இரவு நேர உணவும் அங்கேயே தயாராக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் அனைவருமே.
ரகுவும் வீட்டிலிருக்க ஆராத்தியாவை தவிர்த்து மற்றவர்கள் எல்லோருமே அங்கே தான் இருந்தனர்.
உண்ணும் பொழுதே தயாளன் மொபைலுக்கு அழைப்பு வந்து சேர்ந்தது தரகரிடமிருந்து.
பெண்ணின் குடும்பத்தினருக்கும் திரவியத்தை பிடித்திருக்கிறது என்றும், இந்த சம்பந்தத்தில் பரம திருப்தி என்றும், மேற்கொண்டு பேசலாம் என்றும் சொல்லியிருப்பதாக கூறிவிட அப்போதே வீட்டில் கல்யாண களை கூடிவிட்டதை போலிருந்தது அவருக்கு.
“ரொம்ப சந்தோஷம். நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு நாங்களே பேசறோம்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
“பொண்ணு வீட்டுலயும் ரொம்ப சந்தோஷமாம் எப்போ மேற்கொண்டு பேசலாம்ன்னு கேட்டிருக்காங்க. நாளைக்கு பேசலாம்ன்னு சொல்லியிருக்கேன்…” என்றார் தயாளன்.
“நாளைக்கே நல்ல நாள் தான். கோவிலுக்கு போய்ட்டு வந்துட்டு அடுத்ததை ஆரம்பிச்சிருவோம்…” என்றார் தென்னரசு.
“பொண்ணோட தாய்மாமா நம்பரை அனுப்பறேன்னு சொல்லியிருக்கார். அவங்க வீட்டுல அவர் தான் மூத்தவராம். இந்த பேச்சு எல்லாம் அவங்க தான் பேசுவாங்கன்னு சொல்லியிருக்காங்க…” என்றும் சொல்ல அனைவருக்குமே திருப்தி தான் தயாளன் சொல்லிய விஷயங்கள்.
அதனை எல்லாம் திரவியமும் கேட்டுக்கொண்டே தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
மீண்டும் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகத்தை நினைவில் கொண்டு வந்து பார்த்தான்.
“அண்ணா இன்னொரு தோசை?…” என இந்து அவனிடம் கேட்க,
“இருக்கட்டும்மா, இதுவே போதும்…” என்று எழுந்துகொண்டான்.
அனைவரும் உண்டு முடித்து அந்த பெண்ணை பற்றியும், குடும்பத்தினரை பற்றியும் பேச ஆரம்பித்து மறுநாள் கோவிலுக்கு செல்வதை பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர்.
இரவு அவ்வளவு நேரமாகியும் வீட்டிலிருந்து யாரும் தனக்கு அழைக்காததில் ஆராத்தியாவே அழைக்க தலையில் கை வைத்தாள் பூமிகா.
“பாருங்கக்கா, நான் மறந்தே போய்ட்டேன்…” என்றபடி போனை எடுக்க,
“இல்லை இல்லை. உங்கண்ணன்கிட்ட மாட்டறவங்கலாம் தான் பாவம். இப்ப இந்த ஸ்ரீஜா. சரி அவங்க ஐடி குடுங்க ஒரு ப்ரென்ட் ரிக்வெஸ்ட் குடுத்து வைப்போம்…” என்று கேட்டாள் ஆராத்தியா.
“உதைபடுவீங்க ரெண்டுபேரும்…” என இந்து அதட்ட,
“ஏன் ஏன்?…” என்று வந்தாள் ஆராத்தியா.
“என்ன ஏன்? முதல்ல பொண்ணு பார்த்து பேசி முடிச்சு கன்பார்ம் பண்ணட்டும். அதுக்கப்பறம் இதையெல்லாம் பார்த்துக்கலாம்….” என்றாள் கண்டிப்புடன்.
“ஆமா, ஆமா. நீங்க சொல்றது கரெக்ட் அண்ணி. முதல்ல இந்த பூமி அண்ணியை அண்ணாட்ட சொல்லி வைக்கனும்…” என்றாள் ஆராத்தியாவும்.
“ஏன்டி பேசமாட்ட? உனக்கு எல்லாம் தேடி வச்சேன்ல?…” என இருவரும் போனிலேயே மல்லுக்கட்ட ஆரம்பிக்க இந்து அவர்களை சமாதானம் செய்ய என்று கலகலப்பாக சென்றது.
மறுநாள் கோவிலுக்கு தென்னரசு, சீதாவால் வரமுடியாது போக, ஆதவன் பேக்டரிக்கு போய்விட இந்து, பூமிகா, ரகு மட்டுமே தென்னரசு குடும்பத்தில் இருந்து வந்திருந்தனர்.
இந்த பக்கம் தயாளன், அபிராமி, மகிழ்திரவியம் என்றிருக்க போனதுமே தெய்வத்தை வேண்டிவிட்டு வேலையை ஆரம்பித்தனர்.
பொங்கல் வைத்து பூஜையை ஆரம்பிக்க அங்கிருந்த பூசாரி கேட்டுவிட்டார் திரவியத்தின் திருமணம் பற்றி தயாளனிடம்.
“பொண்ணு பார்த்துட்டோம் சாமி. இனி தான் பேசி முடிக்கனும்…” என அபிராமி யார் எங்கே என சொல்லவும்,
“தம்பிக்கு பொண்ணு வெளில எடுக்கறீங்களாம்மா?…” என்று நம்ப முடியாத பாவனையுடன் அதிர்ந்து கேட்டுவிட்டார் அவர்.
அனைவருக்குமே முகம் மாறிவிட உடனே சுதாரித்த தயாளன் சிரித்தபடி அவரிடம்,