சஞ்சய்க்கு திருமணமாகி வந்த பின்னர் தான் அவனின் இயல்பான குணம் தலைதூக்கியது.
சாதாரணமாக ஸ்ரேயா ஏதேனும் கேட்டால் கூட அவளிடத்தில் அத்தனை பணிந்து பதில் சொல்லி, விரிவுரை அளித்து என்று அனலரசுவிற்கு மேலாய் அவளிடம் அடிபணிந்தான்.
முதலில் அது பெரிதாய் தோன்றவில்லை. ஸ்ரேயாவும் எதற்கு இது என சொல்லிவிட்டு அப்படியே விட்டுவிட சஞ்சய்யின் போக்குதான் மாறியது.
ஸ்ரேயாவை தனது கட்டுப்பாட்டுக்குள்ளும் வைக்க முடியாமல், அவள் வழியில் போகவும் முடியாமல் தள்ளாடினான்.
ஆரம்பத்தில் அவளை தாங்குவதாகவும், அவளிடம் அவளுக்காகவே தான் கட்டுண்டு இருப்பதை போலவும் நடந்துகொண்டவனால் காலப்போக்கில் அது முடியாமல் போனது.
அவள் தன்னிடம் எதையும் கேட்காமல் செய்யும் பாங்கு இப்போது உறுத்த ஆரம்பித்தது.
“இங்க பாரு சஞ்சய், உனக்கு வேணுமா உன் விருப்பத்துக்கு இருந்துக்கோ. நீ எல்லாத்தையும் ஷேர் பண்ணி அதையே என்கிட்டே எதிர்பார்க்காத. எனக்கு இது ஒத்துவராது மேன்…” என்று சொல்லிவிட்டாள் முகத்திலடித்ததை போல.
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு ரேயா. இதெல்லாம் ஒரு மேரேஜ் லைப்ல காமன் எத்திக்ஸ்…”
“எனக்கு இந்த எத்திக்ஸ் வேண்டாம். இந்தமாதிரி என்னை கன்ட்ரோல் பண்ணாத. நீயும் அப்படி இருக்கவேண்டிய அவசியம் இல்லை…” என சொல்லிவிட்டாள்.
என்னதான் தன்னையும் அப்படி இருக்க சொல்லிவிட்டாலும் சஞ்சய்யால் அது முடியவில்லை.
அவளை அவளின் போக்குகளை வெறுத்தவனால் விட்டு விலக மட்டும் முடியவில்லை. வாழ்க்கை கசந்துவிட்டது. வீம்பிற்கு இழுத்து பிடித்தான்.
அவ்வப்போது அதிகமாகவே இதென்ன உப்புசப்பில்லாத வாழ்க்கை என தோன்ற ஆரம்பித்துவிட்டது.
மொத்தமாய் அந்த வாழ்க்கையை, ஸ்ரேயாவை விட்டு செல்லவும் தைரியமில்லை. தட்டி கேட்கவும் துணிச்சல் இல்லை.
கடனே என வாழ்க்கையை ஓட்டியவனுக்கு மனது மது, போதை என்று மாற ஆரம்பிக்க அவனின் விருப்பம் என ஸ்ரேயாவும் விட்டுவிட்டாள்.
அதுவுமே சஞ்சய்யை இன்னும் துவண்டுபோக செய்தது. ‘இவள் என்ன எனக்கு மனைவி போலவா நடந்துகொள்கிறாள்?’ என தோன்றும் நேரங்களில் எல்லாம் அவளின் அக்கறையையும் கண்டிப்பையும் எதிர்பார்த்தது.
அவள் வேண்டும், வேண்டாம் என்னும் விளிம்பு நிலையில் தான் தத்தளித்துக்கொண்டு இருந்தான்.
சந்தேகம் கொண்டு அவளை விலகி நின்று பார்க்க அலட்சியபாவத்துடன் அவளும் கண்டுகொள்ளாமல் போக தன்னுணர்வுகள் நசுக்கப்பட்டதாய் நினைத்தான்.
எந்த வாழ்க்கை தனக்கு நிம்மதியை, சந்தோஷத்தை தரும் என சுயநலமாய் வந்தானோ அது அவனை வீழ்த்திக்கொண்டு இருந்தது.
அவளிடம் நல்லவனாகவும், தனியே தன் எண்ணங்களுடன் மருகுவதுமாகவும் வாழ்க்கை நரகமாக சென்று கொண்டு இருந்தது. மொத்தத்தில் நிம்மதி இல்லாத ஒரு வாழ்க்கை.
ஒட்டவைத்த சிரிப்புடன் முகத்தையும், கசடுகள் நிறைந்த மனதையும் வைத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருந்தான்.
அதன் வெறுப்பு அனலரசுவை பார்த்ததும் கொட்டுவதற்கு ஆளில்லாமல் இருந்தவனுக்கு வடிகாலாய் அமைந்துவிட்டது.
இன்னுமே நம்பமுடியவில்லை அனலரசுவிற்கு. தன் மகனா இப்படி எல்லாம் நடந்துகொண்டது என மருகி மருகி அமர்ந்திருந்தார் வீட்டிற்கு வந்தும்.
முகிலன் சஞ்சய்யிடம் பேசுகிறேன் என்று நிற்க வேதா தடுத்துவிட்டார் ஒரேடியாக.
“நீ என்ன இவ்வளவு வீம்பு பிடிக்கிற த்தை? மாமாவுக்கு மேல இருக்க நீ…” என முகிலன் சத்தம் போட்டான்.
“பேசாம இரு முகிலா. அவனை விடு. அவன் வாழ்க்கையை அவனே பார்த்துக்கட்டும்…”
“அவன் எப்படி வாழறான்னு எல்லாரும் தான் பார்த்தோமே? எப்படி உனக்கு பேச மனசு வருது?…” வேதாவை சத்தம் போட்டுக்கொண்டு இருந்தான்.
“முகிலா நீ அமைதியா இரு. நாளைக்கு பேசிப்போம். இந்த நேரத்துல பேசற விஷயமா இது?…” என்று இளங்கோ அதட்டினார்.
“முதல்ல போய் தூங்குங்க. விடியவும் என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம்…” சம்பந்தமும் அனைவரையும் கண்டு பொதுவாய் சொல்ல அனலரசு தளர்வுடன் எழுந்து உள்ளே சென்றார்.
எங்கே எதுவும் ஆகிவிடுமோ என பயந்து இளங்கோவும் அவருடன் உள்ளே நுழைய அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு உடையையும் மாற்றாமல் படுத்துவிட்டார் அனலரசு.
இளங்கோவும் அதே கட்டிலில் படுத்துக்கொள்ள வெளியே முகிலன் சோபாவில் கால் நீட்டி படுத்துவிட்டான்.
எதிரே இருந்த தனி இருக்கையை தனக்கு முன்னால் இழுத்துபோட்டு அதில் காலை நீட்டிக்கொண்டவன் இன்னும் சரிந்து உறங்க ஆரம்பித்தான்.
அதிகாலை நான்கு மணியளவில் பதட்டத்துடன் இளங்கோ கதவை திறக்கும் சத்தம் கேட்க முகிலனுமே முழித்துவிட்டான்.
“ப்பா, என்னாச்சு?…” என்ற சத்தத்தில் ஓவியாவுமே எழுந்துவிட,
“உள்ள மாப்பிள்ளைக்கு மூச்சு வாங்குதுப்பா. என்னன்னு தெரியலை…” என பதறினார் இளங்கோ.
“அச்சோ…” என முகிலனுடன் ஓவியா வேகமாய் உள்ளே செல்ல அதற்குள் வேதா இருந்த கதவை தட்டினார்.
“என்னண்ணே?…” என்றவரிடம்,
“எம்மா, ஒருநிமிஷம் வாயேன்…” என சொல்ல பதட்டத்துடன் ஓடினார் வேதா.
உள்ளே அனலரசு முகம் வியர்த்து உடல் நனைந்திருந்தது. கைகள் ஒருபக்கம் இழுப்பதை போல இருக்க முகிலனும் ஓவியாவும் அவருக்கு தேய்த்துவிட்டுக்கொண்டு இருந்தார்கள்.