“நல்ல பொண்ணு, முதல் தடவை பார்த்ததுமே என்ன ஒரு பணிவு, என்ன ஒரு பாசமான அக்கறையான பேச்சு. கூட கொஞ்ச நேரம் இல்லாம கிளம்பிருச்சு அன்னைக்கு. அதுக்கு என்ன அவசரமோ?…” என்ற சீதா,
“இங்க சுத்தி பார்க்க குடும்பமா வந்தப்ப கூட அதையும் விட்டுட்டு நம்ம பூமிக்காக நிச்சயத்துக்கு அவ்வளோ தூரம் வந்துச்சு. நல்ல பொண்ணு தான்…” என்றார் அவர்.
‘எங்க சீதாவுக்கு எல்லாருமே நல்லவங்க தான்’ என மனதிற்குள் தன் அண்ணன் மனைவியின் மீது கனிந்த எண்ணங்களுடன் மெல்லிய புன்னகையுடன் அவரை பார்த்தார் அபிராமி.
பூமிகாவுக்கு உள்ளுக்குள் அத்தனை பிரளயம். வந்தனா இப்படி தங்களை சுற்றி சுற்றி வருகிறாளே என்று.
அதுவும் தன் அண்ணன் அதனை கவனித்து வேறு பார்க்க இன்னும் திகிலடைந்து போனாள் சம்மதம் சொல்லிவிடுவானோ என்று.
“போச்சு போச்சு. இந்தண்ணா வேற உத்து பார்த்து வச்சிட்டாங்க. ஒருவேளை அப்ப பிடிக்கலை. இப்ப பிடிக்குது கான்செப்ட்டா?…” என்று இந்துவின் காதில் முணுமுணுத்தாள்.
“ப்ச், அதெல்லாம் இருக்காது. நீ கொஞ்சம் பொறுமையா இரு…” என்ற இந்து,
“அப்படியே பிடிச்சாலும் அண்ணா தானே வாழ போறாங்க. விடு…” என்றாள்.
“உங்கள தொலைச்சிட்டேன் க்கா. இப்படி பேசினா. ம்ஹூம், நீங்க வாயையே திறக்க கூடாது. சத்தியமா அண்ணாவுக்கும் அவளுக்கும் செட்டே ஆகாது…” என புலம்பலோ புலம்பல் பூமிகாவிடம்.
இந்துவிற்கு ஒருபக்கம் சிரிப்பாக இருந்தாலும் இன்னொருபக்கம் திரவியம் என்ன முடிவெடுப்பானோ என்றிருந்தது.
“என்ன தீரா?…” என தயாளன் மகனிடம் கேட்க,
“அன்னைக்கு நீ பார்த்தியாப்பா?…” என்றார் தென்னரசு.
“தியா கூட சொன்னாங்க. காலேஜ்ல இருந்து ஊட்டிக்கு வரப்போ நம்ம ஜீப்ல தான் தீராவோட வந்து இறங்கினதா. அந்த பொண்ணுமே சொல்லுச்சு. உங்க குடும்பத்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு…” என்ற சீதா,
“என்னய்யா உனக்கு சரிதானா? ஏனா நாங்க பார்க்கறதுக்கு முன்னவே நீ பார்த்திருக்க. உனக்கும் தெரிஞ்சிருக்குமே? என்னப்பா?…” என கேட்க திரவியம் முகத்திலேயே தெரிந்தது அவனுக்கு ஒப்பவில்லை என்று.
பெரியவர்கள் பேச்சுக்களில் இருந்தாலும் அபிராமியின் கவனம் மகனின் முகத்தில் தான்.
‘என்ன நினைக்கிறான்? ஒருவேளை பிடித்திருந்தால் வேண்டுமென்றால் அது அவன் விருப்பத்திற்கே இருக்கட்டும்’ என்ற முடிவுக்கே வந்திருந்தார் அபிராமி.
“அதெல்லாம் இல்லை த்தை. எங்கையோ பார்த்தமாதிரி இருக்கேன்னு தான் நானும் கூட ரெண்டுநிமிஷம் பார்த்துட்டேன். விட்டா இப்பவே கல்யாணத்தை பண்ணி வச்சிருவீங்க போல?…” என்றதும் தான் அபிராமிக்கு நிம்மதியானது.
“அப்ப?…” சீதா கேட்க,
“இந்த பொண்ணு வேண்டாம்ன்னு சொன்னேன்…” என்று அந்த புகைப்படத்தை கவருக்குள் வைத்துவிட்டு அடுத்ததை பார்த்தான்.
எரிச்சல் ஒருபுறமும், புகைச்சல் ஒருபுறமும் அவனின் மனதில். இவர்களாக யாரையாவது தேர்ந்தெடுக்க வேண்டியது தானே? இதென்ன பொருளா புகைப்படம் பார்த்து தேர்வு செய்ய? என உள்ளுக்குள் அனல் பொங்கியது.
காண்பித்துக்கொள்ளாமல் கடைசியாக பார்த்த புகைப்படத்தையும், அதன் பின்னிருந்த விவரங்களையும் பார்த்தவன்,
“இவங்க ஓகே ம்மா…” என்று அபிராமியிடம் நீட்டினான்.
வாங்கி பார்த்தவர்களுக்கு இன்னும் திருப்தி. நல்ல படிப்பு, நல்ல குடும்ப பின்னணி என்று எல்லாமே இருக்க பொருத்தமும் நன்றாக இருந்தது.
அந்த பெண்ணின் வீட்டினரிடம் தானே தகவலை சொல்லிவிடுகிறேன் என சொல்லிவிட்டு தரகர் கிளம்பியவர், அவர்களின் வீட்டிற்கு வேறு திரவியத்தை பற்றிய விவரங்களை அனுப்பிவைக்க வேண்டும் என சொல்ல,
“அமைஞ்சிருச்சு தான். அதுக்கு முன்ன பொண்ணு வீட்டை பத்தி நாமளும் கொஞ்சம் விசாரிச்சிடுவோம். அவங்களும் நம்ம வீட்டை பத்தி எப்படியும் விசாரிப்பாங்க தானே? குடும்பம் பத்தி தெரிஞ்சுகிட்டு அவங்களுக்கு தகவல் சொல்லுவோம்….” அபிராமி சொல்ல,
“சரிம்மா, சாப்பிட்டு மதுரையில இருக்கற என் சித்தப்பாக்கிட்டையும், அண்ணன்கிட்டயும் சொல்லி பார்க்க சொல்லுவோம்…” என்றார் தயாளன்.
“என்னோட க்ளோஸ் பிரண்ட் ஒருத்தன் மதுரைல இருக்கான். சொல்லி குடும்பம் எப்படின்னு பார்த்துக்குவோம்…” என தென்னரசுவும் சொல்ல போனை எடுத்து உடனே பேசி விஷயத்தை போட்டு வைத்தனர்.
ஒருமணி நேரத்தில் கூப்பிடுவதாக சொல்லி வைத்தவர்கள் சூட்டோடு சூட்டாக விசாரித்துவிட்டு பெரிய கூட்டம் என்றும், நல்ல இடம் என்றும் சொல்லிவைக்க சரி என்றே பட்டது இவர்களுக்கும்.
தரகருக்கு அழைத்து திரவியம் பற்றிய விவரங்களை அனுப்புமாறு சொல்லிவிட்டு வைத்துவிட்டார்.
“ஹ்ம்ம், அடுத்து அவங்க சொன்னதும் நாம மூவ் பண்ணலாம்…” என தென்னரசு பேச தயாளன் மகனை பார்த்தார்.
இந்து, பூமிகா, ஆதவனுடன் அமர்ந்து அனுவை வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தான் திரவியம்.
அவனிடம் மீண்டும் ஒருமுறை பெண்ணை நிஜமாகவே பிடித்துள்ளதா தீனதயாளன் மகனிடம் கேட்க திரவியத்திற்கு அத்தனை சங்கடமாக இருந்தது.
“அதான் சொல்லிட்டேனேப்பா? எத்தனை தடவை சொல்ல? நீங்க பேசி முடிவு பண்ணுங்க போதும்…” என்றவன் எழுந்துவிட்டான்.
அந்த பெண்ணின் புகைப்படத்தை அனைவருமே மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் தீவிரமே சொல்லியது விரைவில் திருமணத்தை நடத்திவிடுவார்கள் என்று.
“என்னடா இந்த முழி முழிக்கிற?…” என ஆதவன் அவனின் தோளில் தட்ட இருவரும் மெதுவாக வெளியே வந்தனர்.
“இத்தனை நாள் ஜாலியா இருந்தேன். இனிமே ஒன்னொண்ணுக்கும் இன்பர்மேஷன் குடுக்கனும். எப்ப போறேன், எப்ப வரேன்னு சொல்லனும். அதான் கொஞ்சம் ஜெர்க்காகுது…” என சிரித்தபடி திரவியம் சொல்ல,
“அதான்டா ஃபேமிலி மேன்…” ஆதவன் புன்னகைத்தான்.
“அதுமட்டுமா ஃபேமிலி மேன்? இதையெல்லாம் இப்பவும் நான் செய்யறேன் தான். அம்மாக்கிட்ட இங்க இருந்தாலும், ஊர்ல இருந்தாலும் ஒன்னொன்னும் சொல்லுவேன் தான். ஆனா அது வேற, இது வேற…” என்றான்.