“அது.. அதெல்லாம் இல்ல, அவ மறுக்கவும் எனக்கு கோபம் வந்துடுச்சி, நல்ல வாய்ப்பை இழந்துட்டினா எங்க தேடினாலும் என் மகனைவிட நல்ல மாப்பிள்ளை கிடைக்கமாட்டானு கொஞ்சம் கோபமா சொன்னேன்.”
அது.. அதெல்லாம் என சொல்லும்போது அன்னை திணறியதிலேயே அவளின் ஊனத்தை கார்னர் செய்துதான் கேட்டுருக்கிறார்கள் எனப்புரிய.. “உடல் ஊனம் பெரிய குறை இல்லம்மா, மன ஊனம்தான் மனுசனுக்கு இருக்க கூடாது, தேன்நிலா நம்ம எல்லாரையும் விட, ரொம்ப மனதிடமானவ.. அவ குறையை வச்சி கார்னர் பண்ண நினைச்சது தப்பில்லையா?” என்றான் குற்றப்பார்வையோடு.
தேன்நிலா தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இனி அவளை நிச்சயம் எதிரியாகத்தான் பார்ப்பார்கள் என்பது அன்னையின் கோபத்திலேயே தெரிய.. எப்படியாவது அவள் மீதுள்ள கோபத்தை போக்கவேண்டுமென.. “நம்ம பிரச்சனையை நாமதான் சமாளிக்கனும், அடுத்தவங்களை கஷ்டப்படுத்தக் கூடாதும்மா..
நான் உன் மகன்றதால என்கிட்ட எந்த குறையும் உனக்கு தெரியாது. மத்தவங்களும் அப்படி நினைக்கனும்னு என்னயிருக்கு? அப்படியே எனக்கு எந்த குறையுமில்லன்னாலும் தேன்நிலாக்கு என்னை பிடிக்கனும்னு என்னயிருக்கு?
பக்கத்து வீடுன்னாலும் பிருந்தாவை தவிர நாம யாரும் அவகிட்ட சரியா பேசினதுகூட இல்ல, ஏன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை கூட வைக்கில, இப்போ கல்யாணம் நின்னதும் திடீர்னு என் மகனை கட்டிக்கோனு போய் நின்னா யாராலதான் ஏத்துக்கமுடியும்?
இரண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு கட்டிக்க இருந்தவ எதுக்காக என்னை வேணாம்னு சொல்லியிருப்பானு இவளும் யோசிப்பாயில்ல?
அவ வாழ்க்கை அவ உரிமைம்மா, அவ என்னை வேணாம்னதால எதிரியா நினைக்காதிங்க, உங்க வயசுக்கு அவளை எதிரியா நினைச்சா உங்களுக்குத்தான் அசிங்கம்.” என்றான் மிகப்பொறுமையாக.
சுப்புலஷ்மி அமைதியாக இருக்க.. “என்னை வேணாம்னவளை கட்டிக்கக்கூடாதுனுதான் அந்த மஹிமாவை வேணாம்னேன்,
அவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்யுறது ஒன்னும் பெரிய விசயமில்ல, ஆனா கல்யாணத்துக்கப்புறம் சின்ன சின்ன விசயம்லாம் பெரிய பிரச்சனையா தெரியும். இரண்டு பேருக்கும் பிடிச்சி செய்யிற கல்யாணத்துலயே பிரிவு வருது.. இதுல வேணாம்னவளை கட்டிக்கிட்டேன்னா எப்பவும் என்னை கீழத்தான் பார்ப்பா.
ஒருநாள் இல்ல ஒருநாள்.. நான்தான் உன்னை வேணாம்னேன்ல? எதுக்கு என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்கிட்டனு கேட்பா.
அட்ஜஸ்ட் பண்ண வேண்டிய விசயத்துக்கு பண்ணலாம், அட்ஜஸ்ட்மண்ட்டே வாழ்க்கையானா என் வாழ்க்கையை என்னால வாழமுடியாது.
பெரியவங்களா பார்த்து ஏற்பாடு செய்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி, எல்லா ஏற்பாடும் செய்தபின்ன, கடைசி நேரத்துல என்னை வேணாம்னு மஹிமா சொன்னது தப்பு..
அவ செய்த தப்புக்காக தேன்நிலாகிட்ட என்னை கட்டிக்கோனு போய் நிக்கிறது தப்பும்மா, கல்யாணம்ன்றது அவங்கவங்க விருப்பம்.. அவ என்னை மறுத்ததில தப்பே இல்ல, அவமேல கோபப்படறதுலயும் நியாயம் இல்ல, சரியா?” என்றான்.
“இப்போ என்ன? அவகிட்ட போய் மன்னிப்பு கேட்கட்டா?” என்றார் முறைப்பாக.
“இல்ல, இன்னும் யாரும் சாப்பிடல, நீ சாப்பிடு, நாங்களும் உக்காருறோம்.” என வான்முகிலனுக்கு பரிமாறி மகள்களையும் சாப்பிடப் பணித்து, தானும் அமர்ந்தார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் வான்முகிலனுக்கு அழைப்பு வர, ஏற்றவன்.. “ஓ.. அப்படியா? சரி நானே வரேன், நான் பார்த்துக்கிறேன் பாஸ்.. கவலையை விடுங்க.” என இணைப்பை துண்டித்தவன்.. “ம்மா.. நான் கொஞ்சம் வெளில போகனும், வர பதினைஞ்சு நாள் பக்கம் ஆகும்.” என எழுந்தான்.
“மத்தவங்க கேவலமா நினைக்கிறதை பத்தில்லாம் எனக்கு கவலையில்ல, இது என் அப்பா கத்துக்கொடுத்த தொழில். இந்த தொழில் செய்துதான் ரேவாக்காக்கு கல்யாணம் செய்து கொடுத்தார், நானும் பனிரண்டாவது வரை படிச்சேன்..
அப்பா இறந்ததுக்கப்புறத்திலயிருந்து ஏழெட்டு வருசத்துக்கு முன்ன வரைக்கும் இந்த தொழில்தான் நமக்கு சோறு போட்டுச்சி. யாரோ என்னவோ நினைச்சிட்டு போறாங்க, ஆனா இந்த தொழில் கேவலம்னு நீ நினைக்காத.” என்றான் கோபமாக.
“அச்சோ முகிலா.. கேவலம் அப்படினெல்லாம் நான் நினைப்பேனாடா, சம்பாதிக்கிறது சந்தோசமா வாழத்தான? இவ்வளோ வசதி வந்தப்புறமும் எதுக்கு கஷ்டப்படனும்? அதோட இந்த நேரத்துல நீ போனா, கல்யாணம் நின்னுபோன சோகத்துலதான் லாரிக்கு போய்ட்டனு பேசுவாங்கடா. இதுக்காகத்தான் போக வேணாம்ன்னேன்..” என அக்கறையோடு சொல்லி..
“லாரிக்கு போனா பதினைஞ்சி நாள், இல்ல இருபது நாள் கூட ஆகிடும்.. நீ என் பக்கத்துல இருந்தா சமாளிச்சிடுவேன், நீயும் போய்ட்டா சொந்த பந்தத்தை என்ன சொல்லி எப்படி சமாளிக்கிறது?” என்றார் கவலையாக.
“கண்டிப்பா யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க. நான் எல்லார்கிட்டயும் பேசிட்டேன், தவிர்க்க முடியாத சூழல்ன்றதாலதான் போக வேண்டியதாயிருக்கு. டிரைவருக்கு விசகாய்ச்சல் வந்துடுச்சாம், லாரி ஓட்டுற கண்டிஷன்ல அவன் இல்ல, சரியான நேரத்துக்கு சரக்கு போகலைன்னா பாஸ்க்கு நஷ்டம் ஆகுறதோட பேர் கெட்டு போய்டும். நான் கிளம்பறேன், பத்திரமா இருங்க..
கல்யாணம் நின்னு போய்டுச்சினு வருந்தாம, நான் பத்திரமா போய் வரனும்னும், சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணு கிடைக்கனும்னும் வேண்டிக்கோங்க. நம்ம பிருந்தா கல்யாணம் முடியவும் என் கல்யாணத்தை வச்சிக்கலாம்.” என அன்னையை தேற்றும் நோக்கத்தோடு சொல்லி வெளியேறியவன் மீண்டும் வந்தான்.
“என்ன முகிலா?” என சுப்புலஷ்மி கேட்க, “என் பேச்சை மீறி தேன்நிலாகிட்ட திரும்பவும் வம்பு பண்ணமாட்டிங்கனு உங்கமேல எனக்கு நம்பிக்கை இருக்கு.
ஆனா நேத்து நடந்ததை தேன்நிலா அவங்கம்மாகிட்ட சொல்லியேது, அவங்க வந்து எதாவது கேட்டா, உங்களை கேட்காம உங்க மககிட்ட கேட்டது தப்புதானு சொல்லிடுங்க, மன்னிப்பு கேக்குறதால ஒன்னும் குறைஞ்சிடாது. பிரச்சனையை வளர்க்காம முடிக்கபாருங்க. நான் கிளம்பறேன்.” என கிளம்பினான்.
பைக்கை எடுத்தவன் தேன்நிலாவின் வீட்டைப் பார்க்க, கதவு சாற்றியிருந்தது. அவளின் ஸ்கூட்டியும் இல்லாமல் போகவே வேலைக்கு போய்விட்டாள் என்பதை உறுதிசெய்தவன்.. ம்.. பரவால்லையே, நேத்து அம்மா பண்ணின ரகளைக்கு டென்ஷனாகி வீட்டுல இல்லாம வழக்கத்தோட வேலைக்கு போய்ட்டா என பெருமையாய் நினைத்து.. ம்.. என்னைத்தான் தப்பா நினைச்சிருப்பா என வருத்தமடைந்து, ஊருக்கு வந்து பேசிக்கறேன் என நினைத்தவாறு பைக்கில் பறந்தான்.
** ** ** ** **
காலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை வான்முகிலனை பார்ப்பதற்காக மாடியில் காத்திருந்தாள் தேன்நிலா. ஆனால் வான்முகிலனை காணமுடியவில்லையாதலால் கோபமான தேன்நிலா, மாலை அவன் நடை பயிற்சி செல்லும் பாதையில் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தாள்.
நேரம் ஒன்பது மணியைத் தாண்ட, வழி போக்கர்கள் என்ன பிரச்சனை? ரொம்ப நேரமா நிக்குறிங்க? வண்டில எதாவது ப்ராப்ளமா? என அக்கறையாய் கேட்பவர்களிடம் ஒருத்தருக்காக வெயிட் பண்றேன் என உண்மையை சொல்லும்போது அவர்கள் இழிவாய் பார்ப்பது பெரும் சங்கடத்தை உண்டாக்க..
எதாவது ஹெல்ப் வேணுங்களா? என அசடு வழிபவர்களின் பார்வை தேன்நிலாவின் மனதை இன்னும் ரணமாக்க, அவ்விடம் விட்டு வீடு வந்தாள் கோபமாக.
வீட்டிற்கு வந்தவள் கோபமாக தன் பேகை விசிறியடித்து அரை பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் குடித்து, சோபாவில் அமர்ந்தவள், பிருந்தாவிற்கு அழைத்து உன் அண்ணாக்கு நேத்து உங்கம்மாம இங்க வந்து போனதும், என்னை அவருக்கு கேட்டதும் தெரியுமா என கேட்கலாமா என யோசித்திருந்த நேரம் இந்துபிருந்தாவே அழைத்தாள்.
தேன்நிலா அழைப்பை ஏற்கவும்.. “நான் என்ன தப்பு செய்தேன்? நேத்து வந்தப்போ கதவையே திறக்கல?” என கோபித்தாள் உரிமையாக.
“நீ தப்பு செய்யலனாலும், என்னை தரக்குறைவா பேசினது உங்கம்மாவும் அக்காவும்தான?” என கோபமாய் கடிந்து.. “உங்கண்ணாக்கு உங்கம்மா நேத்து என் வீட்டுக்கு வந்தது தெரியுமா?” என்றாள்.
“தெரியும்.” என்றதும்.. “ஓ..” என இணைப்பை துண்டித்தாள் கோபமாக.
இந்துபிருந்தா மீண்டும் அழைக்க, இரண்டு முறை துண்டித்தவள் மூன்றாம் முறை அழைப்பை ஏற்று.. “கட் பண்றனு தெரியுதில்ல? எதுக்கு பிருந்தா கூப்பிடுற?” என்றாள் கோபமாக.
“எங்கம்மா நடந்துகிட்டதுக்கு சாரி நிலா, நீ எப்ப வருவ உன்கிட்ட சாரி கேட்கலாம்னு பார்த்திட்டே இருந்தேன், மேக்ஸிமம் ஏழு மணிக்குள்ளவாவது வந்துடுவதான? இன்னைக்கு ஒன்பது மணியாகியும் காணோம்னதும் கொஞ்சம் பயம் ஆகிடுச்சி.” என்றாள் உண்மையான அக்கறையோடு.
“உன் அக்கறை தேவையில்ல பிருந்தா, உங்கம்மா அக்காமேல உள்ள கோபத்தை உன்கிட்ட காட்டிட போறேன்.. தயவு செய்து எனக்கு போன் பண்றதோ, இல்ல வீட்டுக்கு வரதோ இனி வச்சிக்காத.” என இணைப்பை துண்டித்தாள்.
தேன்நிலா கோபத்தோடு பேசினாலும் அதில் வருத்தமும் இருக்க, உன் கோபம் சரிதான். நான் சாரி சொல்லி யூஸ் இல்லதான், ப்ச்.. இந்த நேரம் பார்த்து அண்ணனுக்கு வெளில போறமாதிரி ஆகிடுச்சி என வருந்தி.. ஆனாலும் என் அண்ணன் வரவும் எல்லாம் சரியாகும் என தேற்றிக்கொண்டாள் இந்துபிருந்தா.
இங்கே தேன்நிலாவிற்கு நிலைகொள்ளவில்லை மனம். எல்லாம் தெரிந்திருந்தும் என்னை பார்க்க விழையவில்லையா? தன் அம்மா பெண் கேட்ட முறையும், அக்கா பேசியதும், சரியென நினைக்கிறானா? அல்லது எனக்கு இந்த மரியாதை போதுமென நினைத்துவிட்டானா? அல்லது இவனும் தன் ஊனத்தை நினைத்து இவளும் கூட தன்னை மறுத்தாளா என இளப்பமாய் நினைத்தானா என நினைக்க கண்ணீர்தான் வந்தது.
மங்களம் அழைக்க, அச்சோ அம்மாவா என பதறியவள்.. அழைப்பை ஏற்கலாமா வேணாமா? ஏற்கவில்லையென்றால் நாளை காலையில் கண்டிப்பாக தன்னை காண வந்திடுவார், இங்கே வந்தால் விசயம் அன்னைக்கு தெரிய வரும், தெரிந்தால் என்ன நினைப்பாங்க? என்ற யோசனையில் இருக்கும்போது, மங்களம் அழைப்பு துண்டிக்கப்பட்டு, லிங்கேசனிடமிருந்து அழைப்பு வந்தது.