“ஜீப் நின்னா நான்னு இல்லை. ஒரு ட்ரைவர் வந்திருந்தா கூட ஏன் எதுக்கு கேட்கவேண்டாமா நீ?…”
“உங்களுக்கு ஏதோ வேலை இருக்கும்ன்னு நினைச்சேன்…”
“நீயா நினைச்சுப்பியா? கேட்க வேண்டாமா?…” என மெதுவாய் கடிந்தவன்,
“இங்க பாரு தியா. இனி நீ தனியா ஹாஸ்டல்ல தங்கி படிக்கனும். பூமி கூட இல்லை. இதுவரை அவ உன்னை பேம்பர் பண்ணிட்டா. எல்லா நேரத்திலையும் எல்லா இடத்திலையும் யாராச்சும் இருந்துட்டே இருக்கமாட்டாங்க. புரியுதா?…”
அவன் கேட்டதற்கு வேகமாய் தலையை மட்டும் ஆராத்தியா அசைக்க அவளை அழுத்தமாய் பார்த்தவன்,
“அங்க லோக்கல் கார்டியன் நான் தான். எதாச்சும் பிரச்சனைன்னா எனக்கு தான் கால் பண்ணனும். பண்ணுவியா?…” என கேட்க,
“ஹ்ம்ம், பன்றேன்…”
“என் நம்பர் இருக்கா?…”
“ஹாங்…” என அவள் விழித்ததிலேயே எண்ணை கூட அவள் வைத்துக்கொள்ளவில்லை என புரிந்தது.
“பூமி உன் கூடவே இருந்ததால இதுக்கும் அவசியமில்லாம போச்சுல உனக்கு…” என்றான்.
“இல்லை நான்…”
“ப்ச், நோ மோர் எக்ஸ்ப்ளனேஷன். என் நம்பர் ஃபேமிலி வாட்ஸாப் க்ரூப்ல இருக்கும். சேவ் பண்ணிக்கோ…” என்றவன்,
“இல்லை நானே உனக்கு டெக்ஸ்ட் பன்றேன். பர்சனல் நம்பர் இன்னொன்னு இருக்கு. அதையும் சேவ் பண்ணிக்கோ. புரியுதா?…” என்று சொல்ல அதற்கும் தலையாட்டல்.
திரவியத்திற்கே சலிப்பாகிவிட்டது ஆராத்தியாவின் இந்த பயமும், ஒதுக்கமும், எதிர்குரல் எழுப்பாத இந்த தலையாட்டலும்.
“ஓகே, கிளம்புவோம்….” என்று சொல்லிவிட்டு ஜீப்பை கிளப்பினான் திரவியம்.
கல்லூரி விடுதிக்கு செல்லும் வரை ஆராத்தியாவிடம் வழக்கம் போல பேச்சுக்கள் இல்லை.
அமைதியாக சென்று விடுதியில் கொண்டு இறக்கிவிட்டவன் தான் சொல்லியதை மீண்டும் வலியுறுத்திவிட்டு கிளம்பினான்.
அவன் கிளம்பவும் அப்போது தான் நிம்மதியான மூச்சு வெளிப்பட விடுதலையான உணர்வே வரப்பெற்றது ஆராத்தியாவிற்கு.
அவனுக்கு பதில் சொல்லவேண்டும் என தோன்றினாலும் அவளால் முடிவதில்லை.
சட்டென ஒட்டிக்கொள்ளும் நாக்கும் சண்டித்தனம் செய்ய பேசு பேசு என்றால் என்ன பேச என்று தான் தோன்றியது.
அவளின் அடிமனதில் படிந்திருக்கும் அவன் மீதான விருப்பமின்மையும் ஒரு காரணம் என்பது உணரவே இல்லை ஆராத்தியா.
அதன் பின்னர் ஆராத்தியாவை விடுதியில் இருந்து அழைக்க வேண்டும் என்றால் திரவியமும், கொண்டு விடவேண்டும் என்றால் ரகு, இல்லை ஆதவன் யாராவது ஒருவர் என்று வர ஆரம்பித்திருக்க ஆறு மாதங்கள் கடந்திருந்தது.
பூமிகா இல்லாமல் அந்த கல்லூரியில் கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது ஆராத்தியாவிற்கு.
ஆனாலும் போக போக அதற்கும் பழகி போனாள் அவள். முன்பை போல எல்லாவற்றிற்கும் பூமிகாவை தேடாமல் தானே செய்ய கற்றுக்கொண்டாள்.
இப்படி மாதங்கள் செல்லும் வேகத்தில் ஆராத்தியாவின் இளங்கலை படிப்பும் இதோ முற்றுபெறும் நேரமும் நெருங்க ஆரம்பித்திருந்தது.
கடைசி செமஸ்டர் மட்டுமே இருக்க பூமிகா தாயாகியிருக்கும் தகவலும் கிடைக்கபெற்றதோடு கூடுதலாக இன்னொரு இனிப்பான செய்தி அவளுக்கு கிடைத்திருந்தது.
மகிழ்திரவியத்திற்கு வரன் தேட ஆரம்பித்துவிட்ட விஷயமும் பூமிகாவின் வாயிலாக கிடைத்திருந்தது.
“நிஜமாவா அண்ணி?…” என ஆராத்தியா சந்தோஷமாய் பூமிகாவிடம் கேட்க,
“ஆமா, நாலு இடத்துல இருந்து ஜாதகம் அனுப்பியிருக்காங்க. பொருத்தமும் ஓகே தான் போல? அம்மா இங்க மாமாட்ட சொல்லிட்டிருந்தாங்க…”