“ஆமா பாட்டி, அவரை பார்த்து பேசிட்டு வரேன். ஜகாவை அனுப்பி வைங்களேன். மிஸ்டர். சொக் எங்க இருக்காருன்னு நேர்ல பார்க்கனும்…” என மதுரா சொல்லவும்,
“சொக்கா. ஆத்தீ, ஆத்தீ நா என்ன செய்யுவேன்? சொக்குதுத்தா எனக்கே எம்புட்டு சொக்குது. சொக்குதேன், சொக்குதேன். நல்லாருக்கு. அப்பிடியே கூப்புடுத்தா…” என்று அவர் அங்கே அலம்பல் செய்வது இங்கே மதுராவின் கண்களில் தெரிந்தது.
“போதும் பாட்டி, ஜகா எங்க? ப்ரீயா இப்ப?…”
“என்னத்த பெரிய சோலிக்கழுத? அவேன் இங்கினதேன் இந்த மருதுபயலுக்கு பேன் பாத்திட்டிருப்பியான். பொடனில தட்டி இப்பவே அனுப்புதேன்…” என்றார் காந்திமதி.
“ஏலே சகா…” என உச்சக்குரலில் அழைத்துக்கொண்டே அவர் செல்வது வரை கேட்டது மதுராவிற்கு.
“என்ன கெழவி? எனக்கு பொண்ணுகின்னு அம்புட்டுக்குச்சா? இம்புட்டு வெரசா வார?…”
“தொரைக்கு நெனப்ப பாரு, கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவேன்…”
“இந்தா நிப்பாட்டு, என்னத்துக்கு வந்த இப்ப?…” என்று ஜகா முறைக்க,
“எம்பேத்தி இருக்கா பேசு…” என்று கொடுத்தவர் வெட்கப்பட்டு சிரித்தார்.
“கெழவி, வெந்து, வேவாதத என்னத்தையாச்சு வாக்குள்ள அதக்கிட்டியா? இம்புட்டு நெளியித? வவுறு நோவுன்னா எங்கிட்டாவது ஓரமா நவரத்தான?…” என போனை வாங்கிக்கொண்டு அவரிடம் சொல்ல மதுரா அடக்கமாட்டாமல் சிரித்துக்கொண்டிருந்தாள்.
“இவேன் ஒருத்தேன்…” காந்திமதி மருதுவுக்கும் ஒரு அடியை போட்டு,
“இந்நேரத்துக்கு பெரியவேன் செரின்னிருந்தா அந்த போட்டோவ பெருசா போட்டு நடு வீட்டுல மாட்டிருப்பேன். ஹம்ம், எங்க?…” என பெருமூச்சு விட்டபடி நகர்ந்தார் காந்திமதி.
“பாத்து கெழவி வெக்கோலு பத்திக்கிடாம?…” என சிரித்தபடி ஜகா மதுராவிடம் பேசினான்.
“சொல்லுங்க…” என்றதும் சிரிப்பை குறைத்தவள்,
“ஜகா ப்ரீயா நீங்க?…” என கேட்டாள்.
“ஆமாங்க, வீட்டுல தான் இருக்கேன். சாயங்காலமா மருதைக்கு போவேன்…”
“நீங்களும் மருதையா?…” என்று சிரித்தவள்,
“உங்க அண்ணன் இப்ப எங்க இருப்பாங்க?…” என்றாள்.
“அண்ணனா?…”
“ஆமா, அவங்கட்ட பேசனும். கூட்டிட்டு போக முடியுமா?…”
“இப்பத்தேன் பம்புசெட்டு பக்கம் போனாக அண்ணே…” என்று சொல்லவும் ஜகா நகர மதுராவும் வேக நடையிட்டு சென்றாள்.
நான்கு மாதங்களுக்கு பின்னான சந்திப்பு. அதுவும் இப்படி திருமணத்திற்கு பேச என்று கிளம்பி வந்தது உள்ளுக்குள் குறுகுறுப்பை கூட்டியது மதுராவிற்கு.
“அண்ணே…” என்ற ஜகாவின் சத்தம் செல்லும் திசையில் மதுரா பார்க்க மடித்து கட்டிய வேஷ்டியும், கையில்லா வெள்ளை பனியனுமாக தலையை துவட்டியபடி நின்றிருந்தவன் திரும்பினான்.