“அதுதானே மனுஷ இயல்பு. நான் ரொம்ப ஒன்னும் சொல்லிக்கலை. திரும்ப ஊருக்கு போன மனசு மாறவும் செய்யலாம்…” என்றான்.
அதற்குள் இளங்கோவும், அனலரசுவுடன் பேசிக்கொண்டே நடந்து இவர்கள் பக்கம் வந்துகொண்டு இருந்தார்கள்.
“அம்மாவும், பாட்டியும் எங்கப்பா?…” என முகிலன் கேட்க,
“சமைக்கனுமாம்…” இளங்கோ சொன்னார்.
“சுத்தம், இன்னைக்கு நான் லஞ்ச்க்கு வெளில சொல்லிட்டேன். நம்ம ராசண்ணே ஹோட்டல்ல. அவங்களே கொண்டு வந்து குடுத்துருவாங்க…” என முகிலன் சொல்ல,
“இதை நீ முதல்லையே சொல்ல வேண்டியது தானே?…” என்றார் இளங்கோ.
“சரி முன்னாடி நடங்க. நான் போய் கூட்டிட்டு வரேன்…” என சொல்லி திரும்ப அனலரசு திகைப்புடன் நின்றார்.
“என்ன மாப்பிள்ளை?…” இளங்கோ தோளை தொட்டு அழுத்தியதும்,
“இங்க என்னம்மா? எதுக்கு இப்போ இந்த ட்ரெஸ்?…” என்றார் புரியாமல்.
“அது சர்ப்ரைஸ். வாங்கப்பா…” என சொல்லி அவள் நடக்க அந்த வானாந்தரத்தில் பறவைகளின் சப்தத்தில் அவளின் சலங்கை சத்தமும் இணையாக எதிரொலித்தது.
உள்ளே செல்ல செல்ல மல்லிகை தோட்டத்திற்கு மத்தியில் ஓவியாவின் ஓவியத்துடன் கையில் தூரிகையை பிடித்துக்கொண்டு வேதா அதனை உற்று நோக்கியவண்ணம் நின்றிருந்தார்.
அதுவே ஒரு ஓவியம் போலத்தான் தோன்றியது அவர்களுக்கு. ஒன்றில் வரைந்துவிட்டவருக்கு இன்னும் இரண்டு போர்ட் காத்திருந்தது.
“எப்படிப்பா இருக்கு?…” என ஓவியா கேட்க அனலரசுவிற்கு தான் என்ன வகையான உணர்வு என தெரியவில்லை.
முன்பே அவருக்கு தெரியும் சின்ன சின்ன ஓவியங்களை எல்லாம் வேதா வரைய அவருமே கண்டிருக்கிறார் தான்.
ஆனால் பெரிதாய் மதித்ததில்லை அவர். இன்று என்னவோ அவருள் ஏற்பட்ட மாற்றமோ காண்பவை கண்களுக்கு அப்படி ஒரு விருந்தாக இருந்தது.
மல்லிகை தோட்டத்தின் மத்தியில் ஓவியா அபிநயம் பிடித்திருப்பதை போன்ற தத்ரூப தோற்றம்.
பச்சைநிற ஆடை போர்த்திய நிலமகளின் மேல் மிதந்துவரும் ஓவியமாய் அழகிய வரைபடம். இப்படி ஒரு திறமையை வேதாவிடம் அவர் எதிர்பார்க்கவில்லை.
மகளின் அந்த உடை அன்று ஏன் என்பது இப்போது புரிந்தது. அதற்காக தான் வர சொல்லி அழைத்திருக்கிறான் முகிலன் என அவனையும் பார்த்தார்.
“இங்க அடுத்த வாரம் எப்படியும் திரும்ப கிளாஸ் ஸ்டார்ட் பண்ணனும் மாமா. வெறுமனே மத்த ஓவியம் இருக்குது. அதான் ஓவியாவோடதை வரைய சொன்னேன். அதுவும் அத்தை வரைஞ்சா இன்னும் பெர்பெக்ட்…” என்றான்.
“வாங்கப்பா பக்கத்துல போய் பார்ப்போம்…” என அழைத்து செல்ல வேதாவும் திரும்பி பார்த்தார்.
அனலரசுவை பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. அவர் பேசட்டும் என அமைதியாக நிற்க அனலரசு அவராகவே பேசினார்.
“நல்லா இருக்கு வேதா…” என்றார் ஓவியத்தை மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டே.
“நிஜமாவாப்பா…” ஓவியா மீண்டும் கேட்க,
“நிஜமா தான் உண்மையாவே சொல்றேன். ரொம்ப நல்லா இருக்கு…” என்று சொல்லியவர் வேதாவை பார்க்க அவர் பதிலின்றி நின்றார்.
தலையை சாய்த்து திரும்பி நின்றவரின் விழிகளில் நீர் கோர்த்தது. தன்னை நிதானித்துக்கொண்டு மீண்டும் ஓவியத்தை பார்த்துவிட்டு,
“உனக்கு இது கரெக்ட்டா இருக்கா? சொல்லு?…” என்றார் முகிலனிடம்.
“ரொம்ப சரியா இருக்கு த்தை. அடுத்து வரையனும். அதுவரைக்கும் ரெஸ்ட் எடுப்பியாம். இதை நான் எடுத்துட்டு போறேன்…” என்றான்.
“இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும். இங்கயே உட்கார்…” என்று அங்கிருந்த மணல் திண்டில் அவர் அமர்ந்துவிட அவருடன் பேசிக்கொண்டே முகிலனும் அமர்ந்துகொண்டான்.
ஷோபா, இளங்கோ, கமலா மூவரும் வந்துவிட அவர்களும் ஓவியத்தை மெச்சுதலாய் பார்த்தனர்.
“இந்த கேன்வாஸ் எப்போ?…” என இளங்கோ கேட்க,
“நாளைக்கு வரையலாம் ப்பா. விஷயம் தெரியுமா? மாமா ரொம்ப நல்ல இருக்குன்னு சொன்னாரு. அத்தைக்கு அப்படியே ஆனந்த கண்ணீர்…” என முகிலன் கிண்டலாய் பேச,
“சும்மா இரு முகிலா…” என அவனின் தோளில் அடித்தார்.
“சரி சரி வாங்க. நாளைக்கு தான வரையனும். இதை இப்ப எடுத்துட்டு போய் வீட்டுக்குள்ள வச்சிருவோம். இருட்டிட்டு இருக்கு. மழை வந்திர போகுது…” என்றார் இளங்கோ.
இளங்கோவும், முகிலனும் எடுத்துக்கொள்ள ஆளுக்கொன்றாய் தூக்கிக்கொண்டு தோட்ட வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.
“எங்க ஓவியாவும், மாமாவும்?…” என முகிலன் தேட,
“புது கிணத்து பக்கம் பேசிட்டே போனாங்க. போய் வர சொல்லு. சாப்பாடு வந்திட்டிருக்காம்…” என்றார் சம்பந்தம்.
“சரி நீங்க இங்கயே இருங்க. நான் போய் கூட்டிட்டு வரேன். இன்னைக்குன்னு பார்த்து மழை கூடி நிக்குது இன்னேரமே…” என்று இரண்டு குடையை எடுத்துக்கொண்டு சென்றான் முகிலன்.
அங்கே கிணற்றடியில் ஓவியாவின் முகத்தில் தீவிரபாவம். அமைதியாய் கேட்டபடி அனலரசு.
“இதை விட என்னப்பா சந்தோசம் என் வாழ்க்கையில. நீங்க பார்த்தீங்க தானே? உங்களுக்கே இது எவ்வளோ பெரிய மாற்றத்தை குடுத்திருக்கு. இப்ப சொல்லுங்க எங்க வாழ்க்கை உங்களுக்கு சந்தோஷத்தை குடுக்குதா இல்லையா?…” என்றாள்.
“உண்மை தான்ம்மா. சில தப்புகள் எல்லாம அனுபவப்பட்ட பின்னாடி தான் தெரியும். என்னோட நிலைமையும் அதுதான்…” அனலரசு உணர்ந்து பேசினார்.
“வாழற இடத்தை பொருத்து இல்லை வழக்கை. மனசு தான். இங்க நிறைவா நிம்மதியா இருக்கேன். என்னோட சுயம் தொலையாம இருக்க அத்தான் எத்தனை மெனெக்கெட்டு இருக்கார்ன்னு பார்த்தீங்க தானே?..”
உண்மை தானே? முகிலன் தன்னுடைய வாழ்க்கையையும் வென்று மகளின் கனவுகளையும் அவளுக்காக யோசித்து நிறைவேற்றினான்.
எந்த இடத்திலும் முகிலனை விட்டுக்கொடுத்துவிடாத படி அவளை அன்பில் நிறைத்திருந்தான்.
தாங்களே எதிர்பார்க்காத ஒரு வழக்கை தான் மகள். அவளின் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சி.
கணநேர யோசனை என்றாலும் அவருக்கு தெரிந்துவிட்டது வேதாவிடம் இப்படி ஒரு பூரிப்பை என்றுமே அவர் கண்டதில்லை.
பல நேரங்களின் சண்டை, பாதி நேரம் வாக்குவாதம் தன்னால். மீதி நேரம் எல்லாம் பிள்ளைகளை கொண்டு வாழ்க்கை.
உன் கணவர் உனக்கு என்ன செய்தார் என்ற கேள்வி வருமாயின் வேதாவிடம் என்னமாதிரியான பதில் கிடைக்கும் என யோசித்து பார்த்தவரால் அனுமானிக்கமுடியவில்லை.
மனதிற்குள் ஒரு ஆசையும் வந்தது. இத்தனை வருடங்களுக்கு பின்னர் தன்னால் அப்படி ஒரு வாழ்க்கையை வேதாவிற்கு தரமுடியுமா என்று.
தன்னை குறித்தே தான் அதற்கு சரிப்பட்டு வரும் ஆளா என யோசிக்க ஆரம்பித்திருந்தார். அவரின் யோசனைகளை கவனியாமல் ஓவியா பேசினாள்.
“தப்பா நினைக்காதீங்கப்பா, இதை நான் முன்னாடியே பேசியிருந்தா உங்க காதுல விழுந்திருக்காது. யோசிச்சிருக்கமாட்டீங்க. ஆனா இப்போ யோசிப்பீங்க இல்லையா…”
“என்ன சொல்றதும்மா நான்?…”
“நீங்க பார்த்து அப்படியே திகைச்சு போய் நின்னீங்களே? உங்க கண்ணுல அவ்வளவு ஆச்சர்யம். ஆனா அது அப்படியே நின்னுடுமோன்னு தான் உங்ககிட்ட நான் பேசறேன் ப்பா. இனியாவது நீங்க அம்மாவுக்ககாவும் கொஞ்சம் யோசிங்க…”
“புரியுதும்மா…”
“புரிஞ்சா மட்டும் போதாது. அசட்டையா இருக்காம ஒரு சந்தோஷத்தை நீங்க அம்மாவுக்கு குடுக்கனும்…” அனலரசுவிடம் மௌனம்.
“உங்களுக்கு தெரியாதுல. சஞ்சய் அண்ணா இப்ப டெல்லில இல்லை…” என்றதும் அவர் மகளை பார்த்தார்.
“எங்க? அதுவும் வரலை. அவனுக்கு இந்தியாவே வேண்டாமாம். ஆபீஸ்ல சொல்லி அவன் ஸ்டேட்ஸ் போயாச்சு. அது தெரியுமா உங்களுக்கு?…” என்றாள்.
“இதெல்லாம் உனக்கு எப்டி தெரியும்?…”
“எல்லாம் உங்க மருமகன் தான். போன் பண்ணி பேசிருக்காங்க. ஸ்டேட்ஸ் கிளம்பற அன்னைக்கு. இங்க வரவேண்டியது தானேன்னதுக்கு போதும் என் வாழ்க்கையை நான் பார்த்துக்கறேன். திரும்பவும் அந்த சிக்கல்ல மாட்டிக்க விரும்பலைன்னு சொல்லிட்டு போய்ட்டானாம்…”
மகனை பற்றிய விஷயம் அறியவும் இன்னும் முகம் கசந்து போனது. என்ன பிள்ளையை வளர்த்திருக்கிறேன் என எப்பவும் போல மருகிபோனார்.