இன்றைய விருந்திற்கு, சமையலர், உணவு பொருள்கள், இறைச்சி, போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்ததாலும், நாளை தேன்நிலா வருகையை நினைத்திருந்ததால் இரவு தூங்க வெகு நேரம் ஆகிட, காலை எட்டு மணியாகியும் வான்முகிலன் தூங்கி கொண்டிருக்க கதவை தட்டினாள் இந்துபிருந்தா.
“வரேன்..” என தூக்கக்கலக்கத்தோடு சொல்லி கதவைத் திறக்க.. “அண்ணா, எட்டரை மணிக்கு நிலாவை அழைக்கப்போகனும். சீக்கிரம் குளிச்சிட்டு வா.”
“இப்போவேவா? மதியம்தான் விருந்து.” என்றான்.
“நல்லநேரம் காலைலதான், இப்போவே அழைச்சிட்டு வந்திடலாம்னு நேத்தே ரேவாக்காவும் அம்மாவும் முடிவு செய்தது உனக்கு தெரியாதா?”
“பார்த்தியா.. என்கிட்ட யாரும் சொல்லலை.” என முறைக்க..
“என்னை ஏன்ண்ணா முறைக்கிற?” என சிணுங்கி, “அங்க ஆன்ட்டி வீட்டுலதான் நமக்கு சாப்பாடு, தமிழ் எத்தனை முறை போன் செய்துட்டான் தெரியுமா? எல்லாரும் நமக்காக காத்துட்டிருக்காங்க.” என்றாள் சந்தோசத்தோடு.
“இரு வரேன்.” என உள்ளே சென்றவன் பதினைந்து நிமிடத்தில் தயாராகி வர.. “ப்ச் அண்ணா பேண்ட் சர்ட் போட்டு வா.” என முகம் சுருக்கினாள் பிருந்தா.
“அட, இங்க இருக்க வீட்டுக்கு இது போதாதா?” என ரேவதியை தேடியவன், அங்கு வர சங்கடப்பட்டு அறையில் இருக்குமோ என நினைத்து “நாம மட்டும் போறோமா?” என்றான்.
“எல்லாரும் போய்ட்டாங்க. இன்னும் அஞ்சி நிமிஷத்துல அங்க இருக்கனும்”
“டீயாவது கொடு பிருந்தா.” என்க.. “டீயெல்லாம் அங்க குடிச்சிக்கலாம் வா.” என அழைத்துப்போனாள்.
வான்முகிலன் வரவிற்காக காத்திருந்த தமிழரசன்.. பிருந்தா கேட்டை திறக்கும்போதே ஆர்வத்தோடு அருகே வந்து.. “மாமா ரேவதிக்கா அம்மாகிட்ட பேசினாங்க, என் தம்பி கல்யாணம் குறிச்ச தேதியில நடத்திடனும், எப்படியாவது நிலாவை சம்மதிக்க வைச்சிடலாம்னு நினைச்சி பேசிட்டேன்னு வருந்தி சொன்னாங்க.
பழசை பேச வேணாம்னு அப்பா சொல்லவும், அம்மாவும் ரேவாக்காவை ஏதும் சொல்லாம, சமைச்சதெல்லாம் சரியா இருக்கானானு வந்து பாரு ரேவானு கிச்சன் கூட்டிட்டு போய்ட்டாங்க.” என்றான் சந்தோசத்தோடு.
ரேவதி மன்னிப்பு கேட்கவேண்டுமென வான்முகிலன் நினைக்கவில்லை, இனி ஏதும் தவறாக நினைனக்காமலும், பேசாமலும் இருந்தாலே போதும் என்றுதான் நினைத்திருந்தான். தற்போது தமிழன் சொன்ன செய்தியில் ஆச்சர்யமாகி.. “அப்படியா?” என்றான் சந்தோசத்தோடு.
“ம்..” என சந்தோசமாய் தலையசைத்து உள்ளே அழைத்துப்போனான்.
“மாமா.. இவன் பேரு கர்ணாவாம். அக்கா விளையாட குடுத்தாங்க.” என ப்ரவீன் கிளியை சந்தோசத்தோடு காட்ட, “பார்டா.. அப்படியா?” என மருமகனிடம் உரையாட.. “முகிலா ஒன்பதரை மணிக்குள்ள நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டனும், சீக்கிரம் சாப்பிட உக்காரு, இன்னைக்குனு பார்த்து இவ்வளோ நேரமா தூங்குவ?” என அவசரப்படுத்தினார் சுப்புலஷ்மி.
“உள்ள என்ன பண்றா?” என அறைக்குள் புக.. “பிருந்தா.” என கட்டிக்கொண்டாள் தேன்நிலா.
தேன்நிலாவின் மனநிலைபுரிய.. “ரேவாக்கா எதுவும் சொல்லாது. எதுக்கு இவ்வளோ பதட்டமா இருக்க?” என தேன்நிலாவின் சில்லிட்ட கைகளை ஆதரவாய் பிடித்தபடி தேற்றி.. “இந்த நாளுக்காக பதினைஞ்சு நாளா ஏங்கிட்டிருக்கேன்.” என ஏக்கமாய் சொல்லி. “வா.. அண்ணாக்கு பரிமாறு.” என அழைத்து வந்தாள் தோழியை.
வெளியே வந்த தேன்நிலா பரிமாற ஆயத்தமாக, “நீ உக்காரு நிலா, முதல்ல இரண்டு பேரும் சாப்பிடுங்க. இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள நம்ம வீட்டுக்கு போயாகனும்.” என சுப்புலஷ்மி சொல்ல, நம்ம வீடு என்றதில் சந்தோசம் கொண்ட தமிழரசன்.. “நீ உக்காருக்கா, நான் பார்த்துக்கிறேன்.” என பரிமாற ஆயத்தமானான்.
வான்முகிலன் அருகே தேன்நிலாவை அமரவைத்து, அவளருகே அருகமர்ந்தாள் பிருந்தா.
“அண்ணா.. இந்த ஊட்டிவிடறது இதெல்லாம் எதுவும் இல்லையா?” என பிருந்தா கிசுகிசுக்க.. “ஆமாம்ல? ஆனா இங்க வேணாம். நம்ம வீட்டுல போய் வச்சுக்கலாம்.” என்றான் சிரிப்போடு.
“ஓ.. நீ வாங்குனதா? இதெல்லாம் எப்போ நடந்தது?” என வான்முகிலன் பெருமையோடு கேட்க, “எங்க ஊர்லயே வாங்கி, என் ப்ளொஸ் அளவு சரியா இருக்கும்ன்ற நம்பிக்கையில அங்கையே தச்சிட்டேன்.” என்றாள் சந்தோசமாக.
“ப்ளொஸ் அளவெல்லாம் உன் அண்ணன் கேட்டாரா?” என தேன்நிலா முணுமுணுத்து முறைக்க.. “ஈஈஈ..” என அசடாய் இளித்து, “ஆமாம்ல? நீ எங்க வீட்டு பொண்ணானதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டுடேன்.” என்றாள் அசடாக.
“பிருந்தா..” என தேன்நிலா பாவமாய் பார்க்க, “அண்ணா நிலாக்கு உண்மையா உடம்பு சரியில்லையா இருக்கும்.” என தோழியை ஆதரிக்க, வான்முகிலன் தங்கையை முறைக்க, “சீக்கிரம் சாப்பிடுண்ணா, நல்ல நேரம் முடியறதுக்குள்ள நிலாவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகனும்ல?” என பேச்சை மாற்றினாள் இந்துபிருந்தா.
சாப்பிட்டு முடித்து அனைவரும் முகிலன் வீட்டிற்கு கிளம்ப, வான்முகிலன் மனைவி அருகே சென்று கை நீட்ட, அவனை விடுத்து தோழி கையை பற்றிக்கொண்டாள் தேன்நிலா.
மனைவியின் செயலை பார்த்தவன்.. “தமிழ்.. இங்க வா.” என அழைத்து, உன் அக்காவோட இன்னொரு கையை பத்திரமா பிடிச்சிக்கோ.” என சின்ன சிரிப்போடு சொல்லி மூவரின் பின்னே சந்தோசமாய் நடந்தான் வான்முகிலன்.
கணவன் வீட்டிற்கு செல்ல மனதளவில் தயாராகியிருந்தாள்தான். ஆனால் ரேவதியும் சுப்புலஷ்மியும் வீட்டிற்கு வந்ததும், அழைக்க வந்தவர்களை வா என சொல்லாமல் கூட தனதறைக்குள் சென்றுவிட்டாள் தேன்நிலா.
மகள் அறைக்குள் சென்ற லிங்கேஷ்வரன்.. நீ இப்படி உள்ள வந்தது தப்பும்மா, எங்கம்மா பேசினதை மறந்து மன்னிச்சு, உன் தம்பி மேலயும் என்மேலயும் அன்பா இருக்குறதை போல, ரேவா பேசினதையும் வான்முகிலனுக்காக மறந்திடும்மா என மன்றாடலாய் எடுத்துரைத்திருந்தார்.
உண்மையில் தேன்நிலாவும் அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் ரேவதியை பார்த்ததும் அவளின் அன்றைய பேச்சும், இழிவான பார்வையும் நியாபகம் வர, செய்வதறியாது உள்ளே வந்துவிட்டாள்.
லிங்கேஷ்வரன் எடுத்துரைத்த பின்னே, வந்தவர்களிடம் பேசவில்லையென்றாலும் அறைக்குள் வராமல் அங்கேயாவது நின்றிருக்கலாம்.. இயல்பாய் ஒட்டமுடியாமல் போனாலும் கணவனுக்காக தவிர்க்காமல் இருக்கவாவது முயற்சிக்க வேண்டும் என நினைத்திருந்தாள். ஆனால் ரேவதியை கண்டதும் அவளையறியாமல் அறைக்குள் வந்துவிட்டாள்.
ஒரே வீட்டில் ரேவதியோடு எப்படியிருப்பது என்ற பதட்டம் நேற்றிலிருந்து இருந்துகொண்டேதான் இருந்தது.
பிருந்தாவை பார்த்த பின்னே புகுந்த வீட்டிற்கு செல்லும் பயம் குறைந்து, தோழி வீட்டிற்கு செல்லும் உணர்வு வர, கணவனை விடுத்து அவளோடு ஒட்டிக்கொண்டாள்.
நிலாவோடு ஜோடி போட்டு வரும் தங்கையின் பொலிவான முகம் கண்டதும்.. “ம்.. எப்படி? உங்க ரெண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கவா? இல்ல பொண்டாட்டி பக்கத்துல என் தம்பி நிக்கட்டுமா?” என ரேவதி தங்கையிடம் கிண்டல் பேச.. “அக்கா.” என செல்லமாய் ராகமிழுத்து.. “அண்ணா வா.” என தேன்நிலாவிடமிருந்து விலகி நின்றாள் பிருந்தா.
ரேவதி ஆரத்தி எடுக்க, பிருந்தாவின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தனக்கு பிடித்த பொக்கிஷத்தை அண்ணனிற்கு பரிசளித்ததுபோன்ற நெகிழ்வும், இனி தேன்நிலா துன்பங்களை உள்ளுக்குள் புதைக்க தேவையில்லை, அவளின் அனைத்துமாய் அண்ணன் இருப்பார் என்ற சந்தோசமும் கண் வழி நீராக வெளிவந்திருந்தது.
ஆரத்தி எடுத்து இருவருக்கும் ரேவதி நெற்றிக்கிடும்போது கூட இந்துபிருந்தாவைத்தான் பார்த்திருந்தாள் தேன்நிலா.
“சின்ன வயசுலயிருந்து உன் வீட்டுக்கு வராத நாளில்ல, ஆனா நீ என் வீட்டுக்கு இப்போதான் முதல்முறை வரல்ல? வா.. வா..” என உணர்ச்சிப் பெருக்கோடு தோழியின் கரம் பற்றியவள் சட்டென விடுவித்து, “அண்ணாவோட வா.” என விலகி தன் மொபைலில் படம் பிடிக்க ஆரம்பித்தாள் இந்துபிருந்தா.
பூஜையறையில் விளக்கேற்றியதும்.. “வா.. வா..” என சோபாவில் அழைத்து வந்து அமரவைத்தாள் பிருந்தா.
தேன்நிலாவை தனதாக்கியதில் தங்கைக்கு எத்தனை பெருமிதம் என பிருந்தாவை சந்தோசமாய் பார்த்திருந்தான் வான்முகிலன்.
தன்னோடு நேரத்தை கழிப்பதை விட பிருந்தாவோடு இருந்தால் நல்ல இயல்பிற்கு வருவாள் எனத்தோன்ற, மனைவியை விடுத்து தமிழரசனோடும், லிங்கேசன் மங்களத்தோடும் உரையாட ஆரம்பித்தான் வான்முகிலன்.
பிறகு, நரேந்திரன் சுபாஷ் குடும்பத்தினர் வந்தனர். தேன்நிலாவின் நலம் விசாரிக்க.. சுபாஷிடம் இயல்பாக உரையாடினாள். வரவழைத்த இயல்போடுதான் என்றாலும் நரேந்திரன் கேட்ட கேள்விகளுக்கும் மரியாதையோடு பதிலளித்தாள்.
பத்து மணிபோல் வான்முகிலனிற்கு அழைப்பு வர.. “ம்.. உள்ள வாங்க, வீட்டுலதான் இருக்கேன்.” என இணைப்பை துண்டித்தவன்.. “ம்மா.. டேபிள் அரேன்ஜ் பண்ண வந்துருக்காங்க, நான் என்னனு பார்க்குறேன்.” என வெளியேற, முகிலனோடு தமிழரசன், ப்ரவீன் சுபாஷ், நரேந்திரன் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.
“நேத்தே பந்தல் போட்டாச்சா முகிலா.?” என நரேந்திரன் கேட்க, “ஆமாம் மாமா, இதுக்கே மூனு மணிநேரம் ஆகிடுச்சி.” என்றவன், “சமையல் ஆச்சானு ஒரு போன் பண்றானா இவன்?” என புலம்பியபடி பாலாவிற்கு அழைத்து.. “சமையல் ஆச்சாடா? இன்னும் இரண்டு மணிநேரத்துல எல்லாம் இங்க வந்தாகனும்.” என்க, “ண்ணா இன்னும் ஒரு மணி நேரத்துல வந்திடுவோம்ண்ணா.” என்றதும், பாலாவை பாராட்டி, செந்தாமரைக்கு அழைத்து நலம் விசாரித்து விருந்திற்கு வர நினைவூட்டினான்.
மதியம் பனிரண்டு மணி ஆகிட, அனைத்தும் தயாராக இருந்தது. “பிருந்தா.. எல்லாரும் வெளில வாங்க. அரேன்ஜ்மண்ட் நல்லாயிருக்கா பாரு.” என அழைக்க பிருந்தா மட்டும் வந்தாள்.
“அவளை எங்க காணோம்?”
“அண்ணா நிலா ரொம்ப நெர்வசா இருக்கா. இரு கூட்டிட்டு வரேன்.” என உள்ளே போக, தங்கையோடு உள்ளே வந்தவன்.. “நிலா.. எதுக்கு இவ்வளோ பதட்டம்?” என முறைக்க.. தேன்நிலா தடுமாற.. “புது இடம்ல, இப்போ சரியாகிடுவாண்ணா.” என்று பிருந்தா தோழிக்கு பரிந்து பேசினாள்.
“உன்னோட இருக்கும்வரை இப்படித்தான் புலம்பிட்டிருப்பா.” என தங்கையிடம் சொல்லி, “வா என்னோட.” என கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்தான் மனைவியை.
“இங்க பாரு நிலா, பாஸ் ஃபேமலியோட சேர்த்து லாரி சங்கத்துலயிருந்து நிறைய பேர் வருவாங்க, நாம வைக்கிற பந்தியில வயிறு நிறைஞ்சாலும், வரவங்க மனசு நிறையனும்னா விருந்து கொடுக்குறவங்க சந்தோசமா கொடுக்கனும்.” என எடுத்துரைத்து..
“நமக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு நாள் பக்கம் ஆகுது. நீ இப்படி இருந்தினா நமக்குள்ள எதோ பிரச்சனைனு நினைக்கமாட்டாங்களா?” என முறைத்து.. “வீட்டு பெண்களோட சந்தோசத்துலதான் ஆண்களோட கௌரவம் அடங்கியிருக்கு.” என்றதும், முகத்தை இயல்பாக்க முற்பட்டாள் தேன்நிலா.
பிறகு ஒவ்வொருவராய் வர ஆரம்பிக்க.. விருந்து கலைகட்டியது. ஆடு,கோழி, மீன், இறால்,நண்டு என இறைச்சியில் ஏழு வகைகளும், இறைச்சி உண்ணாதவர்களுக்கென தனி விருந்தென மொத்தம் பதினைந்து வகையான உணவுகள் இடம்பெற்றிருந்தன விருந்தில்.
பஃபே முறையும் இருந்தது, பரிமாறவென ஆட்களும் இருந்தனர். பெரிதாக மேடை அமைக்கவில்லை, உணவுண்ண ஏதுவாக வசதி செய்திருந்தான் அவ்வளவே.. வந்திருந்த பெரிய மனிதர்களும், அவர்களிடம் வான்முகிலன் பழகும் விதமும் இடத்தை பெரிதாய் அலங்கரித்தது.
தன்னை விரும்பி ஏற்றிருப்பவன் வான்முகிலன் அல்ல, தனக்காக வானமே வளைந்திருக்கிறது என்ற பெருமை வந்தது தேன்நிலாவிற்கு. அப்பெருமை கொடுத்த கொடையாக தேன்நிலா முகம் பொலிவானது.