“இதுனால என்ன இருக்கு? அவ ஆசைக்கு நமக்கு எடுத்திருக்கா. கல்யாணம்ன்னா என்ன ஒரு ட்ரெஸ்லையேவா இருக்க போறோம். அதுவும் என் பொண்ணுக்கு பிடிச்சிருக்கும் போது…” என்றவர் மீண்டும் தள்ளி நின்று பார்த்தார் தென்னரசு.
“ரொம்ப அருமையா இருக்குடாம்மா. இதையே கல்யாணத்துக்கு நீ கட்டிடலாம்…” என்னும் பொழுதே ஆராத்தியாவின் முகம் பூவாய் மலர்ந்துவிட்டது.
சீதாவிற்கும் அதனை பார்த்ததுமே அத்தனை சந்தோஷம். இதுதானே அவரும் வேண்டினார்.
“நிஜமாவாப்பா?…” ஆராத்தியா நம்பமுடியாமல் கேட்க,
“ஏன்டா? அதுக்கு தானே எடுத்த நீ?…” என தென்னரசு சொல்லும் பொழுதே அபிராமி வந்துவிட்டார்.
“சேரி அழகா இருக்கே…” என வந்ததும் அவர் ஆராத்தியா பார்த்து சொல்ல,
“தியாவுக்கு இந்த புடவை பிடிச்சிருக்காம். கல்யாணத்துக்கு அவளே செலெக்ட் பண்ணிட்டா பாரேன் அபி…” என்று தென்னரசு பெருமையாய் தன் தங்கையிடம் கூறினார்.
ஆராத்தியா, சீதா இருவருக்குமே உள்ளூர கலக்கம். சீதாவிற்கு எங்கே அபிராமி எடுத்ததை விட்டுவிட்டு தாங்களாக தேர்ந்தெடுத்துவிட்டோம் என அவர் மனது வருந்துவாரோ என்று யோசித்தார்.
ஆராத்தியாவிற்கு எங்கே ‘கல்யாணத்துக்கு நாங்க எடுக்கறது தானே முறை’ என அபிராமி எதுவும் சொல்லிவிடுவாரோ என பார்த்திருந்தாள்.
“குட் செலெக்ஷன் தியாக்குட்டி…” என ஆராத்தியாவின் கன்னம் பிடித்து அபிராமி கொஞ்சி சொல்ல உள்ளுக்குள் குறுகுறுப்பு ஆராத்தியாவிற்கு.
தான் தான் அவரை தவறாக எடை போட்டிருக்கிறோமோ என ஒருகணம் தோன்றத்தான் செய்தது.
“இதையே கல்யாணத்துக்கு நீ கட்டிக்கோ. இன்னும் நல்லா கிராண்டா இருக்கும். உனக்கு ரொம்ப பெர்பெக்ட்டா இருக்கும்டா…” என்றார் அபிராமி சில்லாகிப்புடன்.
“அதான் நானும் சொல்லிட்டிருந்தேன்…” என்ற தென்னரசு,
“எங்கம்மா பில்லிங் முடிஞ்சதா?…” என அபிராமியிடம் கேட்க இல்லை என தோளை குலுக்கினார்.
“ரகுவுக்கு ஷர்ட் சைஸ் செக் பண்ணனும்னு திரும்ப ட்ரையல் ரூம் போயிருக்காங்க எல்லாருமே…” என்று சொல்லியவர்,
“சரி வேற எதுவும் பார்க்கலையா? போய் பாரு தியா. பூமியும். இந்துவும் மேல தேர்ட் ஃப்ளோர்ல இருக்காங்க….” என்றார் அபிராமி.
“இதோ போறேன் த்தை…” என புடவையை சீதாவிடம் கொடுத்தவள் நகர,
“வா நானும் வரேன். அங்கயே காட்டன் சேரீஸ் செக்ஷனும் இருக்காம். எனக்கும், சீதாவுக்கும் பார்ப்போம்…” என்று உடன் நடக்க சீதாவும் அவர்களுடன் வந்துவிட்டார்.
அதன் பின்னர் பூமிகா, இந்துவுடன் ஆராத்தியா கலந்துகொள்ள சீதாவும், அபிராமியும் அவர்களின் வேலையை பார்த்தனர்.
மதியம் உடையெடுக்கும் வரை மட்டுமே திரவியம் அவர்களுடன் அங்கே இருந்தான்.
அதன் பின்னர் ஸ்டோரிலிருந்து அழைப்பு வரவும் சொல்லிகொண்டு அவன் கிளம்பிவிட மற்றவர்கள் நகை எடுக்க சென்றனர்.
அடுத்து நகையும் எடுத்து முடித்து மாலை அனைவரும் கோவை இல்லத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் அன்றே ஊட்டிக்கும் கிளம்பிவிட்டனர்.
கண்ணை மூடி கண்ணை திறக்கும் முன் திருமண நாள் வந்துவிட்டது. பூமிகா தன் தோழிகளுக்கு முன்பே பத்திரிகை வைத்திருக்க வந்தனாவை அழைப்பதா வேண்டாமா என அத்தனை யோசனை.
அதன் பின்னர் நெருங்கிய தோழிகளான நால்வருக்கு மட்டும் வைத்தவள் வேறு யாரையும் அழைக்கவில்லை.
எதற்கு வம்பு என அத்தனை பயமும் கூட. வந்தனாவின் சில பேச்சுக்கள் இன்றளவும் மாறவில்லை.
தானாக அழைத்து எதற்கு வம்பு என விட்டுவிட்டாள். அழைத்து அவளும் வந்து மீண்டும் திரவியத்தின் கோபத்திற்கு ஆளாக விருப்பமில்லை.
ஆராத்தியாவிடம் சொல்ல அத்தனை சந்தோஷம் அவளுக்கு வந்தனாவை அழைக்காமல் விட்டதில்.
“உருப்படியா இப்பத்தான் ஒரு நல்லவிஷயம் பண்ணிருக்கீங்கண்ணி….” என ஆராத்தியா கலாய்க்க,
“என்னடி கிண்டலா?…” என முறைத்தாள் பூமிகா.
“பின்ன நீங்க ஜஸ்ட் எஸ்கேப். இல்லைன்னா மணமேடைக்கு கிளம்பிருக்கற உங்களை வா சுருதின்னு கைய புடிச்சு இழுத்துட்டு போய் உங்கண்ணன் முன்னாடி குறுக்க இந்த கௌசிக் வந்தான்னு கேட்டு நமக்கு முதுகுல டின்னு கட்ட விட்டிருப்பாங்க…” என சொல்லி சிரிக்க பூமிகாவுக்குமே அதில் புன்னகை தான்.
நடந்தாலும் நடந்துவிடுமோ என நினைத்தும் பார்க்க ஒரு நொடி ஆடித்தான் போனாள் பூமிகா.
தன் வீட்டினரையும் வைத்துக்கொண்டு வந்தனா ஏதாவது ஏடாகூடமாக செய்துவிட்டால் என தோன்றாமலில்லை.
அந்தளவிற்கு தான் வந்தனாவின் மீதான அபிப்ராயம் மாறிவிட்டிருந்தது அவர்களுக்கு.
அழைப்பு விடுத்திருந்தவர்களும் வந்து சேர்ந்துவிட கல்யாண வீடு கொண்டாட்டத்தில் திளைத்தது.
இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம். மணமகளாக தயாராகவே அமர்ந்திருந்தாள் பூமிகா.
முகத்தில் வெட்கம் மின்ன தோழிகள், உறவு பெண்கள் என கலாட்டாவாக இருந்தது அந்த அறை.
முகமெல்லாம் புன்னகையுடன் அமர்ந்திருந்தவளுக்கு கொஞ்சமும் திருமணத்தின் படபடப்போ, அடுத்து என்னவெனும் பதட்டமோ எதுவுமில்லை.
அடுத்த தெருவில் தாயின் வீடு. இங்கும் அங்குமாக வளர்ந்ததனால் பிரியவேண்டிய அவசியமும் இல்லாது போனதால் இலகுவாகவே இருந்தாள் பூமிகா.
ஆராத்தியா பூமிகாவுடன் அந்த அறையிலேயே தான் இருந்தாள். அங்கிருந்து எங்கும் வெளியே செல்லவில்லை.
எங்கே தான் சென்று, நிச்சயத்தின் பொழுது பேசிய பேச்சுக்கள் மீண்டும் துவங்குமோ என அறைக்குள்ளேயே தான் இருந்தாள்.
அவள் தேர்ந்தெடுத்த புடவை, அவளுக்கு பிடித்தமான நகைகள் என முகம் மலர்ந்தே இருந்தது.
அந்த வகையில் அத்தனை சந்தோஷம் ஆராத்தியாவிற்கு. அதனால் எந்தவித சுணக்கமும் இன்றி அனைவரிடமும் கலகலத்து பேசிக்கொண்டிருந்தாள்.