“உன் கல்யாணத்துக்காக ஜோஸியர் சொன்னது போன மாசத்தோட முடிஞ்சதுப்பா. அதான் உனக்கு வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்ன்னு…” என்றார் அபிராமி.
“அதுக்குன்னு இதுதான் விஷயம் அப்படின்னு சொல்லி வர சொல்லமாட்டீங்களா? நான் என்ன வேண்டாம்ன்னா சொல்ல போறேன்?…” என்றவன்,
“நீங்களே பார்த்து முடிவு செய்ய வேண்டியது தானே? நான் எதுக்கு இப்போ?…” என்றும் கேட்டான்.
“நம்ம குலதெய்வ கோவில்ல பொங்கல் வச்சு பட்டு சாத்தனும். உன்னை வச்சு தான் பூஜையும் செய்யனும். நாளைக்கு நல்ல நாள்ன்னு குறிச்சு குடுத்திருக்கார்…” அபிராமி கூறவும் தலையசைத்தவன்,
“ஹ்ம்ம், ஓகே…” என்றான் திரவியம்.
“உன்னை கோவிலுக்கு தான் வர சொல்லியிருந்தோம் தீரா. நீ கிளம்பின நேரம் தான் தரகரும் வரன் வந்திருக்கறதா சொன்னார். அதான் இதையும் சேர்த்து பார்த்திருவோம்ன்னு…” என தயாளன் சொல்ல,
“பூமிக்கு இப்பதான் கல்யாணம் முடிச்சோம். எனக்கு அதுக்குள்ளவா?…” திரவியம் யோசிக்க,
“அதனால என்ன? இப்பருந்தே பார்க்க ஆரம்பிப்போம். பொண்ணு அமையும் போது அமையட்டும்…” தென்னரசுவும் கூற,
“சரிங்க மாமா…” என்றான் திரவியம்.
பூமிகாவும், இந்துவும் சீதாவின் முகத்தையும், அபிராமியின் முகத்தையுமே மாறி மாறி பார்த்தபடி இருந்தார்கள்.
ஒரு நல்ல காரியம் நடக்கவிருக்கிறது. ஆனாலும் பலவருடங்களாக நெஞ்சுக்குள் வளர்த்து வந்த மனதின் ஆசை நிராசையாகும் தருணம்.
இரு தாய்களுமே யாருமறியாமல் மனதளவில் கொஞ்சமேனும் உடைந்து தான் போயிருந்தனர்.
“இல்ல மாமா, முதல்ல நீங்க பாருங்க….” என திரவியம் மறுக்க,
“வாழ போறது நீ தான் ப்பா தீரா. வாங்கி பாரு…” என்று தென்னரசு சொல்லவும் தரகர் அவனிடம் புகைப்படங்களை நீட்டவும் வாங்கினான்.
“உனக்கு புடிச்சிருந்தா மட்டும் சொல்லு. கட்டாயமா இதுல இருந்து செலெக்ட் பண்ணனும்ன்னு இல்லை தீரா. வேற கூட பார்க்கலாம்…” என்று தயாளன் சொல்லவும் புன்னகைத்து தலையாட்டினான் திரவியம்.
“டேய் நீ வெக்கப்பட கூட செய்வியா?…” என ஆதவன் சிரிக்க அவனை முறைத்தவன்,
“என் முகத்தை பார்த்தா வெட்கப்படறது மாதிரி தெரியுதா? சும்மா எதையாச்சும் சொல்லனும்னு சொல்ல கூடாது…” என்றான் திரவியம் நறுக்கென அவனின் கையில் கிள்ளி வைத்து.
“சரி சரி. போட்டோவை பிரிச்சு பார்…” என ஆதவன் சொல்லவும் பூமிகாவும், இந்துவும் திரவியத்தின் பின்னால் வந்து நின்றுவிட்டனர்.
“என்னை ஏன்டி இழுத்துட்டு வர?…” இந்து பூமிகாவை கேட்க,
“தனியா போனா சும்மாருக்கமாட்டியான்னு எங்கம்மா பேசுவாங்க. அதான் துணைக்கு ஒரு ஆறுதலுக்கு…” என கண்ணடித்த பூமிகா,
“அண்ணா பிரிங்க…” என்றாள் திரவியத்திடம்.
“வேணும்னா நீ முதல்ல பாரேன் பூமி…” என திரவியம் சிரித்தான்.
“இதென்ன நீ பாரு, நீ பாருன்னு? கவர்க்குள்ள போட்டோ தானே இருக்கு? என்னவோ பூகம்பமே இருக்கற மாதிரி தான்…” என்றவள்,
“சீக்கிரம் பார்த்து செலெக்ட் பண்ணுங்க. தியா வேற பொண்ணு போட்டோவை அனுப்ப சொன்னா…” என்றதும் படக்கென்று திரும்பி பார்த்தவன்,
“அதுக்குள்ளே அவகிட்ட சொல்லியாச்சா?…” என முறைக்கவும் பூமிகா கப்பென்று வாயை மூடினாள்.
“உனக்கு யாரும் ஆப்பு வைக்க வேணா. நீயே வச்சு ஏறி உக்கார்ந்துப்ப….” என்று இந்து கிண்டலடித்தாள் பூமிகாவை.
“வாயும் வயிறுமா இருக்கேன். என்னை போய்…” என்று பூமிகா ஆரம்பிக்கும் பொழுதே திரவியம் கவரிலிருந்து புகைப்படங்களை வெளியே எடுத்தான்.
“போட்டோவுக்கு பின்னாடியே பேர், படிப்பு, எங்க இருக்காங்கன்னு எல்லாம் இருக்கு…” என்று தரகர் சொல்லவும் தலையசைத்தவன் ஒவ்வொரு போட்டோவாய் பார்க்க அதில் ஒன்று வந்தனாவின் புகைப்படமும்.
பார்த்ததும் திரவியம் மட்டுமல்லாது பின் நின்றிருந்த இந்து, பூமிகாவும் திகைத்து போனார்கள்.
திரவியம் அந்த புகைப்படத்தை கூடுதலாக சில நொடி பார்த்ததுமே தரகர் எட்டி பார்த்துவிட்டு அவர்களை பற்றி கூற ஆரம்பித்தார்.
“பொண்ணு பேர் வந்தனா. கோவை ஈபில அப்பா பெரிய போஸ்ட்டிங். இப்ப சில வருஷத்துக்கு முன்னாடி தான் இங்க ட்ரான்ஸ்பர்ல கோவைக்கே வந்தாங்க. அதுக்கு முன்ன…” என்று அவர்களை பற்றி எல்லாம் விலாவரியாக சொல்ல அபிராமியும் புகைப்படத்தை வாங்கி பார்த்தார்.
“இந்த பொண்ணை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே…” என அபிராமி சொல்ல சீதாவும் யார் என பார்த்துவிட்டு,
“அட, நம்ம பூமியோட ப்ரென்ட். நிச்சயத்துக்கு கூட வந்திருந்துச்சே…” என்றார் அவரும்.
“ஆமா, ஆமா…” என்றதும் தீனதயாளன், தென்னரசு, ஆதவன் என அனைவரிடமும் வந்தனாவின் புகைப்படம் கை மாறியது.
“நல்ல அழகான பொண்ணு தான். திருத்தமான முகமும் கூட…” சீதா சொல்ல,
“ஆனா…” என்ற அபிராமி சட்டென பேச்சை நிறுத்திவிட்டு மகனை பார்த்தார்.
என்னவோ அன்று வந்தனாவின் அதிகப்படியான பவ்யமும், திடீர் பாசமும் அவருக்கு இப்போதும் வரவழைத்துக்கொண்டதாகவே தோன்றியது.
‘இந்த பெண்ணா?’ என மனதிற்குள் ஒரு பிடித்தமில்லாமை புகைப்படத்தை பார்த்ததும் தோன்ற சீதாவின் பேச்சில் கவனம் வைத்தார்.