“எதுக்காக இவ்வளவு அவசரமா வந்திருக்கோம்ன்னு தெரிஞ்சுமா இப்படி சொல்றீங்க?…”
“ஒரு மூணு நாள் தானே? ஏன் கேட்கமாட்டியா?…”
“ம்மா…”
“ப்ச், முதல்ல ரெண்டுபேரும் நிறுத்துங்க…” என்ற இசையின் சத்தத்தில் பேச்சை நிறுத்திவிட்டு அவளை பார்த்தனர்.
“எதுக்கு இந்த சண்டை?…” என்றாள் அவள்.
“ப்ச், அதெதுக்கு இப்போ? கிளம்பிட்ட தானே? வா…” என்று முன்னால் நடக்க,
“என்னாச்சு அத்தை?…” என இசை அவரிடம்.
“ஏற்கனவே கோபமா இருக்கான். நீ முதல் கிளம்பும்மா…” என அனுப்பினார் மருமகளை.
“சொல்லமாட்டீங்களா?…”
“போய்ட்டு வா. பேசுவோம்…” என சொல்லும் பொழுதே வாசலில் ஹாரன் சத்தம்.
“போச்சு ஆரம்பிச்சுட்டான்…” என்றவர்,
“முதல்ல நீ கிளம்புடா…” என்றார் அவர்.
எதுவும் புரியாமல் அங்கேயே நிற்கவும் முடியாமல் வேகமாய் வாசலுக்கு வர அவளின் பின்னே வந்த சுந்தரி இசை காரில் ஏறியதும் கதவை சாற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தார்.
அமைதியாக காரை ஓட்டிக்கொண்டு இருந்தவன் ஹாஸ்பிட்டல் நெருங்கும் வரைக்கும் கூட பேசவில்லை.
இடையில் ‘என்ன கோபம்?’ என இசை கேட்டதற்கும் பதில் சொல்லவில்லை. அவன் மௌனமாக இருக்க அவளும் வாயை மூடிக்கொண்டாள்.
காய்ச்சல் வேறு இப்போது கூட ஆரம்பித்திருந்தது அவளுக்கு. தொண்டைக்கடியில் கசந்தது.
தலை விண்ணென்று தெறிக்க பேச முடியாமல் இருக்கையில் சாய்ந்துகொண்டாள்.
லேசாய் அனத்தும் குரல் கீர்த்தனனை திசை திருப்ப அதுவரை யோசனையில் இருந்தவன் திரும்பி பார்த்தான்.
“இசை…” என்ற அழைப்பில் அவள் விழிகளை திறக்க ரத்தமாய் இருந்தது கண்கள்.
“ஹேய் என்னாச்சு? குளிருதா இசை?…” என பதறியவன் அவளின் நெற்றியில் கை வைக்க கொதித்தது.
“ஓஹ் ஷிட்…” என சொல்லியவன் தலையில் அடித்துக்கொண்டு ஏசியை அணைத்தான்.
“சொல்லவேண்டியது தானே ஆஃப் பண்ணுங்கன்னு…” என்று சொல்லிவிட்டு ஜன்னலை கொஞ்சமாய் திறந்து வைத்தவன்,
“பக்கத்துல வந்துட்டோம். நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் தான்…” என்றபடி வேகமாய் ஓட்டினான்.
புடவை தலைப்பை இழுத்து மூடிக்கொண்டாள் தன்னை. அவனிடம் ஒன்றும் பேசவில்லை.
ஆனால் அவனின் அனுசரணைகள் மயிலறகாக தான் வருடியது அவளை. அந்த நேரம் அழுத்தங்களுக்கு என்னவோ இதம் கூட்டியது.
கீர்த்தனனுடன் இத்தனை இலகுவாய் ஒரு நாள் அவனின் மனைவியாக கடந்திருந்தது.
தலையசைத்தவள் கீழே இறங்கவும் மறுபக்கம் வந்து அவளை கை பிடித்து இறக்கியவன்,
“நடக்க முடியுதா?…” என்றான்.
அவனின் கைப்பிடி அழுத்தமாய் இருக்க ஏற்கனவே உடல் வலி இதுவேறு அவளை இன்னும் வலிக்க செய்தது.
“மெதுவா பிடிங்க. கை வலிக்குது…” என்றாள்.
இசையின் உதடுகள் காய்ந்து போயிருக்க அதன் ஓரங்கள் சிவந்திருந்தது அதற்குள்.
“வர வழியிலையே ஹாஸ்பிட்டல் போகாம வந்துட்டோம். எவ்வளோ பீவர்…” என்று அவளை அணைத்தவாக்கில் மெதுவாய் நடத்தி சென்றான்.
உள்ளே சென்றதும் அவளை பரிசோதித்த மருத்துவர் கீர்த்தனனை பார்த்துவிட்டு,
“உங்களுக்கு மேரேஜ்ன்னு அம்மா சொல்லவே இல்லை கீர்த்தனன்?…” என்றார்.
“அது டாக்டர்…”
“அதுக்காக தான் ஊருக்கு போனாங்களோ?…” என்றார் சிரித்தபடி.
“வாழ்த்துக்கள் ரெண்டுபேருக்கும்…” என்று சொல்லியவர்,
“பீவர் ஹைல தான் இருக்கு. டேப்லேட்ஸ் தரேன். நேரத்துக்கு குடுங்க. இப்ப இன்ஜெக்ஷன் போடறேன்…” என்றதும் இசை தன்னைப்போல கீர்த்தனனை பார்க்க அவள் விழிகள் சிரித்தது.
“அடிங்…” என்று உதட்டை கடித்து பார்வையால் மிரட்டினான் அவளின் கிண்டல் மொழியை கண்டுகொண்டவனாக.
“திரும்புங்கம்மா. இன்ஜெஷன் போட்டுடலாம்…” என்றதும் கீர்த்தனன் முகத்தை வேறு திசைக்கு திருப்ப இசை கையை உயர்த்தினாள்.
“பயமெல்லாம் இல்லை. ஆனா கைல போட சொல்லுங்க ப்ளீஸ்…” என்றாள்.
“கைல போடற ஊசி தான் அங்க போடனும். இது ஹிப்ல போடறது. சொல்றாங்க தானே?…” என்றான் சற்று அதட்டி.
“இல்லை வேண்டாமே?…” அவள் தயங்க.
“நான் வெளில இருக்கேன். நீ போட்டுட்டு கூப்பிடு…” என நகர போக,
“ஒரு டாக்டர், இது என்ன அவ்வளோ பெரிய விஷயமா? அதுவும் உங்க வொய்ப் தானே? இருக்கலாம்…” என்றதும் சங்கடத்துடன் கீர்த்தனன் நிற்க இசை அதை கவனிக்கும் நிலையில் இல்லை.
நர்ஸ் வந்து அவளின் இடுப்பில் புடவையை இறக்க இசையின் குரல் சற்று பலமாகவே வந்தது.
“மெதுவாங்க…” என்றவளின் சத்தத்தில் டாக்டர் அவ்விடத்தை பார்க்க ரத்தம் கட்டியிருந்த இடத்தில் நீர் கோர்த்து ஒருவிதமாய் தோல் உரிந்தும் உரியாமல்.
“என்னம்மா இது?…” என்றார் அதிர்ச்சியாக.
“டாக்டர்…” இசை விழிக்க,
“என்ன கீர்த்தனன் இது உடம்புல இத்தனை காயம்?…” என்றதும் அவனும் திகைத்தான்.
“இதுக்குத்தான் கைல ஊசி போடுங்கன்னு சொன்னியா?…” என்றதும் இசை கீர்த்தனனை பார்த்தாள்.
அவனுக்கு புரிந்தது. சுந்தரி சொல்லியிருந்தாரே ராக்குவின் கோபத்தையும், அது யாரிடம் பிரதிபலித்தது என்பதையும்.
“கல்யாணம் கட்டாய கல்யாணமா?…” அவர் பட்டென்று கேட்கவும் திடுக்கிட்டு இருவரும் அதிர்ந்து பார்க்க,
“சொல்லும்மா?…” என்றார் கண்டிப்புடன்.
“அப்படி எல்லாம் இல்லை டாகடர். ரெண்டுவீட்டுளையும் பேசி தான் கல்யாணம் பண்ணிவச்சாங்க…” கீர்த்தனனுக்கு முந்திக்கொண்டு அவள் பதில் சொல்ல,
“ஆனா உடம்புல இத்தனை காயம்? அதுவும் சமீபமா தான் விழுந்திருக்கனும்…” என்றவர்,
“ம்ஹூம், உன் பார்வையே சரியில்லை, எழுந்து வா செக் பண்ண….” என அவளை எழுப்பி தானும் எழுந்துகொண்டார்.
“கீர்த்தனன் உங்க அம்மாவுக்கு கால் பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு செல்ல கீர்த்தனன் இறுகி போய் நின்றான்.
இரண்டாம் திருமணம் இப்படியான பேச்சுக்களை கொண்டு வந்திருக்க கீர்த்தனன் முகத்தில் அருளில்லை.
உள்ளே டாக்டருடன் சென்றவள் அவனின் முகத்தை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள்.
அவனின் உணர்வுகள் என்னவென்று அவன் அமர்ந்திருந்த விதத்திலேயே இசைக்கு புரிந்துபோக மனதெல்லாம் கலங்கியது.
உள்ளே சென்றவள் மீண்டும் உடையை சரி செய்து வரும்முன் டாக்டர் கீர்த்தனனை ஒரு பிடி பிடித்திருந்தார்.
“இப்பத்தான் படிப்பை முடிச்சிருக்கு போல? உடனடியா கல்யாணம். உடம்புல அவ்வளோ காயமும், காயம் மறைஞ்ச வடுவும். காட்டுமிராண்டித்தனம்…” என்றார் அவர்.
கீர்த்தனன் பதில் பேசவில்லை. நிமிர்ந்து இசையை தான் பார்த்தான். என்னவிதமான பார்வை அது என தடுமாறி அவள் சமாதானம் செய்துவிடுவதை போல விழிகளை கோர்க்க விலகிக்கொண்டான்.
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை கீர்த்தனன். மனசு ஏத்துக்கலை. உங்க பேமிலி ரொம்ப பழக்கம்ன்றதால தான் இத்தனை உரிமையா கேட்கறேன்…”
“சொல்லுங்க டாக்டர்…” என்றான் அவன்.
“இப்பத்தான் இந்த பொண்ணு சொல்லுச்சு அவங்க ஊர்ல நடந்ததை பத்தி. இப்ப கூடவா இப்படியும் மனுஷங்க இருக்காங்க? நான் ஒருநிமிஷம் என்னவோன்னு நினைச்சுட்டேன்…” என்றவர்,
“ஆனா உங்களை ரொம்ப பிடிச்சு தான் கல்யாணம் பண்ணினாங்களாம் உங்க மிசஸ் அத்தனை தடவை சொல்றாங்க….” என்றதும் மீண்டும் கீர்த்தனன் பார்வை அவளிடத்தில்.
“ரொம்ப பெருமையா பேசினாங்க. உங்களுக்கு தான் கஷ்டம்ன்னு சொல்லிட்டிருந்தாங்க. ஆனா மேட் ஃபார் ஈச் அதர் கீர்த்தனன். காரணமில்லாமல் எந்த செயலும் இல்லை. நல்லது தானே…” என்றார் அவர்.
எல்லாவற்றிற்கும் அவனிடத்தில் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை. அவர் சொல்ல சொல்ல கேட்டுக்கொண்டான்.
“எனிவே சந்தோஷமா இருங்க ரெண்டுபேரும். இப்பத்தான் சுந்தரி மனசு நிம்மதியா இருந்திருக்கும்…” என்றவர் அவளுக்கான மருந்துகளை எழுதி தந்தார்.
“செப்டிக் ஆகாம இருக்க இந்த ஆயின்மென்ட். ஒரு ஒருவாரம் இந்த மாதிரி புடவை எதுவும் கட்டிக்காம நைட்டி போட்டுக்க சொல்லுங்க. பகல்லையும். காயம் சீக்கிரம் ஆறனும். இல்லைன்னா உங்களுக்கு நான் சொல்ல தேவை இல்லை…”
“நான் பார்த்துக்கறேன் டாக்டர்…” என்றான் ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கி பார்த்துக்கொண்டே.