“வா முகில், வாங்கண்ணி…” என வேதா வந்து ஷோபாவை கைபிடித்து வரவேற்றார்.
“ஓவி போய் டீ போடு…” என மகளை அனுப்ப,
“அதெல்லாம் வேண்டாம் வேதா. என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துருக்கு? அப்படி என்ன வேலை?…” என்றார் சஞ்சய்யை ஒரு பார்வை பார்த்துவிட்டு.
“சஞ்சு டெல்லிக்கு கிளம்பறான் அண்ணி. அதான் எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கேன். அங்க போய் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவான்ல. அதான் எல்லாமே ரெடி பன்றேன்…”
“ஓஹ்…” ஷோபா நிறுத்த,
“உங்ககிட்ட சொல்லனும்னு தான் தோணும். எங்க? இங்க என்ன நிலமைன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்லை. எனக்குமே சங்கடமா இருந்துச்சு…”
“அதனால என்ன வேதா? அதான் தெரியவும் வந்திருக்கேன் தானே?…”
“முகில் சொன்னானா?…” வேதா கேட்க,
“ஆமா, இப்ப வரும் போது தான் சொன்னான்…” என்றார் ஷோபா.
“சரி இருங்க. நீங்க பேசிட்டு இருங்க. உள்ள ஓவியை போய் பார்க்கறேன்…” என எழ தானும் எழுந்தார் ஷோபா.
“நானும் வரேன்…”என செல்லவும் முகிலும், சஞ்சையும் மட்டும் இருந்தார்கள்.
முகிலனின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்ற சஞ்சய் கதவை சாற்றிவிட்டு,
“என்னடா என்ன உன் பிரச்சனை?…” என்றான் சஞ்சய்.
“பிரச்சனை எனக்கில்லை. நீ உண்மையை சொல்லிட்டு போ…”
“உண்மையை சொன்னா மட்டும் என்ன ஆகிடும்? எனக்கு யார்க்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்…” என்றான் பிடிவாதமாய்.
“சஞ்சய் இப்பவு சொல்றேன். நீ தாராளமா கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நான் ஃபுல் சப்போர்ட் தருவேன். ஆனா இப்படி சொல்லாம பன்றது, அதுவும் ஏமாத்தி போறது எல்லாம்…”
“என்ன என்ன ஏமாத்திட்டேன்? இதுவரைக்கும் இவங்க எல்லார் சொல்படி தானே இருந்தேன். இனி நான் என் இஷ்டப்படி இருப்பேன்…”
“இருந்துக்கோ சஞ்சு, ஆனா சொல்லிட்டு இருந்துக்கோ…”
“ஐயோ முகி, இவங்க யாரும் கல்யாணத்தை நடத்த விடமாட்டாங்க. என் வாழ்க்கையை பாழாக்கிருவாங்க…”
“நீயா அப்படி நினைச்சுட்டு இருக்க. அவங்க உன்னை பெத்தவங்க…”
“அப்போ நீ ஏன் அவங்க சொல்றதுக்கு மாறா செய்யறாயாம்?…” என்றதும் முகிலனுக்கு கோபம்.
“அறிவிருக்கா உனக்கு? நான் எனக்கு பிடிச்சதை செய்யறேன் தான். ஆனா யாருக்கும் தெரியாம ஒன்னும் செய்யலை. அதே நேரம் நான் செய்யறதும், நீ செய்ய போறதும் ஒன்னு இல்லை…”
“ஒன்னோ இல்லையோ? எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாம தான் என் கல்யாணம் நடக்கனும். நாளைக்கு கல்யாணத்தை வச்சுட்டு இங்க இவங்க கூட போராட என்னால முடியாது….”
“அப்போ நீ முதல்லையே சொல்லியிருக்கனும் சஞ்சய். கடைசி நேரம் வரை கமுக்கமா இருந்துட்டு…”
“ஏய் நிறுத்து, நான் எப்படியும் இருக்கறேன். உனக்கென்ன வந்துச்சு? நானும் போனா போகுதுன்னு பொறுமையா இருந்தா ரொம்ப பேசற? ஒரு ப்ரெண்டா நினைச்சு உன்கிட்ட ஷேர் பண்ணேன் தானே? என்னை சொல்லனும். உனக்கு சொல்லாம நான் இதை செஞ்சிருந்தா?…”
சஞ்சயின் பேச்சில் முகிலன் அயர்ந்துவிட்டான். என்ன பேசுகிறான் இவன் என்று பார்த்து நிற்க,
“உன்னோட லிமிட்ல இரு இன்னும் இந்த வீட்டுக்கும் உனக்குமே சம்பந்தம் இருக்கான்னு தெரியலை. என் விஷயத்துல தலையிட்ட…” என விரல் நீட்டி எச்சரிக்க,
“என்ன சஞ்சய், என்ன பேசற நீ? வெறும் ப்ரெண்டாவா நான் உனக்கு இருக்கேன்? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலை…”
“நீ எதிர்பார்த்தா என்ன? பார்க்காட்டி என்ன? எனக்கு என் லைப் முக்கியம்…” என்றான் அலட்சியமாக.
“ஓகே இப்போ நீ கிளம்பி போய்ட்டு எப்போ உன் கல்யாணத்தை பத்தி சொல்றதா இருக்க?…”
“அது தெரியும் போது தெரியட்டும். இவங்கக்கிட்ட சொல்லிட்டு என் டைமை வேஸ்ட் பண்ண முடியாது. தெரிஞ்சா உடனே இப்படியா உன்னை வளர்த்தோம்ன்னு சுத்தி உக்கார்ந்து ஒப்பாரி வைப்பாங்க. ஐ டோன் லைக்…”
“இத்தனை செல்பிஷ் நீ? எனக்கு முதல்லையே தெரியாம போச்சு…”
“என்னடா பண்ண சொல்ற? இதுதான் செய்யனும், இதை தான் படிக்கனும், இப்படிதான் வளரனும்னு எல்லா பேரண்ட்ஸும் தான் சொல்லி வளர்ப்பாங்க. ஆனா என்னை பெத்தவங்க அப்படியா? அதுக்கும் மேல டெய்லி எதாச்சும் ஒரு டார்ச்சர்…”
“உங்கப்பா பண்ணினதுக்கு வேதாத்தையும், ஓவியும் என்னடா பண்ணுவாங்க? ஒருத்தருமே இல்லாம பண்ணிக்க நீ யாருமில்லாதவனா? உன் கல்யாணம் எப்படி நடக்கனும்னு எல்லாரும் கனவு கண்டுட்டு இருப்பாங்க?…”
“அவங்க கனவு கண்ட வரைக்கும் போதும். இனி என் வாழ்கையை நான் கனவு கண்ட மாதிரி வாழ்ந்துக்கறேன்…”
“சஞ்சய் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற நீ? உன்னை வாழ வேண்டாம்ன்னு யாரும் சொல்லலை. உங்கப்பாட்ட சொல்லலையா? அது உன் இஷ்டம். ஆனா வேதாத்தைட்ட சொல்லு. அவங்க பாவம்டா…”
“முகி, நீ தான் என்னை ரொம்ப டென்ஷன் பன்ற. முதல்ல நான் இங்க இருந்து போகனும். இந்த வீட்டை விட்டு கிளம்பனும். இங்க இருந்து எப்படா போவோம்ன்னு இருக்கேன். கடைசி நேரத்துல என்னை லாக் பன்ற மாதிரி வந்து நிக்கிற…” என்றவன்,
“என்ன என் பேரண்ட்சை நீயா பார்த்துக்க போற? என்னவோ எல்லாத்தையும் உன் தலையில ஏத்த வந்த மாதிரி பேசிட்டு இருக்க? மாசாமாசம் அம்மாவுக்கும், ஓவிக்கும் பணம் அனுப்பிவிடறேன். அது போதும் அவங்களுக்கு. சொல்ல போனா அதுவே பெருசு அவங்களுக்கு…”
“என்னடா என்ன சொன்ன?…”என சஞ்சய்யின் சட்டையை பிடித்துவிட்டான் முகிலன்.
“விடுடா. இப்ப என்ன சொல்லிட்டேன்? எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. ஒரு நல்ல வேலை கிடைச்சு எங்கையாவது இவங்க கண்ல படாம போய்டனும்னு தான் நான் இத்தனை மெனக்கெட்டு கையை காலை பிடிச்சு ட்ரான்ஸ்பர் வாங்கினா…”
“மனுஷனாடா நீ? நான் பார்த்துப்பேன்டா என்னோட அத்தையையும், ஓவியாவையும். உன்னோட பணத்த தூக்கி குப்பையில போடு. அத்தனை பேசுவாரே உன்னோட அப்பா, அந்த மனுஷன் எந்த சூழ்நிலையிலையும் உன்னோட அம்மாவையும், தங்கச்சியையும் யார்க்கிட்டயும் எதையும் வாங்கிக்கற மாதிரி வச்சதே இல்லை…”
“உண்மையை தானே சொல்றேன். உங்கப்பா எல்லாரையும் அடக்கி வைக்க பாப்பாரே தவிர இதுல எல்லாம் ரோஷம். இத்தனை பேசறியே? இத்தனை வருஷம் வேலை பார்த்தியே. உன் சம்பளத்தையா வீட்டுக்கு குடுத்த? இன்னும் இந்த வீட்டுக்கு லோன் போகுது. உன்கிட்ட குடுன்னு கேட்டிருப்பாங்களா ஒருதடவையாவது?…”
முகிலன் கேட்க கேட்க எதுவும் சஞ்சய்யின் தலையில் ஏறுவதாக தெரியவில்லை. அவன் வாட்சை பார்க்கவும், முகிலனை கிளப்பிவிடுவதிலும் குறியாக இருந்தான்.
“இங்க பாரு, இப்ப எதுக்கு இந்த பேச்செல்லாம்? முதல் இங்க இருந்து நீ கிளம்பு. நான் கிளம்பும் போது தேவை இல்லாம பிரச்சனை பண்ணின? அவ்வளோ தான்…”
“என்னடா என்ன பண்ணுவ உன்கிட்ட இத்தனை சுயநலம் ஒளிஞ்சிருக்கும்ன்னு நான் நினைக்கவே இல்லை…” முகிலன் பேசிக்கொண்டு இருக்க அவன் கிளம்பமாட்டான் என்று தெரிந்த சஞ்சய் கால்டாக்சிக்கு புக் செய்துவிட்டான்.
“நீ சொல்லனும்னு நினைச்சா சொல்லிக்கோ. ஆனா நான் இல்லைன்னு தான் சொல்லுவேன். ஏற்கனவே உன் மேல கோவமா இருக்கிற அப்பா இன்னும் கோவமாவாங்க…”
“சஞ்சய்…”
“எனக்கு என் வாழ்க்கை முக்கியம் முகி. நாளைக்கு கல்யாணம். அது நடந்தே தீரும். அதுக்கு என்ன வேணாலும் செய்வேன். நீ பொறாமைல என்னை ஊருக்கு போகவிடாம செய்ய இப்படி பேசறன்னு சொல்லுவேன்…”
சஞ்சய் சொல்ல முகிலனின் பார்வை அப்படியே நின்றது. இவனா தன்னோட வளர்ந்த சஞ்சய் என சந்தேகமே வந்துவிட்டது.
“சஞ்சு…”
“தள்ளுடா…” என அவனின் நெஞ்சில் கை வைத்து சஞ்சய் வெளியே வர சோபாவில் பெண்கள் மூவருமே வெளிறிய முகத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
சஞ்சய்க்கு அதை எல்லாம் கவனிக்க நேரமில்லை. முதலில் பேக் செய்ததை எல்லாம் எடுத்து வைக்க வேண்டும்.
முக்கியமானவற்றை எல்லாம் எடுத்து வாசற்படியின் ஓரிடத்தில் அடுக்கி வைத்தான்.
“சமைக்க தெரிஞ்சது எவ்வளவோ நல்லதும்மா. ஓரளவு நீங்க சொல்லி குடுத்து எனக்கு டெல்லிக்கு உபயோகப்பட போகுது. அங்க போய் செட்டில் ஆகிட்டு நானே சூழ்நிலை பார்த்து சொல்றேன். அப்போ வாங்க. நான் சிரமப்படுவேன்னு நினைக்காதீங்கம்மா. நான் பார்த்துக்கறேன்…”
சஞ்சய் அவன் போக்கில் பேசி செல்ல வேதாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
“அப்பா வரவும் சொல்லிட்டு கிளம்ப சரியாய இருக்கும். சீக்கிரமே ஏர்போர்ட் போய்ட்டா நிம்மதி. அப்போதான் டென்ஷன் இல்லாம போக முடியும். நானே ஏர்போர்ட் போய்ப்பேன்…” என சொல்ல அவன் புக் செய்த கார் வந்துவிட்டது.
ட்ரைவரை வரவழைத்து வேகவேகமாய் வண்டியில் ஏற்றினான் அனைத்தையும். எட்டி முடித்துவிட்டு பத்து நிமிடங்கள் காத்திருக்கும்படி சொல்லி அனலரசுவிற்கு அழைத்தான்.
அருகில் தான் வந்துகொண்டிருக்கிறேன், ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாக சொல்ல போனை வைத்துவிட்டு அப்போதுதான் நிம்மதியாக உணர்ந்தான்.
வேகமாய் தண்ணீரை எடுத்து குடித்தவனுக்கு பார்வை முகிலனை தேடியது. சுவற்றோரமாய் அவன் நின்றுகொண்டிருக்க வேதாவை தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
முகிலனின் பார்வையை தொடர்ந்து சஞ்சய்யும் தாயை பார்க்க அவரின் தோற்றம் அவனை உறுத்தியது.