“நாம சீக்கிரமே வளர்ந்துட்டோம். பெரியவங்க இடத்துல நாம இருக்கும் போது நம்மை பார்த்து நம்ம பிள்ளைங்க வளருவாங்க. அப்போ அவங்களை சரியான பாதையில வழி நடத்தினா போதும். புதுசா கத்துக்குடுக்கறதை விட அவங்களா தெரிஞ்சுட்டு கேட்கிறதுக்கான கரெக்ட் பதில் சொன்னா போதும்…”
இசை கீர்த்தனனிடம் பேசிக்கொண்டே மாடியிலிருந்து இறங்கி கீழே கூடத்திற்குள் வர வீட்டில் இருந்தவர்கள் யாரையும் முதலில் கவனிக்கவில்லை.
கீர்த்தனன் தோளில் சாய்ந்திருந்த குழந்தை அவளை நோக்கி கை நீட்டி சிரித்தபடி இருக்க அதனை கொஞ்சிக்கொண்டே பதில் சொல்லியபடி இசை வர அவள் பேச்சு வீட்டினருக்கும் கேட்டது.
“ஹ்ம்ம், இசை பிலாசபியா…” கீர்த்தனன் முகமும் தெளிந்திருக்க புன்னகைத்தபடி தான் இருந்தான்.
“இது ஒன்னும் பிலாசபி இல்லை. நாம பெத்தவங்களா இருக்கும் போது நம்மை பெத்தவங்க வாழ்க்கையோட எல்லா அனுபவத்தையும் வாழ்ந்து பார்த்திருப்பாங்க. அவங்க நமக்கு நல்லது சொல்லுவாங்க. நாம நம்ம பிள்ளைங்களுக்கு…”
“பார்ரா என் மருமக அறிவா பேசறதை. இதை நீ வாயாடின்னு சொல்லுற?…” என்று சுந்தரி இசையை வந்து அணைத்துக்கொள்ள,
“தாயி இசக்கி…” என்று வந்தார் பெருமாள்.
அப்போது தான் தன் வீட்டினரும் அங்கே கூடத்தில் ஒருபக்க தூணின் அருகே அமர்ந்திருந்ததே கவனித்தாள்.
“என்னப்பா, எதுக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டு? சாப்பிட்டீங்களா?…” என்றாள் எல்லாம் மறந்து.
“அப்பா உன்னை புரிஞ்சுக்கவே இல்லைப்பா…” என்று மகளின் கையை பிடிக்க,
“ம்மா, என்ன இது?…” என்றாள் தாயை பார்த்து.
ராக்கு பதில் சொல்லாமல் அழுதபடியே தான் இருந்தார். சுந்தரி எல்லாம் சொல்லியிருந்தார் அவரிடத்தில்.
சென்னைக்கு சென்றதும் இசைக்கு காய்ச்சல் கண்டு, மருத்துவமனைக்கு சென்று அங்கே பேசியது என சொல்லியிருக்க அவளின் காயங்கள் பற்றியும் சொல்லியிருக்க ராக்குவிற்கு அத்தனை குற்றவுணர்ச்சி.
மகளை நிமிர்ந்தே பார்க்க முடியவில்லை. மௌனமாய் கண்ணீர் வடித்தபடி இருந்தார்.
“இசக்கி, இவங்க இன்னும் சாப்பிடலை. நீ தான் சொல்லு…” சுந்தரி சொல்ல,
“எல்லாருக்கும் எடுத்து வைங்கம்மா, சாப்பிடுவாங்க….” என்றான் கீர்த்தனன்.
“சமைச்சாச்சா த்தை? ஒரு போன் போட்டிருக்கலாம்ல?…” என்று சட்டென அந்த இடத்திற்கு தகுந்ததாய் மாறிக்கொண்டாள் அவள்.
தான் அமர்ந்திருந்தால் அதையே நினைத்து நினைத்து மருகிவிடுவார்கள். அதிலும் தந்தை தன் முன் அப்படி நிற்பதை மனது ஏற்கவில்லை.
சுந்தரியுடன் சலசலத்தபடி உணவை பரிமாறியவள் தானும் உண்டு முடித்தாள். தனியே ராக்குவிடம் நின்றுவிடாத அளவுக்கு அனைவருடனும் தான் கூடத்தில் இருந்தாள்.
“நீ பேசு, அவங்க உன்னை தான் பார்க்கறாங்க…” கீர்த்தனன் கூட யாருமறியாமல் அவளிடம் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம். இங்கயே இருங்க. எந்திச்சு போனீங்க. அவ்வளவு தான்…” என்று மிரட்டினாள்.
“இதென்னடா இது? காலையில வரைக்கும் உன் அம்மாவை காப்பாத்த என்னை பேசவிடலை. இப்ப அவங்கட்ட தனியா மாட்டகூடாதுன்னு என்னை எங்கயும் போகவிடலை. சரித்தான்…” என்று அவளிடம் பேச பார்ப்பவர்களுக்கு ரகசியம் போல தோன்றியது.
மாலை வரை கூடத்தில் தான் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். பெருமாளும் சரி, ராக்குவும் சரி அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை.
மகளிடம் தனியே பேசி மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்று இருக்க கீர்த்தனனின் முன்பு பேசவும் தயக்கம்.
பேச்சுக்கள் பொதுவாக இருக்க இடையே ஊரின் சொந்தங்கள் ஒருசிலர் வந்து பார்த்து, பேசிவிட்டு சென்றனர்.
ஒருசிலர் மண்டபத்தில் நடந்ததையும் பேசிவிட்டு இசையிடம் ஆறுதல் போல சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
இரவு உணவு நேரம் தான் கீர்த்தனன் மறுநாள் ஊருக்கு கிளம்புவதை பற்றியே பேசினான் அனைவரின் முன்பும்.
“ம்மா, நாளைக்கு நைட் கிளம்பிருவோம். இப்பவே சொல்லிட்டேன். எல்லாம் பேக் பண்ணிருங்க…” என்று சொல்ல,
“கீர்த்தி நாளைக்கேவா?…” என்றார் சுந்தரி.
“ஏன் நாளைக்கு தான். வேற எதுவும் வேலை இருக்கா என்ன?…” என்றான் சாதாரணமாக.
அப்போது தான் அவனிடம் எதுவுமே சொல்லாததே ஞாபகம் வந்தது. மாணிக்கத்தை ஒரு பார்வை பார்த்தவருக்கு ராக்குவையும், பெருமாளையும் பார்க்க சங்கடமாக இருந்தது.
“என்ன தம்பி? இன்னும் கோவம் குறையலைங்களா?…” என்றார் பெருமாள் தயக்கத்துடன்.
“ஏன் எனக்கென்ன கோவம்? அதெல்லாம் எதுவுமில்லையே…” கீர்த்தனன் அவரிடம் சொல்ல,
“அப்பறம் ஏன் நாளைக்கே கிளம்பறேன்னு?…”
“ஐயோ அண்ணே, நான் இன்னும் அவன்கிட்ட எதுவும் சொல்லலை. ஊர்ல சொல்ல மறந்துட்டேன். இங்க வந்து சொல்லலாம்ன்னா சூழ்நிலை சரியில்லை…” என்று சுந்தரி பெருமாளிடம் சொல்லிவிட்டு,
“கீர்த்தி நாளைக்கு ஆடி ஆரம்பிக்குது. அதான் நாளைக்கு உனக்கும், இசக்கிக்கும் பட்டு எடுத்து வச்சிருக்காங்க. சீர் செய்யனும்ல…” என்று சொல்ல கீர்த்தனன் இசையை திரும்பி பார்த்தான்.
“எனக்கொண்ணும் தெரியாது. என்னை பார்க்கறீங்க? எனக்கே ஞாபகமில்லை…” என்றாள் அவள் உடனே.
‘இவ வேற சும்மா பார்த்ததுக்கு இப்படி பேசி வைக்கிறா?’ என்று அவளை பார்வையால் முறைத்து அடக்கியவன்,
“என்னம்மா செய்யனும்? சொல்லுங்க…” என்றான்.
அவனுக்கு தெரிந்திருந்தது இந்த சம்பிரதாயம். என்ன செய்வார்கள் என்று தெரிந்திருக்க இருந்தாலும் கேட்டு வைத்தான்.
“நாளைக்கு ஆடி அழைப்பு. இன்னைக்கு தான் சாயங்காலம் அழைக்கனும்னு இருந்தாங்க. அதான் இப்படி இருக்கே…” சுந்தரி பேச,
“எப்படி இருக்கு? எதுவும் இல்லை. நாளைக்கு இருக்கனும். அதானே? சரி…” என்று சொல்லிவிட்டான் உடனே.
இதனை சுத்தமாய் எதிர்பார்க்கவில்லை. இந்த யோசனைகளை எதுவும் அவன் நினைப்பில் இல்லை.
மறுநாள் ஊருக்கு சென்றுவிடுவோம் என்று ஒரு எண்ணத்தில் இருக்க ஆடி அழைப்பு. நிச்சயம் இசை இனி இங்கே தான் என தெரிந்துபோனது.
பெருமூச்சுடன் இரவு உணவை முடித்துக்கொண்டு தனுவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டான்.
“கோவமா இருக்கானா இசக்கி?…” என்று தனியே சுந்தரி கேட்க,
“ம்க்கும், எனக்கென்ன தெரியும்? என் முகத்தையே பார்க்கலை. கேட்கவேண்டியது தானே நீங்க?…” என்றாள் மாமியாரை.
“இவ வேற. கூறுகெட்டவ, அவன் கோவமா இருக்கான்னு மூஞ்சில எழுதி ஒட்டியிருக்கே? போய் கேட்டா இதான் சாக்குன்னு ஒரு சண்டையை போட்டு எல்லாரையும் கார்ல தூக்கி போட்டு ஊருக்கு கூட்டிட்டு போய்ருவான்…”
“உனக்கு அம்மா இருந்தா போதுமா இசை?…” என உறங்கியவளிடம் கேட்டவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
ஓசை படாமல் வெளியேறி மொட்டை மாடியின் பக்கம் வந்து சுவற்றில் சாய்ந்து நின்றான்.
அவர்கள் அறையில் திறந்திருந்த ஜன்னலின் வழியே தூங்கிக்கொண்டிருந்தவளின் வரிவடிவம் மெல்லிய விளக்கொளியில் தெரிய பார்த்தபடி இருந்தவன் மனது அங்குமிங்கும் ஆட்டம் கண்டது.