“ஆமா, நீ குறைச்சு பேசற மாதிரி தான்…” என்று மகளின் தலையில் குட்டியவர்,
“பசிச்சா தோசை மட்டும் ஊத்திக்க. சட்னி வந்து அரைக்கறேன். பொடி இருக்கு. மதியம் வச்ச மீன் குழம்பு இருக்கு…” என்றார் சீதா புடவையை சரிபார்த்துக்கொண்டே.
“தோசையா? ம்ஹூம் வேண்டாம். வேண்டாம்…” உடனே ஆராத்தியா மறுக்க,
“அப்ப என்ன செய்ய? வேற என்ன வேணும்? மீன் எடுக்கும் போதே நைட் கேட்பன்னு சேர்த்து எடுத்து செஞ்சேன்….”
“அப்ப எனக்கு இட்லி மட்டும் ஊத்தி வச்சிருங்கம்மா. பொடி வேண்டாம். மீன் குழம்புக்கு புசுபுசுன்னு இட்லி தான். அதுவும் சீதாம்மா ஸ்பெஷல் அச்சடிச்ச மாதிரி அழகான அளவான குண்டு குண்டு இட்லி…” என்று தாயை ஐஸ் வைக்க,
“வேலை பார்க்க அவ்வளவு சோம்பேறித்தனம். இட்லிக்கு இம்புட்டு வக்கனை உனக்கு…” என முறைத்தபடி மறுக்காமல் அடுக்களைக்கும் சென்றார்.
“யார் ஊத்தினாலும் இட்லி அப்டித்தானடி வரும். இதுல என்ன சீதா ஸ்பெஷல்?…” என முணுமுணுத்தாலும் முகத்தில் பெருமையே அவருக்கு.
மறுக்காமல் மகளுக்கு ஊற்றியவர் சற்று நேரத்தில் பேத்தியும், மூத்த மகன், மருமகளும் வந்துவிடுவார்களே என அவர்களுக்கும் சேர்த்தே ஊற்றினார்.
“எதுக்கும்மா இவ்வளோ? எனக்கு மட்டும் தானே?…” என ஆராத்தியா சொல்ல,
“ஏன் வீட்டுல வேற யாருக்கும் வாயில்லையா? நீ இருக்கியே?…” என்று மீண்டும் ஒரு குட்டு வைத்தவர் இட்லி பொடியை எண்ணைவிட்டு கலந்தார்.
“பாப்பாவுக்கு இதை தொட்டு குடுக்க சொல்லு. உடம்பு முடியலை. குழம்பு போட்டு குடுத்திடாம. சர்க்கரை தொட்டு குடுத்தா அவளுக்கு இறங்காது…” சீதா மகளிடம் சொல்ல,
“ஓகே, ஓகே…” என்றாள் ஆராத்தியா தனது ஒரு கையை சுழற்றி லேசாய் குனிந்து ஏற்றுக்கொள்வதை போல பாவனையுடன்.
“உன் சின்னண்ணனும், பூமியும் அவன் ப்ரென்ட் வீட்டுலையே சாப்பிட்டு வந்திருவாங்க. பெரியண்ணனும், இந்துவும் தான். அப்பாவுக்கு நான் வந்து சட்னி செஞ்சு குடுத்துக்கறேன்…”
“ஓகே ஓகே…” மீண்டும் அதே போல லேசாய் குனிந்து ஆராத்தியா சொல்ல சிரித்தவர்,
“இட்லி வெந்திருச்சு. இதை நீ சாப்பிட்டுடு…” என மகளுக்கு கேஸ்ரோலில் எடுத்து வைத்தவர் அடுத்த ஈடு ஊற்றினார்.
“இது இதுலையே இருக்கட்டும். அஞ்சு நிமிஷத்துல ஆஃப் பண்ணிடு. அண்ணா வரவும் மறக்காம ஒரு ரெண்டு நிமிஷம் திரும்ப இட்லியை சட்டிலையே சூடு செஞ்சு எடுத்து வை…” என்றார்.
“அவ்வளோ தானா?…” ஆராத்தியா சிரிக்க,
“குழம்பு நிறையவே தான் இருக்கு. நைட்டுக்கு கேட்பீங்கன்னு சேர்த்து தான் பண்ணினேன். சும்மா தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு சாப்பிடாம நல்லா விட்டுக்கோ. புரியுதா?…”
“மேலு வளையாதவ. ஒழுங்கா எல்லாத்தையும் நீயே எடுத்து வை இன்னைக்கு. ஹாஸ்டல் போனா வேற என்ன வேலை உனக்கு?…” என சொல்லிக்கொண்டே வெளியே வந்தவர் பூஜை கூடையை எடுத்துக்கொண்டார்.
“மதியத்துக்கு தீராவுக்கு மீன் குழம்பு குடுத்துவிடலாம்ன்னா வந்து சாப்பிடறேன்னுட்டான். அப்பறம் வரவே இல்லை புள்ளை…” என்றார் பெருமூச்சுடன். ஆராத்தியா கப்பென்று வாயை மூடிக்கொண்டாள்.
“சரி சரி, ஒருவேளை அப்பா சீக்கிரம் வந்துட்டா எனக்கு போன் பண்ணிடு. நான் வந்து செஞ்சு குடுக்கறேன் அவருக்கு…” என அத்தனைமுறை சொல்லிவிட்டே செல்ல சிரிப்புடன் கையசைத்து நிற்க மீண்டும் வந்துவிட்டார் சீதா.
“என்னம்மா?…” ஆராத்தியா கேட்க,
“சாப்பிட முன்ன கை, கால், முகத்தை கழுவிட்டு விளக்கை ஏத்திடு தியாம்மா. மறந்திடாத…” என்றும் வேகமாக சொல்லிவிட்டு ஓடிவிட்டார்.
“இதை இவங்க இருந்தே செஞ்சிருக்கலாம்…” என தலையசைத்து பெருமூச்சை விட்டவள் தன்னறைக்குள் வந்து முகத்தை கழுவ சென்றாள்.
தாயுடன் அடுக்களையில் நின்றிருக்க லேசாய் வியர்த்திருந்தது. குளியலை போட்டுவிட்டு உடைமாற்றி வந்தவள் விளக்கை ஏற்ற நேரமும் சரியாக இருக்க வீட்டின் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டாள்.
“கரெக்ட் டைம்…” என்றவள் பூஜையறைக்கு சென்று விளக்கை ஏற்ற வாசலில் ஆதவனின் பைக் சத்தம்.
அண்ணன் தான் வந்துவிட்டான் என்று அசட்டையாக நினைத்தபடி தீபத்தை ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து விழுந்து கும்பிட்டு எழுந்தவள் நெற்றிக்கு இட்டுக்கொண்டாள்.
“இன்னுமாண்ணா நீ உள்ள வரலை?…” என்றபடி கற்பூர தட்டை எடுத்தவள் வெளியே வாசலுக்கு வர அங்கே நின்றிருந்தவன் மகிழ்திரவியம்.
கையில் தட்டுடன் அவள் நின்ற விதத்தில் லேசாய் சிரிப்பு வந்தாலும் அடக்கியபடி பார்த்தவன்,
“எங்க யாருமில்லையா?…” என்றான் ஷூவை காலால் நெம்பி கழற்றிவிட்டு உள்ளே அடியெடுத்து வைத்து.
“ஹாங், இல்ல இல்ல…” என அவள் பின்னே நகர,
“நில்லு, தீபம் தொட்டுக்க தானே கொண்டு வந்த? குடு ஒத்திக்கறேன்…” என்றவன் எரிந்துகொண்டிருந்த கற்பூர ஜோதியை தொட்டு வணங்கி நெற்றியில் பிரசாதமும் இட்டுக்கொண்டான்.
கைகள் நடுங்க அந்த கற்பூர ஆரத்தி தட்டை இருக்க பிடித்தவள் அவன் ஒத்தி இட்டுக்கொண்டதும் வேகமாய் உள்ளே சென்றுவிட சோபாவில் அமர்ந்தான் திரவியம்.
உள்ளே சென்றவள் வரவே இல்லை. எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ ஹாலில் இருந்தவனிடம் பெரும் சத்தம்.
“தியா…” என்று அழைக்க அடித்துபிடித்து வேகமாய் வர திரவியம் அடுக்களையில் நின்றிருந்தான்.
“என்ன இது?…” என்றதும் தான் அந்த வாசனை நாசியை நிரடியது.
“அச்சோ…” என தலையில் அடித்துக்கொண்டாள்.
சீதா ஊற்றி வைத்திருந்த இட்லி பாத்திரத்துடன் நன்றாக அடி பிடித்துபோயிருந்தது.
இவ்வளவு நேரம் இதை எப்படி கவனியாமல் விட்டோம் என பதட்டமாய் அருகே செல்ல போக,
“ஹேய் நில்லு. அதுவே பயங்கர ஹீட். பாத்திரமே போச்சு பார்…” என்றான்.
அவனுடன் அருகிருக்கும் பதட்டம், அவனின் அதட்டல் என்று ஆராத்தியாவை ஒருவித டென்ஷனில் ஆழ்த்த வியர்த்து போனது.
“இப்ப எதுவும் செய்ய வேண்டாம். நீ போய் ஹால்ல உட்கார்…” என்றான்.
“நான் நான் கவனிக்கலை…” திக்கி திணறி இதனை சொல்லும் முன் வார்த்தைகள் எல்லாம் தந்தியடித்தது.
இத்தனை பயம் தன்னிடம் வைத்திருப்பவளை பார்க்க ஒருபுறம் கோபமாகவும் வந்தது.
“ஓகே, உன்னை ஒன்னும் சொல்லலை. சம்டைம்ஸ் இதுமாதிரி நடக்கும் தான். நீ போ…” என அவளை அங்கிருந்து செல்ல சொல்லியவன் பின்னால் வெளியே வர ஆராத்தியா நேராக அறைக்குள் நுழையவிருந்தாள்.
“எங்க போற?…” மீண்டும் அதட்டல் தொனியில் அவன் கேள்வி.
ஆனால் அவன் சாதாரணமாகவே கேட்டிருக்க அதட்டுகிறான் என்று தான் அவனின் குரல் தொனி உணர்த்தியது ஆராத்தியாவுக்கு.
“ரூம்க்கு. பேக் பண்ணனும்…” வாயில் வந்ததை சொல்ல,
“பேக்கிங் மார்னிங்கே முடிஞ்சதுன்னு பூமி சொன்னா…” என்றதும் அவள் விழிக்க,