“எம்படிப்பு பத்தாப்பு கூட தாண்டல. அத்தயுமே முழுசா முடிக்கல…” பாண்டியன் சொல்ல,
“தெரியாம படிச்சு தொலச்சிட்டேம். போதுமய்யா…” என்றாள் சற்றே கிண்டலுடன்.
“வெளையாட்டில்லப்பா, இப்ப இருக்கற சூட்டுல எதோ நெனப்புல செரின்னுப்புட்டு பொறவு நோவுதேன்னு சொல்ல கூடாதுல…” என்றவன் குரலின் தன்மை அவளை சுட்டது.
“எங்கப்பா பேசினதுல ரொம்ப ஹர்ட்டாகிருக்கீங்க. எனக்கு புரியுது. வாழ்க்கையை எங்க வாழறோம்ன்றதை விட எப்படி வாழறோன்றது முக்கியம். நான் செகேன்ட் கேட்டகிரி. அதுவும் நான் சின்ன பிள்ளை கிடையாது மிட்டாய் காமிச்சு ஏமாத்தி கல்யாணம் செய்ய…” என்றாள் உறுதியாக.
அவளின் மன உறுதி அவனின் மனதின் ஆழத்தில் சென்று சர்க்கரையை தூவியது.
இத்தனை தூரம் தன்னிடம் மதுரா பேசுவதே அவளின் முழுமையான பிடித்தம் கொண்டு தான் என உணர்ந்துகொண்டான்.
“இது வில்லேஜ்ன்னு தெரியும். இங்க எப்படி இருக்கனும்னும் தெரியும். நம்பிக்கை இல்லைன்னா சொல்லிடுங்க…” என்றவளை எப்படி மறுக்க?
இன்னும் எழில்மணி சொல்லிய அந்த வார்த்தைகள் அவனை பதம் பார்த்துக்கொண்டே தானே இருந்தது.
பிடித்தத்திற்கும், அலட்சியப்படுத்தியதன் கோபத்திற்கும் இடையில் பாண்டியன் நின்றிருந்தான்.
இப்போதும் கூட உடனே சரி என்று சொல்லிவிட அவனின் நேர்மையான குணம் விடவில்லை.
ஆனாலும் விரும்பி வந்திருக்கும் பெண்ணை அதையே காரணம் காட்டி விலகவும் மனதுக்கு ஒப்பவில்லை.
உடன் வாழப்போகும் பெண்ணின் விருப்பம் தானே முக்கியம். அந்த முடிவிற்கும் வந்துவிட்டான் பாண்டியன்.
“இப்ப நான் சொல்லவந்ததை சொல்லட்டுமா? இது உங்க டர்ன். உங்க முடிவு தான் நீங்க சொல்லலாம்…..” என பீடிகை போட்டவள் அகிலன் விஷயத்தை கூறி அவன் முகம் பார்க்க எப்போதும் போலவே இருந்தது.
“அவங்க மேல நல்ல அபிப்ராயம். கூடவே ஒரே பிஸ்னஸ், பேச்சு எல்லாமே ஒரு குட் குவாலிட்டி. நானும் ஓகே சொன்னேன். ஆனா அதுக்கப்பறம் நடந்தது எல்லாமே அப்ப விரும்பத்தகாதது. அது ஒரு ரிலீஃபை தான் குடுத்துச்சு. அகிலன் சொல்லும் முன்னமே நானே வாழ்த்துக்கள் சொல்லிட்டு கிளம்பிட்டேன்…”
“நான் எப்பவும் எதையும் மறைச்சு பேசமாட்டேன். அதான் எல்லாமே பேசிட்டா நல்லது தானே? அதோட அப்பாம்மாவோட பிஸ்னஸ். கல்யாணம் ஆனாலும் இந்த கடன் கடன் தான். அதை கண்டிப்பா பிராப்பரா செட்டில் பண்ணிடுவேன். நான் இங்க மதுரையில இருந்தாலும் இங்க இருந்தே அங்க எல்லாம் கவனிச்சுப்பேன்…”
“அப்பாவால தனியா முடியாது. அம்மா இருக்காங்க தான். ஆனாலும் சமாளிக்க முடியாது. நிலைமை இன்னும் சரியாகிடுச்சுன்னு சொல்ல முடியாது. ஓரளவு சரியாகிட்டே வருது. பழைய நிலைக்கு வந்து அதை சரி செய்ய இன்னும் மெனக்கெடனும்…”
“அப்பப்ப அத்தியாவசியத்துக்கு சென்னை போய்ட்டு வருவேன். என்னோட வொர்க் எந்தவிதத்திலையும் நம்ம லைஃபை பாதிக்காது. அது நிச்சயம் சொல்லுவேன் நான். ஹ்ம்ம், வேறென்ன? இப்ப இவ்வளவு தான் ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சு…” என்றவள்,
“இப்ப உங்க முடிவு தான். எதுவானாலும் எனக்கு சம்மதம். சொல்லுங்க வீட்டுல பேசலாமா? வேண்டாமா? இப்பவே சொன்னா உங்க முடிவு எதுவானாலும் நான் புறப்பட தயாராகனும்….” என்றாள் மதுரா.
உண்மையில் மதுராவை வியந்து தான் பார்த்திருந்தான் பாண்டியன். இத்தனை தெளிவா இந்த பெண்ணிடம் என்று.
அகிலனை அவள் கையாண்ட விதத்திலும், தொழில் சரிவில் தைரியமாக நின்ற உறுதியிலும், வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் அவளின் பேச்சிலும், பக்குவத்திலும் இன்னுமே கவரப்பட்டான்.
“என்ன போகட்டுமா?…” என அவன் முன்னே கையை அசைத்து கேட்க,
“சித்திரத்திருவிழாக்கு நேத்திக்குத்தேன் கொடியேத்தம். விசேசம் முடிஞ்சி கொடியிறக்கற வரைக்கி நீ இங்கினதேம். இந்த ஊருதேம்…” என அவன் சொல்லியவிதத்தில் மலர்ந்து போனாள் மதுரா.
“இப்படி கூட ப்ரப்போஸ் பண்ணுவாங்களா? நைஸ்…” என்றாள் ரசித்து.
கூடவே வீட்டில் நடந்த பேச்சுக்களையும் மேம்போக்காய் சொல்லிவைக்க தலையசைத்து கேட்டுக்கொண்டவனுக்கு மதுராவின் சம்மதம் தாண்டி வேறு என்ன வேண்டும் என்றிருந்தது.
“ஒங்கப்பாவுக்கு போன போட்டு தாம்மா…” என்றான் பாண்டியன்.
“இப்பவா? அப்பாவுக்கா? ஏற்கனவே என்கிட்ட ரொம்ப பேசிட்டார். கோவமா இருக்கார்…” என யோசித்துக்கொண்டே மதுரா தந்தைக்கு அழைக்கவும் செய்தாள்.
“இப்ப அந்த மருவாதிய எந்த காத்து கருப்பு லவட்டிட்டு போச்சாம்?…” அவனை போலவே கேட்க,
“இங்க தான இருக்க போற. மெல்ல சொல்லுவோம்…” என தொட்டியில் விழுந்த தண்ணீரை பார்த்துக்கொண்டே சிரிப்புடன் பாண்டியன் சொல்லவும் அங்கே எழில்மணி எடுத்துவிட்டார்.
“மதும்மா, மது. எங்கடா இருக்க?…” என்று எழில்மணி அங்கே மகளிடம் உருக,
“அவங்க பேசறாங்கப்பா. இப்ப தரேன்…” என்று பாண்டியனிடம் நீட்ட,
“அவங்களா? எவங்க அவங்க? நீ முதல்ல கிளம்பி சென்னை வா. மது நாம இங்க வச்சு பொறுமையா பேசிப்போம்….” என இரைந்துகொண்டிருந்தார் எழில்மணி.
“இப்பலாம் அனுப்ப முடியாது மாமோவ், நேத்திக்குத்தேன் கொடியேறிருக்கு. கட்டுப்பாடு தெரியுமில்ல? கொடி எறங்குத வரைக்கி வெளி தங்கல் கூடாதுன்னு…” என்றவன் அவர் பேசும் முன்,
“மொத அத்தைய கூட்டிட்டு ஊருக்கு பொறப்படுங்க. மதுர மீனாட்சியம்மன் திருக்கலியாணத்தன்னைக்கு பேசி நிச்சயத்த முடிச்சிடலாம்…” என்று சொல்ல எழில்மணி மூச்சற்று நின்றார் அவனின் இந்த பேச்சில்.
“கலியாணத்த அடுத்த மாசம் வெச்சிக்கிடலாம்…” என சொல்லி போனை மதுராவிடம் நீட்டினான். அவனிடம் வாங்கியவள்,
“அப்பா எனக்கு இந்த மேரேஜ்ல ரொம்ப சந்தோஷம். சம்மதம். நான் பேசிட்டேன். மத்ததை நீங்க வந்து பேசுங்க. எனக்கு மிஸ்டர்.சொக்கை பிடிச்சிருக்கு…” என்று மதுரா தெள்ள தெளிவாய் கூறிவிட்டாள் பாண்டியனை பார்த்துக்கொண்டே.
‘மிஸ்டர். சொக்கா?’ என பார்த்தவனின் முறுக்கிவிடப்பட்ட கற்றை மீசை வழக்கம் போல அவனின் மந்தகாச புன்னகையை சுருட்டிக்கொண்டது.
விஷயம் அறிந்த காந்திமதி பாட்டிக்கு அன்றைக்கு தான் தீபாவளி, திருவிழா கொண்டாட்டம் எல்லாம். அவரை கையில் பிடிக்க முடியவில்லை.