இப்போது அனலரசுவின் நடவடிக்கையில் பெரும் மாற்றம். வேதாவை எதற்கும் எதிர்பார்ப்பதில்லை.
முடிந்தளவு தனது வேலையை தானே செய்து வேதாவின் மனதை மாற்ற முயன்றார். அவரின் காயங்களை குறைக்க தோன்றியது.
முன்பை விட பேச்சுக்கள் கூட அத்தனை காட்டமாக இல்லாது தன்மையாய் மெதுவாய் பேசும்படி இருந்துகொண்டாலும் அவ்வப்போது இயல்பு தலைதூக்கத்தான் செய்கிறது.
பெரிதாய் வேதாவும் அதனை சுட்டிக்காட்டுவதில்லை. அவரிடம் இந்த மாற்றமே அரிது என்பதை போல வேதா இருந்தார்.
ஒரு வீட்டில் தங்கி இருக்கும் நபர்களை போல இருக்க வேதா அவரை நெருங்கவில்லை. அனலரசுவும் தன்னுடைய குற்றவுணர்ச்சியால் தள்ளியே இருந்துகொண்டார்.
ஆளுக்கொரு அறையில் வசிப்பு. பிள்ளைகள் இன்றி பேச்சுவார்த்தைகளும் அந்த வீட்டில் கணிசமாக குறைந்திருந்தது.
வாரம் ஒருமுறை இளங்கோவும், ஷோபாவும் வந்துவிட்டு செல்வார்கள். இருக்கும் வரை கலகலப்பாய் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீண்டும் அதே தனிமை, அமைதிக்கு சென்றுவிடுவர்.
நாட்கள் அவர்கள் கையில் இல்லை. முன்பை போல இல்லாது ஓவியாவுடன் நன்றாகவே பேசினார் அனலரசு.
வேதாவுடன் தினமும் ஓவியாவும் முகிலனும் வீடியோகாலில் பேசிவிடுவர். அதில் சற்று பொறாமையும் கூட அனலரசுவிற்கு.
தன்னுடன் தன் மகள் பேசும் பொழுது வேண்டுமென்றே ஓவியாவுடன் பேச்சை வளர்ப்பார் அவர். இப்போது மகள் மீது எந்த அதிருப்தியும் இல்லை.
அவளின் நடனம் இந்த திருமனத்தினாலும், வசிப்பிடத்தினாலும் எந்தவிதத்திலும் தடைபடவில்லை என்பதில் பரம திருப்தி.
அதை வெளிப்பைடையாக காட்டிக்கொள்ளத்தான் தயங்கினார் அவளிடத்திலும், முகிலனிடத்திலும்.
அதிலும் இப்போது கிராமத்தில் அவளுக்கென்றே தோட்டத்தில் ஒரு இடத்தில் நாட்டியம் சொல்லித்தரும் பயிற்சி பள்ளியை சிறிதாய் முகிலன் அமைத்து கொடுத்திருக்க கிராமத்தில் இருக்கும் பிள்ளைகளும் அங்கே பழக வந்துகொண்டு இருந்தார்கள்.
அதில் ஏக பெருமை தான் மாமனாராக அனலரசுவிற்கு. தன்னுடைய நண்பர்கள், உறவினர்கள் என சொல்லி பெருமையாற்றிக்கொண்டார்.
தன் மகளை மருமகன் எப்படி பார்த்துக்கொள்கிறான் என வாய் ஓயாது பேசி தீர்த்தார்.
மகள் ஓரிடத்தில் பயிலுகிறாள் என்பதை விட தானே தனியாக நிறுவி பயிற்சி தருகிறாள் என்பது கூடுதல் சந்தோஷத்தை அளித்தது அவருக்கு.
இந்த நாட்டியம் கூட ஓவியாவாக விருப்பமேற்று கற்றுக்கொண்டதில்லை. தன்னுடைய மேலதிகாரியின் பிள்ளைகள் கற்றுக்கொள்கின்றனர என்பதை அறிந்து ஆசையில் தன் மகளையும் அதில் சேர்த்தவர் தான் அனலரசு.
மகனை தன் விருப்பம் போல கொண்டுவரவில்லை. ஆனால் மகளும், மருமகளும் தன்னுடைய நினைவிற்கு அப்பார்ப்பட்டு வந்துகொண்டிருப்பதில் உள்ளுக்குள் அகமகிழ்ந்து தான் போனார்.
மீண்டும் ஒருமுறை சென்னைக்கு சென்று வந்திருந்தார்கள் ஓவியாவும் முகிலனும்.
வந்தவர்களுக்கு அருகிலிருந்து உபசரிப்பு இல்லை என்றாலும் அத்தனை வாங்கிக்கொண்டு வந்திருந்தார் அவர்களுக்கென. வீட்டை நிறைத்துவிட்டார் பரிசுகளால்.
“இது போதாதா த்தை உனக்கு….” முகிலன் வேதாவை சீண்ட,
“நான் கேட்கவே இல்லையே…” என சிரித்தார் வேதா.
“அந்த மனுஷன் மனசுக்குள்ள வச்சுட்டு காமிக்க யோசிக்கிறார். நீ ரொம்ப பன்ற…”
“நான் காமிக்க சொல்லி சொல்லலை. அவர் எப்படி இருக்கனுமோ இருக்கட்டும். நீ ஏன் கிடந்து அல்லாடுற? விடேன்…” என்று அவர்களுக்கு விருந்து சமைத்தார்.
“சரி நீ கேட்டியா? ஊருக்கு வரதை பத்தி?…”
“ம்ஹூம் இல்லை. ஓவி பேசிட்டிருக்கா. அவளை கேட்க சொல்லு. இனி நானா கேட்கமாட்டேன்…” என்றுவிட வெளியே வந்து ஓவியாவை பார்த்தான்.
அவளும், அனலரசுவும் அடுத்த ப்ரோக்ராம் அவளுக்கு எப்போது என்பதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
இடையே இரண்டுமுறை ஹைதராபாத் தமிழ் சங்கத்தில் நடந்திருந்த ப்ரோக்ராமிற்கு தானே உடன் சென்று மகளுடன் இருந்து அழைத்து வந்திருந்தார்.
அந்தளவிற்கு அவரிடம் மாற்றம் தான். என்ன ஒன்று பேச்சு முன்பு போல ரத்தினசுருக்கம்.
“மாத்திரை எல்லாம் இப்ப சரியா எடுத்துக்கறீங்களா மாமா?…” என வந்து அமர்ந்தான் முகிலன்.
“ஹ்ம்ம், போட்டுட்டு தான் இருக்கேன்…” என முடித்துக்கொண்டார்.
அவன் அமர்ந்திருக்கும் வரை சங்கடமாக இருந்தவரை கண்டு முகிலனே எழுந்து சென்றுவிடவும் தான் இயல்பாக இருந்தார்.
இப்படி அவனிடம் பேசவே அவர் யோசித்திருக்க அவராகவே முகிலனை அழைத்து உதவும்படி கதறும் நாளும் வந்தது.
உண்மையான உறவுகளின் உன்னதத்தை முழுமனதாக உணர்ந்த நாளும் அதுவே.
உலகெங்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியின் கோரத்தாண்டவம். உயிர்களை கொள்ளையாய் வாரிக்கொண்ட கரும்புகையின் கைப்பிடிக்குள் மனித உயிர்கள்.
அங்கே இங்கே என்று சுற்றி சுற்றி கேள்விப்பட்டு என்ன ஏதென்று சுதாரிப்பதற்கு தங்களின் ஏரியாவையே பூட்டி சீல் வைத்துவிட்டார்கள் வெளியே நடமாட கூடாதென்று.
முதலில் பெரிதாய் எதையும் அனலரசு கண்டுகொள்ளவில்லை. தங்களுக்கு எல்லாம் வராது என்னும் இறுமாப்பில் அவரும் இருக்க வேதா முடிந்தளவு வீட்டில் உணவுகளில் என உடலின் பலத்தை ஏற்றிக்கொண்டு இருந்தார்.
இளங்கோ சம்பந்தத்திற்கு உடல்நிலை சரியில்லை என ஷோபாவுடன் கிராமத்திற்கு கிளம்பி வந்திருக்க அனலரசு இப்போதைக்கு விடுமுறை எடுக்க முடியாதென்று மறுத்துவிட வேதாவால் வரமுடியவில்லை அனலரசுவை தனியே விட்டுவிட்டு.
இளங்கோவும், ஷோபாவும் கிராமத்திற்கு வந்து மீண்டும் ஊர் திரும்புவதற்குள் முழு ஊரடங்கு போட இருப்பதாக தகவல்கள். முகிலன் மீண்டும் அவர்களை ஊருக்கு அனுப்பவில்லை.
“பேசாம நீயும் கிளம்பி வந்திருக்கலாம் தானே? என்ன நீ?…” என முகிலன் வேதாவை திட்டிக்கொண்டு இருந்தான்.
இரண்டு நாட்களாக வேதாவும் தொண்டை கரகரப்பு, தலைவலி என வீட்டிற்குள் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தார்.
அவரின் குரலே சரியில்லாது இருக்க இங்கே குடும்பம் மொத்தமும் கவலையானது.
“இப்போ என்னன்னு ஊருக்கு வர முகிலா? எனக்கு முடியலை…” சொல்லிவிட்டார் வேதா.
உண்மையில் உடலே நலிந்துவிட்டிருந்தது அவருக்கு. பயம் வேறு இன்னும் உருக்கிக்கொண்டு இருக்க ஏதும் ஆகிவிடுமோ என வீட்டில் சொல்லிவிட்டார்.
அவர் சொல்லிய பின்புதான் வேதாவிற்கு முடியவில்லை என்பதே அனலரசுவிற்கு தெரியவந்தது.
பேசி முடிக்கட்டும் என இவர் காத்திருக்க பேசிமுடித்து வைத்ததும் நேரடியாகவே கோபத்துடன் மனைவியிடம் பேசினார்.
“என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? நானும் போனா போகுதுன்னு பார்த்தா ரொம்பத்தான் ஆடற?…”
“இப்ப என்ன ஆடிட்டேன்? சும்மா பேசாதீங்க…” என பேச்சை கத்தரிக்கத்தான் பார்த்தார் அவரும்.
“இதோ இப்ப நீ பன்றது. என்னவோ நான் உன்னை கவனிக்கவே போறதில்லைன்ற மாதிரி பேசிட்டிருக்க அவங்கட்ட எல்லாம்…”
“உங்களுக்கு எதுக்கு சிரமம்ன்னு தான் சொல்லலை. அதுவும் இல்லாம…”
“எனக்கு சிரமமா? என்னை அவ்வளவு கொடுமைக்காரன்னே முடிவு பண்ணிட்டியா நீ? அதானே பார்த்தேன். நான் கொஞ்சம் அமைதியா இருந்தா உடனே தலைக்கு மேல ஏறி நின்னு என்னை இளிச்சவாயனாக்கறது…” என கோபமாய் சொல்லியவர்,
“என்னவோ சொல்ல வந்தியே? அதுவும் இல்லாம. என்ன என்ன இல்லாம சொல்லேன்? இன்னும் என்ன இருக்குன்னு கேட்போம்….” என்றார் ஆக்ரோஷமாக.
வெகு நாட்களுக்கு பிறகான அனலரசுவின் கோபத்தையும், சுடும் வார்த்தைகளையும் கேட்கிறார் வேதா. அமைதியாக அவரையே பார்த்திருந்தவர்,
“நான் சொன்னா நீங்க நம்பனுமே? சாகப்போறேன்னு சொன்னா கூட என்னை நம்ப மாட்டேன்னு இருப்பீங்க. அப்படி இருக்க உங்ககிட்ட ஏன் சொல்லனும்னு சொல்லலை…” என்று சொல்லிவிட்டு சோர்வாய் தலையை அழுத்தி பிடித்தபடி உள்ளே செல்ல போனவரை பிடித்து நிறுத்தினார் அனலரசு.
“விடுங்க. என்ன வேணும்? அதான் எனக்கு என்னன்னு தெரிஞ்சிருச்சுல…” என்றவர் இன்னும் இருமிக்கொண்டே பின்னால் செல்ல,
“நில்லு வேதா. நான் எனக்கு என்ன சொல்றதுன்னு சத்தியமா தெரியலை. ஆனா தப்பு பண்ணிட்டேன். பெரிய தப்பு தான். அதுக்கு. அது அன்னைக்கு ஏதோ கோவத்துல சொன்னது…”
“சொல்லிட்ட பின்னால கோவம்ன்னு மாத்த வேண்டாம். உங்க மனசுல அதுதான் இருந்தது. வந்திருச்சு…”
“இல்லை இல்லை. அன்னைக்கு ஏதோ வேகத்துல. நான் புரியாம பேசிட்டேன் வேதா. இப்ப என்ன செய்யுது உனக்கு? எனக்கு சொல்லு. பதட்டமா இருக்கு…”
“ஒன்னும் இல்லை. நீங்க தள்ளி இருங்க. ஒருவேளை எனக்கு முடியலைன்னா?…” என சொல்ல,
“இல்லை அதெல்லாம் இல்லை. வா ஹாஸ்பிட்டல் போவோம்…”
“எப்படி போக? அதான் லாக் பண்ணிருக்காங்களே? போனாலும் வீட்டுக்குள்ள தனிமைப்படுத்திக்கோங்கன்னு தான் சொல்லுவாங்க. வேண்டாம். கஷாயம் வச்சிருக்கேன். மாத்திரை இருக்கு. சரியாகிடும்…” என்று சொல்ல,
“அவ்வளவு அசால்ட்டா உனக்கு?…” என கோபத்துடன் சொல்லி அவர் போனை எடுக்க போக,
“யாருக்கு போன்? சும்மா இருக்கமாட்டீங்களா?…” என பிடுங்கி வைத்தார்.