“ம்மா என்ன இது அடிக்கடி அங்க போறா. வளைகாப்பு முடிஞ்சு போகனும் தானே?…” என தாயிடமும் கேட்பவன் பைரவியிடம் அந்த உரிமையை கூட காட்டவில்லை.
“மாசமாருக்கற பொண்ணு. உடம்புல சர்க்கரை சத்துவேற அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அவங்கம்மா வச்சு பார்க்கனும்னு நினைக்காங்க. விடுப்பா. குழந்தை பிறக்கவும் இங்க நம்மளோடவே தான் இருக்க போறா. புள்ளத்தாச்சி பொண்ணு. அவ ஆசையை கெடுப்பானேன்?…”
மகனை தேற்ற அவன் அதற்கு மேல் பேசவில்லை. அவ்வப்போது அவனாகவே அழைத்து விசாரித்துக்கொள்வான்.
அவளை பார்க்க என்று மாமனார் வீட்டிற்கு சென்றால் மச்சினனின் நக்கல் பார்வை வேறு சகிக்க முடியாது.
“நான்லாம் இப்படி தேடி தேடி போனதே இல்லை மாப்பிள்ளை…” என்று சொல்லும் விதத்தில் நொந்துபோய் வீடு திரும்பியவன் தான் எதுவானாலும் அழைத்து பேசுவது மட்டுமே.
எல்லாமே தன் செயல் என்றிருக்க அவளிடத்தில் வேறு எதுவுமில்லை. அழைக்கிறாயா பேசுகிறேன். கேட்கிறாயா பதில்.
பிரசவ நேர அழுத்தங்கள் வேறு பைரவியிடம் அதிகமாகவே இருந்தது. எப்போதும் தனக்கு முடியாத பட்சத்தில் எதையும் யாரிடமும் சொல்லியிருக்காதவள் அப்போதும் அப்படியே இருந்துகொண்டாள்.
உபாதைகள் எதையும் தாயிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. இதை சாப்பிடு நல்லது என்பவருக்கு தலையாட்டல்.
“என் பொண்ணு எங்க பேச்சை மீறவே மாட்டா. நாங்க சொன்னா மறுக்காம கேட்பா..” என சொல்லிக்கொள்வார்கள் சுந்தரி பார்க்க செல்லும் பொழுதெல்லாம்.
மகளின் வரவில் கீர்த்தனனின் மனதின் பாரங்கள் எல்லாம் பணியாய் விலகி தான் போனது.
கண்கள் கலங்க கையில் ஏந்தியவன் பைரவியை பார்க்க அவளும் புன்னகையுடன் குழந்தையை விரல் கொண்டு வருடினாள்.
“பொண்ணு உன்னை மாதிரியே ரொம்ப அழகு பைரவி…” என்று உச்சி முகர்ந்தான் மனைவி மகள் இருவருக்கும்.
அதற்கும் சிரிப்பு மட்டுமே. குழந்தை பிறந்து மூன்றாம் மாதம் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர் முறையாக சொந்தங்களுடன் சென்று.
முன்பிருந்ததை விட ஏதேனும் மாற்றம் உள்ளதா என்று பார்க்க இல்லை. இல்லவே இல்லை. பைரவி எப்போதும் போலவே தான் இருந்தாள்.
“நானும் பேசறேன் தானே? சிரிக்கவும் செய்யறேன்…” அதற்குமேல் என்ன பேச என்று கீர்த்தனனுக்கு தெரியவில்லை.
தெரியவில்லை என்பதை விட முடியவில்லை. குழந்தைக்கும் பிறந்ததில் இருந்து அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக பைரவியை கவனிக்காமல் போனான்.
பைரவி குழந்தையுடன் வந்து பத்து நாட்கள் ஆகிற்று. அதிகமாய் குழந்தை சுந்தரியிடம் தான்.
அன்று ஊரிலிருந்து ஒரு உறவுக்காரர் சென்னை வந்திருந்து கீர்த்தனன் வீட்டில் தான் தங்கியிருந்தார்.
அன்று நள்ளிரவில் குழந்தை சிணுங்க கீர்த்தனன் விழித்துவிட்டான். குழந்தை உடல் நெருப்பாய் கொதிக்க அனத்தியது. அருகே பைரவி விழிக்கவே இல்லை.
பதறி போனவன் சுந்தரியை அழைத்து வந்தான் உடனே சென்று. குழந்தையை கையில் எந்திக்கொண்டவன் ஆம்புலன்சிற்கு அழைக்க,
“என்னப்பா? என்ன உடம்பு இப்படி இருக்கு?…” என்றார் சுந்தரி அழுகையுடன்.
“தெரியலைம்மா. நைட் நல்லா இருந்தா. நான் கேட்டதுக்கெல்லாம் பதில் சொன்னா. பேசினா. இப்ப பாப்பா சத்தம் கேட்டு எழுந்தா இவளும் முழிக்காம இருக்கா…” என்று பதறினான்.
உடனடியாக தாய், சேய் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மருத்துவர் சொல்வதற்கு காத்திருந்தனர்.
வந்தவரோ அத்தனை பேச்சுக்கள் சுந்தரியையும், கீர்த்தனனையும் மாற்றி மாற்றி சத்தம் போட இறுகி போய் நின்றான் அவன்.
“என்ன மனுஷங்க நீங்க? அந்த பொண்ணுக்கு நிமோனியா இருந்திருக்கு. ஜுரம் வரவும் விடவுமா இருக்க இது கூடவா உங்களுக்கு தெரியாது…” என்றதும் அதிர்ந்து போனார்கள் குடும்பத்தினர்.
இதை பற்றி எதையும் அவள் சொல்லியதில்லை. ஏன் முகத்தில் கூட கான்பித்திருக்காமல் இருக்க டாக்டரின் பேச்சில் இன்னுமே நிலைகுலைந்து போனான்.
“அதுவும் பச்சை உடம்பு. இப்பதான் டெலிவரியாகிருக்கு. இன்னும் கவனமா இருக்க வேண்டாமா நீங்க?…” என்று பேசியவர் ‘ஒன்றும் சொல்லும் நிலையில் இல்லை’ என்று பேசி செல்ல நொறுங்கி போனான் கீர்த்தனன்.
“குழந்தை…” சுந்தரி கேட்க,
“குழந்தைக்கும் காய்ச்சல் அதிகமா இருக்கு. இப்ப சொல்ல முடியாது….” என்றவர் அதே டென்ஷனுடன் கீர்த்தனனை தனியே அறைக்குள் அழைத்தார்.
“என்ன கீர்த்தனன் நீங்க? அந்த பொண்ணுக்கு இந்தளவுக்கு சிவியராகற அளவுக்கு இருந்திருக்கு. என்ன புருஷன் நீங்க? அதுவும் ஒரு டாக்டரா இருந்துட்டு…” என்று பேசினார் கீர்த்தனனிடம் சற்று பொறுமையாக.
“எனக்கு தெரியலை டாக்டர். பத்துநாள் முன்னாடி தான் வொய்ப் அவ பேரன்ட்ஸ் வீட்டுல இருந்து திரும்பி வந்திருந்தா. பகல்ல எல்லாம் நார்மல் தான்…” என்றதும் அவர் கூர்மையாக பார்க்க தலைகுனிந்து அமர்ந்திருந்தான் கீர்த்தனன்.
“நீங்க ஹஸ்பன்ட் அன்ட் வொய்ப். நைட்ல பீவர் வந்திருக்கு. ஜுரம் பத்தி நாலேஜ் உங்களுக்கு இல்லாமல் இருந்திருக்காது. ஆனா தெரியலைன்னு சொல்றது தான் ஏதுக்க முடியலை…” என்ற பொழுது குறுகி போய் அமர்ந்திருந்தான் அதன் சாரம்சத்தில்.
“கீர்த்தனன் எதாச்சும் ப்ராப்ளம்…” என்று அவனின் முகம் கண்டு கேட்க மெல்ல தலையசைத்தான்.
தெரிந்தவரும் கூட என்பதால் கீர்த்தனனால் இதனை சொல்லாமலும் இருக்கமுடியவில்லை.
விவரங்களை மேம்போக்காக சொல்ல சொல்ல அவருக்கு ஓரளவு புரிந்துபோனது.
“என்ன இத்தனை கேர்லெஸ்ஸா இருந்திருக்கீங்க கீர்த்தனன்? படிச்ச நீங்களே இப்படி? பைரவி மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்க. அவங்க வாழ்க்கை முறை அப்படி இருந்தது பெரிய காரணம். ஆனா நீங்க நினைச்சா மாத்தியிருக்கலாமே?…” என்றார்.
“முடியலை டாக்டர். நானும் முயற்சி பண்ணேன்…”
“என்ன முயற்சி பண்ணுனீங்க? கவுன்ஸிலிங் ஏதாவது குடுத்தீங்களா? இல்லைன்னா ஒரு சைக்யாட்ரிஸ்ட் யாரையாவது கன்சல்ட் பண்ணுனீங்களா?…” என்று கேட்க ‘இல்லை’ என்று தலையசைத்தான்.
“உங்களோட கோபம், ஆதங்கம் நியாயமானது தான். ஆனா அதுக்காக இப்படியே விட்டிருக்க வேண்டாம் நீங்க. உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. பைரவியை சொல்லி தப்பில்லை…” என்றவர்,
“அந்த பொண்ணு அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கா. அவ மனசுல அதுதான் நிஜம்ன்னு பதியப்பட்டிருக்கு குழந்தைங்க வளரும் போது எதை பார்த்து வளருறாங்களோ அதுதான் ஆழமா பதிஞ்சிருக்கும். சுத்தி இருக்கற சமூக மாறுபாட்டால தான் மாற்றம் இருக்கும்…”
“கல்யாணம் வரை அவங்க இருந்து, வாழ்ந்த இடம் வேற. அதுக்கப்பறம் அந்த பொண்ணை பத்தி உங்களுக்கு தெரியவரும் போதே நீங்க ஸ்டெப் எடுத்திருக்கனும்…”
“நான் மனதளவுல பாதிப்பிருக்கும்ன்னு யோசிக்கலை டாக்டர். தப்பு தான். என் தப்பு தான். நான் கவனிச்சிருக்கனும்…” என கலங்கி போய் இயலாமையுடன் அவன் பேச வருத்தமாய் பார்த்திருந்தார்.
“என் வொய்ப், என் குழந்தை. ப்ளீஸ் எப்படியாச்சும் காப்பாத்தி குடுத்திருங்க டாக்டர். இனிமே பார்த்துப்பேன்…” என்று மன்றாடலுடன் கேட்க,
“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை கீர்த்தனன். அவங்க அவங்களாவே மெடிசின் எடுத்திருந்திருக்காங்க. நைட் நைட் குளிர் ஜுரம் வந்திருக்கு. அவங்களே மாத்திரை வாங்கி போட்டிருக்காங்க…” என்றார் சற்று கண்டனத்துடன்.
“ஓகே, மார்னிங் வரை டைம் இருக்கு. எங்களால முடிஞ்சதை பார்க்கறோம். அதுக்கப்பறம் கடவுள் விட்ட வழி…” என்று சொல்லிவிட்டு அவனை அனுப்பிவைக்க கடவுள் நிச்சயம் கைகொடுக்கவில்லை.
இங்கே அவரவர் தரப்பில் அவரவர் சரியாய் இருப்பதாய் தோன்றியிருக்க நியாயங்கள் கூட எத்திசை செல்ல என்று தடுமாறி நின்று வேடிக்கை பார்த்தது.
மாணிக்கம் பைரவியின் வீட்டிற்கு அழைத்து சொல்ல அவர்களும் வந்து சேர பைரவி ஆழ்ந்த மயக்கத்திலே மண்ணுலகை விட்டு பிரிந்திருந்தாள்.
குழந்தையின் நிலை கொஞ்சம் முன்னேற்றம் பெற்றிருக்க பிழைத்த பிள்ளைக்கு நிம்மதி கொள்ளவா? இழந்த மனைவிக்கு துக்கம் அனுஷ்டிக்கவா? என்று கூட உணர முடியாத நிலையில் கீர்த்தனன்.
அதிலும் அத்தனை குற்றவுணர்ச்சி வேறு அவனிடத்தில். கவனித்திருக்கலாமோ? தான் பார்க்காமல் விட்டுவிட்டேனே? அந்தளவிற்கு மனைவி என்று வந்தவளிடம் அக்கறையின்றியா போய்விட்டேன்? இப்படி ஒரு மனிதனா தான்? என்று தன்னை குறித்தே வெட்கி வெதும்பிக்கொண்டிருந்தான்.
எதையும் யோசிக்க முடியாதளவிற்கு பைரவியின் இறுதி சடங்கு அடுத்து நிற்க குழந்தையை ஒரு நர்ஸ் வைத்து அனுப்பி வைத்தார் டாக்டர்.
தங்கள் கிராமத்திற்கு கொண்டுவந்து சாங்கியங்கள் எல்லாம் செய்யப்பட்டு சடங்கும் முடிய பைரவியின் பிறந்த வீடு கையோடு கிளம்பிவிட்டது.
கீர்த்தனன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர்களிடத்தில். இப்படியுமா ஒரு பெண்ணை பொம்மையாய் வளர்க்க முடியும் என்று மனதிற்குள் மருகி கொண்டு இருந்தான்.
அதற்கு மேல் சோதனையாய் ஊர் வந்து சேரும் முன் இங்கே நடந்தது அவர்கள் ஊரில் தெரியப்படுத்தப்பட தனியே பைரவியின் அண்ணனிடமும், தந்தையிடமும் பேசினார்கள் ஒருசிலர்.
“என்னவோ நல்லா இருந்த பொண்ணுக்கு திடீர்ன்னு காய்ச்சலாம். உடனே ஹாஸ்பிட்டல்ல சேர்த்தா அன்னைக்கே பொட்டுன்னு போய்ருச்சு. பொண்ணை பெத்த உங்க மனசு என்ன பாடுபடும், என்னன்னு விசாரிங்க…” என்று வேறு தூண்டுவதை போல பேசிவைக்க இன்னுமே இறுகிவிட்டான் கீர்த்தனன்.
மகளின் முகம் பார்த்து தேறி வர அவனின் குற்றவுணர்வுகள் வேறு எதையும் யோசிக்கவிடவில்லை.
பிறந்த சிசுவின் முகம் ஒன்றே நிம்மதி. பைரவியின் உடன்பிறந்தவன் அவன் பெற்றோரிடம் சொல்லிவிட்டான்.
“இதுதான் சாக்குன்னு பிள்ளையை நம்மக்கிட்ட குடுத்துட்டு வேற கல்யாணத்தை பண்ணி வைப்பாங்க. அதான் நம்ம வீட்டு பொண்ணே போய்ட்டா. இனி என்ன? விலகி நில்லுங்க…” என சுந்தரியின் காதுபடவே சொல்லியிருக்க மகனின் கவனத்திற்கு போகாமல் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
தன் மகனின் வாழ்க்கையை தானே இப்படி பாழாக்கிவிட்டோமே என்று நினைத்து வருந்தாத நாட்கள் இல்லை.
பைரவி என்ற ஒருவள் தங்கள் குடும்பத்தில் வந்து வாழ்ந்ததற்கான ஒரே அடையாளம் தனுக்குட்டி மட்டுமே என்னும் அளவிற்கு வேறு அந்த சந்தோஷ ஞாபகங்களும் பெரிதாய் பதிந்திருக்கவில்லை.
கீர்த்தனன் சொல்லி முடிக்க அந்த திகைப்பிலிருந்து இசையால் வெளிவர முடியவில்லை.
யாரை சொல்லி நொந்துகொள்ள? இதில் கீர்த்தணனின் தவறும் இல்லை. பைரவியின் தவறும் இல்லை என்றுதான் தோன்றியது.
ஆனாலும் இப்படி ஒரு விஷயத்தை அவள் எதிர்பார்க்கவுமில்லை. அதனை ஜீரணிக்கவும் முடியவில்லை.
கட்டிலின் முன்னடியில் அமர்ந்திருந்தவள் நகர்ந்து பின்னால் சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்.
அவளின் முகபாவனைகளை கவனித்தபடி கீர்த்தனன் அமர்ந்திருந்தான். அவளே பேசட்டும் என்பதை போல.