ஆடிக்கு அழைக்க என்று மகேஷ்வரி எழில்மணியுடன் அலங்காநல்லூர் வந்துவிட்டார்.
எந்தவித குறையுமின்றி சீர்வரிசைகள் கொடுத்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் அழைத்து சென்றனர்.
சென்னைக்கு பதில் அலங்காநல்லூரில் நாயகியின் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டனர் முன்பே.
“என்ன மகேஷ்? நம்ம வீட்டுக்கு தானே கூப்பிடனும்? வந்தா நம்மோட மது கூட ரெண்டுநாள் இருப்பா தானே?…” என எழில்மணி மனைவியிடம் கோபத்தை காட்டினார்.
தன்னுடைய முடிவுகள் அங்கே நிராகரிக்கப்படுவதை போல அவர் நினைக்க ஆரம்பித்திருந்தார்.
என்னவோ பாண்டியனுக்கு அவர்கள் பயந்து அவனின் வசதிப்படி எல்லாம் நடப்பதாக நினைத்தவர் அங்கு வந்தும் கோபமாய் பேச,
“அதான் சொன்னேனே, மது தான் சொன்னா இப்ப மாப்பிள்ளையால அங்க வரமுடியாதுன்னு. இடையில அவங்களே ஒருவாரம் போல இருக்கறதுக்கு வரமுடியுதான்னு பார்க்கறதா சொல்லியிருக்கா. ஏன் அவசரப்படறீங்க? இங்க வந்தும் இந்த பேச்சா?…” என கேட்க,
“இது அவசரமா? என் ஆதங்கம். உனக்கு புரியுதா இல்லையா?…” என்ற எழில்மணியின் கோபத்தில்,
“அப்பா உங்களுக்கு தான் புரியலை. சொல்லபோனா இதுதான் சரி. இது தானே உங்க வீடு. நீங்க பிறந்து வளர்ந்த வீடு. அப்போ இங்க தானே உங்க பொண்ணுக்கு விசேஷம் பண்ணனும்…” என மதுரா சொல்ல அது இன்னும் காயப்படுத்தியது மணியை.
“என்ன பேசற மது? நான் எதுக்கு சொல்றேன், நீங்க என்ன பேசறீங்க? அங்க உள்ளவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க. மகளும், மருமகனும் வந்து போய் இருக்கமாட்டாங்களான்னு கேட்கமாட்டாங்களா?…” என்றார்.
“என்ன வரலை? போகலை? சும்மா இருங்கப்பா. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துல எத்தனை தடவை வரனும்? அதுவும் வரதுக்கான சூழ்நிலை என்ன இருக்கு?…” என்றவள்,
“இங்க பாருங்கப்பா. எனக்கு எல்லா முறையும் இங்க இந்த வீட்டுல நம்ம வீட்டுல செஞ்சுக்கனும்னு தான் ஆசை. இது என்னோட ஆசை. முன்னாடி எனக்கு தெரியாது இப்படி எல்லாம் இருக்குன்னு. உங்க மேரேஜ் அப்போ இதெல்லாம் நடந்ததான்னு கூட அம்மா சொன்னதில்லை…” மதுரா சொல்ல,
“எங்க நடக்க? உங்கப்பா என்னை வருஷத்துக்கு ஒருதடவை இங்க கூட்டிட்டு வரதே அதிசயம். அத்தை தான் வந்து அப்பப்ப பார்த்துட்டு போவாங்க….”மகேஷ்வரி மகளுக்கு ஒத்துப்பாட்டு பாட,
“ப்ச், இப்ப எதுக்கு இந்த பிரச்சனை? இங்க வேலையெல்லாம் குறையட்டும். கண்டிப்பா வரோம் ப்பா. அங்க வராம எங்க போவோமாம்?…” என சாமாதானம் செய்ய அடுத்ததை ஆரம்பித்தார்.
“ரெண்டுநாள் வீட்டுல இருந்தா தான் என்னவாம்? இன்னைக்கு ஆடி. இப்பவும் காடு கரைன்னு அலையனுமா? இதுக்குதான் ஊருக்கு கூப்பிட்டேன்…” என மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே தான் நின்றார்.
“போதும் சாமி, ஏற்கனவே ஊருக்கு வரலைன்னு பிபி ஏறாத குறை தான். நீங்க உங்க பங்குக்கு எதாச்சும் இழுத்து வைக்காதீங்க. அப்பறம் என்னை கூட்டிட்டு போனாலும் போயிடுவாங்க. ஆடி வேற…” என கிண்டல் பேசினாள்.
“பார்ப்போமே? கூட்டிட்டுத்தேம் போய் பாக்கட்டும்…” அமர்த்தலான புன்னகை அவனிடம்.
“அலட்டிக்கனுமா? என்ன கெடைக்கும்?….” அதற்குமே அவன் கேள்வி கேட்க,
“கிடைக்கலைன்னாலும் விடுவீங்க. அட போங்க பாஸ்….” என்று கண்கள் மின்ன அவள் புன்னகைக்க பாண்டியனின் கைகள் அவளின் வலது கையை எடுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டது.
“போதும், போதும். விடுங்க…” என கையை உருவ பார்த்தாள்.
“செத்த நேரம் கம்மின்னிரேம்ப்பா….” என சொல்லியவன் மௌனம் மதுராவை திசைதிருப்பியது.