“ரெண்டு நாள்ல பீவர் சரியாகலைன்னா திரும்ப கூட்டிட்டு வாங்க. பிளட் டெஸ்ட் எடுக்கலாம். இப்ப அவசியமில்லை….” என்றவர்,
“இங்க பாரும்மா கண்ட மருந்தையும் இப்படி காயத்துக்கு போட கூடாது. அதுமாதிரி எதுவும் போடாமலும் விட கூடாது. உனக்கு தான் கஷ்டம். எப்படி இத்தனை நாள் இந்த காயத்தோட வலியோட இருந்த?…” என்றார் ஆச்சர்யமாக.
கீர்த்தனன் இசையை முறைத்தான். அவள் என்ன பதில் சொல்லவென்று யோசிக்க,
“உங்கம்மா அடுத்து இங்க வரப்போ பார்க்கனும் நான். சுந்தரிட்ட சொல்லி வைக்கறேன்…” என உரிமையாய் அதட்டினார் அவளை.
“ரொம்ப வலியெல்லாம் இல்லை டாக்டர். ஒன்னும் தெரியலை…” இசை சமாளிக்க,
“ஆமா ஊசி போடும் போது பார்த்தேனே வலிக்காம நீ கத்தினதை…” என கிண்டல் பேசியவர்,
“டேக் கேர் கீர்த்தனன்…” என்றார் அவனிடத்தில்.
“ஓகே டாக்டர். தேங்க் யூ…”
“ஹர்ட் பண்ணிட்டேன்னு நினைக்கறேன். ஐம் ஸாரி. ஒரு நிமிஷம் என்னென்னவோ நினைச்சுட்டேன் கீர்த்தனன். தப்பா எடுத்துக்காதீங்க…” மீண்டும் சொல்ல,
“இட்ஸ் ஓகே டாக்டர்…” என்று விடைபெற்று வெளியேறிவிட்டான்.
இருள் சூழ்ந்திருந்தது வெளியே. கீர்த்தனனுடன் அவள் நடந்து வர மெடிக்கலில் அவளுக்கு தேவையான மருந்துகளை வாங்கியவன் பின் யோசனையுடன்,
“உனக்கு வேற எதுவும் வாங்கனுமா?…” என்றான் அவளிடத்தில்.
“என்ன?…”
“ப்ச், உனக்கென்னாச்சு? எதாச்சும் வாங்கனுமான்னு கேட்டேன்?…” அடிக்குரலில் சீற்றத்துடன் அவன் கேட்க,
“இங்க என்ன ஆப்பிளும் ஆரஞ்சுமா வாங்க முடியும்? மருந்து வாங்கியாச்சுனா கிளம்புவோம். வேறென்ன வாங்க இருக்கு?…” என்றாள் அவனுக்கு மேல் அவள்.
“ஹேய்…” கீர்த்தனன் அதட்ட,
“என்ன என்ன? சண்டை இங்கயே போடனுமா? இந்த கோவம் டாக்டர் கேட்கும் போது எங்க போச்சு?…” என்று கேட்கையில் கண்ணில் நீர் கட்டிவிட்டது.
அதற்குள் அவன் வாங்கியவை பேக்கிங் செய்யப்பட்டு வர மௌனமாக வாங்கியவன் அவள் நடக்க தடுமாற,
“கீழே விழ போறன்னு தெரியுது தானே? கையை பிடிச்சா என்ன உன் திமிர் குறைஞ்சிருமா?…” என்றான் மீண்டும்.
“ப்ச், என்னால பேச முடியலை. வீட்டுக்கு போய் மாத்திரையை போட்டுட்டு தெம்பா பேசறேன். விடிய விடிய எனக்கு பதில் சொல்லுங்க…” என்றவள் லேசாய் கண்களை சொருக,
“ப்ச், வாய்க்கு வாய் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” என்றபடி தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான்.
அவன் மீது தான் சாய்ந்திருந்தாள். மனதெல்லாம் அவன் தடுமாறி திகைத்து நின்ற கோலம் தான் இசையினுள்.
எத்தனை பிடிவாதமாய் இருந்தான் திருமணம் வேண்டாம் என்று? தவறான புரிதலில் கேட்கப்பட்ட கேள்வியாக இருந்தாலும் கேட்டது கேட்டது தானே?
அத்தனை கஷ்டமாக இருந்தது அவளுக்கு. காரில் ஏறி அமர்ந்தவள் எதுவும் பேசாமல் சோர்வுடன் கண்ணை மூடிக்கொண்டாள்.
உள்ளே தன்னிடம் மருத்துவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கு பின்னான பதிலில் இடை சொருகலாய் அவரை பிடித்து தான் திருமணம் செய்தேன் என்று அத்தனை முறை சொல்லியிருந்தாள் இசை.
அதுவே தன் அடிமனதில் அவனை பிடிக்க துவங்கிவிட்டதன் ஆணிவேரின் ஆரம்பத்தை கண்ணாடியாய் காண்பித்து தந்தது.
அவன் மீது முன்பே நல்ல அபிப்ராயம் தான். கோபக்காரன், சிரித்து பேசிவிட மாட்டான் என்பதை தாண்டி எந்த குறையும் சொல்லமுடியாதவன்.
தான் உண்டு தன் வேலை உண்டு என யாரிடமும் அனாவசிய பேச்சுக்களோ, வம்பு வழக்கோ இல்லை.
அவளறிந்தவரை கீர்த்தனனின் குண இயல்புகள் இதுவே. அவனின் முதல் திருமணத்தின் பொழுதே சுந்தரியிடம் அத்தனை கிண்டல் பேசியிருப்பாள்.
“ஜாடிக்கேத்த மூடி அத்தை. என்னன்னு தேடி பிடிச்சீங்க உங்க மருமகளை. மகன் நாப்பது வார்த்தை பேசினா மருமக நாலு பேச கூட இத்தனை யோசிக்குதே?…” என கிண்டல்.
கீர்த்தனனே பரவாயில்லை என்பதை போல நினைக்க வைத்திருந்தாள் அவனின் முதல் மனைவி.
திருமணம், வளைகாப்பு. பிள்ளையுடன் வரவு, ஊர் திருவிழா, கடைசியில் உயிரற்ற உடலாய் இப்படி தான் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்கு அவள் தருமபுரியில் தடம் பதித்திருந்தது.
வந்த வேகத்தில் மறைந்தும் போயிருக்க தனு மட்டுமே கீர்த்தனனின் திருமணத்திற்கு அடையாளமாய் இருந்தாள்.
என்ன வாழ்க்கை இவர்கள் வாழ்ந்தது என்ற கேள்வி அந்த நொடி இசையினுள் எழுந்து நிற்க இதுவரை அப்படி ஒரு கோணத்தில் அவள் யோசித்ததில்லை.
இப்போதென்ன அவனின் வாழ்க்கையை பற்றிய சிந்தனை என தன்னை தானே கடிந்துகொண்டவள் அதிலிருந்து திசை திரும்ப நினைத்தாள்.
“என்ன பார்க்கற? ஏதாவது வேணுமா?…” என்ற கீர்த்தனனின் குரலில் திடுக்கிட்டு விழித்தவள் யோசனையுடன் இல்லை என்று தலையசைத்தாள்.
“நல்லாருக்கு த்தை. இங்க பாருங்க நைட்டி…” என இசை எடுத்து நீட்ட உள்ளிருந்த கீர்த்தனனுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது.
‘சத்தமில்லாம உள்ள கொண்டுவர தெரியுதா?’ என கோபமாய் அங்கே வெளியே வர சுந்தரி பிடித்துக்கொண்டார் அவன் மனநிலை புரியாமல்.
“ஏன்டா முதல் முதல்ல எல்லாரும் கோவிலுக்கு போவாங்க. நீ ஹாஸ்பிட்டல் போன. சரி எடுத்து தரதாவது உருப்படியா எடுக்க வேண்டாமா கீர்த்தி? இதோட ரெண்டு புடவையோ இல்லை வேற ட்ரெஸ் எதாச்சு எடுத்து குடுத்திருக்கலாம்ல?…”
“ஏன் நைட்டியை ட்ரெஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கிட்டாங்களா?…” என்றான் எரிச்சலுடன்.
“ப்பா, காலையில கிளினிக் போய்ட்டு போர்ட் மாத்திருங்க. மூணு நாள் வீட்டுல இருந்து தான் ட்ரீட்மென்ட் அப்படின்னு. வீட்டு அட்ரஸ் போர்ட் வச்சிருங்க. அதோட நம்ம மெடிக்கல்ல நீங்க மார்னிங், ஈவ்னிங் இருக்கனும்…”
மாணிக்கத்திடம் மறுநாள் செய்யவேண்டியதை சொல்ல சுந்தரிக்கு உள்ளூற சந்தோசம் மகன் சண்டை போட்டாலும் தான் சொல்லியதை ஒப்புக்கொண்டான் என்று.
“வீட்டுல யாருக்கு ட்ரீட்மென்ட்?…” என்றாள் இசை அவனிடம்.
“இப்ப அவசியமா இது? உள்ள வந்து சொல்லமாட்டேனா?…” என ஒருவேகத்தில் சொல்லிவிட்டான். இசை திகைக்க,
“ப்ச், உடம்புக்கு முடியலைல. முதல்ல சாப்ட்டு உள்ள போ நீ. நான் வரேன்…” என்றவன்,
“ம்மா, பாப்பாவை பார்த்துக்கோங்க. நைட் தேடினா எனக்கு கால் பண்ணுங்க…” என சொல்ல அத்தனைபேரும் மொழி புரியா பாஷையை போல என்ன பேசுகிறான் என்று ஒன்றும் புரியாததை போல கவனித்தனர்.