‘திமிர், திமிர். மதிக்கிறதே இல்லை’ என நினைத்தபடி தானும் இரவுக்கு உடைமாற்றினான்.
கீர்த்தனன் தனது மெடிக்கல் புக்குடன் கட்டிலில் வந்து அமரவும் இசையும் வந்துவிட்டாள் கதவை திறந்துகொண்டு.
வேகமாய் நிமிர்ந்து பார்க்க பார்த்தவனின் கண்கள் அப்படியே நின்றுபோனது அவளிடத்திலேயே.
முகத்தை சுருக்கிக்கொண்டு கோபமாய் அவனை பார்த்தபடி அவள் நிற்க அவள் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த பேன் நைட்டியின் அகலத்தை அவளுள் நுழைந்து காண்பித்தது.
அடக்கமாட்டாமல் சிரிப்பு பீறிட பட்டென்று சிரித்துவிட்டான் இசையை அப்படி பார்த்ததும்.
அதுவும் பெரிய ஒரு பலூனிற்குள் அவளை சொருகி வைத்ததை போல நின்றது சிரிப்பை தர அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“என்ன இது?…” கோபத்துடன் இசை கேட்க,
“சத்தியமா சைஸ் தெரியலை. நீ கார்ல தனியா இருந்தியா? அதான் அவங்க எடுத்து போட்டதுல கலர் மட்டும் பார்த்து எடுத்துட்டு வந்துட்டேன்…” என்றவன்,
“நான் கொஞ்சம் ப்ரீ சைஸ் கேட்டேன். அது இத்தனை ப்ரீயா இருக்கும்ன்னு நினைக்கலை இசை…” என்றவன் சிரித்துக்கொண்டே சொல்ல இசைக்கு அசௌகரியமாய் இருந்தது.
“சரி வந்து உட்கார். இதுவும் நல்லது தான். காயம் சீக்கிரம் ஆறும்…” என்று இலகுவாய் பேசினான்.
இசை தான் அவனின் முன்னே நெளிந்தபடி அமர்ந்திருந்தாள். கொஞ்சம் கூச்சமாகவும் இருக்க நைட்டியை இறுக்கி பிடித்து பின்னால் இழுத்துவிட்டிருந்தாள்.
“ஒரு நாலு நாள். சரியாகிடும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…” என்றவன்,
“செண்பகம் அக்கா டெய்லர் தான். அவங்கட்ட சொல்லி உன் சைஸ் செக் பண்ணி ட்ரெஸ் எடுக்கலாம்…”
“ப்ச், எனக்கு இந்த நைட்டியே போதும். வேற வேண்டாம். அவங்கட்ட சொல்லி நாளைக்கு மத்த நைட்டியை கொஞ்சம் பிடிச்சு அடிச்சு தர சொல்றீங்களா?…”
“நாளைக்கு சொன்னா அவங்களே வந்து மெசர்மென்ட் எடுப்பாங்க. அவங்க காயத்தை பார்க்கற மாதிரி இருக்கும்…” என்றவன் பார்வை அவனறியாமல் இசையின் பின்னாலிருந்து கண்ணாடியில் பதிந்து மீண்டது.
உடலில் ஒரு அதிர்வு பரவ லேசாய் தொண்டையை செருமிக்கொண்டவன் பார்வையை திருப்பிவிட்டு,
“சரி படுத்து தூங்கு. நல்லா ரெஸ்ட் எடுக்கனும்…” என்று படுத்துவிட்டான் அவள் முகம் காணாமல்.
“எனக்கு தூக்கம் வரலை…”
“அப்ப இந்த புக் படி…” என்று தனது புத்தகத்தை நீட்ட கடுப்பாகி போனாள்.
“இதை படிச்சு யாருக்கு ஊசி போடறதாம் நான்? உங்களுக்கு போடவா?…” என்றதும் அவள் பக்கம் திரும்பி படுத்தான்.
“நான் என்ன சொன்னாலும் உடனே பதில் சொல்லிடனுமா நீ?…”
“பின்ன உங்க புக்கை தந்தா?…”
“ப்ச், இசை நான் தூங்கனும். பேசாம படு…” என்று சொல்லி கண்ணை மூடிக்கொள்ள அவன் நீட்டிய புத்தகத்தை தன் பக்கமிருந்த சிறு டேபிளில் வைத்தவள் படுத்துக்கொண்டாள்.
நைட்டி இன்னும் அவளை போல இரண்டாள் நுழையும் அளவிற்கு இருக்க இலகுவாய் உறங்கமுடியவில்லை.
திரும்பினாலே மேலும் கீழும் என்று இறங்கிக்கொள்ள ஒரு கையை கொண்டு பிடித்தபடியே படுத்திருந்தாள்.
மருந்தின் விளைவில் உறங்கவும் செய்ய அயர்ந்த உறக்கத்தில் திரும்பி படுத்தவள் இரவில் நடுங்கிக்கொண்டு பிதற்றும் சத்தம்.
கீர்த்தனன் எழுந்துவிட்டான் உடனே. மனதில் பதட்டம் கூட விளக்கை போட்டவன் இசையை பார்த்தான்.
“இசை…” என்ற அழைப்பு கூட எட்டவில்லை அவளை.
வேகமாய் இன்னும் இரண்டு போர்வையை கொண்டுவந்து போர்த்தியவன், மாத்திரையை எடுத்து விழுங்க வைத்து, அவளின் கை, உள்ளங்கால் என்று பரபரவென்று சூடுபறக்க தேய்த்தான்.
மனதிற்குள் அத்தனை அச்சம். பேசாமல் மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கலாமோ என்று பயந்து போனான்.
“இசை இசை…” என்று அழைத்துக்கொண்டே இருக்க மெல்ல குளிர் குறைந்து அவள் உடல் சீராக ஆரம்பிக்கவும் தான் அவனை நன்றாக பார்க்கவே முடிந்தது.
“இசை, ஹாஸ்பிட்டல் போவோமா?…” அவன் கேட்கவும் தலையசைத்தவள்,
“பரவாயில்லை, தூங்கறேன்….” என்றாள் மெதுவாக.
“காய்ச்சல்…” என்றவன் உடனே டெம்பரேச்சர் செக் செய்துவிட்டு அவளின் அருகேயே அமர்ந்திருந்தான்.
இசை அயர்ந்து உறங்கியிருக்க கீர்த்தனனுக்கு துளி உறக்கமில்லை. விளக்கும் எரிந்தபடி இருக்க அவளை தொட்டு தொட்டு பார்த்தபடி பரிசோதித்துக்கொண்டே இருந்தான்.
இங்குமங்கும் அசைந்ததில் நைட்டி பின்பக்கம் அபாயமாக இறங்கி இருக்க பார்வை அதில் அசையாமல் நிலைத்துவிட்டது.
வரிவரியாய் கருப்பாய் தோலுரிந்து காய்ந்து போயிருந்தது காயங்கள். இன்னும் சில லேசாய் நீர் வைத்திருக்க நடுங்கும் விரலுடன் அதனை மெதுவாய் தொட்டு பார்த்தவனின் மனதிற்குள் அத்தனை வருத்தம்.
மருந்தை எடுத்தவன் அந்த காயத்திற்கு தானே போட்டுவிட்டான். பின்னால் அவளால் போட்டிருக்க முடியாது என்பதே அவனுக்கு தோன்றவில்லை.
இசையும் கேட்காமல், சொல்லாமல் இருக்க தானும் கவனிக்கவில்லையே என நினைத்தபடி காயத்திற்கு மருந்திட்டான்.
‘இத்தனை அடியும் வாங்கிட்டு எப்படி இருக்க நீ?’ அவளிடம் மனதாரா கேட்டவன் பெருமூச்சுடன் மருந்தை மூடி வைத்துவிட்டு சாய்ந்து அமர்ந்துகொண்டான்.
இது எதுவுமே முதலில் மனைவியாக இருந்தவளுக்கு செய்ததில்லை என்பது அவனுக்கு தோன்றிக்கொண்டே இருந்தது.
எதற்கும் அவள் அனுமதித்ததும் இல்லை. வெளிச்சமில்லா இரவுகள் மட்டுமே கணவன், மனைவிக்குள்ளான ஈர்ப்புவிசையா? அப்படி சேர்ந்திருந்தும் எதிலும் ஈர்க்கப்படவும் இல்லையே?
அவனும் ஈர்க்கப்படவில்லை. அவனவளாக அவனுடன் வாழ்ந்தவளையும் அவன் ஈர்க்கவில்லை.
இல்லை தனக்கு தான் அப்படி வாழ தெரியவில்லையா? நினைக்காத நாட்கள் இல்லை கீர்த்தனன்.
இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் ஒருசிலரின் திருமண பந்தம் இருக்கும் போலும் என அவனாக எண்ணிக்கொண்டு இருந்துகொள்ள அவசரத்தில் போட்ட கோலம் அதே வேகத்தில் கலைந்தும் போனது.
எதிர்பார்ப்புகள் கூடிய வாழ்க்கையே தனது குழந்தையை தவிர எதுவும் தரவில்லை.
இதில் இரண்டாவதாக அமைந்திருக்கும் இந்த வாழ்க்கை என்ன செய்துவிடும் என்று நினைத்திருந்தான்.
ஆனால் அப்படி எந்த எண்ணத்தையும் தந்துவிடாமல் வெறுமையாய் எண்ணவிடாமல் அல்லவா இந்த நொடிவரை பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது?
யோசனையுடன் இசையை திரும்பி பார்த்தவன் அவளுக்கு நன்றாக வியர்த்திருக்க போர்வையை லேசாய் தளர்த்திவிட்டு உறங்க செய்தான்.