“ராக்கு நான் சொல்லுறேன்னு மனசுல வச்சுக்கிடாத. உம்மவள சிண்டுல இருந்தே நமண்டிருந்தா இந்த அசிங்கம் தேவையா?…” என்று சொல்ல ராகு வாயை திறக்கும் முன் மடமடவென்று கீழே இறங்கி வந்துவிட்டாள் இசக்கி.
“ஏன் உங்க வீட்டு பொம்பளை புள்ளைங்க மட்டும் என்ன ரொம்ப ஒழுங்கோ?…” என்று நாக்கை மடித்துக்கொண்டு சண்டைக்கு எகிறி வந்தவள்,
“எவ எவ என்னன்னு எனக்கு நல்லா தெரியும். ஏன் உங்க வீட்டுல எல்லாம் கல்யாணமே நடக்காதோ? பார்த்துக்கறேன்…” என்றாள் எரிமலை என குமுறலுடன்.
எடுத்து பேசவே முடியவில்லை. கோபம், ஆற்றாமை என்று அத்தனையும் பொங்கிக்கொண்டு வந்தது.
“ம்மா சுந்தரியத்தை தான். என்னன்னு கேளேன்…” என அரசி சொல்ல,
“கொண்டா நல்லா நாலு வார்த்தை கேட்கறேன். அப்பத்தான் என் மனசும் ஆறும்…” என்று போனை வாங்கியவர் எடுத்ததும்,
“அம்புட்டுக்கா வக்கத்து போய்ட்டோம் மதினி. இப்படி அசிங்கப்படுத்தீட்டீங்களே? என்ன பழிக்கு பழியா மதினி?…” அழுகையும் ஆவேசமுமாக ராக்கு பேச,
“ராக்கு என்னை பேசவிடேன்…” என்றார் சுந்தரி.
“என்னத்த பேச போறீங்க? எவ்வளோ நம்பிக்கையா இருந்தோம். இப்படி சாணியை கரைச்சு ஊத்தற மாதிரி பண்ணிட்டீங்களே?…”
“ராக்கு…”
“ஆமா, எம்மவ எவன் கூடவோ சிரிச்சு பேசி அவன் குடுத்த லெட்டரை வாங்கி சந்தோஷமா பார்த்துட்டு இருந்தவ தான். இந்த காலத்துல எவ தான் படிக்கும் போது இப்படி இல்லாம இருந்திருக்கா?…”
“ராக்கு என்ன சொல்ற? நம்ம இசக்கியா?…”
“என்ன தெரியாத மாதிரி கேட்கறீங்க? ஏன் இங்க இருந்து யாரும் உங்களுக்கு தாக்கல் சொல்லலையோ? இல்லைன்னாலும் நான் நம்ப மாட்டேன்….”
“ராக்கு நான் நாளைக்கு ஊருக்கு வரேன். வந்து பேசறேன்…”
“ஊருக்கு வந்து மட்டும் என்ன பேச போறீங்க? ஒன்னும் வேண்டாம் மதினி. மனுஷ மக்க என்னன்னு எல்லாம் இந்த மாதிரி நேரத்துல தான் தெரிஞ்சுக்க முடியுது…”
“ராக்கு கொஞ்சம் அமைதியா இருக்கியா நீ?…” என்று அதட்டலாக சுந்தரி சொல்லவும் கோபமாய் பேசிக்கொண்டிருந்தவர் வெடித்து அழுதுவிட்டார்.
“எம்மவ இல்லைன்னு சொல்றா மதினி. ஆனா கலெக்ட்டரை பார்த்து மனு குடுக்க போன ஊர்க்காரங்க அத்தனைபேரும் அவ அந்த புள்ளை கூட நின்னு பார்த்தோம்ன்னு குடும்பத்தை நடுத்தெருவுல நிறுத்தி சிரிக்க வச்சுட்டாங்க…” என்று தேம்பி தேம்பி அழ சுந்தரிக்கு வருத்தமாக இருந்தது.
“அதை நம்பி நீ பிள்ளைக்கு கல்யாணம் பேசுவியா?…” என்றார் அதட்டி.
“என்ன செய்ய சொல்றீங்க? ஊரே பேசுது. வெளில தலைகாட்ட முடியலை. சரின்னு கல்யாணத்தை முடிச்சுட்டா இந்த பேச்சு அமந்துரும்ன்னு மாப்பிள்ளை பார்த்தா தகைஞ்சு வரதை யாரோ கலைச்சு விடறாங்க. என் புருஷன் யாருக்கு என்ன துரோகம் பண்ணினாரு மதினி?…”
ராக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த வேதனைகளை சொல்லி சொல்லி அழ சுந்தரி மனது கனத்தது.
“வேற என்ன செய்ய? ரெண்டாவதுக்கே குடுக்க முடிவுக்கு வந்த மனுஷன் இந்த முடிவை எடுக்கமாட்டாரா?…” என்றார் கோபமாய் குத்தும்படி.
சுந்தரிக்கு அவை எல்லாம் பொருட்டே இல்லை. காதில் கேட்டதை நம்பவே முடியவில்லை.
அரசி திருமண பேச்சுவார்த்தையின் பொழுது அவரும் அங்கே ஊரில் தானே இருந்தார்.
இசக்கியின் கூற்றுக்கு ஆதரவாக சுந்தரியும் ராக்குவிடமும், அவரின் பெரிய தம்பியிடமும் பேசியிருந்தார் தானே?
அப்போதே பெருமாள் அதனை மறுத்திருந்தார். ராக்கு கூட சொல்லியிருந்தார் அவர்களிடம்,
“நாம கூட பொண்ணு குடுக்கலைன்னா அவன் இப்படியே இருந்துடுவான்…” என சொல்லியிருக்க ‘திருமணமே வேண்டாம் என்பவனிடத்தில் எந்த நம்பிக்கையில் பெண்ணை தர முடியும்?’ என மறுத்துவிட்டார்.
அப்படி இருக்க இப்போது மகனின் மறுப்பும், ஊரில் இருக்கும் நிலவரமும் எந்தளவிற்கு அவர்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று காட்டியது.
“ராக்கு…”
“ஆத்தமாட்டாம பேசிட்டேன் மதினி…” என்றார் சற்றே அழுகையை குறித்த குரலில்.
“இசக்கி என்ன சொன்னா?…”
“அந்த மகராசி என்னைக்கு தகப்பன் பேச்சை மீறியிருக்கா? புள்ள பேசமாட்டாம சரின்னுடுச்சு. இந்த மனுஷனும் சத்தியம் வாங்கிட்டாரு…” மீண்டும் கண்ணீர் ராக்குவிடம்.
“நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்க தான்…” என்றதும் சுந்தரிக்கு தவித்தது மனதெல்லாம்.
“ராக்கு…”
“இப்ப சிவத்துக்கு தான் புள்ளையை கட்டி வைக்க போறோம்ன்னு தெரிஞ்சா என்னலாம் பேசுவாளுங்களோ?…”
“உன் வாயை என்ன தச்சா வச்சிருக்க?…” சுந்தரிக்கு அத்தனை கோபம்.
“எத்தனை பேர்ட்ட சண்டைக்கு போக மதினி?…” என்றவர்,
“அவ்வளோ தான் எங்க தலையில இதுதான்னு எழுதி இருக்கு…” என்று சொல்லவும் சுந்தரியால் ஒன்றும் பேச முடியவில்லை.
“சரிங்க மதினி என் தம்பி தான் கூப்பிடறான்…” என்று சொல்லவும் சுந்தரி போனை வைத்ததுமே கிளம்பிவிட்டார் மகனின் கிளினிக்கிற்கு.
ஆட்டோவை பிடித்து பத்து நிமிடத்தில் மகனின் கிளினிக் சென்று இறங்க அந்த நேரம் வேறு யாருமற்று தனியாக தான் இருந்தான்.
சிகிச்சைக்கு யாரும் வந்திருக்கவில்லை அங்கே. கிளினிக்கோடு சேர்ந்து சிறு மெடிக்கல் ஷாப்பும், அதனுடன் கால்நடைகளுக்கான உணவுகள், அதன் சம்ந்தமான இதர சகல பொருட்கள் என்று இணைந்தே இருந்தது.
ஷாப்பில் இருந்த பெண் சுந்தரியை பார்த்ததும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல தலையசைத்துவிட்டு கிளினிக்கிற்குள் நுழைந்தார்.
“ம்மா…” என பார்த்தவன்,
“என்னாச்சு? பாப்பாவுக்கு ஒன்னுமில்லையே…” என பதறினான் கீர்த்தனன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அப்பா பார்த்துக்கறார்…”
“சரி இப்ப எதுக்கு இவ்வளோ தூரம்?…” என கேட்க,
“இசக்கியை அவளோட மாமனுக்கு கட்டி வைக்காங்கலாம்…” என்றதும் திடுக்கிட்டான்.
“என்ன? சிவத்துக்கா? என்ன சொல்றீங்க?…” என திகைப்பாய் பார்க்க,
“எல்லாம் உன்னால தான். நீ வேண்டாம்ன்னு சொல்லவும் பெருமாள் அண்ணே இந்த முடிவுக்கு வந்திருக்கார்…” என்று ராக்குவிடம் பேசியதை சொல்ல,
“சுத்த நான்சென்ஸ் இது. இந்த காலத்துல லவ் லெட்டர் வச்சுட்டு அந்த பையனோட சிரிச்சு பேசினா கல்யாணம் செஞ்சு வைப்பாங்களாமா?…” என கடுகடுக்க,
“உனக்கும், எனக்கும் தெரியுது. ஆனா அந்த ஊர்ல. சொல்லவா வேணும்? நம்மளையே பேசினவங்க தானே? வீட்டுக்கு வந்த மருமகளை என்ன செஞ்சு சாகடிச்சோம்ன்னு…” என்றதும் முகம் இறுகி நின்றான் கீர்த்தனன்.
“இப்ப பாவம், அந்த பொண்ணை பேசி பேசி இங்க கொண்டுவந்து நிறுத்திட்டாங்க…” சுந்தரி வருத்தமும், கவலையுமாக சொல்ல,
“இதுக்கு இப்ப நாம என்னம்மா பண்ண முடியும்? அவங்க பன்றது முட்டாள்தனம். இதை தவிர சொல்ல ஒண்ணுமில்லை…”
“கீர்த்தி…”
“இது மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தின கதை. நாம வேடிக்கை தான் பார்க்க முடியும். சொல்லியாச்சு. அப்பவும் அவங்க பிடிவாதமா இருந்தா என்ன செய்ய முடியும்?…”
“பெருமாள் அண்ணன் மாதிரி ஒருத்தர் வேற எப்படி முடிவெடுப்பார்?…”
“அவங்க முடிவுக்கு எல்லாம் நாம பொறுப்பாக முடியாதும்மா…”
“கீர்த்தி…”
“கிளம்புங்கம்மா…” என்று சொல்லும் பொழுதே சிகிச்சைக்கு ஒரு நாயுடன் ஒருவர் உள்ளே வர அதனை பார்த்த சுந்தரி,
“நான் நாளைக்கு தருமபுரி கிளம்பறேன் பாப்பாவோட…” என்றார் கோபத்துடன்.
“ஓகே, ட்ரைவர் அனுப்பறேன். கார் எடுத்துட்டு கிளம்புங்க…” என்றான் வேறு ஒன்றும் சொல்லாமல்.
மகனை ஆற்றாமையுடன் பார்த்தவர் அங்கே இருக்க முடியாமல் கிளம்பிவிட்டார்.
அவரின் மனநிலை புரிந்தாலும் தன்னால் வேறு என்ன செய்துவிட முடியும் என கீர்த்தனன் தனது வேலையில் கவனமானான்.
இசக்கிக்கு ஒரு வாரத்தில் திருமணம் என்று அன்று மாலையே தகவல் வந்திருக்க இரவு வீடு திரும்பியவனிடமும் சுந்தரியால் விஷயம் பகிரப்பட்டது கீர்த்தனனுக்கு.