற நீ?…” என்றான் அவன்.
ஆனால் எந்தளவிற்கு இந்த விஷயம் அவள் மனதை பாதித்திருக்கிறதென புரிந்தது திரவியத்திற்கு.
எங்கே இது அடுத்த தலைமுறைக்கும் தொடருமோ என்னும் அவளின் பயம் நியாயமாகவே தோன்றியது.
“எப்ப நடக்குதோ இல்லையோ. இந்த பேச்சு இனி யாரும் பேச வேண்டாம். எனக்கு டென்ஷனாகுது. ஆட்டோமேட்டிக்கா பிபி ஷூட்டப்பாகிருது. நான் என்ன பண்ண?…” என்றாள்.
“ஓகே, அவ்வளோ தானே? மூச்சு வாங்கும்டி பொண்டாட்டி. கொஞ்சம் நேரம் பேசாம தூங்கு…” என அவளை மீண்டும் தன் மீது சாய்த்துக்கொள்ள,
“நான் பேசினதுல எதுவும் கோவமா?…”
“ஆமான்னா நீ பேசினது எல்லாம் சரியில்லைன்னு ஆகிடுமா? அதெல்லாம் தெரியலை. ஆனா ஒவ்வொருத்தர் லைஃபும் இப்படித்தான் இருக்கும்ன்னு யாரும் டிஸைட் பண்ண முடியாது…” என்றவன்,
“இதெல்லாம் எங்கையோ எப்பவோ தீர்மானிக்கப்பட்டது. இதுதான் நடக்கனும்னு ஒன்னு இருக்கும் போது மனுஷங்க நாம மாத்த எதுவுமில்லை. என் முகத்தை கூட பார்க்கமாட்டேன்னு இருந்த உன்னை என் நெஞ்சுல தாங்கியிருக்கேன். இது விதி. வேற ஒண்ணுமில்லை…”
சீரியஸாக ஆரம்பித்து விளையாட்டாய் அவளிடம் சிரித்துக்கொண்டே சொல்ல லேசாய் அவன் மார்பில் குத்தியவள் சிரித்தபடி விழி மூடினாள்.
கண்ணில் தென்படாத புரிதல்கள் கண்டுகொள்ளப்படவில்லை என அங்கலாய்த்தாலும் ஆழ்மனம் வரை கவனிக்கப்பட்டிருப்பதை ஒற்றை பார்வை உணர்த்திவிடும்.
பிடித்தவர்களிடத்தில் மட்டும் புரிதல்கள் உடன்படுவதில்லை, பிடிக்காததிலும் அங்கே புரியப்பட்டு தான் விரும்பாமல் போகிறது.
இங்கே பெரியோர்களால் உருவாக்கப்படும் விருப்பத்தை ஏற்று, விருப்பத்தை உள்வாங்கி, விரும்பியே விருப்பத்தை ஏற்கும் விந்தை காதலில் மட்டுமல்ல கணவன் மனைவியிடத்திலும் தாம்பத்தியமெனும் சாலையில் இணைபிரியா இன்ப பயணம்.