“ம்மா…” என அதிர்ச்சியுடன் தள்ளி நிற்க ஓவியாவின் எரித்த பார்வையும், ஷோபாவின் ஆதங்கத்துடனான பார்வையும் சஞ்சய்க்கு உண்மையை விளக்கியது.
தெரிந்துவிட்டது. அத்தனையையும் தனது வாயாலே கேட்டிருக்கிறார்கள். ஒருநொடி தலைசுற்றியது.
இனி எதை கொண்டு தன்னை மறைப்பது என முகிலனை பார்க்க அவன் இப்புறம் திரும்பவில்லை.
“ம்மா, என்னம்மா?…” என சஞ்சய் கேட்க,
“என்ன என்னம்மா? ஒன்னுமில்லையே?…” என்றார் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டு.
ஆனால் கண்களின் வலியை அவரால் மறைக்க முடியவில்லை. பெற்று வளர்த்து இத்தனை பார்த்து என்ன நினைத்துவிட்டான் தங்களை? என உள்ளுக்குள் குமைந்து போனார்.
“ம்மா, நான்…”
“இல்லப்பா, உன்கிட்ட எந்த விளக்கமும் கேட்கலை. கேட்கவும் எனக்கு இப்போ எந்த உரிமையும் இல்லை…” என சொல்ல சஞ்சய்யின் முகம் விழுந்துவிட்டது.
“ஆனா ஒன்னே ஒன்னு. அதை சொல்லியே ஆகனும். உங்கப்பாவை நீ நல்லவராக்கிட்ட. உண்மையில உன்னை மாதிரி இருக்கறதுக்கு அவர் மாதிரி இருந்துட்டு போய்டலாம். எவ்வளவோ தேவலை…” என்றார்.
அத்தனை நேரம் அவ்வளவு வேலையிலும் சுறுசுறுப்பாக, சிரித்துக்கொண்டே அத்தனை அறிவுரைகளை சொல்லி பேசியபடி கலகலப்புடன் இருந்தவர்.
இப்போது மகனின் மாற்று பரிமாணத்தில் உயிர் துடிக்க துக்கத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்த விதம் சஞ்சய்யை சுட்டது.
“உன்னால தான்டா. எல்லாமே உன்னால. உன்கிட்ட நான் சொல்லியிருக்கவே கூடாது. பாரு என்னோட அம்மாவை…” என சஞ்சய் முகிலன் மேல் தான் பாய்ந்தான்.
“இப்போ கூட உன் தப்பு என்னன்னு நீ யோசிக்கவே இல்லைலண்ணே?…” ஓவியா கோவத்துடன் கேட்க,
“என்ன என் தப்பு? என்னன்றேன்? எனக்கு பிடிச்ச வாழ்க்கையை அமைச்சிக்கறது என் தப்பா?…” என்றவன்,
“இதே அம்மா அன்னைக்கு மருமகனுக்குன்னதும் அவன் பன்றது தான் சரி, அவன் ஆசை தான் சரின்ற மாதிரி எவ்வளோ சப்போர்ட் பண்ணினாங்க. இப்ப என்னவோ நான் செய்ய கூடாததை செஞ்சிட்ட மாதிரி பேசறாங்க…”
“என்ன பேசற நீ? அத்தான் பன்றதும் இதுவும் ஒண்ணா?…”
“அதானே பார்த்தேன், நீயும் அவனுக்கு தானே சப்போர்ட் பண்ணுவ. நீங்க எல்லாரும் ஒன்னு. எனக்கு என்ன வேணும்னு யாரு யோசிச்சீங்க?…” என்றான் சஞ்சய்.
“திரும்ப திரும்ப இதையே பேசாத. அப்பா வந்திருவாங்க. தேவை இல்லாம ஸீன் கிரியேட் பண்ணாத ஓவி. நான் கிளம்பற நேரம் எதாச்சும் பிரச்சனை ஆச்சுன்னா…”
“என்ன என்ன பண்ணுவ? எங்க என்கிட்டே சொல்லேன்?…” என தங்கை எதிர்த்து நிற்க சஞ்சய் முகிலனை முறைத்தான்.
“எல்லாம் உன்னாலடா. நீ வராம இருந்திருந்தா…”
“அவர் வராம இருப்பாருன்னு நீ எப்படி நினைச்ச? உண்மையை சொல்லு. இந்த விஷயம் யாருக்காச்சும் தெரியனும்ன்றதுக்காக தானே நீ அத்தான்கிட்ட சொன்ன?…”
“என்ன?…” சஞ்சய் முறைக்க,
“என்ன? எனக்கு இப்போ புரிஞ்சு போச்சு. அத்தானுக்கும் அப்பா பன்றது பிடிக்கலை. அதே நேரம் உனக்கும். இதை உனக்கு சாதகமா மாத்திக்க ட்ரை பண்ணிருக்க. இதுவரைக்கும் அமைதியா இருந்த மாதிரி உன்னோட கல்யாணத்தையும் அமைதியா ஏத்துட்டு விஷ் பண்ணுவாருன்னு நினைச்சிருக்க…”
“இவன் எதுக்கு என்னை பத்தி சொல்லனும்? எனக்கு தெரியாதா எதை எப்போ சொல்லனும்னு?…”
“உனக்கே இது அசிங்கமா இல்லையாண்ணே? காதலிச்ச சரி. இப்படி கல்யாணத்தை யாருக்கும் சொல்லாம செஞ்சு வாழனும்னு நினைக்கிறியே?…”
“சொன்னா நடத்த விடுவீங்களா? உங்க கும்பலே வேண்டாம்ன்றதால தானே சத்தமில்லாம கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சு ஸ்ரேயாவை கன்வின்ஸ் பண்ணி இவ்வளோ தூரம் வந்திருக்கேன்…” என்று தன் வாயாலேயே அடுத்த உண்மையை சொல்ல முகிலனுக்கு அத்தனை ஆத்திரம்.
“என்கிட்டே நீ என்ன சொன்ன?…” அதுவரை அண்ணன் தங்கை பேச்சில் தலையிடாத முகிலன் இப்போது வந்துவிட்டான் சஞ்சய் அருகே.
“என்கிட்டே அந்த பொண்ணு தான் கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சதுன்னு சொன்ன?…” என கேட்க சஞ்சய் திருதிருவென விழிக்க,
“யார் பேரை சொன்ன? ஸ்ரேயாவா?. எந்த ஸ்ரேயா? அண்ணா உண்மையை சொல்லு…” என்றாள் ஓவியா சந்தேகத்துடன்.
அதுவரை கூட இத்தனை கலவரத்துடன் இல்லாமல் திடமாய் பேசிக்கொண்டிருந்தவள் முகம் இருள் படர்ந்தது அந்த பெயரில்.
அதுவும் சஞ்சய் அமைதியாக இருக்க இன்னுமே உள்ளுக்குள் திடுக்கென்று இருக்க,
“சொல்லு சஞ்சய் உன்னை தான் கேட்கறேன். பதில் சொல்லாம நீ டெல்லி போக முடியாது. இந்த வீட்டை விட்டும் வெளில போக முடியாது…” என முகிலன் சொல்ல,
“அதை சொல்ல நீ யார்டா?…” என வந்துவிட்டார் அனலரசு.
முதலில் தந்தையின் வருகையில் அதிர்ந்த சஞ்சய் அவரின் பேச்சில் தெளிந்துவிட்டான். இப்போதைக்கு இங்கிருந்து சென்றால் போதும்.
நல்லபடியாக திருமணம் நடக்கட்டும். அதன் பின்னர் இவர்கள் யார் என்ன பேசினால் என்ன? என்பதை போல இருந்தான் சஞ்சய்.
“மாமா இவன்…” என முகிலன் பேச வர,
“நீ ஒன்னும் பேச வேண்டாம். எனக்கு புரின்னு போச்சு. உனக்கு எம்புள்ளை டெல்லி போய் சம்பாதிக்கிறது பிடிக்கலை. அதான் அவனை தேடி தேட வந்து மனசை மாத்த பார்க்கறியா?…” என்றார்.
“என்ன நடந்துச்சுன்னு தெரியாம பேசாதீங்க மாமா…” என சொல்ல வருபவனை பேசவிடாமல் தடுத்தவர்,
“நீ ஒன்னும் என்கிட்டே பேச வேண்டாம். என்ன பேசுவன்னு தெரியாதா? அதான் உன்னோட கிராமத்துலையே காது குளிர கேட்டேனே?…” என வெறுப்புடன் சொல்லியவர்,
“எனக்கு கூட இவனை டெல்லி அனுப்ப விருப்பமில்லை தான். ஆனா கிடைக்கிற உத்தியோகத்தை ஏன் தடுக்கனும்? என் புள்ளயை பெரியாளா கொண்டு வர போறேன். பார்த்துக்கிட்டே இரு. நல்லா வயிறெரியட்டும்…” என்றார்.
“என்ன பேசறீங்க நீங்க? கொஞ்சமாச்சும் புரியாம பேசுவீங்களா? நாளைக்கு இவனுக்கு கல்யாணம். அதுக்கு தான் இத்தனை அவசரமா கிளம்பறான்…” என்று சொல்லவும் அனலரசு முகம் சட்டென மாற சஞ்சய் வாசலருகே சென்று நின்றுகொண்டான்.
“என்ன உளர்ற?…” என்றார் கோபத்துடன் முகிலனிடம்.
“நான் ஒன்னும் உளறலை. உண்மையை சொன்னேன். வேணும்னா அத்தைட்ட கேட்டு பாருங்க…” என்றதும் அனலரசு வேதாவை பார்க்க வெறுமையாக கணவனை பார்த்தார் வேதா.
ஒரு நொடிதான் அனலரசுவின் பதட்டம், பயம் எல்லாம். அடுத்த நொடி தன்னை சமாளித்தவர்,
“உன்னோட ட்ராமா நல்லா இருக்கு. கல்யாணம், அவ்வளோ பெரிய முடிவை என் மகன் என்னை கேட்காம எடுப்பானா? நீ சொல்லி தடுக்க வந்துட்ட, இதுக்கு உன் அத்தை சாட்சி? எனக்கு தான் தெரியுமே உங்களோட கூட்டணி என்னன்னு. என் மகன் வாழ்க்கையையும் பாழாக்கி உன் கூட அனுப்பிறனும்…”
சற்றும் நம்பிக்கையற்று பேசும் அந்த மனிதரை இரக்கத்துடன் தான் பார்க்க முடிந்தது முகிலனால்.
“என்னை விடுங்க, உங்களுக்கு அத்தை மேல கொஞ்சமும் நம்பிக்கை இல்லையா?…” என்றான் ஆற்றாமையுடன்.
“இல்லை. என்ன செய்வ? எனக்கு என் பிள்ளை மேல நம்பிக்கை இருக்கு…” என்றவர்,
“அவன் சத்தியம் பண்ணி சொல்லுவான் இல்லைன்னு. உன் மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சுப்ப?…” என்றதும்,
“எங்க எங்க அவனை சத்தியம் செய்ய சொல்லுங்க…” என்றான் முகிலன்.
“ஏன் செய்யமாட்டானா? அவன் அம்மா மேலையே சத்தியம் செய்வான்…” என மகனை அனலரசு பார்த்தார்.
“வாடா? வந்து சத்தியம் செஞ்சு இல்லைன்னு சொல்லிருடா. அப்ப தெரியும் நான் யாருன்னு. நீ யாருன்னு இன்னைக்கு நான் தெரிஞ்சிக்கிட்ட மாதிரி நான் யாருன்னு நீ தெரிஞ்சுப்ப…” என முகிலன் ஆக்ரோஷத்துடன் சொல்ல,
“என்ன என் முன்னாடியே என் மகனை மிரட்டறியா? அதுவும் என் வீட்டிலையே இருந்துட்டு. வெளில போடா. இல்ல கழுத்த பிடிச்சு வெளிய தள்ளுவேன்…” என முகிலன் அருகே வர அவனை மறித்து வந்து நின்றாள் ஓவியா.
“நம்பிக்கை இல்லைன்றதோட நீங்க அப்படியே இருந்துக்கோங்க. அதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்…” என ஓவியா தந்தையை எதிர்த்துவிட்டாள்..
“என்ன எல்லாம் இவன் குடுக்கற தைரியமா?…”
“ஆமா, என் அத்தான் குடுக்கற தைரியம் தான். இத்தனை நாள் கூட வாழ்ந்த அம்மா சொல்றதை கூட நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்களே, நீங்க என்ன மனுஷன்? அப்போ உங்க மகன் பொய் சத்தியம் பண்ணினா என்ன சொன்னாலும் நம்பிடுவீங்க அப்படித்தானே?…”
“ஓவியா? விடு. நான் பேசிக்கறேன்…” என முகிலன் சொல்ல,
“ஓவிம்மா, வேண்டாம்டா. நாங்க கிளம்பறோம்…” என ஷோபா அங்கிருக்க முடியாது சொல்ல அனலரசுவிற்கு அத்தனை ஆத்திரம்.
“உனக்கெல்லாம் ஓவர் பேச்சாகிடுச்சு இல்ல? என் வீட்டுல என்னை மதிச்சு இருந்தா இரு….”
“இல்லைன்னா?…” ஓவியா கேட்க திகைத்தார் அவர்.
“நான் இங்க தான் இருப்பேன். முகிலன் அத்தானோட என் கல்யாணம் முடியவும்ன்னு முறைப்படி என்னை இங்க இருந்து கூட்டிட்டு போவாங்க. அதுவரைக்கும் இங்க தான் இருப்பேன்…” என்றவள்,
“இது உங்க வீடு மட்டும் இல்லை. என் அம்மாவோட வீடும் தான். என்னோட வீடும் தான். என்ன பார்க்கறீங்க? சம்பாதிச்சு குடுத்தா வீடா உருவாகிருமா தானா? என்ன மேஜிக்கா? இல்லவே இல்லை. எல்லாமே என் அம்மாவால உருவானது….”
“உங்களால மறுக்க முடியாது. கையில சம்பாதிச்ச காசை வச்சுட்டு தானா குடும்பமாகிரு, பசியை போக்கிரு, தூக்கத்தை தந்திருன்னு கேட்டா நீங்க எத்தனை வருஷம் ஆனாலும் அதை கைலையே தான் வச்சிட்டு இருக்கனும்….” என்றவளின் பேச்சை அத்தனைபேரும் திகைப்புடன் நின்று பார்த்தார்கள்.
“நீங்களா எதையும் உருவாக்கலை. வெறும் திரி தான். அங்க நெருப்பா நின்னு எரிஞ்சு இந்த குடும்பத்துக்கு வெளிச்சம் தந்தது என்னோட அம்மா. அந்த நெருப்பு இல்லைன்னா நீங்க வெறும் திரி தான். அதுவும் காலபோக்கில நமத்து போய்டும்…”
ஓவியாவின் பேச்சு ஒவ்வொன்றும் அனலரசுவிற்கு பலத்த அடி. இத்தனை வருஷத்தில் குரல் உயர்த்தி கூட பேசியிறாதவளின் பேச்சு உள்ளுக்குள் என்னவோ செய்தது.
“ஓவியா…” ஷோபா வந்து அவளின் தோளை தொட,
“எங்கம்மா மேல நம்பிக்கை இல்லையாம் த்தை…” என்றவள் அங்கே பூஜை அறையில் இருந்த நடராஜர் சிலையை பார்த்தாள். அருகே சென்று அதன் மீது கை வைத்து,
“நீங்க நம்பினாலும் இல்லைன்னாலும் இது நிஜம். நாளைக்கு உங்க மகனுக்கு கல்யாணம். இதை நானே என் காதால கேட்டேன். நான் மட்டுமில்ல அம்மா, அத்தை எல்லாரும்…” என்று சொல்ல அனலரசு அதிர்ந்து போனார்.
“ஓவியா…” என திக்கியபடி மகளின் பெயரை உச்சரித்தவர் மகனை தேட சஞ்சய் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. எப்போதோ சென்றிருந்தான் அவன்.