ஊருக்கு சென்ற பின்னும் வேதா அனலரசு வாழ்க்கை என்னவோ எந்த மாற்றமும் இன்றி அதே போலத்தான் சென்றது.
என்ன ஒன்று அனலரசு கேட்பதற்கு பதில் ஒற்றை வார்த்தையில் தான் வரும் வேதாவிடமிருந்து.
“ஏன் தெளிவா பதில் சொன்னா குறைஞ்சா போய்டுவ?…” என அனலரசு கேட்டுவிட்டால் போதும்.
அடுத்த இரு நாட்களுக்கு மீண்டும் பதிலிருக்காது. எதிலாவது எழுதிக்கொண்டு வந்து வைத்துவிடுவார்.
சமைக்க, அறைக்குள் முடங்கிக்கொள்ள இப்படியே தான் வேதாவின் வாழ்க்கை சென்றது.
மறுவீடு என்ற ஒன்றுக்கு முகிலனும், ஓவியாவும் வரவும் இல்லை. அனலரசு அழைத்தால் ‘வா, இல்லை வராதே’ என வேதா முகிலனிடம் சொல்லிவிட ஓவியா கெட்டியாக பிடித்துக்கொண்டாள் அதனை.
“உன் வீட்டுக்கு நான் வர மரியாதை எதிர்பார்க்கனுமா? அவர் குடுத்தா என்ன? இல்லைன்னா எனக்கென்ன? இதை எதிர்பார்த்தா பொண்ணை கட்டினேன்?…”
முகிலன் எத்தனை சொல்லியும் தாயும் மகளும் ஏற்கவில்லை. அனலரசு வாயை திறந்து ஒரு வார்த்தை அழைக்கவும் இல்லை. தானாக வர வேண்டும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் வரவில்லை என்பதற்கு மட்டும் அத்தனை பேச்சு பேசினார் ஷோபாவை அழைத்து.
“ஏன் உன் மகனுக்கு என்ன கொம்பா முளைச்சிருச்சு? அதுக்குள்ளே அவ்வளோ பெரிய இவனா போய்ட்டானா? நான் கூப்பிடனுமோ? தட்டு தாம்பாளம் எல்லாம் போதுமா? இல்லை ஊரை கூட்டி மேளவாத்தியம் வைக்கனுமா?…”
இப்படி மருமகன் என்று ஆனா பின்னாலும் ஏக வசனத்தில் மரியாதை இன்றி பேசியதை ஷோபாவால் ஏற்க முடியவில்லை. ஆனால காண்பிக்கவும் முடியாமல் அமைதியாக பதில் சொன்னார்.
“அண்ணே எதுவும் இருக்கட்டும், ஆனா முறைன்னு ஒன்னு இருக்கு…” ஷோபா சொல்ல,
“இந்த முறையெல்லாம் பார்த்தா கல்யாணத்தை செஞ்சீங்க? என் சம்மதத்தை யாரும் கேட்கலை. இப்ப நான் கூப்பிடலைன்னா வரமாட்டான்களோ? என்ன மாப்பிள்ளைன்னு முறுக்கு காமிக்கிறானா? என்கிட்டே இதெல்லாம் நடக்காது…”
“அப்ப அவனும் வரமாட்டான் ண்ணே…” ஷோபாவுக்கு மனதாங்கலாய் போனது.
‘இன்னும் இவருக்கு என்னதான் வேண்டுமாம்?’ என ஆற்றாமை பெருக காட்டிக்கொள்ளாமல் பேசினார்.
“என்னது வரமாட்டானா? என்னை கேட்டா கல்யாணம் செஞ்சீங்க? அப்ப நான் மட்டும் வான்னு வெத்தலை பக்கு வைக்கனுமோ?…” என எகிறினார்.
“எண்ணே? இப்ப என்னதான் செய்யனும்?…”
“அதெல்லாம் என் வாயாலா நான் சொல்லமாட்டேன். ஏன் கல்யாணம் முடிஞ்சா அடுத்து என்னன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன? என்ன விளையாடறீங்களா? இளைச்சவன் ஒருத்தன் சிக்கிட்டா அவன் தலையில மிளகாய் அரைப்பீங்களோ?…” மனசாட்சி இன்றி அனலாய் பேசினார்.
“நீங்க பேசறது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குண்ணே. எங்களை சொல்றீங்க முறை தெரியாதான்னு? உங்களுக்கும் தெரியும் தானே? நீங்க தானே மறுவீடு பேசனும். எங்களை எல்லாம் அழைக்கனும்….”
“அதெல்லாம் முடியாது. இங்க என்னை கேட்டு என்ன நடந்துச்சு. கழுத்துல கத்தியை வச்ச மாதிரி உன் புருஷன் என்னை கூட்டிட்டு போனான். நீ அதுக்கு ஒருபடி மேல என்னை மொட்டை ஆக்கிட்ட. உங்களை எல்லாம்…” பல்லை கடித்துக்கொண்டு அனலரசு பேச,
“போனை கொண்டா இங்க…” என பிடுங்கிவிட்டார் இளங்கோ.
“என்ன மாப்பிள்ளை, என்ன விஷயம்? மறுவீட்டுக்கு அழைக்க கூப்ட்டீங்களா?…” என கேட்க,
“எனக்கெதுக்கு அந்த வேலை? நான் ஒன்னும் அழைக்க கூப்பிடலை…”
“ஓஹ் நான் கூட அப்படின்னு நினைச்சுட்டேன்…”
“ஏன் நினைக்க மாட்டீங்க? குடும்பமா சேர்ந்து என் மூஞ்சில கரியை பூசிட்டீங்க இல்ல…”
“இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை? நாங்க வரவா வேண்டாமா?…” இளங்கோ நேரடியாக கேட்க அனலரசுவின் அகம்பாவம் அழைக்க இடம் தருவா என முட்டிக்கொண்டு முதலில் நின்றது.
“நான் போன வைக்கறேன். இனி இது விஷயமா பேசினா என்னன்னு கேளுங்க…” என்று அழைப்பை துண்டித்துவிட்டார்.
“இவருக்கு என்னதான் ஆச்சோ?…” என சொல்லிக்கொண்டே இளங்கோ மீண்டும் அவருக்கு அழைத்தார்.
“என்ன?…” எடுத்ததுமே கடுப்புடன் அனலரசு கேட்க,
“எதுக்கு கால் பண்ணுனீங்கன்னு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையாமே?…”
“எதுக்கா இருந்தா என்ன? எதுவுமே தெரியாத மாதிரி பேசறீங்க….” இன்னும் குரலில் எக்கச்சக்க காரம் அனலரசுவிடம்.
“சரி நேரடியாவே கேட்கறேன், இதே சூழ்நிலையில உங்களை கூப்பிடாம இருந்து நீங்களா பரவாயில்லைன்னுட்டு மறுவீடு போயிருப்பீங்களா?…” என கேட்கவும்,
“என்ன அவசியம்ன்றேன்? கூப்பிடாத உங்க வீட்டுக்கு நான் ஏன் வரனும்?…” என்றார் யோசிக்காமல்.
“அப்ப அதுதான் என் மகனுக்கும்…”
“என்ன?…”
“இதை தெரிஞ்சுக்கத்தான் திரும்ப கூப்பிட்டேன். ஒருவேளை நாங்க எடுத்த முடிவு தப்பா இருந்திருந்தா? அதான் அந்த இடத்துல நீங்க என்ன செய்வீங்கன்னு கேட்டேன். ஓகே…” என சொல்லி இளங்கோ அழைப்பை துண்டித்துவிட்டார்.
“சரியான கிறுக்கா…” என்று சொல்ல வந்து ஷோபாவை பார்த்து வாயை மூடிக்கொண்டார் இளங்கோ.
“அது நீங்க சொல்லி தெரிய வேண்டியதே இல்லை. எல்லாருக்குமே அப்படித்தான் தோணுது இவர் செய்யறதை பார்த்து…” ஷோபா தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்.
“வேற என்ன செய்ய? முன்னையும் போக விடாம, பின்னுக்கும் போகாம படுத்தறார் மனுஷன். இவர் மட்டும் மரியாதை பார்ப்பாராம். என் மகன் பார்க்க கூடாதாம்…”
“முகிலனே அதான் சொல்றான். அத்தை இருக்காங்க. அதுக்காக போவேன்னு. ஓவிதான் சண்டை போடறா. அம்மா தான் வர வேண்டாம்ன்னு சொல்லிருக்காங்கலேன்னு சொல்லி…”
“அவனுக்கு இப்படி எல்லாம் பிரிச்சு பார்க்க தெரியாது ஷோபா. அதான் அவன் எதுக்கும் ஆசைப்படலை. மாமா தானேன்னு அவனும் அமைதியா இருக்கான் இவர் பன்ற அழிச்சாட்டியத்தை எல்லாம் பார்த்துட்டு…”
“அவருக்கு கோவம், சஞ்சய்யும் அப்படி போய்ட்டான்….”
“அதுக்கு இவர் ஓவியையும், முகிலனையும் பழி வாங்குவாராமா?…”
“இல்லைங்க, அதுக்கு முன்ன இருந்தே அவருக்கு முகில் மேல கோவம் தானே?…”
“அது அர்த்தமில்லாதது…”
“ஏன் நீங்களும் கூடத்தான் கோவப்பட்டீங்க நம்ம மகன் முடிவுல…”
“ஹ்ம்ம்…” என்றவர் முகமே மாறிவிட்டது தகப்பனாய் இருந்து மகனை புரிந்துகொள்ளவில்லையே என்று.
“என்ன செய்ய? சில நேரங்கள்ல பட்டு தான் தெரிஞ்சுக்கனும்னு இருக்கு. அவன் மனசுல எவ்வளோ ஆசைகள் இருந்துச்சோ. நானும் இவரோட சேர்ந்து அவனை ரொம்ப இறுக்கி பிடிச்சுட்டேன்…”
“இப்ப எதுக்கு இதெல்லாம்?…”
“இல்லம்மா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்பவும் மனசு பதறுது. ஒருபக்கம் இந்த சஞ்சய் மாதிரி எதையாச்சும் செஞ்சிருந்தான்னா?…” நினைக்கவே அச்சமாய் இருந்தது.
“அவனை பத்தி எந்த தகவலும் தெரியலை…” ஷோபா கவலைப்பட,
“ஒன்னும் தெரிஞ்சுக்க வேண்டாம். தன்னோட வாழ்க்கை முக்கியம்ன்னு ஒரு உரிமை ஆசை இருக்க வேண்டியது தான். ஆனா அது எந்தமாதிரின்னு இருக்கே. இவன் செஞ்சது தப்பு…” இளங்கோ உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டு இருந்தார்.
சஞ்சய், முகிலனுடன் தானே வளர்ந்தான். அவனுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி புத்தி சென்றது என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.
அதளவிற்கு தன் மகன் தன்னை பெருமைப்படுத்திவிட்டான் என நினைத்துக்கொண்டு இருக்க முகிலனிடம் இருந்து வீடியோ கால்.
“ஷோபா பையன் கூப்பிட்டுட்டான் பாரு…” என போனை எடுத்தார் இளங்கோ.
“ஆயுசு நூறு முகிலா உனக்கு…” தொடுதிரை வழி தெரிந்த மகனின் முகத்தை நெட்டிமுறித்தார் ஷோபா.
“என்னம்மா? என்னை பத்தி பேசிட்டு இருந்தீங்களா?…” என கேட்க பின்னால் தண்ணீரின் சத்தம்.
“எங்க வாழை தோப்புலையா இருக்க?…” அவன் இருக்கும் இடத்தை பார்த்ததும் இளங்கோ கண்டுகொண்டார்.
“ஆமாப்பா, கிணறு வெட்டினோம் இல்லையா? தண்ணி ஊத்தெடுக்க ஆரம்பிச்சிருச்சு. அதான் காமிக்கலாம்ன்னு கூப்பிட்டேன்…” சந்தோஷத்துடன் அவன் சொல்ல மகனின் அந்த நிறைவான முகத்தையே விழி அகலாது பார்த்தார் இளங்கோ.
பெரிதாய் தன்னிடம் எந்த சந்தோஷத்தையும் அவன் காட்டிக்கொண்டதே இல்லை.
படிப்பில் இருந்து பள்ளி, கல்லூரி, வேலை இடத்தில் என எந்த அங்கீகாரம் கிடைத்தாலும் ஒரு தகவலாக தெரிவித்து நின்றவன் முகத்தில் இன்றைய மகிழ்வு துளியும் இருந்ததில்லை என்பதை நினைவுகூர்ந்தார்.
மனதிற்குள் சலனம். என்ன பிள்ளை வளர்த்தேன் நான் என்னும் வருத்தம் மேலோங்க மகனை பார்த்தார்.
அந்த இடத்திலும் சூழலிலும் எவ்வளவு அழகாய் தன்னை பொருத்தியிருக்கிறான். இவனை இவனின் பிடித்தங்களை எப்படி கவனிக்காமல் போனேன்? என பார்த்துக்கொண்டே இருக்க,
“பாருங்க இவன்கிட்ட சொல்லுங்க பார்த்து இறங்க சொல்லி. அவாளையும் சேர்த்து இழுத்துட்டு போறான்…” என காண்பித்துக்கொண்டு இருந்தார்.
கீழே அடிவாரத்தில் ஊற்று எடுத்து கிணறு இப்போது தான் தண்ணீர் வர ஆரம்பித்திருக்க கரடுமுரடான இடத்தில் அசால்ட்டாய் அவன் இறங்கிய விதம் ஷோபாவை பயமுறுத்தியது.
“ம்மா, நான் என்ன கிணத்தையே பார்த்ததில்லையா? எத்தனை தடவை வந்திருக்கேன்…”
“அதை நான் பார்க்கலையே?…” என்ற ஷோபா ஓவியாவை பார்க்க அவள் புடவையை தூக்கி பிடித்துக்கொண்டு நின்றாள் அவனருகே.
“ஏன் ஓவி நீயாவது சொல்ல கூடாதா? என்ன பன்றான் இவன்?…” ஷோபா மருமகளை அதட்ட,
“சுத்திலும் தோப்பு. கிணத்தை சுத்தி ஈர பாறை. இப்பத்தான் ஊத்தேடுக்குது. அப்படித்தான்ம்மா இருக்கும்…” என்று சொல்லிய இளங்கோவிற்கு தனது சிறுவயது நினைவுகள் மனதில் வந்து போயின.
“ப்பா, நான் கேட்டேனே? பேசினீங்களா?…” முகிலன் இப்போது தாயின் பயத்தில் கிணற்றிலிருந்து மேலே ஏறி வந்தான்.
அடி ஆழம் இறங்கவில்லை. இல்லை என்றால் தொடர்பு கிடைக்காமல் போய்விடும் என்று பாதிக்கு மேல் தான் நின்றிருந்தார்கள் அவனும் ஓவியாவும்.
“என்ன முகிலா?…”
“அதான் சொல்லியிருந்தேனே அங்க மார்கெட்ல மொத்த விலைக்கு நம்ம வாழைக்காய் ஏற்றுமதிக்கு கேட்க சொல்லி…”
“இவ்வளோ நாள் லோட் எடுத்திட்டிருந்தவங்க என்ன சொல்றாங்க?…”
“அது சரிப்பட்டு வரலை. தாத்தாவும் போனா போகுதுன்னு தான் அந்த விலைக்கு காய்களை குடுத்திருந்திருக்கார். உழைப்புக்கு எத்த லாபமாவது இருக்கனும்ல. இத்தனை வருஷ பழக்கம், முகதாட்சண்யம்ன்னு கதை சொல்றார். இதை வாங்கறவங்களும் யோசிக்கனும்ல…”
“ஹ்ம்ம் புரியுது. நான் இன்னைக்கே போய் என்னன்னு விசாரிக்கிறேன்…” என்றார்.
“ஹ்ம்ம் சரிங்கப்பா பேசிட்டு சொல்லுங்க…” என்றவன் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ஷோபாவுக்கு தனியே அழைத்தான்.
“என்னம்மா, என்னவோ சொல்ல வறீங்க. அப்பறம் அப்பாவை பார்த்துட்டு சைலன்ட் ஆகிட்டீங்க?…”
“ப்ச், கிண்டல் பன்ற பார்த்தியா? உனக்கே தெரியும் என்ன பேசுவார்னு. இதுல உன் அப்பா வேற நீங்க போவீங்களா இல்லையான்னு கேட்டுட்டு இன்னும் அதிகமாக்கிட்டார் அவர் கோவத்தை…”
“இல்லைனாலும் மாமாவுக்கு கோவமே பட வராது பாருங்க…” என்றவன்,
“நீங்க எதுவும் பேச வேண்டாம். இதை அப்படியே விடுங்க…”
“எப்படி விட சொல்ற? இங்கயும் நீங்க இன்னும் வரலை. உங்க கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம் மேல ஆச்சு. அக்கம்பக்கத்துல கேட்காங்க…”
“அங்க வந்துட்டு அத்தை வீட்டுக்கு போகாம இருக்க முடியாது என்னால. அத்தை வரவேண்டாம்னு சொல்லும் போது போக கூடாதுன்னு இங்க இவ என்னை ஆட்டி வைக்கிறா. நான் என்ன செய்ய? நீங்களே சொலுங்க?…”
“அப்பாவுக்கு ஒரு ஆசை முகிலா. இங்க சின்னதா ரிசப்ஷன் மாதிரி வைக்கனும்னு. அவங்களோட வேலை பார்க்கிறவங்க எல்லாம் கேட்காங்க போல. நீ என்ன சொல்ற?…”
“பண்ணலாமே ம்மா…” என்றான் முகிலன்.
“நிஜமாவா?…”
“ஆமா. செய்யலாம். என்னோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கூட இன்வைட் பண்ணனும். நான் நைட் அப்பட்ட பேசறேன்…”
“என்னோட ப்ரெண்ட்ஸ் சரக்கிலும் கூப்பிடுவோம். கல்யாணம் நடந்த டென்ஷன்ல நான் அவங்க யாரையும் இன்வைட் பண்ணலை. மேம்க்கு மட்டும் தான் சொல்லியிருந்தேன். அவங்களாலையும் வர முடியலை…” என்றாள்.
“நம்ம கல்யாணம் உனக்கு டென்ஷனா?…”
“ஆமா, எல்லாம் உங்களால. ஏதாவது என்ஜாய் பண்ண முடிஞ்சதா? எதுவும் இல்லை…” என அவள் முகம் திருப்ப,
“இதுல ஒன்னும் குறைச்சல் இல்லை. போங்க போய் வைராவுக்கு சாப்பாட்டை வைங்க. அது ஒன்னு தான் தெரியும். வயலுக்கு மருந்தடிகிறது, செடிக்கு களை எடுக்கிறது, மரத்துக்கு உரம் வைக்கிறதுன்னு. வேற ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்லை…”
ஓவியா பேசிக்கொண்டே பின்னால் நகர இடுப்பில் கைவைத்தபடி அவளை சிரிப்புடன் பார்த்து நின்றான் முகிலன்.
“விரட்ட மாட்டேன்னு துணிச்சல்டி உனக்கு. இவ்வளோ பேசற உன்னோட அந்த வாயை…” என்றவன் தலையை கோதியபடி சுற்றிலும் பார்த்தான்.
வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வரப்பில் மாட்டை மாற்றிவிட இரண்டுபேர் நின்றுகொண்டு இருந்தார்கள்.
அவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் சொல்லமுடியவில்லை. சத்தமாக இதை பேசவும் முடியவில்லை.
“இன்னைக்கு இங்க தானே ஸ்டே. பேசிக்கறேன் உன்னை. அப்ப நீ பேசு. பார்ப்போம்…” என்று சொல்லியும் ஓவியாவின் நக்கல் பேச்சுக்கள் ஓயவில்லை.
வீட்டில் பேசி வேதாவிடம் சம்மதம் வாங்கி என ஹோட்டலில் பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்ய அதன் முழு பொறுப்பும் இளங்கோவினது.
இங்கிருந்து முகிலனும் ஓவியா, தாத்தா, பாட்டி என கிளப்பிக்கொண்டு வந்துவிட்டான்.
ஹோட்டலில் பார்ட்டி நடந்துகொண்டிருக்க யாரும் எதிர்பாராத விதமாக அங்கே வந்து சேர்ந்தான் சஞ்சய். நினைத்து பார்க்காத கோலத்தில்.