சாப்பிட்டுக்கொண்டிருந்த திருமொழியின் கவனம் மனைவியின் பரபரப்பில் தான் இருந்தது.
காலையில் இருந்து அத்தனை போன் நிதர்ஷனாவிற்கு. கணேசன், சரஸ்வதி, அண்ணன்கள், மெர்லின், குட்டி வாண்டு ஷிவேஷ் கூட அழைத்து வாழ்த்திவிட்டான்.
தன்னிடம் மட்டும் தான் எண்ணி எண்ணி அவள் பேசுவது. மற்றபடி அந்த இதழ்களுக்கும், சதிராடும் விழிகளுக்கும் ஓய்வென்பதே கிடையாது.
உணவை வாய்க்குள் மென்றபடி தனக்குள் சிரித்துக்கொண்டவன் இன்னும் வெளியே வராதவளை தேடினான்.
அன்று நிதர்ஷனாவிற்கு இறுதி தேர்வு. பூஜையறையில் அதிதீவிரமாக சாமியை வேண்டிக்கொண்டிருந்தாள் அவள்.
எப்போதும் திருமொழி கிளம்பும் நேரத்தை விட அன்று தாமதமாகிவிட்டதால் அது வேறு ஒருபக்கம் அவன் எதுவும் சொல்லிவிடுவானோ என்றிருந்தது நிதர்ஷனாவிற்கு.
‘சொல்லித்தான் பார்க்கட்டுமே? சொல்ல சொல்ல கேட்காம மாடிக்கு கூட்டிட்டு போய்ட்டு. என்னால ஒன்னுமில்லை. எல்லாம் அவங்களால தான்’ என்றும் வேண்டிக்கொண்டவள்,
“நான் ஒரு இவ. சாமி ரூம்ல வந்து சண்டைக்கு நிக்கறேன்…” என தன் தலையிலேயே அடித்துக்கொண்டு விழுந்து கும்பிட்டு எழுந்து நிற்க,
“அவ்வளோ தானா? இந்த அங்கப்ரதட்சணம், அடிபிரதட்சணம் எல்லாம் செய்யலையா நீ?…” என்றான் திருமொழி கிண்டல் குரலில்.
‘அதுக்குள்ள இவங்க சாப்பிட்டாச்சா? நான் இன்னும் சாப்பிடலையே?’ என அவனை பார்க்க,
“கும்பிட்டது போதும். போய் சாப்பிட்டு வா. லேட்டாகுது…” என்று சொல்ல தொண்டை வரை வந்துவிட்டது ‘உங்களால் தான்’ என சொல்வதற்கு.
ஆனால் சொல்ல தான் முடியவில்லை. முகம் காண்பித்துக்கொண்டுக்க அதை கண்டுகொண்ட திருமொழியின் இதழ்களில் புன்னகை ஒளிந்திருந்தது.
“ஹ்ம்ம், டைம் இப்போ…” என தன் கை கடிகாரத்தை பார்த்ததும்,
“இப்ப வந்திருவேன்…” என சொல்லிக்கொண்டே அவனை இடித்துக்கொண்டு தாண்டி ஓட திருமொழி முகமெல்லாம் புன்னகை.
மனதிற்குள் சிறு கவலையும் இருந்தது. முதல்நாள் இரவு மாடியில் மனைவியின் முகத்தில் தான் எவ்வளவு கலக்கம்.
எப்போதும் ஒரு துறுதுறுப்பு மின்னும் கண்கள் முந்தைய நாள் காண்பித்த அந்த உணர்வு இன்னும் நிழலாடியது விழிகளுக்குள்.
பெருமூச்சுடன் திரும்பி டைனிங்டேபிள் வர சங்கவையோடு என்னவோ பேசிக்கொண்டே உண்டுகொண்டிருந்தாள் நிதர்ஷனா.
“சரி சரி. முதல்ல சாப்பிட்டு முடி. காலேஜ் போய்ட்டு வந்து பேசிக்கலாம். சாப்பிடும் போது பேசாம சாப்பிடு…” என மகனை பார்த்துவிட்டு சங்கவை சொல்லவும் திருமொழி இடுப்பில் கைவைத்து பார்த்து அவரை முறைக்க,
“உன்னையுமா?…” சங்கவை மெல்லிய குரலில் கேட்டார் அப்போதும் மகனை பார்த்துக்கொண்டே.
“என்னையுமான்னா?…”
“உன்னையுமான்னா உன்னை தான்…”
“அதெல்லாம் நல்லா முறைச்சு பார்ப்பாங்க. அதான் நான் திரும்பவே இல்லை. ஆனா எனக்கு தெரியுதே இப்ப முறைக்காங்கன்னு…” என்று சொல்ல அவளருகில் வந்துவிட்டான் திருமொழி.
போனை கையில் வைத்தபடி நிதர்ஷனா அருகில் சேரை போட்டு அமர்ந்துகொள்ள இருவரும் வாயை மூடிவிட்டனர்.
‘இதுக்கு பேசாம சாப்பிடுன்னு அங்க இருந்தே சொல்லியிருக்கலாம்’ என உள்ளுக்குள் அவனிடம் பேசிக்கொண்டே உண்டு முடிக்க,
“தண்ணி குடிக்கலையே இன்னும்…” என அதை திருமொழி நகர்த்தி வைக்கவும் வேகமாய் குடித்தவள் தலையசைத்தாள்.
“குட், போய் உன் பேக் எடுத்துட்டு காருக்கு போ. வரேன்…” என சொல்லியவன்,
“ஆமா, உன்னோட ஹால் டிக்கெட் எடுத்துக்கலையா நீ? ரூம்ல இருக்கு…” என்றான் தீவிரமாக.
“அச்சோ…” என வேகமாய் தனது பேக்கை வைத்துவிட்டு நிதர்ஷனா மாடிக்கு செல்ல,
“நீ என் மருமகளை மிரட்டி வச்சிருக்கியா திரு?…” என்றார் சங்கவை நிதர்ஷனா நகரவும்.
“பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு?…” என கேட்டவன் முகத்தில் இலகுவான புன்னகை.
“சரி அப்போ யோசிச்சு வைங்க. ஈவ்னிங் வந்து பேசுவோம்…” என சொல்லியவன்,
“இன்னும் ஹால் டிக்கெட்டை தேடிட்டிருக்கா உங்க மருமக. இன்னைக்கு எக்ஸாம் எழுதின மாதிரி தான்…” என அலுத்துக்கொள்ள,
“நீ வேணும்னா போய் தேடி குடு. பார்த்தவன் கையோட கொண்டு வந்திருக்கனும்…”
“வேற வழி. போய் எடுத்து குடுக்கறேன்…” கிளம்ப சங்கவை முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
மகனின் முகம் பார்த்தே அவனின் மகிழ்வை, சந்தோஷமான வாழ்வை கண்ட தாயின் உள்ளம் குளிர்ந்து போனது.
இரண்டிரண்டு படிகளாக தாவியபடி மாடிக்கு சென்ற மகனின் மனதின் துள்ளல் அவன் நடையிலேயே தெரிந்தது.
அறைக்குள் நுழைந்த திருமொழி ஹால் டிக்கெட் எங்கே விழுந்தது என தேடிக்கொண்டிருந்தவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து தொண்டையை செருமிக்கொண்டே,
“கிடைச்சதா?…” என்றான்.
“ம்ஹூம், இல்லையே? எடுத்து வச்ச மாதிரி இருந்துச்சே? எப்படி மிஸ்ஸாச்சு?…” என தேடிக்கொண்டிருந்தாள்.
“பேக்ல பார்த்தியா தர்ஷி?…” என கேட்டவன் தானும் தேடுவதை போல பாவனை செய்து அவளை நெருங்க,
“இருக்குமோ? பார்த்துட்டு வரேன்…” என கதவை நோக்கி திரும்பி சென்றவள் கைபிடித்து இழுத்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழொற்ற நிதர்ஷனா ‘எக்ஸாம்க்கு போகனும்’ என்பதை போல திகைத்து பார்த்துவைக்க,
“ஹால்டிக்கெட் பேக்ல எடுத்து வச்சிட்டேன்…” என சொல்லி மீண்டும் இன்னொரு கன்னத்தை அழுத்தி மீசை உறவாட விடுத்தான்.
“இதை கீழயே சொல்லியிருக்கலாம்…” என்று முணுமுணுத்தாள் நிதர்ஷனா.
“இதை கீழ குடுக்க முடியாதே. அதான் வர சொன்னேன். போ…” என்றவன் மீண்டும் முத்தமிட போக,
“போக சொல்லிட்டீங்களே…” என அவனை தள்ளிவிட்டு சிரிப்போடு கீழ இறங்கி சென்றாள் நிதர்ஷனா.
“எக்ஸாம் முடியட்டும், வச்சிக்கறேன் உன்னை…” என இரு கைகளால் தலையை கோதியபடி கண்ணாடியில் தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டான் திருமொழி.
நிதர்ஷனா சாமி கும்பிட்டு முடித்திருந்ததால் குங்குமம் எதுவும் தன் மேலே, சட்டையில் எங்கும் ஒட்டியுள்ளதா என கவனித்துவிட்டு கீழே இறங்கி சென்றான் திருமொழி.
இருவருமாக கிளம்பி செல்ல பார்த்துவிட்டு உள்ளே வந்த சங்கவை நேராக பூஜை அறைக்கு வந்து சேர்ந்தார்.
“யார் கண்ணும் படாம நீ தான் சாமி காவலா இருக்கனும் பிள்ளைங்களுக்கு…” என வேண்டிக்கொண்டார் சங்கவை.
காரில் வழக்கம் போல நிதர்ஷனா புத்தகத்தை வைத்துக்கொண்டு ரோட்டை வேடிக்கை பார்த்தபடி வந்தாள்.
அன்றுமே மிருதுளா தங்களை கவனித்துக்கொண்டிருக்க, பார்த்தவளுக்கு பற்றி கொண்டு வந்தது.
நெஞ்சம் முழுவதும் இதே யோசனை தான். புத்தியோ ‘இப்போதைக்கு யோசியாதே, பரீட்சையை முடி’ என்றது.
அதன்படி கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு, ‘காம் டவுன்’ என அவளுக்கவளே சொல்லிக்கொள்ள அதை பார்த்தவன் கண்களோடு கன்னங்கள் அசைந்தாடியது புன்னகையில்.
கல்லூரி வந்துவிட வழக்கம் போல திருமொழியின் அறையில் அமர்ந்திருந்தவள் பரீட்சை நேரம் எழுந்துகொண்டாள்.
“தர்ஷி, ஆல் தி பெஸ்ட்…” என வாழ்த்தி தான் அனுப்பி வைத்தான் நிதர்ஷனாவை.
அவள் தலையசைத்து கிளம்பவும் வெளியே வந்து நின்றவன் பார்வை தன்னிச்சையாக எதிர் திசை பார்க்க மிருதுளா வேறொரு வகுப்பிற்கு சென்றுகொண்டிருந்தாள்.
தன் உடை நிறத்தில் புடவை கட்டியிருந்தவள் பார்வை முழுவதும் தன் மேலிருக்க கொதித்து போனான்.
திருமொழி பார்த்ததுமே மிருதுளாவின் கண்கள் சந்தோஷத்தில் விரிந்து புன்னகைத்து வணக்கம் என தலையசைத்து சொல்ல பதில் சொல்லாமல் ஒன்றும் பேசாது நகர்ந்துவிட்டான் திருமொழி.
கல்லூரியை பார்வையிட கிளம்பியவன் கைகள் தனது மொபைலை எடுத்து பாலாஜிக்கு எண்ணிற்கு அழுத்தியது.
“எங்க இருக்கீங்க மாப்பிள்ளை?…” என திருமொழி கேட்க,
“வெளில ஒரு வேலை விஷயமா வந்திருக்கேன் மச்சான். சொல்லுங்க…” என்றான் அவன்.
“ஹ்ம்ம், இல்லை. சும்மா தான் கூப்பிட்டேன். ஓகே நீங்க பாருங்க. இன்னொரு நாள் பேசலாம்…” என வைத்துவிட்டான்.
பாலாஜியிடம் இதனை சொல்வது அதனை உசிதமாக படவில்லை. என்னவோ இதை பேசவே அசிங்கமாக இருந்தது திருமொழிக்கு.
முதலில் நிதர்ஷனா பரீட்சையை முடிக்கட்டும். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
தேர்வு சிறப்பாகவே எழுதி முடித்த நிதர்ஷனா வெளியே வரவும் தோழிகள் ஆராவாரம்.
அன்றுடன் கல்லூரி வாசமும் முடிந்தது. மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் படிப்பு முடிந்ததில் அத்தனை மகிழ்ச்சி.
அனைவரும் அதனை கொண்டாட மதிய உணவிற்கு வெளியே செல்லலாம் என்று நிதர்ஷனாவை அழைக்க மறுக்க முடியவில்லை.
“எப்படியும் வீட்டுக்கு போய் என்ன பண்ண போற? இன்னைக்கு ஒருநாள். லாஸ்ட் நாளும் கூட. ப்ளீஸ் நிது எல்லாரும் போகலாம்….” என அனைவரும் வற்புறுத்த,
“உன் ஹஸ்பன்ட் கிட்ட கேட்க என்னடி கஷ்டம். அதுவுமில்லாம ஸார் புரிஞ்சுப்பார். நீ போய் சொல்லு…” என மாற்றி மாற்றி அவளை திருமொழியின் அறக்கட்டளை அலுவலகம் முன்பு கொண்டுவந்துவிட்டு காத்திருந்தனர்.
“நீ வரதுன்னா எல்லாரும் போவோம்.இல்லைன்னா வேண்டாம்…” என்றாள் ஒரு தோழி.
“ஆமா, கல்யாணம் ஆனதுல இருந்து நீ காலேஜ் பஸ்ல கூட வரலை. அது உன் சூழ்நிலை. கரெக்ட் தான். இதுக்கு கூட வரலைன்னா எப்படி? அதுவும் ஸார்கிட்ட கேட்காமலே மாட்டேன்ற…” என்றனர் மாற்றி மாற்றி.
“சரி சரி. நான் கேட்டுட்டு வரேன். இருங்க…” என சொல்ல,
“இங்கயே இருக்கோம். கேட்கிறதும் கேட்கிற லஞ்ச்க்கு மட்டும் கேட்காம ஈவ்னிங் வரைன்னு கேளு. இன்னைக்கு ஒரு நாள்…” என்று சொல்லி அனுப்ப நிதர்ஷனாவிற்கு உதறல் தான்.
கல்லூரி பேருந்தில் போகிறேன் என்றதற்கே அத்தனை பேசினான் திருமொழி. இப்போது இதை சொன்னால்?
பயந்துகொண்டே தான் சென்றாள் அவள். வெளியில் அவன் உதவியாளர் நிற்க நிதர்ஷனாவை பார்த்ததும் வணக்கம் வைத்தவர்,
“ஸார் உள்ள பெரிய ஸாரோட தான் பேசிட்டிருக்கார். உள்ள போங்க மேடம்…” என்றார் அவர்.
‘பெரிய ஸாரா? மாமாவா?’ என இன்னும் விழி பிதுங்கியது. எப்படி கேட்க என உள்ளே செல்ல முன்னறையில் இருந்தே எட்டி பார்த்தாள் அவள்.