சஞ்சய்யை பார்த்துவிட்டு தன்னுடைய வீடு நோக்கி வந்தவன் மனமெங்கும் இதை எப்படி வீட்டினருக்கு தெரியப்படுத்துவது என்ற யோசனையிலையே சுழன்றது.
சஞ்சய் சொல்லாமல் அவனுடைய தனிப்பட்ட விஷயத்தை அதிலும் காதலை தான் சொல்வது முறையாகாது என்று எண்ணியபடி உள்ளே வந்து அமர்ந்தவன் தலையை கையில் தாங்கிக்கொள்ள,
“என்ன முகி? அதுக்குள்ளே வந்துட்ட? போன வேலை முடிஞ்சதா?…” என்றார் ஷோபா மகனுக்கு தண்ணீரை எடுத்து வந்து.
“ஹ்ம்ம், ம்மா. முடிஞ்சதுன்னு சொல்ல முடியாது…” என நீரை வாங்கி பருகியவனுக்கு தலை வலித்தது.
“என்னப்பா தலை வலிக்குதா? முகமே சரியில்லையே…” அவனின் நெற்றியை கோதிக்கொண்டே கேட்க,
“ம்மா, ஈவ்னிங் வேதாத்தை வீட்டுக்கு போகனும். கூட வாங்க…” என்றதும் திடுக்கிட்டார்.
“என்ன பேசற முகில்? நாம அங்க போனா நல்லாருக்காது…”
“ஏன்? அத்தை வீடு தானே?…”
“உன் மாமா வீடும் தான். அவருக்கு நாம போறது பிடிக்காது முகில். அதுவும் இப்ப இவ்வளவு சண்டைக்கு அப்பறமும்…”
ஷோபாவிற்கு சுத்தமாக ஒப்புதல் இல்லை அங்கே செல்வது. அதிலும் முன்பானால் கூட பிரச்சனை இல்லை. இப்பொது இத்தனை களேபரத்திற்கு பின்னும், பெண்ணையே தரமுடியாது என்ற சொல்லிய பின்னும் அங்கே சென்று நிற்க மனது உடன்படவில்லை.
வாய்விட்டு சொல்லாது முகத்திலேயே தனது விருப்பமின்மையை காண்பித்துவிட்டார் ஷோபா.
“என்னம்மா?…”
“இல்லை, வேண்டாம்…” என ஷோபா மறுக்க,
“ம்ஹூம், போகனும்மா. போய்த்தான் ஆகனும்…” பிடிவாதமான குரலில் முகிலன் சொல்ல யோசனையுடன் பார்த்தார்.
“என்ன விஷயம் முகில்? எதுவும் பிரச்சனையா?…”
“ஹ்ம்ம், ஆமா. ஆனா அங்க போய் சொல்றேன்ம்மா…”
“அப்பாவுக்கு தெரிஞ்சா தேவையில்லாத பிரச்சனை…”
“அப்பா வரதுக்குள்ள வந்திருவோம்…” என்றவன்,
“சஞ்சு டெல்லிக்கு கிளம்பறான் இன்னைக்கு. அவன் கிளம்பறதுக்குள்ள போகனும்…”
“உனக்கு பார்க்கனும்னா ஏர்போர்ட் போய் பாரு. இதுக்காகவா வீட்டுக்கு?…”
“அம்மா அங்க வந்தா என்னன்னு தெரிஞ்சுக்க போறீங்க. ஆனா இதை ஏர்போர்ட்ல வச்சு பேச முடியாது…”
“என்னவோ சொல்ற. எனக்கு எதுவும் சரியா படலை…” என சொல்லியவர்,
தானும் இரண்டொரு நாளில் கிராமத்திற்கு செல்ல வேண்டும். தேவையான ஒருசில உடைகளை எல்லாம் எடுத்து கட்டிலில் வைத்தான்.
கொண்டு செல்லவேண்டிய பொருட்களையுமே தனியே வரிசைப்படுத்தினான். ஒரு நோட்பேடில் எதுவும் மறந்துவிட வேண்டாம் என்பதற்காக குறிப்புகளையும் எடுத்துக்கொண்டிருந்தான்.
தோட்டக்கலை துறையில் வேலை செய்யும் தன் நண்பன் ஒருவனின் தந்தையை மறுநாள் சென்று பார்க்க வேண்டும் எனவும் குறித்துக்கொண்டான்.
ஒவ்வொன்றும் திட்டமிட்டவாறு நடந்துகொண்டு இருந்தது முகிலனுக்கு. இப்போது கிராமத்திற்கு சென்றால் சென்றதும் தான் அங்கு செய்யவேண்டிய வேலைகளையும் வரிசைப்படுத்தி இருந்தான்.
ஏற்கனவே சம்பந்தம் நன்றாத்தான் கவனித்து வருகிறார். ஆனால் அதனை உள்ளூர் சந்தைகளில் மட்டுமே வியாபாரம் செய்து வருகிறார்.
இருப்பதை பெருக்கவும், புதுமையாய் செய்யவும் அவர் முனையவில்லை. இப்போது வரை இருப்பதை அதன் அளவிலேயே பார்த்துவருகிறார்.
பார்க்கப்படாமல் சில நிலங்கள் வேறு இருக்க அதன் மண் வகைகளை சாம்பிளாக எடுத்து வந்திருந்தான்.
அதில் என்ன பயிரிடலாம் என்பது வரை ஓரளவு விவரங்கள் தெரிந்திருந்தாலும் இப்போது முழுமூச்சாய் அதில் இறங்குவது என முடிவெடுத்த பின் அடி ஆழம் வரை தெரிந்துகொள்ள விரும்பினான்.
அதை பற்றியும் ஏற்கனவே குறிப்பெடுத்திருக்க நிலங்களின் விவரங்களையும் அடக்கி இருந்தது அவனின் மடிக்கணினி.
இரண்டுமணி நேரம் கடந்துவிட்டது முகிலன் தன் அறைக்குள் வந்து. நேரம் சென்றதே தவிர சஞ்சய்யிடம் இருந்து போன் எதுவும் வரவில்லை.
“முகில்…” அவனின் அறை கதவை தட்டிவிட்டு ஷோபா வர,
“சொல்லுங்கம்மா…” என்றான் இன்னும் கட்டிலில் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்தவற்றில் எதையோ எழுதியபடி.
“இல்லை, இன்னும் கிளம்பாம இருக்கியே? நேரமாச்சு…” என ஞாபகப்படுத்த,
“ஆமா, இதோ ம்மா…” என எழுந்தவன் கையில் இருந்த வாட்சை பார்க்க முகம் இறுகியது.
“என்னையே சீட் பண்ண பார்க்கானா இவன்?…” என கோபத்துடன் சொல்ல,
“என்னப்பா? யாரு?…” ஷோபா குழம்பி போனார்.
“ம்மா, டூ மினிட்ஸ். பேஸ் வாஷ் பண்ணிட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரேன். நீங்க ரெடி தானே?…” என்றான் ஒரு உடையை கையில் எடுத்து.
“நான் ரெடி தான்…”
“அப்போ எனக்கு ஒரு காபி மட்டும் லைட்டா…” என்று சொல்லி பாத்ரூமிற்குள் சென்றுவிட ஷோபாவும் மகனுக்கு காபியை கலந்து வைத்துவிட்டு இளங்கோவிற்கு அழைத்தார்.
“என்ன இந்நேரம் ஷோபா?…” என வேலையினூடே மனைவிக்கு பதிலளித்தார் இளங்கோ.
“நானும் முகிலும் வெளில போறோம்…”
“போய்ட்டு வாங்க. அதுக்கென்ன?…”
“இல்லை முகில் என்னை கூட்டிட்டு உங்க தங்கச்சி வீட்டுக்கு போகனும்னு சொல்றான்…”
“ஷோபா…” என பல்லை கடித்தார் இளங்கோ.
“இப்போ எதுக்காம் அங்க? அதான் சண்டை போட்டு ஒன்னுமில்லைன்னு போய்ட்டாரு தானே?…”
“அவர் போனா? இதை உங்க தங்கச்சிட்ட சொல்லுவீங்களா நீங்க?…” என கேட்க அவரிடத்தில் அமைதி.
“எனக்கு தெரியலை. போகனும்னு அவன் தான் சொல்றான். நான் முடியாதுன்னு சொன்னேன். ஆனா பிடிவாதமா சொல்றான்…”
“அங்க போனா அந்தாளு மதிக்கமாட்டார்…”
“இன்னைக்கு தான் இது உங்களுக்கு தெரியுதா?…” ஷோபாவிற்கு அத்தனை வருத்தம்.
“என்னாச்சு? இன்னைக்கு உன் பேச்சே ஒருமாதிரி இருக்கே…”
“தெரியலை. மனசுக்கு என்னவோ சஞ்சலமா இருக்குது. அங்க போக வேண்டாம்ன்னு தோணுது…”
ஷோபா சொல்லிக்கொண்டிருக்க இளங்கோவின் மனது அதை விடுத்து வேறாக யோசித்தது.
ஒருவேளை அந்த மகன் மனது மாறி அந்த வாக்குவாதத்திற்கு வருத்தம் தெரிவிக்க போகிறானோ? ஆனால்? என மனது அங்கேயே நின்றது.
வாய்ப்பில்லை என்றாலும் ஒருவேளை மகனின் மனது மாறிவிட்டதோ என யோசித்தார்.
இங்கே வந்ததில் இருந்து முகிலன் ஊரை பற்றி, அங்கே தான் செய்யவிருப்பதை பற்றி எதுவும் ஷோபாவிடம் கூட பேசிக்கொள்ளவில்லை என கவனித்திருந்தார்.
ஒருவேளை மகனின் மனது மாறியிருந்தால். ஆனால் அதற்கு அங்கே செல்ல வேண்டுமா? போக கூடாது என சொல்லத்தான் ஆசை. முகிலன் கேட்க வேண்டுமே?
“ஷோபா அவன்கிட்ட சொல்லு. அங்க வேண்டாம். எனக்கு பிடிக்கலை…”
“இதுதான், இதுதான் நம்ம பிள்ளைக்கும் அவங்க பிள்ளைக்கும் உள்ள வித்தியாசம். இப்ப வரைக்கும் சஞ்சு நம்மக்கிட்ட சொன்னானா இதை பத்தி?…”
“என்ன சொல்றீங்க?…”
“இங்க பார் ஷோபா, என்னதான் சஞ்சு என் தங்கச்சி பையனா இருந்தாலும் நாம வேணும்னு அவன் நினைக்கவே இல்லை. முகில் மனசு அவனுக்கு இல்லைன்னு சொல்றேன். பிரச்சனை ஆகிடுச்சு. சண்டைக்கு அப்பறம் என்ன ஏதுன்னு எதாச்சும் பேசிருப்பானா?…”
“ஆனா முகில் வேதாக்கிட்ட பேசாம இல்லையே? மத்ததுக்கு எல்லாம் முதல்ல நம்மளை தேடி வரவன் இவ்வளோ பெரிய விஷயம். இந்த மாதிரி வேலை மாத்தலாகி இருக்கு. ஊருக்கு போறேன்னு சொல்லனும்னு தோணுச்சா அவனுக்கு?…”
இளங்கோ சொல்லவும் ஷோபாவும் அந்த கோணத்தில் யோசித்தார். ஆனாலும் தவறாக தோன்றவில்லை. அங்கே அவனுக்கு என்ன சூழ்நிலையோ என தான் நினைத்தார்.
“நீங்க தப்பா நினைக்கறீங்க? ஒருவேளை அவனுக்கு ஆபீஸ்ல பிரஷர் இருந்திருக்கலாம். வீட்டுல அண்ணன் என்ன சொல்வார்ன்னு யோசிச்சிருக்கலாம். நாமளா ஒண்ணை நினைச்சு பிள்ளைங்களை பேச வேண்டாம். சஞ்சுவும் நமக்கு முகில் மாதிரி தானே?…”
என்னதான் ஷோபா சொன்னாலும் இளங்கோவிற்கு இப்போது அத்தனையும் தவறாகவே பட்டது.
பார்க்கும் பார்வை அனைத்தும் அனலரசுவை மட்டுமல்ல அந்த குடும்பத்தினர் மேலும் எதிரான பார்வையையே தொடர செய்தது இளங்கோவிற்கு.
என்னதான் தங்கை என நினைத்தாலும் கூடவே அனலரசுவின் பிம்பமும் தோன்ற அதில் மனதிற்குள் கசப்பு உருவாவதை தடுக்க முடியவில்லை இளங்கோவால்.