மகள் அலங்காநல்லூர் கிளம்புகிறேன் என்று சொல்லி சென்றதில் இருந்தே எழில்மணி கலங்கி போய்விட்டார்.
மதுரா கிளம்பி எத்தனை நேரமாகியிருந்தது. இன்னும் இரவு உணவை உட்கொள்ளவில்லை எழில்மணி.
மகேஷ்வரி இருமுறை அழைத்தும் எழுந்து வரவில்லை. மனைவி மீது அத்தனை கோபம்.
அதிலும் மகளும் தன் பேச்சை கேட்காமல் கிளம்பி செல்ல இது அத்தனை மனவுளைச்சலை தந்தது அவருக்கு.
“இன்னும் எவ்வளவு நேரம் தான் சாப்பிடாம இருக்க போறீங்க நீங்க? இந்நேரம் மது சென்னையை க்ராஸ் பண்ணிருப்பா…” என சொல்லிய மகேஷ்வரி மணியின் எதிரில் வந்தமர்ந்தார்.
“நீ பேசாத மகேஷ். அம்மாவும், பொண்ணும் சேர்ந்து என்னை தூக்கி எரிஞ்சிட்டீங்க இல்ல? எவ்வளோ கோபமா போறா அவ?…”
“மது கோவப்பட்டதுக்கு காரணமே நீங்க தானே? பேசிட்டு முடிவு சொல்றேன்னு சொன்ன பொண்ணை சீண்டிவிட்டது யாரு? நானா?…” என மகேஷ் கேட்டதும் தலை கவிழ்ந்தார் மணி.
“எந்த தகப்பனும் கேட்காத ஒரு கேள்வி நீங்க நம்ம பொண்ணை பார்த்து கேட்டீங்க. தப்பில்லையா?…” என்றார் கண்களில் நெருப்பு பொறி பறக்க.
“பணத்துக்கு கல்யாணம் செஞ்சுக்கறவளா நம்ம மது? நம்ம பொண்ணை பத்தி நாக்குல நரம்பில்லாம பேச எப்படி உங்களுக்கு துணிச்சல் வந்தது?…” என்று கேட்க,
“நான் பேசறேனா? பேசற அளவுக்கு யார் கொண்டு போனா? அவன்கிட்ட காசு வாங்கிட்டோமேன்னு கல்யாணம் செஞ்சுக்க சம்மதிக்க போறியான்னு கேட்டுட்டேன். அதுவும் ஒரு கோவத்துல…” என தடுமாற்றத்துடன் தன்னை நியாயப்படுத்த முயன்றார் மணி.
“என்ன சொன்னாலும் தப்பு தப்பு தான். எத்தனை கோபம் இருந்தாலும் மனுஷனுக்கு நிதானமில்லைன்னா இப்படித்தான் ஆகும்…”
“எப்படி மகேஷ் நிதானமா இருக்க சொல்ற? என் பொண்ணால அங்க வாழ முடியாது. எனக்கே தெரியாதா அந்த கிராமம் பத்தி…” என மணி சொல்ல சொல்ல இன்னுமே வெகுண்டுவிட்டார் மகேஷ்.
“நீங்க என்ன சிட்டில பிறந்து வளர்ந்தீங்களா? இல்ல பாரின் கன்ட்ரியா?…” என்று கேட்க வாயடைத்து போனார் மணி.
“பாரின்ல படிச்சிட்டு வந்த நான் உங்களை கல்யாணம் செஞ்சுட்டு வாழலையா? என் பொண்ணு எங்க போனாலும் அந்த வாழ்க்கையை சிறப்பா வாழ்வா…”
“மகேஷ், நீ என்னை அவமானப்படுத்தற. அவனோட என்னை நீ எப்படி கம்பேர் பண்ணலாம்?…” என்றவர்,
“நான் கிராமத்துல வளர்ந்தாலும் படிச்சவன். நாகரீகம் தெரியும். நாசூக்கா பழக தெரியும். இந்த சிட்டில எப்படி வாழனும்னு தெரியும். ஆனா அவனுக்கு என்ன தெரியும்?…” என்றார் இளக்காரத்துடன்.
“நல்ல படிச்சவர் தான் போலிப்பத்திரத்துக்கும் ஒரிஜினலுக்கும் வித்தியாசம் தெரியாம ஏமாந்தீங்க. நாசூக்கா பழக போய் தான் கையறு நிலையில நின்னீங்க. சிட்டில எப்படி பிழைக்கனும்னு தெரியாம தான் அத்தனையும் இழந்துட்டு நிக்கிற நிலைமைக்கு குடும்பத்தை கொண்டுவந்தீங்க…” என்றார் மகேஷ்.
ஒவ்வொன்றும் மணியை சாட்டையால் சுழற்றி அடித்தது. உண்மை தான். தலை நிமிரமுடியவில்லை மனைவியிடம்.
அவமானமாக உள்ளம் குறுக அமர்ந்திருந்தவரால் என்ன பேச முடியும்? பரிதாபம் கூட வரவில்லை மகேஷ்வரிக்கு.
“இன்னொருத்தர்கிட்ட கடன் வாங்கி சரி செய்யற நிலைமைக்கு கொண்டுவந்த நீங்க இதை பேச கூடாது. என் பொண்ணுக்கு வசதியா, படிச்ச, நாசூக்கு தெரிஞ்ச மாப்பிள்ளை வேண்டாம். எந்த சூழ்நிலையிலையும் இன்னொருத்தர்கிட்ட நான் நின்ன மாதிரி என் பொண்ணை நிறுத்தக்கூடாது…” என்றார் சுளீரென.
“என்ன மகேஷ்?….” மணியின் முகம் தொங்கி போனது.
“என்னன்னா? நிஜம் தானே? அன்னைக்கு அந்த தம்பி சொன்னது இப்பவும் எனக்கு ஞாபகம் இருக்கு. என் பொண்ணை மனசுல வச்சு தான் உதவி செய்யிறியான்னு நீங்க கேட்டப்ப சொன்னார் பாருங்க. ஞாபகம் இருக்கா?…”
மகேஷ்வரி கேட்டதற்கு மணியின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது. அடுத்து என்ன வர போகிறதென கூனிப்போய் பார்த்தார்.
“அவர் கட்டிக்க போற பொண்ணை எந்த சூழ்நிலையிலையும் மரியாதை குறைவான விதமா கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு சொன்னார். மனுஷன் அப்படி இருக்கனும். என் பொண்ணு அங்க இருக்கனும்ன்னு எனக்கு தோணுது…” என்றவர்,
“நான் தான் ஒட்டு உறவு இல்லாம தனிச்சு வாழ்ந்துட்டேன். ஆனா என் மதுவுக்கு ஒண்ணுன்னா துடிச்சு போய் பார்க்க, கேட்கன்னு நாலு உறவு வேணும். அது அங்க கிடைக்கும்னு என் மனசு நம்புது. கண்டிப்பா அவ சந்தோஷமா இருப்பா…” என்றார் உறுதியாக.
இதற்கு மேல் எழில்மணி என்ன பேசிவிட முடியும்? மகேஷ்வரியை தான் பார்த்தபடி இருந்தார்.
“கல்யாணத்தை நிறுத்துவேன்னு சொன்னீங்க தானே? அதுக்காவது தெம்பு வேண்டாமா? சாப்பிடுங்க. நானும் சாப்பிடனும். இந்த கல்யாணத்தை நடத்தனுமே?…” என எழுந்து சென்று உணவை தன் தட்டில் வைத்துக்கொண்டவர் மணி வரும் வரை அமர்ந்திருந்தார்.
தான் செல்லாமல் சாப்பிடமாட்டார் மகேஷ் என்று மணியும் தளர்ந்த நடையுடன் வந்தார் அங்கே.
“இல்லம்மா, இப்ப தான் ஜகா கால் பண்ணியிருந்தார். மார்னிங் அவங்களே மதுரை வராங்களாம். பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னாங்க…”
“ஹ்ம்ம், ஓகே டா. எதையும் நினைக்காம தூங்கு…” என்றவர்,
“கோச் உனக்கு கம்பர்ட் தானே?….”
“எஸ், ம்மா. எனக்கு ஓகே. இந்த ஜர்னி ரொம்ப நல்லாயிருக்கு…” என்றாள்.
மணி மகளும், மனைவியும் பேசுவதில் தான் கவனம் வைத்திருந்தார். மதுரா தன்னிடம் பேசுவாளா என பார்த்திருந்தார்.
“ஓகே டா. குட் நைட். பை…” என்று சொல்லி மகேஷ்வரி வைத்ததும்,
“என் பொண்ணு ட்ரெயின்ல போறா? என்ன கொடுமை?…” என்றார் மணி.
“ட்ரெயின்ல போறவங்க எல்லாம் என்ன ஒன்னுமில்லாதவங்களா? எதாச்சும் சொல்லிட போறேன். பேசாம சாப்பிடுங்க…” என எரிந்துவிழுந்தார் மகேஷ்வரி.
“இப்படி மத்ததை பேசி பேசி தான் நாமளும் எல்லாம் இழந்து இன்னொருத்தர்ட்ட கையேந்தர நிலைக்கு போனோம். மறக்க வேண்டாம்…” என எச்சரித்து சாப்பிட ஆரம்பித்தவர் வேகமாய் முடித்துக்கொண்டு கையை கழுவினார்.
“ட்ரெயின்ல போறவங்களும் மனுஷங்கதான். முதல்ல மதிக்க கத்துக்கோங்க…” என சொல்லிவிட்டு அங்கேயே நிற்க மணி வேகமாய் சாப்பிட்டார் தட்டில் இருந்ததை.
தனக்காக தான் நிற்கிறார் மகேஷ்வரி என தெரிந்தவர் தானே. உண்டு முடிக்கவில்லை என்றால் நகர மாட்டாரே.
இருவரும் உறங்க செல்ல எழில்மணிக்கும் தன்னிடம் தன் மனைவியின் பேச்சுக்கள் என்பது குறைந்தது போலிருந்தது.
மறுநாள் காலை ஜகா வந்துவிட்டதாக சொல்லி மகேஷ்வரிக்கு தகவல் சொல்லிய மதுரா அவனுடன் ஊரை நோக்கி சென்றாள்.
“என்ன ஜகா, எதுவும் விசேஷமா?…” என ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே மதுரா கேட்க,
“பொறவு இல்லையாக்கும், இன்னிக்கு சித்திரத்திருவிழாக்கு கொடியேத்திருக்காக. அதேம் ஊரே மினுங்குது…” என சொல்லியவனுக்கும் முகம் மினுங்கியது.
ரத்தத்திலேயே ஊறி போனதல்லவா அந்த உணர்வுகள்!!! சொல்லும் பொழுதே முகத்தில் அத்தனை சந்தோஷம்.
பேசிக்கொண்டே அலங்காநல்லூரை அடைந்தவர்கள் நேராக நாயகியின் வீட்டிற்கு சென்றனர்.