உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு திருமொழி கீழே தங்கள் அறைக்கு வர நிதர்ஷனா அங்கே இல்லை.
காலை எழும் பொழுதே அவளை காணாமல் தேடியவன் மாடிக்கு சூர்யநமஸ்காரம் செய்ய சென்றுவிட்டான்.
தான் சென்ற பிறகு வந்து அறையை சுத்தம் செய்துவிட்டு படுக்கை விரிப்புகளை மாற்றி சென்றிருக்கிறாள் என புரிந்துபோனது அவனுக்கு.
எப்போதும் அவன் எழும்பொழுதே எழுந்துகொள்பவள் தான். இன்று தனக்கு முன்பே கிளம்பியிருக்க ஒரு பெருமூச்சுடன் தன் போனிலிருந்து அவளுக்கு அழைக்க சத்தம் அறைக்குள் தான் கேட்டது.
அந்த அறையில் இருந்த சோபாவில் புத்தகமும், அதன் அடியில் அவளின் போனும் இருக்க,
“மொபைலை கூட வச்சிட்டு போயிருக்கா…” என்றபடி சென்று எடுத்தான்.
எடுத்தவன் மனமோ எதையோ கூற சிரிப்புடன் அவளின் எண்ணிற்கு மீண்டும் அழைப்பு விடுக்க அதில் வந்தது அவன் எண்ணின் பதிப்பு பெயர்.
CHR என்னும் ஆங்கில எழுத்தை முதலிலும் நடுவில் அதனோடு ஆண் பொம்மையும், அருகில் ஒரு பேனாவும், குறும்பாய் ஒரு புன்னகையுடனான பொம்மையும், அதன் கீழே அடைப்புக்குறிக்குள் இதயங்களுடன் மொழி என்று பதித்திருந்தாள்.
“வாவ் தர்ஷி…” என்றவன் முகத்தில் கோடி மின்னல்கள் பூக்க புன்னகையுடன் அதனை எடுத்ததை போல வைத்துவிட்டு குளிக்க கிளம்பினான்.
தயாராகி கீழே வர மனைவியை எங்கும் காணவில்லை. சங்கவை மட்டும் அமர்ந்து பணியாள் செல்வாவுடன் மதியத்திற்கு செய்யவேண்டியவற்றை சொல்ல பாலாஜி நாளிதழில் ஆழ்ந்திருந்தான்.
“எங்க போனா இவ?…” என விழிகளால் சுழன்றவன் சாப்பிட அமர,
“இப்ப எப்படி இருக்கு திரு? காய்ச்சல் விட்டுடுச்சா?…” என்றார் சங்கவை.
“ஹ்ம்ம், ஓகே தான்…” என்று சொல்லி,
“நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா?…” என கேட்டான்.
“முடிச்சிட்டோம் திரு. அப்பா காலேஜ் கிளம்பினாங்க. அப்பவே எல்லாரும் சாப்பிட்டாச்சு….”
“தர்ஷி?…” என கேட்டான் சங்கவை தன் தட்டில் என்ன வைக்கிறார் என கவனித்தபடியே.
“எல்லாரும்ன்னா பாப்பாவும் தான். தனியாவா சாப்பிடுவா? நீ ரூம்க்கு கொண்டுவர சொல்லிட்டா என்ன செய்யன்னு நானா தான் சாப்பிட சொன்னேன். இப்ப ஸ்வாதியோட ஆதித்க்கு ஊட்ட போயிருக்கா…” என்று சொல்லவும் உண்ண ஆரம்பித்தான்.
“இன்னைக்கு அப்பாவோட ப்ரெண்ட்ஸ் வராங்கப்பா…” என்றதும் அவன் தலையசைக்க,
“அப்பாவும் லன்ச்க்கு வீட்டுக்கு வந்திருவாங்க. உன்னையும் அவங்க பார்க்கனுமாம்…” என அவர் பேசிக்கொண்டிருக்க சாப்பிட்டபடி சுற்றிலும் பார்வையை ஓட்டியவன் எழுந்துகொண்டான்.
“என்னாச்சு? போதுமா?…” என சங்கவை கேட்க,
“ஹ்ம்ம், போதும். குடிக்க சூடா ப்ளாக் காபி வேணும்…” என்று சொல்லிவிட்டு கையை கழுவி வந்து பாலாஜியின் எதிரே அமர,
“இன்னைக்கு மார்கெட் ரேட் பார்த்தீங்களா?…” என்ற ஆரம்பித்த பாலாஜியின் பேச்சில் திருமொழியால் கலந்துகொள்ளவே முடியவில்லை.
அதிகாலையில் நிதர்ஷனாவிற்கும் காய்ச்சல் இருக்க மாத்திரை தந்திருந்தவன் இப்போது எப்படி இருக்கிறாளோ என பார்க்க தேடினான்.
“புடிச்சுட்டேன் பார்த்தியா?…” என சத்தமாய் கேட்ட மனைவியின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்க்க ஸ்வாதியுடனும், அவள் மகள் ஆதித்துடனும் விளையாடிக்கொண்டிருந்தாள் நிதர்ஷனா.
“அண்ணி அண்ணா பார்க்கறாங்க…” என ஸ்வாதி சொல்லியதும்,
“என்ன ஏன்? நாளைக்கு பைனல் எக்ஸாம். படிச்சிட்டியான்னு கேட்பாங்க. படிக்காம இங்க என்ன விளையாட்டுன்னு அதட்டுவாங்க. போய் ஒரு இடத்துல உக்கார்ந்து படின்னு சொல்லுவாங்க…”
“இதெல்லாம் நிஜமாவே அண்ணா சொல்றாங்களா? நம்ப முடியலையே?…” என ஸ்வாதி நமுட்டு சிரிப்பு சிரிக்க,
“வேணும்னா கேட்போமா?…”
“சரி வாங்க…” என ஸ்வாதி உடனே சொல்லவும் நிதர்ஷனா திருட்டு முழி முழித்தாள்.
“அத்தை உனக்கு இன்னொரு கேம் சொல்லி தரேன். வா…” என அழைக்க கை தட்டிக்கொண்டு ஆதித் தளிர் நடையுடன் அவளின் பின்னே செல்ல,
“நிதர்ஷனா…” என சத்தமாய் அழைத்துவிட்டான் திருமொழி.
அவளாக தன் முன் வரமாட்டாள் என புரிந்துகொண்டவன் முகமோ இயல்பாய் இருக்க முனைந்தது.
‘மொழி’ அந்த வார்த்தைகளும், அதை தொட்டு நின்ற இதயங்களும் அவனுள் கூதல் காற்றாய் விரவியது.
எப்போது இதை வைத்தாள் என நிச்சயம் தெரியவில்லை. ஆனால் அத்தனை பிடித்தம் அவள் வைத்த அந்த பெயரில்.
“உங்களை தான் கூப்பிடறாங்க. இங்க நிதர்ஷனா யாரு?…” என ஸ்வாதி கேலி பேச,
“நானே தான். ஆனா…” நின்ற இடத்திலேயே நிற்க மீண்டும் அவளை திரும்பி பார்த்தான் திருமொழி.
“அண்ணா பார்க்கறாங்க பாருங்க…” என ஸ்வாதி சொல்லவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் திருமொழியின் ‘வா’ என்ற தலையசைப்பில் ‘அச்சோ’ என கூச்சத்துடன் ஆதித்தை தூக்கிக்கொண்டு செல்ல,
“அவனுக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும். குடுங்க அண்ணி. நீங்க போய் பேசுங்க…” என மகனை வாங்கிக்கொண்டு அனுப்ப நிதர்ஷனா திருமொழியை நோக்கி சென்றாள்.
அவன் முகம் பார்க்க வெட்கப்பட்டு தான் அவனுக்கு முன்பே எழுந்து கீழே வந்துவிட்டது.
இப்போது அவனே அழைத்துவிட வேறு வழியின்றி சென்றாள் நிதர்ஷனா. அந்த படிக்கட்டை கடந்து வந்து சேர அத்தனை நேரமெடுத்தது.
“எங்கம்மா ஸ்வாதி?…” என வந்து நின்றவளிடம் பாலாஜி கேட்க,
“ஆதித்க்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்ன்னு போயிருக்காங்க அண்ணா…” என சொல்ல,
“உட்கார் ஏன் நின்னுட்டே இருக்க?…” என தனக்கருகில் இடத்தை காண்பித்தான் திருமொழி.
“இல்ல இருக்கட்டும். படிக்க போகனும்…” என அவள் சொல்ல,
“சரி, அப்போ ரூம்க்கு போ…” என்றான் திருமொழி தானும் ஒரு நாளிதழை கையில் எடுத்துக்கொண்டு அடக்கப்பட்ட புன்னகையுடன்.
“இல்லை நீங்க போய் டீ கொண்டுவாங்க. ஜில்லுன்னு எதுவும் ரெண்டுநாளைக்கு குடுக்க வேண்டாம்…” என அவரிடம் சொல்லியவன் நிதர்ஷனாவை முறைத்தான்.
“உட்கார்…” என்று மீண்டும் அதட்டலாய் திருமொழி சொல்ல,
“ப்ச், நிதாவுக்கு என்ன வேணுமோ குடிக்கட்டுமே? நான் தான் இப்பவே வெக்கையா இருக்கேன்னு மோர் கேட்டேன். அதான் தங்கச்சியும் கேட்டாங்க…” பாலாஜி நிதர்ஷனாவுக்கு பரிந்துகொண்டு வர,
“அதானே? ஏன் திரு?…” என சங்கவையும் வந்துவிட்டார்.
“நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம் இருக்கு. முடியட்டும். இப்ப குடிச்சு காய்ச்சல்ன்னு வந்தா…” என சொல்லியவன் மீண்டும் மனைவியை பார்க்க அந்த பார்வையில் இப்போது அவனருகே அமர்ந்துவிட்டாள்.
“காய்ச்சல் விட்டுடுச்சா? அதுக்குள்ள எழுந்து வந்துட்ட?…” என பேப்பரை படிப்பதை போல அவளிடம் மெல்லிய குரலில் கேட்க,
“அதான் கீழ வந்தேன். சரியா போச்சு எனக்கு. இப்ப காய்ச்சல் இல்லை. அதான் மோர் கேட்டேன்…” ‘முறைக்கிறானே’ என பதில்களை தாராளப்படுத்தினாள் நிதர்ஷனா.
“சரி என்கிட்ட ஏன் சொல்லலை? எனக்கு ஒரு குட்மார்னிங் கூட இல்லையே?…” மீண்டும் மெல்லிய குரலில் வினவ,