“இங்காரு அழகரு, நா சொல்லுதேமின்னு நீயி என்ன நெனச்சாலும் சரித்தேம். எம்வீட்டு மவராசிய பேசி போட்டா. இதுக்கு மேல இவள மன்னிச்சி எனக்கொண்ணும் நெறைய போறதில்ல. அதனால இந்த போக்குவரத்த நிப்பாட்டு…” என்றுவிட்டார் தடாலடியாக.
“பெரியாத்தா…” அழகர் அதிர்ந்துவிட,
“நீயி வாரியா, போறியா எனக்கொண்ணுமில்ல. ஆனா இவ இனிமே இந்த வீட்டு படியேறி வர கூடாது. அம்புட்டுத்தேன்…” என்றவர்,
“ஒம்மவளுக்கு விசேசமா நாங்க வருவோம். சபைக்கி வந்து நிப்போம். அதுவும் மருவாதிக்காகத்தேன். ஒனக்காகவுந்தேம். இவளுக்காவ இல்ல…” என சோமுவை எரிக்கும் பார்வை பார்த்தார்.
“மன்னிச்சிக்கிடு பெரியாத்தா. நா என்ன செய்யுவேன்?…” அழகர் அழுதேவிட சோமு பயந்து நின்றார்.
“என்னென்ன ஏத்தம் இவளுக்கு? இவ அண்ணே மவள கெட்டலன்னு இம்புட்டு வெசமா நிக்கிதாளே?…” என சொல்லும் பொழுதே காந்திமதி விழிகள் கனலை உமிழ்ந்தது.
“எத்தே…” வடிவு அவரை அடக்க பார்க்க,
“பேசாதன்னு சொல்லுதேமில்ல. இவ பேசுதப்பவே விட்டு இறுக்கிருந்தா ஒத்த வார்த்த வருமா?…” என வடிவிடமும் பாய்ந்தார்.
“அதான் நா முந்திக்கிட்டேன். இந்த கப்பிள்ஸ் கேம்ல எல்லாம் தலையே குடுக்க கூடாதுன்னு…” என சொல்ல,
“நீங்களும் சீக்கிரம் ஜாயின் பண்ண வாழ்த்துக்கள்…” என கிண்டல் பேசினாள் மதுரா.
“ம்க்கும், கெழவி ஏழு கழுத வயசாகட்டும்ன்னு என்னிய அது வயசுக்கு இழுத்துக்கிட்டிருக்கு. என்னிக்கு எனக்கு கலியாணமாகி எம்பொண்டாட்டி இப்பிடி சோத்து சட்டியோட என்னிய தேடி வர போறாளோ?…” என்றான் வானத்தை பார்த்தபடி.
“மேல எதுவும் தெரியுதா ஜகா?…”
“தெரிஞ்சிட்டாலும். ஒருத்திய பார்த்தும் எனக்கு ஒர்க்கவுட்டாகமாட்டிக்கு. அப்பிடியும் ஆராச்சும் பேசிட்டு வந்தாகனா சுள்ளுன்னுதேம் வருது. என்னத்த சொல்ல? (gravityhair.com) …” என புலம்பியவன்,
“அந்தா அண்ணே வாராக. போங்க போங்க…” என ஜகா கிளம்ப பாண்டியன் வந்துவிட்டான் மதுரா நின்ற இடத்திற்கு.
“மதுரா வாரேமின்னு சொல்லவே இல்ல?…” என வந்தவன் அவளின் கையிலிருந்த கூடையை வாங்கிக்கொண்டான்.
“வீட்ல ஒருமாதிரி இருந்துச்சு. அதான் கிளம்பி வந்தேன்…” என்று அவனுடன் நடக்க,
“சொல்லிருந்தா வந்து கூட்டியாந்திருப்பேன். இப்ப கெளம்புததாதேம் இருந்தேம்…”
“இப்ப என்ன? திரும்ப போகட்டுமா?…”
“சொன்னேம்ப்பா. வா வா…” என அழைத்துக்கொண்டு பம்புசெட்டின் அருகே மடிக்கும் கட்டிலை தூக்கி வந்து பிரித்து போட்டான்.
“ஒக்காரு. எலை அறுத்துட்டு வாரேம்…”
“அதெல்லாம் வேணாம் சொக்கரே. ப்ளேட் கொண்டு வந்திருக்கேன்…” என அவனின் கையை பிடித்து தன் முன்னே அமர வைக்க புன்னகையுடன் அமர்ந்தவன் பார்வை வழக்கம் போல வேலையாட்களையும் பார்த்துக்கொண்டது.
“இப்ப ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப் தான். பார்த்தா பார்த்துட்டு போகட்டும்…” மதுரா சொல்ல,
“வேல நேரத்துல இங்கின என்ன பார்வ? அதேம் கவனிச்சேன். செரி கைய கழுவிட்டு வரேன்…” என்று எழ, தானும் சென்றாள்.
“அன்னைக்கு இங்க தான தண்ணி குடிச்ச? இப்ப வேணாமா?…” பாண்டியன் குறும்பாய் அவளிடம் கேட்கவும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை காண்பித்தவள்,
“செரி விடு, வீட்டுக்கு வந்து குடிக்க வைச்சு பாத்துக்கறேன்…” என அசராமல் சொல்லி செல்ல முகம் சிவந்துவிட்டது மதுராவிற்கு.
“சொக்கா சொக்கா, பேச்சு பேச்சா தான் இருக்கனும்ன்றது உங்கக்கிட்ட தான் கத்துக்கனும். என்ன பேசினீங்கன்னு எனக்கு தான் தெரியும். பார்க்கறவங்களுக்கு சிரிப்பை தவிர வேற ஒன்னும் தெரியாது. எப்படி இப்படி?…”
“இந்த மீசையை முதல்ல ஒருநாள் ட்ரிம் பண்ணி விடறேன். இருக்கு உங்களுக்கு…” என சொல்ல சிரிப்போடு மீசையையும் அவன் விரல் கொண்டு நீவ தனது போனில் அதனை படம் பிடித்தாள் மதுரா.
“இனிமே நானும் அப்பப்ப வருவேன். இல்லைன்னா நீங்க கிளம்பறப்போ கூட்டிட்டு வாங்க. கம்பெனி வேலை எதையும் அம்மா பார்க்க விடலை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொல்றாங்க…” என மதுரா குறைபட,
“அதுக்கென்ன? வந்துட்டா போச்சு…” என்றவன் சொல்லியதை போலவே அழைத்து வர ஆரம்பித்திருந்தான்.
அவர்களின் வரவு செலவு, தொழில்கள், வியாபாரங்கள் என எல்லாம் மதுராவிற்கும் அத்துப்படியாக்கி இருந்தான் பாண்டியன்.
ஏற்கனவே கம்பெனி பொறுப்பில் இருந்தவளுக்கு அதனை கற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய கஷ்டமாக இருக்கவில்லை.
இருவருமாக வாழ்க்கை கணக்கோடு, வருமான கணக்கையும் மிச்சம் மீதியின்றி ருசிக்கவும், ரசிக்கவும் தேர்ந்திருந்தனர்.
அழகான தமபத்தியத்துடன் நாட்களும் இனிமையாக நகர ஆடி மாதம் என்றொரு சம்பிரதாயம் வந்து நின்றது.
நாயகி வந்திருந்தார் அன்று. மதுரா மதியத்திற்கு மேல் வீட்டில் இருந்தாள். இப்போதெல்லாம் கம்பெனி வேலைகளும் பார்க்க ஆரம்பித்திருந்தாள்.
பெரிதாக சிரமம் ஒன்றும் இல்லை இதில். பாண்டியனும், ஜகாவும் உறுதுணையாக இருக்க இலகுவாய் கையாள முடிந்தது.
வீட்டை ஆள எங்களுக்கு பின் என் பெரிய பேத்தி என சொல்லி சொல்லி மாய்ந்துபோனார் காந்திமதி.
இப்போது அடுத்த சடங்கு என நாயகி தான் வந்திருந்தார். காந்திமதியிடம் சொல்ல அவருக்கும் சரி என்றானது.