இளங்கோவுடன் அனலரசு நின்றுகொள்ள சம்பந்தத்தையும் சேர்த்து முதலில் அவர்களை அனுப்பிய முகிலன் இன்னொன்றில் தானும் மற்றவர்களுடன் வந்தான்.
கீழே வந்ததும் தனது லிப்ட் ஓபன் ஆக அங்கே அனலரசு அதிர்ச்சியுடன் நெஞ்சை பிடித்துக்கொண்டு நின்றதை தான் பார்த்தான்.
“என்னாச்சு…” என்று போக அங்கே இளங்கோ சஞ்சய்யை பிடித்து நிறுத்த முயன்றார்.
“போயா போயா உன்னால தான் என் வாழ்க்கையே போச்சு. என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்து நிப்பாடியதே நீ தான்…” என முழு போதையில் பேசிக்கொண்டிருந்தான் சஞ்சய்.
“சஞ்சய்…” என அதிர்ச்சியுடன் முகிலன் வர,
“முகி, டேய் என்னை பார்த்தியா. போச்சு போச்சு….”
“என்னாச்சுடா? ஏன் இப்படி இருக்கிற? நிதானமில்லாத அளவுக்கு குடிச்சிருக்கியா?…” என்று கேட்க,
“குடிச்சேனா? இந்தாளுக்கு புள்ளையா பிறந்தா விசத்தை தான் குடிக்கனும்…” என்று தடுமாற்றத்துடன் அழுதுகொண்டே பேசினான்.
உருவம் முன்பைபோல இல்லாது பொலிவிழந்து கறுத்து, என்னவோ போல் இருந்தான் சஞ்சய்.
இத்தனை மாதத்தில் எங்கோ அவன் சந்தோஷத்திற்கு நன்றாக இருக்கிறான் என்று நினைத்திருந்த அனலரசுவிற்கு மரண அடி மகனை இந்த கோலத்தில் பார்த்தது.
அதிலும் அவன் பேசிய வார்த்தைகள். உயிருடன் கொன்றுகொண்டு இருந்தது அவரை.
“இவருக்கு பயந்து இவரை விட பெரிய கஷ்டத்துல விழுந்துட்டேன்டா. சட்டிக்கு பயந்து அடுப்பில விழுந்த மாதிரி. என்னால முடியலைடா. முடியலை…” என்று ஓவென்று அழ அங்கிருந்தோர் எல்லாம் என்னவோ என்று பார்க்க ஆரம்பித்தனர்.
“நீ இங்க எப்படி வந்த? டெல்லில இருந்து சென்னை வந்துட்டியா?…” முகிலன் கேட்க,
“இங்க ஒரு ப்ரெண்டோட என்கேஜ்மேன்ட்ன்னு அவ கூட்டிட்டு வந்தா. எல்லாரும் பப்ல இருக்காங்க…” என்றவன் இன்னும் அனலரசுவை பார்த்தபடி இருக்க அவர் துவண்டு நின்றார் நிற்கமுடியாமல்.
‘இவனை எத்தனை சொல்லி வளர்த்திருப்பேன். ஒழுக்கம், நல்ல பழக்கவழக்கங்கள் என எவ்வளவு பேசியிருப்பேன். இப்படி சீரழிவதற்கா தனது வாழ்க்கை, தன் சந்தோஷம் என சென்றான்’ என கண்ணில் நீர் நிறைய பார்த்து நின்றார்.
பெண்ணின் வாழ்க்கை சிறந்து நிற்க மகனின் வாழ்க்கை நிலைகுலைந்து போயிருப்பதை காண பெற்ற மனது கதறியது.
“சஞ்சய்…” ஷோபா அழைத்ததும் யாரையும் நிமிர்ந்து பார்க்கும் திராணியற்றவனாக சஞ்சய் இருந்தான்.
“என்னால முடியலை. நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தான். ஆனா வாழ முடியலை. வாழ முடியலை. நிம்மதி இல்லை…” என முகத்தில் அறைந்துகொள்ள வேதா வேதனையுடன் தான் பார்த்தார்.
அருகே வரவில்லை. மகனின் வாழ்க்கையை எண்ணி கவலைப்படவும் முடியாமல் ஒரு வெறுமை.
“எதுக்குடா அழற? நாங்க எல்லாம் இல்லையா? வேண்டாம்ன்னா விட்டுட்டு வாடா. உன் வாழ்க்கையை நீ பாரு…” என்று இளங்கோ சொல்ல சஞ்சய் பதில் பேசவில்லை.
“இதுக்கா இதுக்கா அம்புட்டு பிரச்சனை பண்ணிட்டு பெத்தவங்களும், சொந்தமும் வேணாம்ன்னு போன? எங்கயாச்சும் நல்லா இருப்பேன்னு தானே நினைச்சோம். அந்த நிம்மதியும் இல்லையா? இந்த கோலத்துல தான் உன்னை நாங்க பார்க்கனுமா…” கமலா அழ ஆரம்பித்துவிட்டார்.
“வந்துருப்பா, உனக்கே பிடிக்கலைன்ற. அந்த பொண்ணு வேண்டமன்னா விட்டு வந்துரு…” என கமலாவும் சஞ்சயின் கன்னத்தை பிடித்து கெஞ்ச,
“சஞ்சய்…” என வந்துவிட்டாள் ஸ்ரேயா. அவளின் குரல் கேட்கவும் சட்டென முகிலனை விட்டும் இளங்கோவை விடும் தள்ளி நின்றான் சஞ்சய்.
“ஹேய் நீ ஓவியா இல்லையா? மேரெஜ் ஆகிடுச்சா?…” என ஸ்ரேயா கேட்கவும் தான் சஞ்சய்க்கு அங்கே என்ன நடக்கிறது என்றே புரிந்தது.
இது கூட தெரியாமல் இருந்திருக்கிறேனே? என ஓவியாவை பார்க்க அவள் அவன் புறம் திரும்பவில்லை.
“கங்க்ராட்ஸ். சஞ்சய் சொல்லவே இல்லை. உனக்கு கல்யாணம் ஆனதை…” என அவள் சரளமாக பேச அவளை ஆச்சர்யமாக பார்த்தார்கள் அனைவரும்.
“எனிவே ஓவியா கங்க்ராட்ஸ்…” என்றவள் முகிலனையும் பார்த்து புன்னகைத்தாள்.
“ஓகே, நான் கிளம்பறேன். சஞ்சய்யை காணுமேன்னு தான் தேடி வந்தேன். ரூம்க்கு போய்ட்டானான்னு பார்க்க…” என சொல்லிவிட்டு அவள் சஞ்சய்யை பார்த்துவிட்டு லிப்ட்டை ப்ரெஸ் செய்து உள்ளே சென்று நிற்கவும் எதுவுமே நடக்காததை போல சஞ்சய் அவளின் பின்னாடியே செல்ல,
“சஞ்சய் ஒரு நிமிஷம்…” முகிலன் நிறுத்தவும் திரும்பி பார்த்தான் அவன்.
“எக்ஸ்க்யூஸ்மீ நான் சஞ்சய்ட்ட பேசனும்..” என ஸ்ரேயாவிடம் சொல்ல,
“இல்லை என்னால இப்ப பேச முடியாது…” என்றான் அவன்.
“நான் வரதுக்கு முன்னாடி நீ தானே பேசிட்டு இருந்த சஞ்சய். பேசிட்டே வா…” ஸ்ரேயாவின் முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
சிரித்துக்கொண்டே ஸ்ரேயா அவனுக்கு பதில் சொல்ல சஞ்சய்யின் முகம் மாறியது. அதை முகிலனும் கவனித்தான்.
“இல்லை நான் பேசலை. யார்ட்டையும் பேச வேண்டாம். நீ வா…” என்று தங்கள் ரூம் இருக்கும் தளத்தின் எண்ணை தொட்டவன் சாய்ந்து நின்றுகொண்டான் முகத்தை கவிழ்த்தபடி.
சஞ்சய் பேசியதும் இப்போது நடந்துகொள்வதும் பார்த்தவர்களை வெகுவாய் குழப்பியது. சற்றுமுன் அழுது புலம்பியதென்ன? இப்போது தங்கை சமபந்தமே இல்லாதவர்கள் போல நடத்துவதென்ன?
“என்னப்பா? என்ன இவன்? இப்படி இருக்கான்?…” கமலா கேட்க,
“அதெல்லாம் வீட்டுல போய் பேசிப்போம் பாட்டி. வாங்க எல்லாரும்…” என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான் முகிலன்.
நேராக வேதாவின் இல்லம் தான் வந்து சேர்ந்தனர் அனைவருமே. மகளும் மருமகனும் தங்கள் வீட்டிற்கு வந்ததை கூட உணராது இருந்தார் அனலரசு.
மீண்டும் மீண்டும் மகன் பேசிய வார்த்தைகளே அவரை குத்தி கிழித்துக்கொண்டு இருந்தது.
எதுவும் பேசவில்லை. பேசவும் முடியவில்லை. பிரம்மை பிடித்ததை பல இருக்க வேதாவிற்கே அவரின் நிலை பொறுக்கவில்லை.
சற்று நேரம் பொருத்து பார்த்த வேதா அத்தனைபேரையும் சத்தம் போட ஆரம்பித்தார்.
“இப்ப என்ன ஆகிருச்சுன்னு அழுதுட்டும், இடிஞ்சு போயும் உட்கார்ந்திருக்கீங்க?…” என்றதும்,
“என்ன என்ன பேசற நீ? அவன் வந்து நின்ன கோலத்தை பார்த்தியா? நம்மக்கிட்ட இருக்கும் போது ராஜாவாட்டம் இருந்த பிள்ளை…” கமலா அவருக்கு இணையாக சத்தம் போட்டார்.
“பார்க்க தான் ராஜாவாட்டம்ன்னு சொல்லுங்கம்மா. ஆனா மனசளவுல அவன் ராஜா இல்லை. சுயநலவாதி…” என்றார் கசப்புடன்.
அனலரசு வேதாவின் இந்த சத்தத்தில் நிமிர்ந்து மெதுவாய் மனைவியை ஏறிட்டார்.
“என்ன பார்க்கறீங்க? என்னவோ சொல்லிட்டான்னு இப்படி இருக்கீங்க? இல்லை என்ன நடந்துருச்சு? அவன் வந்து நின்னதும், அவன் போதைல இருந்தது தானே தெரிஞ்சது உங்களுக்கு. ஐயோ நம்மாலையான்னு இப்படி இருக்கீங்களே?…”
“அவன் எப்படி போனான்னு கவனிச்சீங்களா? எதுவும் இல்லை. அந்த பொண்ணு வர வரைக்கும் அத்தனை பேச்சு பேசினான் அவளால வாழ்க்கையே போச்சுன்னு. ஆனா அவ வரவும் நம்மளை யாருன்னே தெரியாத மாதிரி பார்த்துட்டு பேசவும் முடியாதுன்னு கிளம்பி போய்ட்டான். இதுதான் அவன்…”
“எனக்கு வருத்தம் தான், அவன் மனசுல இப்படி ஒரு சுயநலக்காரன் இருப்பான்னு நானும் நினைக்கலை…” வேதா சொல்ல,
“அத்தை, இப்ப யார் தான் சுயநலமா இல்லை? அவன் வாழ்க்கை முக்கியம்ன்னு போனான். இப்ப நல்லா இல்லைன்னு சொல்றான். அவனால பேச முடியலை…” முகிலன் சஞ்சய்க்கு ஆதரவாக பேச,
“என்ன பேச முடியலையா? முகிலா அவன் யாருக்கும் உண்மையா இல்லை முகிலா. அது உனக்கு புரியலையா? இங்க அவன் பேசினதை மறக்க சொல்றியா நீ? எதையும் மறக்க முடியாது. அதே நேரம் அவன் மேல இருந்த கொஞ்ச நஞ்ச அபிமானமும் போச்சு. என் பிள்ளையா இப்படின்னு தவிச்சதெல்லாம் முடிஞ்சிருச்சு…”
“அத்தை, நீ ரொம்ப கோவமா இருக்க. அவன் அந்த பொண்ணு வரவும் தானே கிளம்பி போனான்…”
“ஆமா, ஆனா இங்க இத்தனை பேர் முன்னாடி எதிர்த்து பேசிட்டு கிளம்ப தெரிஞ்சவனுக்கு அங்க அந்த பொண்ணு பேசன்னு சொல்லியும் பேச மாட்டேன்னு சொல்ல துநிசல் இல்லையாமா? இதை நானா நம்பனுமா?…”
“நீ என்னதான் சொல்ல வர வேதா?…” ஷோபா அவரிடம் ஏற்க,
“பெருசா எதுவும் இல்லைண்ணி, அவன் அங்க சந்தோஷமா இல்லை. அதே நேரம் அவனுக்கு திரும்ப வரவும் விருப்பமில்லை. அந்த வாழ்க்கை பிடிச்சிருக்கு. அந்த பொண்ணை பிடிக்கலை. அவக்கிட்ட அந்த கோவத்தை கமைக்க முடியலை. அதான் இந்த மனுஷனை பேசிட்டான். இதுதான் உண்மை…”
வேதா சொல்லியது தான் அப்பட்டமாய் நடந்துகொண்டிருந்தது சஞ்சயின் வாழ்க்கையிலும்.
பெரிதாய் எதையோ சாதித்துவிட்டதை போல தனது காதலை நிறைவேற்றிகொண்டதில் கர்வமாய் வாழ ஆரம்பித்திருந்தான் அவன்.
ஆரம்பித்திருந்தான் அவ்வளவே. காதலிக்கும் போது இருந்த களிப்பு திருமணத்தின் பின்னர் ஒரே வீட்டில் வாழும் பொழுது அப்படியே வேறு விதமாய் மாறிவிட்டது.
ஏற்கனவே லிவ்-இன்னில் வாழ்ந்திருந்தவள். எங்கே தன்னையும் பாதியில் விட்டுவிட்டு சென்றுவிட்டால் என்ன செய்வது என்று தான் முரண்டுபிடித்து பேசி திருமணத்தை நடத்திக்கொண்டான்.
ஆரம்பத்திலேயே அவள் மீது நம்பிக்கையில்லா ஒரு எண்ணம் அடி மனதில் தேங்கிவிட்டது. அதிலிருந்து பிரச்சனை அவனிடத்தில்.
ஸ்ரேயா எந்த கட்டுக்குள்ளும் நிற்காதவள். அவள் முதலிலேயே சொல்லி செய்த திருமணம். என்னுடைய சுதந்திரம் எனக்கு முக்கியம் என.
சுதந்திரம் ஒரு விஷயமா? தனக்கே அதுதானே வேண்டும் என்றிருந்தவனின் மனநிலையோ நாளடைவில் மாற ஆரம்பித்தது.
ஸ்ரேயாவிடம் கடிந்தும் கேட்டுவிட முடியாமல் கேட்காமலும் இருக்க முடியாமல் நிம்மதியிழக்க ஆரம்பித்தான்.