கீர்த்தனன் இப்படி பேசியதும் பெருமாளுக்கு மிகவும் தலையிறக்கமாக போனது.
அவர்கள் பெண் கேட்ட பொழுது தாங்கள் இல்லை என்று மறுத்ததும் கூட கண் முன்னால் தோன்றியது.
அப்போதும் கீர்த்தனனுக்கு விருப்பம் என்று எதுவும் இல்லை என்பதுவும், இரண்டாவதாக எப்படி பெண்ணை கொடுக்க என்றும் மறுத்துவிட்டார்.
இப்போது கீர்த்தனன் பேசவும் பெருமாளுக்கு மனது கலங்கிவிட்டது. அடுத்து என்ன வரும் என்றும் தெரிந்துவிட்டது.
“இப்ப எதுக்காக திரும்ப இந்த பேச்சுவார்த்தை மாமா?…” என்றான் அவன் யோசனையும், பிடித்தமின்மையுமாக.
“தம்பி…”
“வேண்டாம்ன்னு முடிஞ்சிருச்சு. முதல்லையே சொல்லிட்டேனே மாமா. இது சரிவராது…” என்றான்.
“சரிங்க தம்பி…” என கிணற்றுக்குள் கேட்பதை போல அவரின் குரல் நலிந்திருக்க கீர்த்தனனுக்கு வருத்தமாகிவிட்டது.
“மாமா…”
“சொல்லுங்க தம்பி…” என்றவரின் குரல் கரகரக்க,
“அப்பா ஏன் கண்ணு கலங்குது?…” என்றாள் இசக்கி.
“நீ முதல்ல உள்ள போடி…” ராக்கு மகளிடம் கத்தவும் தான் அத்தனைபேரின் முன்னாலும் அவர் பேசுவதை உணர்ந்தான் கீர்த்தனன்.
“தனியா வாங்க மாமா. உங்கட்ட பேசனும்…” என்றான் அழுத்தமாக.
எப்போதும் அவனின் மீது அத்தனை மரியாதை பெருமாளுக்கு மட்டுமின்றி அந்த ஊரில் இருப்பவர்களுக்கும்.
அந்த ஊரிலேயே பெருமாளை இன்னும் தன் தகப்பனுக்கு தரும் மரியாதை தந்து நடத்தும் முதன்மையானவன் கீர்த்தனன்.
அந்த மதிப்பில் தான் அவன் அழைக்கவும் மெதுவாய் வேறு அறைக்குள் நுழைந்துகொண்டார்.
“சொல்லுங்க தம்பி, ரூமுக்கு வந்துட்டேன்….”
“என்ன பிரச்சனை? எதுக்காக திரும்பவும் இந்த கல்யாண பேச்சு?…” என கேட்டான் தன்மையாக.
அவரால் சொல்ல முடியவில்லை. அதிலும் மகளை கட்டித்தர தங்களுக்கு விருப்பம் என்று சொல்லிய ஒருவனிடம், அவன் மறுத்த பின்பும் மகளை பற்றிய அவதூறை எப்படி சொல்வதென்று மனம் கனத்து அமைதியை நாடினார்.
“சொல்ல விருப்பம் இல்லைன்னா பிரச்சனை இல்லை மாமா. ஆனா எதுவா இருந்தாலும் இந்த கல்யாணம் சரிவராது…” என்றவன்,
“இப்பவும் நான் அதே முடிவோட தான் இருக்கேன். கல்யாணம் என் வாழ்க்கையில நடந்து முடிஞ்சிருச்சு. போதும்னு தோணுது மாமா…” என அழுத்தம் திருத்தமாய் சொல்ல,
“சரிங்க தம்பி…” என்றார் பரிதாபமாய்.
“என்னவோ விஷயம் பெருசுன்னு மட்டும் தோணுது. ஆனா சொல்லலை நீங்க. அவசரப்பட்டு எனக்கு தரனும்னு முடிவு பண்ணிருக்கீங்க. வேண்டாம். பொண்ணோட வாழ்க்கை. அவ எதிர்காலத்தை உங்க அவசரத்தால பாழாக்கிட வேண்டாம்…”
கீர்த்தனனின் கூற்று எத்தனை சரியோ ஆனால் அதற்கு நேர்மாறாக அல்லவா பெருமாளின் சூழ்நிலை இருக்கிறது.
ஒன்றும் சொல்லாமல் அவர் இருக்க கீர்த்தனன் அவருக்கு தைரியம் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.
“என்னங்க என்ன சொல்லுச்சு அந்த தம்பி?…” என்று வெளியே வந்தவரிடம் கேட்க பெருமாளின் முகம் இறுகி சிவந்து இருந்தது.
திருமண நிராகரிப்பு நல்லதற்கோ கெட்டதற்கோ ஒருவகையில் அது பெருத்த அவமானம் தான். அப்படித்தான் உணர்ந்தார் பெருமாள்.
அதிலும் இரண்டாம் தாரமாக கட்டிக்கொடுக்க நினைத்து கேட்டவனே மறுத்திருக்க மகளின் எதிர்காலத்தின் மீதான பயம் விஸ்தாரமாகியது.
அன்று காலையே யாருக்கு யாரின் மூலம் எப்படி விஷயம் கசிந்ததோ கீர்த்தனனுக்கு தரவிருப்பதாக அதற்குள் அக்கம்பக்கத்தில் பேசிக்கொள்ள திடுக்கிட்டு போனார்.
என்னவோ சொல்ல போகிறார். அது தனக்கு ஏற்புடையதாக இருக்க போவதில்லை என்று புரிந்து அதற்கு தன்னை தயார் செய்துகொண்டாள்.
“சரி தாயி…” என்றவர் மனைவியின் பக்கம் திரும்பினார்.
“ராக்கு சிவத்துக்கு போன போடு. அடுத்த முகூர்த்தம் எப்பன்னு பார்த்துட்டு கையோட வர சொல்லு. தாயிக்கும், சிவத்துக்கும் தான் கல்யாணம்…” என்று சொல்லியவர் மகளின் முகத்தை கூட பாராமல் வெளியேறிவிட்டார்.
கல்லாய் சமைந்த நிலையில் இசக்கி நிற்க அரசி தகப்பனின் முடிவில் அரண்டு போனாள்.
“ம்மா, அப்பா என்ன இப்படி சொல்றாங்க?…” என்றதும் ராக்குவின் கண்களில் கண்ணீர்.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தனது தம்பி.
அதிலும் அரசிக்கே அவனை பார்க்க வேண்டாம் என்றவர் இரண்டாம் பெண்ணிற்கு என்றதும் மனது விண்டுபோனது.
“போதுமாடி, போதுமா? எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு பாரு நீ இழுத்துவச்ச அசிங்கம்…” என்று இசக்கியின் முதுகில் அறைந்தவர் உடனே அவளையே கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
“ப்ச் விடும்மா. விடு. நான் என்ன செத்தா போய்ட்டேன்? அதான் ஏற்பாடு செய்ய சொல்றார்ல. போ போய் உன் தம்பிக்கு கால் பண்ணு. பரிசம் போட வர சொல்லு…” என்று தாயை உதறிவிட்டு எழுந்துகொண்டவள்,
“பரிசம் இருக்கோ இல்லை நேரா கல்யாணமோ?…” என்றாள் இகழ்ச்சியாக.
“உன்னை தெரியாதா இசக்கி? ஏன்டி சரின்னா? நான் அப்பாட்ட பேசறேன்…”
“என்னம்மா பேச போற? ஏற்கனவே அந்த மனுஷன் அரைஉயிராகிட்டாரு. திரும்ப பேசி அவருக்கு ஏதாச்சும் ஒண்ணாச்சு நான் இருக்கமாட்டேன்…” என்று சொல்ல,
“அதுக்குன்னு மாமன?…”
“ஏன் என் மாமன் தானே? என்னை தூக்கி வளர்த்தவர் தானே? கட்டிக்கறேன். பார்த்துக்கறேன்…” என்று சொல்லும் பொழுதே கண்ணீர் நிறைந்துவிட்டது.
“இசக்கி…”
“இதுதான் அப்பாவுக்கு சந்தோஷம்ன்னா அது போதும். என் நேரம் அன்னைக்கு அசால்ட்டா இருந்துட்டேன். அது இங்க இப்படி விடியும்ன்னு நான் நினைக்கலை. சரி விடும்மா…” என்று சாதாரணம் போல சொல்லிவிட்டு அவள் செல்ல பார்த்திருந்த ராக்குவிற்கு பதறியது.
“என்னம்மா?…” அரசி கண்ணீருடன் கேட்க,
“என்னத்தடி சொல்ல? அந்த மனுஷன தூக்கி பிடிக்கிற சாமியா வளர்ந்தவடி என் பொண்ணு. இன்னைக்கு அவளால அவருக்கு இந்த அவமானங்கவும் அவ என்னலாம் துடிச்சிட்டு இருக்காளோ? பார்க்கத்தான் வீம்புக்கு நிமித்திட்டு இருக்கா…”
ராக்குவிற்கு மனதே ஆறவில்லை. அரசியின் திருமணத்தில் சிவனுக்கு கேட்போம் என உறவில் ஒருவர் சொல்லியதற்கே வீட்டில் அத்தனை ஆடினாள் மகள்.
“நல்ல கதையா இருக்கே? அப்பனாட்டம் எங்கள தூக்கி சுமந்து பாத்துக்கிட்ட மனுஷனை புருஷன்னு பேச வெக்கமாயில்லையா? மாமாவே இந்த பேச்ச கேட்டா எவ்வளோ வருத்தப்படுவாரு?…” என அதட்டியிருந்தாள்.
பெரிதாய் குடும்ப வாழ்க்கையில் நாட்டமில்லாமல் திரியும் சிவத்துக்கு மகளை கட்டிவைக்க நினைத்திருக்க பெருமாள் எத்தனை தூரம் உந்தப்பட்டிருப்பார் என்று புரிந்துபோனது.
அதற்குள் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்தனர் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள.
“என்ன ராக்கு? சுந்தரி போன் போட்டாளா?…” என உள்ளே நுழையும் பொழுதே கேட்டுக்கொண்டு வர ராக்குவின் இதயம் நின்று துடித்தது.
“ஏன் பெரியாயி உனக்கு எப்படி தெரியும்?…” என்றாள் அரசி.
மாடியின் படியில் சோர்வுடன் அமர்ந்திருந்த இசக்கியின் காதிலும் இது விழுந்தது.
“எனக்கு எங்க தெரியும்? காத்தால நீ உன் புருஷன்ட்ட கொல்லைல நின்னு பேசிட்டிருந்தப்ப நம்ம தெக்குவீட்டு பரமு தான் கவனிச்சிருப்பா போல? அவதான் சொன்னா…” என்று சொல்ல ராக்கு மகளை தீயாய் எரித்தார்.
அரசிக்கு தன்னையே எதை எடுத்து தலையில் அடித்துக்கொள்ள என்று தெரியவில்லை.
காலை அவள் கணவன் அழைத்திருக்க விடிந்தும் விடியாத அந்த பொழுதில் அவனிடம் பேசிக்கொண்டே கொல்லைப்புறம் வந்தவள் இதையும் சொல்லியிருக்க அதற்குள் எப்படி பரவி உள்ளது என நினைக்கையில் வெறுப்பானது.